சிதம்பர சக்கரம் என்றால் என்ன?
{மகா ரகசியம்; மகாரகசியம்}
{சித்த ரகசியம் இதுதான்}
"அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே"
"ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே"
இந்த அண்ட பிண்டமென அனைத்தும் உருவாக "நமசிவய" என்ற ஐந்தெழுத்தாகிய பஞ்சபூதங்களே காரணமாகும். இந்த ஐந்தின் பெருமையை பற்றி என்குரு திருமூலர், சிவவாக்கியர், காகபுஜண்டர், வள்ளலார் என அனைவருமே எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்த வண்ணம் என்பது அவரவர்கள் சுவாசத்தை கொண்டுதானாகும். அண்டத்தில் உள்ளதெள்ளாம் பிண்டத்தில் என்றும், அண்டமாகிய இப்பிரபஞ்சத்தை விட பிண்டமாகிய இவ்வுடலே விசாலமானது என்றனர் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட உடலை ஆராய்ச்சி கூடமாகவும் சுவாசத்தை கருவியாக கொண்டே அனைத்தையும் அறிந்தனர்.
"ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடுத் தேவரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்ற யறியச் சொன்னார்
முனியோர்கள் இருடியரிப்படியே சொன்னார்கள்
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்து
பேரான பூரணத்தைத் நினைவாய்க் காரு
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்
வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே"
அதாவது சுவாசத்தை பற்றிய சித்தர்கள் பாடல்கள் கணக்கில்லாமல் இருந்தாலும், சித்தர்களுக்கு முதன்மையானவரான அகத்தியர் சுவாசத்தை தெய்வம் என்று கொண்டே பதினெண் சித்தர்கள் முதல் அயன், மால், ஈசன், தேவர்கள் என அனைவரும் பயன்பெற்றனர் என தனது ஞானத்தில் கூறியுள்ளார். நூலாகிய சுவாசத்தை பிடித்தால் சேலையாகிய இறைவனை பிடிக்கலாம். தன்னையறிய தலைவனையறியும் முறையாகும்.
மேலும் இந்த உடலை யந்திரம் எனவும், சுவாசத்தை மந்திரம் எனவும், இவற்றை இயக்கும் விதம் தந்திரம் எனவும் கூறலாம். காரணம் மகா மேரு பீடம் என்று கூறப்படும் ஸ்ரீ சக்கரத்தின் அடுக்கு யந்திரம் என்பது நம் முதுகுத்தண்டையே குறிக்கும். அதேபோல் எண்ணற்ற யந்திரங்கள் நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகங்களையோ அல்லது முக்கிய இடங்களையோ அல்லது தலை மற்றும் மூளையின் சிறு பகுதியோ அல்லது முழுவதுமான வடிவத்தை கொண்டே வடிவமைக்கப்பட்டது. இதில் மந்திரங்களான பீஜங்களை சில குறிப்பிட்ட தந்திரமுறைகளை கொண்டு உட்சரிக்கும் போது சுவாமாகிய காற்று வெட்டப்பட்டு துள்ளியமான ஒலி ஒளி அதிர்வுகள் உள்ளும் வெளியிலும் பரவி யந்திரம் சக்தி பெருகின்றது. எப்பொழுது எல்லாம் ஒருவன் அந்த யந்திரத்திற்கு பக்கத்தில் செல்கிறானோ, அப்போதெல்லாம் அவன் உடலில் உள்ள அந்த யந்திர வடிவ பகுதி சக்திபெறும்.
சரி இதில் சுவாசத்திற்கும் பஞ்சபூதத்திற்கும் என்ன சம்பந்தம்??
நாம் சுவாசிக்கும் காற்று பஞ்சபூத தன்மையை கொண்டே செயல்படுகின்றது. அதாவது நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றத்திற்கு இப்பஞ்சபூத சரமே காரணம். பூதசரத்தில் எந்த பூதத்தின் சரம் ஓடுகின்றது என கண்டுபிடிப்பதில் பல வழிகள் உண்டு. அவைகளில் சுவையை கொண்டு அறிவது. கண்ணாடியில் சுவாசத்தை ஊதி, அதில் தெரியும் வடிவத்தை கொண்டு அறிவது, நிறத்தை கொண்டு அறிவது என பலவழிகள் உண்டு.
"பாராப்பா பிருதிவியிற் கவிழ்ந்தேயோடும்
பரிவான அப்புதனில் வலத்தே யோடும்
சேரப்பா தேய்வுதனில் இடத்தே யோடும்
திறமான வாயுதனில் நேரா யோடும்
ஒரப்பா அந்தரத்தில் மேலே யோடும்
ஒன்றேனும் குறைவுப்படாது உற்றுநோக்கி
ஆரப்பா இந்நூலைப் பார்பார் கேட்பார்
அறிவான மூமின்கட்கருள் செய்தோமே"
இதில் மிக சுலபமாக சரத்தை கண்டுபிடிக்க மேற்கண்ட பாடலே சிறந்தது. அதாவது மூச்சானது கீழ்நோக்கி (பூமியை நோக்கி) கவிழ்ந்து ஓடினால் அச்சரமானது பிருதிவி (நிலம்) சரமாகும். அதுபோல் மூச்சானது இடகலையில் அல்லது பிங்கலையில் என எப்படி நடந்தாலும், மூச்சானது சாய்ந்து இடது பக்கமாக ஓடினால் அப்பு (நீர்) சரமாகும். அதே போல் வலது பக்கமாக சாய்ந்து ஓடினால் தேயு (தீ) சரமாகும். மூச்சானது ஒடிந்து நமக்கு முன்னால் நேராக ஓடினால் வாயு (காற்று) சரமாகும். வெளிவரும் மூச்சானது நாசி வழி வடிந்து நமக்கு முன்பாக மேல்நோக்கி சென்றாலும், உள்ளுக்குள்ளேயே ஓடினாலும் ஆகாய சரமாகும். இப்படி நம் மூச்சானது எந்த பூதத்தை சார்ந்து ஓடுகின்றது என்பதை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
நாம் அசையா வேளையில் பிருதிவியும், அசையும் வேளையில் அப்புவும், கஷ்ட வேளையில் தீயும், நம்மில் ஏதேனும் சலிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் துறவு வேளையில் காற்று சரமோடும். அதிக நேர தியானம், வாசி மற்றும் பூசை வேளையில் ஆகாய சரமோடும்.
மேலும் பூர்வபட்ச வியாழனில் பூமி சரமும், அமரபட்ச வியாழனில் நெருப்பும், வெள்ளி நீரும், புதன் காற்றும், சனிக்கிழமை ஆகாய சரமும் மேற்கண்ட நாட்களில் முதலில் ஓட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஞாயிறு நீர் சரமும், திங்கள், செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் தீ சரமும், புதன் பூமியும், வெள்ளி காற்றும், சனி ஆகாய சார்ந்த சரம் நடப்பது மிக்க நல்லது.
பொதுவாக ஒருவருக்கு மண் மற்றும் நீருக்குண்டான சரம் நடந்தால், அவர் சத்துவ குணமுடையவராவார். மேலும் ஒருவருக்கு கோபம், அகங்காரம், ஆணவம், காமம் போன்ற எண்ணங்கள் தீ சரம் நடக்கும்போது உண்டாகும். எனவே அதை கவனித்து பக்தியில் மனதை செலுத்தினால் நல்லது. காற்று சரம் நடந்தால் அவன் ஞானியை நெருங்கியவன். ஆகாய சரம் நடந்தால் அவன் கடவுளை நெருங்கியவன். தீ சரம் பக்தியில் தீவிரமாயிருப்பவனுக்கும், நீர் சரம் தான தர்ம செய்பவனுக்கும், மண் சரம் ஓடினால் அவன் உபதேசம் செய்பவனாகவும் இருப்பான்.
மேலும் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது கொட்டாவி விடாமல் மூச்சை உள்ளிழுத்து கொண்டு எழுந்திருந்தல் மிக்க நலமாய் அமையும். சூரியகலையில் மண்சரமோ, நீர்சரமோ ஓடும்போது அந்நிலையில் எக்காரியம் ஆகவேண்டியிருப்பினும் அக்காரியத்தினை செயலில் நோக்க விரைவில் அது எளிதாக முடியும். மண்ணும் நீரும் கலந்தேயிருப்பது போல உடலில் மாமிசமும் உதிரமும் கலந்தேயுள்ளன. ஆகாயமும் காற்றும் கலந்தேயிருப்பது போல சரமாகிய மூச்சு காற்று ஆகாய பந்தத்தில் கலந்தேயுள்ளது. அக்கினி மட்டும் பூமியிலும், பிரபஞ்சத்திலும், உடலிலும் அனைத்திலும் பொது நிலையாய் மத்தியில் உள்ளது.
இதுவரை சர சாஸ்திரம் ஓரளவு நிறைவடைகின்றது. இதில் இன்னும் பழகப் பழகப் இப்பூத சரமானது எப்பூத சரத்தில் போய் முடிகின்றது என்பதை கண்டு இந்த பஞ்சபூத சரத்தையும் இடகலையில் 25 ஆகவும், பிங்கலையில் 25 ஆகவும் பிரிக்கலாம். அதாவது நமது மூச்சு பிருதவியினை பூமிசரமூச்சில் தொடங்கி எப்பூத சரத்தில் முடிகின்றது என காண வேண்டும். காண முடியும். இந்த அளவு துள்ளியமாக பார்க்கும் முறையில் நம்மற்றில் உலகின் ஆதிஅந்த செயலின் முக்காலங்களையும் நன்கு அறிந்துணர முடியும். மேலும் இடது 25யும், வலது 25யும் மற்றும் சுழுமுனையாகிய 1யும் சேர்ந்த கூட்டுதொகையே 51 அட்சரமாகிய சிதம்பர சக்கரமாகும். இதை விளக்க விளங்கி கொள்ள தெரிந்தவன் பரத்தை தெரிந்தவன் ஆவான்.
சிதம்பர சக்கரத்தை தெரிந்து கொள்வதற்குமுன்,
நமசிவய மந்திரத்தில்
ந- நிலமாகவும்,
ம- நீராகவும்,
சி- நெருப்பாகவும்,
வ- காற்றாகவும்,
ய- ஆகாயமாகவும் உள்ளன.
இவற்றின் நிறம், சுவை, வடிவம், தூரம் ஆகியன;
ந-நிலம்-பொன்-சதுரம்-தித்திப்பு-12 அங்குலம்,
ம-நீர்-வெண்மை-பிறை வடிவம்-துவர்ப்பு-16 அங்குலம்,
சி-தீ-சிகப்பு-முக்கோணம்-உவர்ப்பு-8 அங்குலம்,
வ-காற்று-கருப்பு-அறுகோணம்-புளிப்பு-4 அங்குலம்,
ஆகாயம்-பச்சை-வட்டம்-கார்ப்பு-1 அங்குலமாகும்.
இவற்றில் நிலத் தத்துவத்தில் நிலத்தில் நிலம், நிலத்தில் நீர், நிலத்தில் தீ, நிலத்தில் காற்று, நிலத்தில் ஆகாயம் என ஐந்து பிரிவுகளாக உள்ளும் வெளியும் இயங்கும். இதேபோல் நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் என மொத்தம் 25 பிரிவுகளாக இயங்கும் விதத்தை 25 கட்டத்திற்குள் வைத்து ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தை குறிப்பிடுவதே சிதம்பர சக்கரமாகும்.
"சிதம்பர சக்கரம் தான் அறிவார்- இந்த
சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர
சக்கரம் தானும் என்றால்- அதற்குள்
தெய்வத்தை யல்லோ அறியவேணும்"
சிதம்பர சக்கரத்தின் விளக்கத்தை சமீபத்தில் வந்த வள்ளலார் தனது அகவலில் தெளிவாக எழுதியுள்ளார். அனைவரும் அகவலை ஒருமுறையாவது படித்து பார்க்கவும். ஆன்மீகத்தின் ரகசியமான முறைகள் மற்றும் சூட்சமங்கள் உங்களுக்குள் கேள்வியாய் உதித்து அதை நோக்கி பயணிக்க வைக்கும். விடை என்பது எப்படி வேண்டுமானாலும் கிடைக்கலாம். சிதம்பர சக்கரத்தை ஸ்தூலம், சூட்சமம், காரணம் என பல பிரிவுகளில் விளக்கிக் கொண்டு செல்லலாம். இப்பதிவில் சுவாசத்தால் ஏற்படும் மாற்றத்தையும் அதில் இப்பூதங்களில் செயல்பாடுகளையும் மட்டும் இங்கு சொல்கிறேன். விரிவாக கற்க திருமந்திர whatsaap வகுப்பில் கற்கவும்.
சரமானது மண்ணை சார்ந்து நடக்கும்போது;
மண்ணில் மண் நடந்தால்- எதிலும் நிறைவு உண்டாகும்.
மண்ணில் நீர்- அடிசேரலாம்.
மண்ணில் காற்று- அலைந்து அலைந்து அவனடி சேர்வர்.
மண்ணில் நெருப்பு- உடல் உஷ்ணம் அதிகமாகும்.
மண்ணின் ஆகாயம்- பிடி கிடைக்காமல் சுற்றிக்கொண்டே இருப்பர்.
சரமானது நீரை சார்ந்து நடக்கும்போது;
நீரில் நிலம்- மூச்சு நீருக்குரிய சரத்திலாரம்பித்து மண்ணிற்குரிய பிருதிவி சரத்தில் முடிந்தால் கலத்தல் எனும் ஐக்கிய பாதையான சமாதி நிலையை அடையலாம்.
நீரில் நீர்- எல்லாவற்றிலும் வளர்ச்சி.
நீரில் நெருப்பு- உடல் குளிர்ச்சியாகும்.
நீரில் காற்று- அமிர்தம் சுரக்கும்.
நீரில் ஆகாயம்- அப்படியே அதிர்ந்து போய் ஒரு சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் இம்மூச்சு ஓடும்.
சரமானது தீயை சார்ந்து நடக்கும்போது;
தீயில் மண்- ஆயுள் நீட்டிப்பு.
தீயில் நீர்- ஆயுள் குறைவு.
தீயில் தீ- இருநிலை மாற்றம்.
தீயில் காற்று- மயக்கத் தோற்றத்தை உருவாக்கும்.
தீயில் ஆகாயம்- புவிஈர்ப்பு விசையை மீற முடியும்.
சரமானது காற்றை சார்ந்து நடக்கும்போது;
காற்றில் மண்- நோய் அறிகுறி.
காற்றில் நீர்- விந்து மேலேறும்.
காற்றில் தீ- உடம்பில் தீயின் சுழற்சியை காணலாம்.
காற்றில் காற்று- காந்தவியல் அழுத்தம் மேற்பட்டு தலை கணக்கும், நாதம் கேட்கும்.
காற்றில் ஆகாயம்- பாவபுண்ணியம் கலைந்து எரிந்துவிடும் நிலை.
சரமானது ஆகாயத்தை சார்ந்து நடந்தால்;
ஆகாயத்தில் மண்- உச்சி திறக்கும், தியானத்திற்கு உகந்தது.
ஆகாயத்தில் நீர்- நம் சக்தியானது இடம்விட்டு இடம் நகரும்.
ஆகாயத்தில் காற்று- விசுத்தியில் நிற்கும்
ஆகாயத்தில் தீ- நந்தியாகிய பரமாத்மாவை தெளிவாக காண முடியும்.
ஆகாயத்தில் ஆகாயம்- இருள் நிலை, மாயை, முழு ஞானம் உற்பத்தியாகும்.
மேலும் சந்திரகலை குளிர்ச்சியாக இருப்பதால் அது உஷ்ணத்தை நாடி செல்லும். இதில்தான் அறிவு உதிக்கின்றது. இதேபோல் சூரியகலை உஷ்ணமானதால் குளிர்ச்சியை நோக்கி செல்லும். இதில் மாயை அல்லது பிரமை உண்டாகின்றது. பிரமை என்பது பிரம்மதோடு இணைந்திருப்பது என்ற பொருளாகும். இந்த வேறுபாடுகளை கொண்டு நீங்களே உங்கள் உள்நிலையும் உங்கள் வெளி உலக நிலையையும் துல்லியமாக ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம்.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் என்பதற்கு ஏற்றாற் போல் இந்த பிண்டத்தில்(உடலில்) பஞ்சபூத சரத்தால் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றதோ அதேபோல் அண்டமாகிய பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழும். உங்கள் மனதில் மேலும் தெளிவாக பதிய வேண்டுமெனில் கீழேயுள்ள சாதாரணமாக நடைமுறையில்(Practical changes around us in the nature) ஏற்படும் இயற்கை மாற்றத்தை புரிந்துகொண்டால் போதுமானது. இதுவே நம் உடலுக்கு உள்ளும் வெளியும் நிகழ்பவை.
பிருதவியில் ஏற்படும் மாற்றம்:
மண்ணை மண்ணில் போட்டால்; நிறையும்.
மண்ணை நீரில் போட்டால்; அடி செல்லும்.
மண்ணை காற்றில்; அலைந்து வேறிடம் பின்பு கீழ் அடிவிழும்.
மண்ணை தீயில்; உஷ்ணமாகும். மண்ணை ஆகாயத்தில்; சுழலும்.
அப்புவில் ஏற்படும் மாற்றம்:
நீரை மண்ணில் கலந்தால்; பரவும்.
நீரை நீரில்;- பெருகும்.
நீரை தீயில்;- குளிர்ச்சி.
நீரை காற்றில்;- ஆவியாகி மேகமாகி மழை வரும்.
நீரை ஆகாயத்தில்;- உறை நிலை.
தேயுவால் ஏற்படும் மாற்றம்:
தீயை மண்ணில் போட்டால்; அழியாநிலை(உஷ்ணம்).
தீயை நீரில் போட்டால்; அழிவுநிலை. தீயை தீயில்; இருநிலை மாற்றம்.
தீயை காற்றில்; அனல், கானல்நீர், வெக்கை, உருக்கம்.
தீயை ஆகாயத்தில்; குமிழாகி பறக்கும்.
வாயுவால் ஏற்படும் மாற்றம்:
காற்றை மண்ணில்; விரிசல்.
காற்றை நீரில்; நீர் சுழற்சி.
காற்றை தீயில்; தீ சுழற்சி.
காற்றை காற்றில்; காந்தவியல். அழுத்தம், காற்றை ஆகாயத்தில்; மேகம் கலையும்.
ஆகாயத்தால் ஏற்படும் மாற்றம்: ஆகாயத்தை மண்ணில்; பிரளயம், தியானம்.
ஆகாயத்தை நீரில்; புவி நகரும், இடமாறும்.
ஆகாயத்தை தீயில்;-
ஒளி பெருகும்.
ஆகாயத்தை காற்றில்;- கடல்நீர் உள்வாங்கும்.
ஆகாயத்தை ஆகாயத்தில்; இருநிலை, மாயை, பிரமை.
நம் ஸ்தூல சூட்சும சரீரங்களில் ஸ்தூலமாக மற்றும் சூட்சுமமாக நடைபெறும் காரண காரியங்களுக்கு பஞ்சபூதங்களின் பயன்பாடு பற்றி அடுத்து சொல்கிறேன்....
ஸ்தூலத்தில்;
--------------------------
மண்ணில் மண் சேர்ந்தால் உடலில் சக்தி குறைந்து அசதி ஏற்படும்.
மண்ணில் நீர்- உடலில் மாமிசம் உருவாகின்றது,
மண்ணில் தீ- சருமமாகிய தோல் உருவாகின்றது,
மண்ணில் வாயு- நரம்புகளும்,
மண்ணில் ஆகாயம்- ரோமமும்,
நீரில் நீர்- சிறுநீரும்,
நீரில் மண்- உமிழ்நீரும்,
நீரில் வாயு- உதிரமும்,
நீிரில் தீ- வியர்வையும்,
நீரில் ஆகாயம்- சுக்கிலமும்,
தீயில் தீ- நேத்திர கண்ணும்,
தீயில் ஆகாயம்- செவியும்,
தீயில் வாயு- சரீரமும்,
தீயில் நீர்- வாயும் நாக்கும்,
தீயில் மண்- நாசியும்,
காற்றில் மண்- இருதயமும் பிராணக் காற்றும்,
காற்றில் நீர்- குதமும் அபான வாயுவும்,
காற்றில் காற்று- சர்வ நாதங்களும் வியானனும்,
காற்றில் தீ- கழுத்தும் உதானனும்,
காற்றில் ஆகாயம்- தொப்புளும், சமானனும்,
ஆகாயத்தில் மண்- இருதயமும்,
ஆகாயத்தில் நீர்-நாசியில் பித்தமும்,
ஆகாயத்தில் தீ- மார்பும்,
ஆகாயத்தில் காற்று- கண்டமும்,
ஆகாயத்தில் ஆகாயம்- சிவமும் உருவாகின்றன.
சூட்சுமத்தில்;
-------------------------
மண்ணில் மண் கலந்து குதமும்,
மண்ணில் நீர்- குய்யமும்,
மண்ணில் தீ- கைகளும்,
மண்ணில் காற்று- பாதங்களும்,
மண்ணில் ஆகாயம்- வாக்கும்,
நீரில் ஆகாயம்- சத்தமும்,
நீரில் காற்று- தொடு உணர்வும்,
நீரில் தீ- பார்வையும்,
நீரில் நீர்- சுவையும்,
நீரில் மண்- வாசனையும்,
தீயில் தீ- பசியாகிய தீபாக்கினியும்,
தீயில் மண்- தாகமும்,
தீயில் நீர்- தூக்கமும்,
தீயில் காற்று- கொட்டாவியும்,
தீயில் ஆகாயம்- சங்கமமாகிய கலத்தலும்,
வாயுவில் வாயு- ஓட்டமும்,
வாயுவில் நீர்- இருத்தலும்,
வாயுவில் தீ- தத்தித்தத்தலும்,
வாயுவில் மண்- நடத்தலும்,
வாயுவில் ஆகாயம்- படுத்தலும்,
ஆகாயத்தில் மண்- ஆசையும் அகங்காரமும்,
ஆகாயத்தில் நீர்- துவேசமும்,
ஆகாயத்தில் தீ- பயமும்,
ஆகாயத்தில் காற்று- வெட்கமும், ஆகாயத்தில் ஆகாயம்- மேகமும் உருவாகின்றன.
ஆக இதன் மூலம் ஒரு பூதமானது மற்றைய பூதங்களில் கலந்து உடலிலும், வெளியிலும், ஸ்தூலமாகவும், சூட்சமமாகவும் ஏற்படும் மாற்றங்களையும், பஞ்சபூதங்களே பிறக்கும் முன் தாயின் கருவிலும், பிறந்தபின் வெளியிலும் உடல் உறுப்புகள் உருவாவதற்கு காரணமாகும். மேலும் நமக்கு ஏற்படும் ஆணவம், கோபம், ஆசை போன்றவற்றிற்கும் இப்பூதங்களே காரண காரியமாகும். இவை அனைத்தையும் அனுபவத்தில் உணர வாழ்த்துக்கள். மேலும் கற்க திருமந்திர சிவயோக வகுப்பில் கற்கவும்...