Friday 12 July 2019

உச்சிப் பிள்ளையாரும் பெரியார் சீடரும்

உச்சிப்  பிள்ளையாரும்  பெரியார் சீடரும்
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

ஏறத்தாழ  அரை நூற்றாண்டாக விட்டது
திருச்சி  தில்லை  நகரில் நாங்கள்  குடியிருந்த நேரம்
எங்கள்  வீட்டிற்கு  எதிரே  சிவானந்தம்  பிள்ளை என்பவர் குடியிருந்தார்
பெரியாரின்  தீவிர  பக்தர்  திருச்சியில்  முக்கியமான திராவிட கழகத் தலைவர்
என்  அப்பாவின்  நெருங்கிய  நண்பர் .என் தந்தை  அப்போது  திருச்சியில்  மின் பொறியாளராக இருந்தார்.  பெரியாருக்கும்  நெருக்கமானவர்.   திராவிட  கழகத்தினர் பலர் எங்கள் வீட்டருகில் 
இருந்தனர்.  எங்களிடம் நாகரீகமான  முறையில்  பழகி வந்தனர்.

சிவானந்தம்  பிள்ளை  பெரியார் ஆணைப்படி  பிள்ளையார்  சிலைகளை உடைத்தவர். எங்கள்  வீட்டு
வெளியே  உட்புறமாக ஒரு பிள்ளையார்  சிலை இருந்தது.  சிவானந்தம்  எங்கள்  வீட்டிற்கு  வரும் போது
தன் காலணியை வேண்டுமென்றே  பிள்ளையார்  சிலையை  ஒட்டி வைத்து விட்டு வருவார். என் தந்தை  பலமுறை கண்டித்தாலும்  சிரித்தபடியே   தான் வந்த விஷயத்தை  பற்றி  பேச ஆரம்பித்து விடுவார். என் தந்தை அவரிடம்  அந்த  பிள்ளையார்  ஒரு நாள் உனக்கு கூலி கொடுப்பான்  என்பார். அதற்கும் சிரித்து விட்டு போய் விடுவார்  .

எதிரே இருந்த  அவர்கள் வீடு  பெரிய பங்களா. முதன் முதலாக  ரேடியோகிராம் என்ற ஒன்றை நான்
பார்த்தது அவர்கள்  வீட்டில்  தான். இன்றைக்கும்  அதில் கேட்ட படகோட்டி பட பாடல்கள்  நினைவுக்கு  வருகிறது.  மிகவும் வசதியான குடும்பம். அவர் மனைவி  எளிமையின்  எடுத்துக்  காட்டு.  சிவானந்தம்
அவர்கள்  திருச்சி  அருகே  தொட்டியத்தை சேர்ந்தவர்.  ஷா வாலஸ்  உரக் கம்பெனி  டீலர்.  அன்றைய 
காங்கிரஸ்  எம் எல் ஏ  தொட்டியம் துரைராஜின்  சகோதரர். மாலை வேளைகளில்  முன் அறையில்  உட்கார்ந்து  கட்டுக்  கட்டாக  பணத்தை  எண்ணி கொண்டு  இருப்பார்.
எதற்காக இந்த  பீடிகை என்கிறீர்களா  இனிமேல் தான்   விஷயமே

ஒரு நாள் காலை சிவானந்தம்  எங்கள் வீட்டிற்கு  வந்து  "சாமி நான் வீட்டை காலி செய்து  வேறு  இடம்
செல்கிறேன்  வியாபாரத்தில்  கூட்டு சேர்ந்தவர் மோசடி செய்து  விட்டார்  நான் வீட்டை  விற்று  கடனை
அடைத்து விட்டேன்  சிலர் மஞ்சள்  கடுதாசி  கொடுக்கும் படி சென்னார்கள் நான்  அதை ஏற்காமல்  யாரையும் ஏமாற்றும் நோக்கம் எனக்கு  இல்லை  எனவே வீட்டை  விற்று கடனை அடைத்து விட்டேன்
வருகிறேன்  என்று  சொல்லி  சென்று விட்டார். என் தந்தை  வாய் விட்டு  அழுததை அன்று தான்  பார்த்தேன். எங்கள்  அடுத்த  தெருவிலேயே ஒண்டு குடித்தனம் போய் விட்டார்.

பிறகு நாங்கள்  சென்னை குடி பெயர்ந்தோம். எங்கள்  தொடர்பு அறுந்து  போய்விட்டது.சில வருடங்களுக்கு  பிறகு  திருச்சியில்  வங்கிப் பணியில்  சேர்ந்தேன். ஒருநாள் ஓரு மனிதர்
என் முன் சார்  உங்கள்  கேஷியர் நேரம் முடிந்து விட்டது என்று பணம் வாங்க மாட்டேன் என்கிறார்
தயவு செய்து  சொல்லுங்கள்  சார் என கூற நிமிர்ந்து  பார்த்தேன். என் முன்னே  நின்றது  சிவானந்தம்
பிள்ளை.  நெற்றியில்   பட்டையாக  வீபூதி  ஆனால் அதே சிரித்த முகம். தம்பி நீங்களா என அவர் ஆச்சரியப்பட அவருக்கு  தேவையான உதவியை செய்து  உட்கார வைத்தேன்.  அவரை பற்றி  விவரம்
கேட்க  தான் நந்தி கோயில் முனையில் கடை வைத்திருப்பதாக கூறி சென்றுவிட்டார்.  அன்று  மாலையே
சென்று பார்த்த போது அது ஒரு பெட்டிக் கடை. வெற்றிலை பாக்கு கமர்கட் மற்றும் லாட்டரி  சீட்டுகள்.
நான் அதிர்ந்து போனேன்  வாழ்க்கை  இவ்வளவு அநித்தியமானதா .

அவர் நெற்றியை மீண்டும்  பார்க்க  அவர் சிரித்தபடி  என்ன தம்பி  வாழ்க்கையில்  அடிபட்டுவிட்டேன்
என்றவர் வாங்க தம்பி போய் உச்சிப் பிள்ளையாரைப் பார்க்கலாம் என்றவர் நான் செய்த  தவறுகளுக்கு
விநாயகர் என்னை தினமும் 300 படிகள்  ஏற வைக்கிறார்  என்றார்.

மறுநாள்  என் தந்தையிடம் தொலைபேசியில்  சொல்லி அடுத்த  வாரமே நண்பனை பார்க்க வந்துவிட்டார்
என் தந்தை.  நண்பர்கள் இருவரும்  கட்டி தழுவ அப்போது என் தந்தை நண்பனின்  நிலையை எண்ணி
கண்ணீர்  விட்டார். போடா சாமி  நான் மீண்டும்  மாணிக்க விநாயகர் அருளால் இதே திருச்சியில்
வாழ்ந்து காட்டுவேன் என்றார் சிவானந்தம்.

 சில வருடங்களுக்குப் பிறகு  நானும் சென்னை  வந்து விட்டேன். நண்பர்கள்  தொலைபேசியில்  பேசிக்
கொள்வார்கள். ஒரு நாள்  தினத்தந்தி யில் செய்தி. விற்காத  லாட்டரி சீட்டுக்கு  கடைக்காரருக்கு
சிக்கிம் லாட்டரியில்  ஒரு கோடி பரிசு கணவன்  மனைவிக்கு  அமெரிக்கா  செல்ல இலவச டிக்கெட்
என்று சிவானந்தம்  மற்றும்  அவர் மனைவி படங்கள்  வெளியாகியிருந்தன. உடனே என் தந்தை
அந்த மாணிக்க விநாயகன்  கை கொடுத்துவிட்டான்  என மகிழ்ந்தார்.
சில  நாட்கள் கழித்து  என் பெற்றோர்  திருச்சியில்  சிவானந்தம்  வீட்டின் புது மனை  விழாவிற்கு
சென்று வந்தனர்.

அவர்கள்  வீட்டின் வாசலில்  பெரிய பிள்ளையார்  சிலை

தந்தை மறைவிற்கு  பின் எங்கள் தொடர்பு  இல்லை
இன்றும் நான் திருச்சி  செல்லும் போது  டிரெயினில் இருந்து  அந்த மலைக்கோட்டையை பார்க்கும்
போது  அதனருகில்  திரு. சிவானந்தம்  பிள்ளையின்  முகம் நிழலாடும் 

இது தான் பெரியார் சீடனை தடுத்தாட்  கொண்ட கதை.
இது தான் அந்த உச்சிப் பிள்ளையார்  பெரியார் சீடனுக்கு  கொடுத்த " கூலி".

இது நமது Kumar Kandasamy யின் சொந்த அனுபவங்களிலிருந்து

Antha.visvanathan