Monday 17 June 2024

ரயில்வே பிள்ளையார்

 * சாமியாவது பூதமாவது என்பவர்களுகான பதிவு*.         கும்பகோணம் ரயிலடியில் உள்ள ரயில்வே பிள்ளையாரின் மகத்துவம்! 


(இணையத்தில் படித்த பகிர்வு)


கும்பகோணம் ரயிலடியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. 

இந்த கோயில் மிக பழமையானது. 


1955ல் திவான் ஸ்ரீனிவாச ராவ் கடைசியாக கும்பாபிஷேகம் செய்ததாக ரயில்வேயில் வேலை பார்த்த சீனியர் சிடிசென்ஸ் கூறுவர் . 


இக்கோயிலில் மதுரை சோமு, 

ராதா ஜெயலட்சுமி, சீர்காழி Dr. சிவசிதம்பரம் உள்ளிட்ட பல புகழ் மிக்க பாடகர்கள் விநாயக சதுர்த்திக்கு கச்சேரி செய்துள்ளார்கள். 


ரயிலுக்கு செல்பவர்கள் பலர் இக்கோயிலுக்கு வந்து குட்டிக்கொண்டு உண்டியலில் காசு போட்டு செல்வது வழக்கம்.  


பிள்ளை வரம் தரும்  பிள்ளையார் என்று இவர் பக்தர்களால் நம்பப்பட்டு இங்கு வேண்டியபின் பிறக்கும் குழந்தையை பிள்ளையார் சன்னதியில் முதன் முதலில் போடும் வழக்கமும் உள்ளது. 


இப்படி பிரபலமான பிள்ளையார் கோவிலை ரயில்வே போர்ட்டர் ஒருவர் சிறிது காலம் பராமரித்து பின் அந்த கோயில் தனக்கு சொந்தம் என கோர்ட்டில் வழக்கு போட்டார். 


சில காலம் பூஜை  நின்றது. 


HR &CE துறையினர் வந்து 

கோவில் உண்டியலை திறந்து பணம் எடுத்துச்செல்வது மட்டும்  தவறாமல் நடந்தது. 


இந்நிலையில்,இந்த கோயில் ரயில்வேக்கு தான் சொந்தம் என கோர்ட் தீர்ப்பு சொன்னது.


ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். போர்ட்டரும் போயாச்சு ,HR &CEம் போயாச்சு.


வழக்கம் போல் குருக்கள் பூஜை தொடர்ந்து வந்தது. 


அப்போது திடீரென 2010ல் திருச்சி ரயில்வே கோட்ட  பொறியாளர் ஒருவர் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக அந்த பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு வேறு இடத்தில் புதிய கோயில் கட்ட உத்தரவிட்டார். 


அவர் கோவிலுக்கு ஒதுக்கிய பகுதி  ரயில்வே குடியிருப்பு டிரைனேஜ் சங்கமிக்கும் இடம். 


இது தொடர்பாக இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தியது. 


ஒரு நாள் நான் அந்த கோவிலுக்கு வழக்கம்போல் விநாயகரை தரிசனம் செய்ய சென்றபோது, ரயில்வே கேன்டீன் காண்ட்ராக்டர் ரயில் நிலைய மேலாளருடன் வந்து என்னிடம் எப்படியாவது கோயில் இடிப்பதை தடுக்க வேண்டும்  என்று கேட்டுக்கொண்டனர்.  


நான் திருச்சி ரயில்வே கோட்ட  ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப்பினர் என்பதால் என்னால் எதாவது செய்ய முடியும் என்று (தவறாக) நினைத்தனர். 


நானும் முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு கண்களை மூடி பிள்ளையாரையே வேண்டிக்கொண்டேன். 


" பிள்ளையார் யாரையோ தேடுகிறார்; அவர் கிடைத்தவுடன் பிரச்சனை முடிந்துவிடும்.  


பிள்ளையாரை யாராலும் ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாது" என்று ஆறுதலுக்காக ஒரு வார்த்தையை  கூறிவிட்டு வந்தேன்.  


எனக்கு மிகவும் பரிச்சயமான 

மணி சங்கர் ஐயர் அப்போது 

மத்திய அமைச்சர். 


அவரிடம் பிரச்னையை சொன்னேன். 


அவரும் DRM  ராம் சந்திர ஜாட் என்பவருடன் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்து கோவிலை இடிக்காமல் ரயில்வே மேம்பாட்டு  பணிகளை செய்ய வலியுறுத்தினார்.  


ஆனால் அந்த  பொறியாளர் மட்டும் மசியவே இல்லை. 


கோவிலை இடிக்க நாள் குறித்தாகி விட்டது.காலை 6 மணிக்கு இடிக்க ஏற்பாடு.  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


மயிலாடுதுறையில் உள்ள section engineer வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 


இரவு நிலைய மேலாளர் என்னை கோவிலுக்கு அழைத்தார்.


" சார், எல்லாம் கை  மீறி போய்க் கொண்டிருக்கிறது; நாளை நான் லீவ் சொல்லிவிட்டு  வந்துள்ளேன்; 


கோயில் இருந்தால் மீண்டும் வேலைக்கு வருவேன் இல்லையென்றால் resign  செய்துவிடுவேன்" என்று வருத்தத்தோடு கூறிவிட்டு சென்றார். 


அப்போது நான் அவரிடமும் "கண்டிப்பாக கோவிலுக்கு ஒன்றும் ஆகாது என்று தோணுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூற ஒரு சிதறு காய் போட்டுவிட்டு வந்தோம். 


மறு  நாள் காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து எங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில்  விளக்கேற்றி மனமுருக வேண்டினேன்.  


முதல் நாள்காலை பூஜையின்

போது  பிள்ளையார் கிரீடத்தில் வைத்திருந்த  பூ சட்டென்று கீழே விழுந்தது.


நல்ல சகுனம் என்று சற்று நிம்மதியாக இருந்தாலும் மனம் பதைபதைத்து.


உண்மையில்  நமது  

JC ஐயர் அளவிற்கு நான் தைரியசாலி கிடையாது. 


காற்றில் கம்பு சுத்துபவன் தான். சரியாக  7 மணிக்கு 

மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த ரயில்வே போலீஸ் நண்பருக்கு போன் செய்து நிலைமை குறித்து கேட்டேன். 


அவர் இதுவரை யாரும் வரவில்லை, இந்து அமைப்பினர் சுமார் 20 பேர் தூரத்தில் நிற்கின்றனர் என்றார்.  


இடிக்க தொடங்கினால்  போன் செய்யுங்கள் என்று சொல்லி வைத்தேன். 


என்ன ஆச்சர்யம்! கோயில் இடிக்கப்படவில்லை; காரணம் கேட்டபோது அப்பணிக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பிரிவு பொறியாளருக்கு இரவு திடீரென பக்க வாதம் வந்துவிட்டதாம். 


அவர் சிறப்பு ஆம்புலன்ஸில்   

சென்று பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் காலை அதே 6 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.


கோவில் இடிபடாத காரணம் புலப்படாவிட்டாலும், பிள்ளையார் தேடும் நபர் அவரல்ல என்பது மட்டும் தெரிந்தது. 


அதனால் கோவிலில் அவருக்காக 

சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தோம். 


அதன் பிறகு கும்பகோணம் ரயில் நிலைய ஆய்விற்கு எந்த உயர் அதிகாரி வந்தாலும் கோவில் பக்கம் செல்லவே மாட்டார்கள்.  


இருப்பினும் கோயில் இடிக்கும் முடிவை ரயில்வே நிர்வாகம் மாற்றவேயில்லை. 


மீண்டும் கோயில் இடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டது.  


இந்த முறை பிள்ளையார் யாருக்கும் suspense  வைக்கவே இல்லை.  


நாள் குறித்து ஆர்டர் வெளியான  

மறு நாளே லஞ்ச ஊழல் ஒன்றில்,  கோவிலை இடிப்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு  முழு முனைப்பு காட்டிய தெலுங்கு  கோட்ட  பொறியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்.  


அவரை மாட்டிவிட்ட  காண்ட்ராக்டர் *விநாயகம்* ; கைது செய்த சிபிஐ ஆபிசர் *கணேசமூர்த்தி* 


ஒரு வழியாக பிள்ளையார் தேடிய நபர் கிடைத்தவுடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது. 


திருந்த வாய்ப்பு கொடுத்தும்  

திருந்தாமல் இருந்த அந்த பொறியாளரை  வேறு 

வழியின்றி  பிள்ளையார் 

தண்டிக்க வேண்டியதாயிற்று.   


அதன் பிறகு 2016ல் கோயில் விஸ்தரிக்கப்பட்டு (பிள்ளையார் மட்டும் ஒரு அங்குலம் கூட நகராமல்)  நோய்வாய்ப்பட்டு  நன்கு குணமடைந்த  செக்ஷன் என்ஜினீயர் உடபட ஓய்வு பெற்ற  பல ரயில்வே நிலைய அதிகாரிகள் , ஊழியர்கள்,   பயணிகள், பக்தர்கள் புடை சூழ  வெகு விமர்சையாக  

கும்பாபிஷேகம் நடைபெற்றதை கூறவும் வேண்டுமோ !!!     


கோவில் கட்டிட பணிகள் கும்பாபிஷேக  செலவீனங்கள் தோராயமாக 5.50 லட்சத்திற்கு 

மேல் ஆனது. 


பிள்ளையாரை வேண்டி புத்திர பாக்கியம் பெற்ற ஒரு NRIன்   கனவில் பிள்ளையார்தோன்றி கோவில் கட்டச் சொல்ல,  திடீரென்று  வந்த அவர் கொடுத்த தைரியத்தில் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. 


4 லட்சம் வரை  செலவுகளை அவர் தானாகவே  ஏற்றுக்கொண்டார்.  


உட்கார்ந்த இடத்திலேயே  அணு அளவும் அசைந்து கொடுக்காத   _ கற்பக விநாயகர் இன்றும்   அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்                                       

*சரணம்  கணேசா*!!!



Wednesday 5 June 2024

வலிப்பு நோயை தீர்க்கும் பத்ரவல்லீஸ்வரர் திருக்கோவில்

 வலிப்பு நோயை தீர்க்கும் பத்ரவல்லீஸ்வரர் திருக்கோவில்..!!


பத்ரவல்லீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபாடு செய்தால் வலிப்பு நோய், நரம்பு கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலையில் உள்ளது பத்ரவல்லீஸ்வரர் திருக்கோவில். முன் காலத்தில் இந்த ஆலயம் இருந்த பகுதியில் காத்யாயன முனிவர் வசித்து வந்தார். அவரது மகளாகப் பிறந்த பார்வதி தேவி, காத்யாயினி என்ற பெயருடன் வளர்ந்து வந்தார். காத்யாயினியை மணம் முடிக்க சிவபெருமான், முதியவர் வேடத்தில் அங்கு வந்தார்.


அவரை யார் என்று அறியாத முனிவர், ‘ஒரு முதியவருக்கு என் மகளைக் கட்டிக் கொடுக்க விருப்பமில்லை’ என்று மறுத்து விட்டார். இதையடுத்து தனது நெற்றிக்கண்ணைத் திறந்து, தான் யார் என்பதை முனிவருக்கு உணர்த்தினார் ஈசன். 


அதன்பிறகே தனது மகளான காத்யாயினியை சிவபெருமானுக்கு முனிவர் மணம் முடித்து வைத்தார். இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் நடைபெற்ற தலம் என்பதால், இங்குள்ள இறைவனை ‘மாப்பிள்ளை சுவாமி’ என்றும் அழைக்கிறார்கள். 


சிம்ம ராசிக்காரர்கள் இத்தல அம்பாளை தரிசித்தால், திருமணத் தடை நீங்கி, நல்ல துணை கிடைக்கும் என்பது ஐதீகம்.


தல வரலாறு :


புரூரவஸ் என்ற அரசனின் மனைவி பத்ரவல்லிக்கு, வலிப்பு நோய் உண்டானது. பல இடங்களில் சிகிச்சைப் பெற்றும், அந்த நோய் குணமாகவில்லை. 


இதையடுத்து திருவீழிமிழலை விழிநாதரை வணங்கி, தன் வலிப்பு நோய் நீங்க முறையிட்டாள். அன்றிரவு அவள் கனவில் தோன்றிய ஈசன், ‘திருவீழிமிழலை தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நோய் நீங்கப் பெறுவாய்’ என்று அருளினார்.


அதன்படியே பத்ரவல்லியும், தீர்த்தத்தில் நீராடி, நோய் நீங்கப் பெற்றாள். தன்னுடைய நோயைப் போக்கிய இறைவனுக்கு ஆலயம் அமைக்க பத்ரவல்லி விருப்பம் கொண்டாள். 


அவளின் எண்ணத்தை விநாயகப்பெருமானிடம் சொல்லி வேண்டினாள். அவர் வழங்கிய பணமுடிப்பை கொண்டு ஆலயத்தை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.


இந்த ஆலயத்திற்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அதையும் பார்க்கலாம்.


மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்றான். அதனை மீட்டுத் தரும்படி, சிவபெருமானை வேண்டினார் திருமால்.


‘பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் இருக்கும் என்னை அனுதினமும் பூஜித்து வந்தால், சக்ராயுதம் கிடைக்கும்’ என்று அருளினார் ஈசன்.


அதன்படி விஷ்ணுவும் மனம் தளராமல், தினமும் சிவ பூஜை செய்து வந்தார். விஷ்ணுவின் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, அதில் இருந்து நீரை எடுத்து அபிஷேகம் செய்ததுடன், தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு ஈசனை வழிபட்டார். ஒருநாள், சிவபெருமானின் திருவிளையாடலால் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரை மலருக்குப் பதிலாக, தன்னுடைய ஒரு கண்ணையே மலராக அர்ப்பணித்தார் விஷ்ணு.


அவரது பூஜையில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், சலந்தரனை வதம் செய்து சக்ராயுதத்தை மீட்டு விஷ்ணுவிடம் வழங்கினார். விஷ்ணு, சிவபெருமானுக்கு அர்ப் பணித்து பூஜை செய்த கண்மலர், இறைவனின் பாதத்தில் இருப்பதை இன்றும் காணலாம்.


இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபாடு செய்தால் வலிப்பு நோய், நரம்பு கோளாறு, திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 


இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை இருக்கிறது.