Sunday 14 July 2019

உயிர் விளக்கங்கள்

மூச்சோடு முனை நாசி முட்டி பாயும்...

முன்னின்றும் காணாது... விழிமேல் நோக்கும்

பாச்சென்றும் வேண்டாமே... தானே பாயும்...!”

நாம் சுவாசிக்கும் பிறிதொரு உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றதே தவிர நாம் இயங்கவில்லை.

அதாவது புறக் கண்களால் நாம் பார்ப்பது கேட்பது அனைத்தும் மூச்சின் வழியாக உயிரிலே மோதுகின்றது. அப்படிப் பிறிதொரு உணர்வுகள் மோதப்பட்டு இயக்கும் அந்த நிலையை மாற்றிட வேண்டும்.

ஏனென்றால் அவைகள் நமக்கு முன்னாடி ஆன்மாவாக வந்து இயக்கும் நிலையாக இருந்தாலும் அது நம்மை இயக்கவிடாதபடி புறக் கண்ணின் நினைவை புருவ மத்தியில் இருக்கும் உயிரான அகக்கண்ணுக்குக் கொண்டு வர வேண்டும்.

 கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றப்படும் பொழுது முக்கண் ஆகின்றது. அந்த உயிர் வழியாக நம் நினைவுகள் விண்ணுக்குச் சென்று நஞ்சை வென்று பேரொளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி அதைக் கவர்தல் வேண்டும்.

இப்படி உள் உணர்வாக நாம் இயக்கினால் நாம் வெளியில் புறத்தில் அதிகமாக எதுவும் செயல்படுத்த வேண்டியதில்லை.

1.உயிர் வழியாக நாம் கவரும் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள்ளும் பாய்ந்து அது மற்றவர்களுக்குள்ளும் பாயப்பட்டு

2.தீமைகளை அடக்கி நன்மையின் செயலாக ஒளியின் உணர்வாக மாற்றி அமைக்கும்.

3.(நாம் பாய வேண்டியதில்லை... அருள் உணர்வுகள் உயிரிலே பாய்ந்தால் “தானே” அது இயக்கும்)

4.இதை எல்லாம் அனுபவத்தில் நிச்சயம் பார்க்க முடியும்...!

ஒவ்வொரு நாளும் இதை வளர்க்க உயிருடன் ஒன்றி வாழும் நிலையும் நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் அந்தப் பூரணத்துவமும் நாம் அடைய முடியும்.

மனிதன் மகானாகி மெய் ஞானத்தின் முழுமை பெற்று மகரிஷிகளுடன் ஒன்றி வாழச் செய்யும் பக்குவத்தைத்தான் சித்தர்கள் அன்று பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

“மூக்கு முனையை... முழித்திருந்தும் பாராமல்

ஆக்கை கெட்டு... நானும் அறிவு இழந்தேன் பூரணமே...!”

மனிதனின் ஆணிவேரே சுவாசம் தான். சுவாசத்தின் வழியாக வரும் உணர்வலைகள் நாசி வழியாகப் போய் புருவ மத்தியில் இருக்கும் உயிரில் பட்ட பின் தான் எண்ணம்... சொல்... செயல்... எல்லாமே இயங்குகிறது.  அதை எல்லாம் இயக்கக் காரணமாக இருப்பது நம் உயிர் தான்.

1.உயிரே கடவுளாக உள் நின்று அவ்வாறு இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்பதையும்

2.சுவாசத்தின் வழியாகப் போவது தான் உயிரால் இயக்கப்பட்டு

3.தெய்வமாக நின்று நம்மை இயக்குகிறது என்பதையும் அறியவில்லை என்றால் என்ன ஆகும்...?

கண்களால் பார்க்கும் உணர்வுகளும் சரி... அல்லது காதால் கேட்டு அதன் பின் கண்களின் நினைவுக்கு வந்து பார்த்தாலும் சரி... அது அனைத்தும் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகி அதன் வழியே சுவாசம் அமைகின்றது.

இதைப் பற்றி எதுவும் அறியாதபடி நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு நம் சுவாசத்தின் வழியாகப் போவது எதையும் சீரபடுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்...?

நமக்குள் உள் நின்று கடவுளாக நம் உயிர் இயக்கினாலும்

1.தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் விளைந்து

2.நல்ல உடலை வீழ்த்தி

3.மீண்டும் மனிதனல்லாத வேறொரு உயிரினமாகத்தான் அடுத்து பிறக்க நேரும்.

பரிணாம வளர்ச்சியில் உயிர் நம்மை மனிதனாக வளர்ச்சி அடையச் செய்து வந்த நிலையில்

1.என்றுமே அழியாத நிலையில் ஒளியாக இருக்கும் உயிருடன் ஒன்றவில்லை எனும் பொழுது

2.நாம் தேய்பிறையாகி நம்முடைய வளர்ச்சி குன்றி

3.மனிதனுக்கு அடுத்த நிலையான பிறவா நிலை பெறும் தகுதியை இழந்து விடுவோம்.

இத்தகைய நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

இந்த உடலோ பூமிக்குச் சொந்தமானது. உயிரோ விண்ணிலே தோன்றியது. விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்கு விஜயம் செய்து உடல் பெறும் நிலையில் பரிணாம வளர்ச்சிக்கு வருகிறது.

1.பரிணாம வளர்ச்சியில் நம்மை மனிதனாக உருவாக்கிய உயிருக்கு…

2.நம்மை ஆளும் ஆண்டவனுக்குச் சேவை செய்வதே முதல் நம் கடமை ஆகும்.

சேவை என்பது இந்த உடல் வாழ்க்கையில் நாம் சொத்து சுகம் மக்கள் என்று வாழ்ந்து மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கு வாழ்வதல்ல…!   

நம்மைப் போன்று மனிதனாகத் தோன்றி உயிருடன் ஒன்றிய ஒளியாக இருக்கும் விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலை நம்முடைய உயிராத்மாவிற்குச் சொத்தாகச் சேமிக்க வேண்டும்.

1.படைப்பின் படைப்பை…

2.படைக்கப்பட்டவனின் படைப்பாக

3.பேரொளியாக நாம் ஆக வேண்டும்…!

இது தான் படைத்தவனின் தத்துவம்…!

உன்முதலாகிய ஊன் உயிர் உண்டெனும்

கண்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை

நன்முதல் ஏறிய நாம் அற நின்றால்

தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே

உயிர் தான் நாம் பார்ப்பதை கேட்பதை நுகர்வதை இயக்குகிறது நம் உடலாக உருவாக்குகிறது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்றாலும் அதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.

ஆதிமூலமாகிய உயிர் நமக்குள் கடவுளாக நின்று இயக்கிக் கொண்டிருக்கின்றான். அவனே இந்த உடலை உருவாக்கியுள்ளான். அந்த உயிர் இல்லை என்றால் நான் என்ற நிலை ஏதும் இல்லை என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.

நுகர்ந்த உணர்வின் இயக்கமாக நான் என்ற நிலையில் இந்த வாழ்க்கையில்…

1.நான் தான் இதைச் செய்தேன்… அதைச் செய்தேன்..

2.அதைச் செய்யப் போகின்றேன் இதைச் செய்யப் போகின்றேன் என்ற நிலையில்

3.தன்னிச்சையாகச் செயல்படும் பழக்கம் தான் நம்மிடம் உள்ளது.

4.உயிரைப் பற்றிய சிந்தனை இல்லை.

எல்லோரிடமும் நாம் பேசுகின்றோம் சொல்கின்றோம் கேட்கின்றோம். ஆனால் நமக்குள் உள் நின்று இயக்கும் அந்த ஈசனைக் கண்டு அவன் கருத்தைச் சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை. அவனிடம் கேட்பதுமில்லை… அவனிடம் சொல்வதுமில்லை… அவனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை…!

இறந்த பின்… உடலை விட்டு உயிர் போய்விட்டது…! என்ற நிலையில் உயிர் இருக்கிறதா… அல்லது போய்விட்டதா…? என்று அந்தக் கடைசி நேரம் மட்டும் தான் உயிரைப் பற்றி எண்ணிப் பார்க்கும் நிலையில் உள்ளோம்.

இந்த உடலில் உயிர் இருக்கும் பொழுதே “ஈஸ்வரா…! என்று அவனை மதித்து ஒவ்வொரு விஷயத்திலும் அவனுடன் கலந்து அவனின் கருத்தை அறிந்தால் அவனுடன் என்றுமே இணைந்து அழியாத வாழ்க்கை வாழலாம் என்பதை அறிய வேண்டும். இது தான் மெய் ஞானிகள் கண்ட அற வழி.

ஏனென்றால் உடல்கள் அழிகிறது. உயிர் என்றுமே அழிவதில்லை. சிறிது காலத்தில் அழிந்து போகும் இந்த உடலுக்காக வாழாமல் உயிருக்காக வாழ வேண்டும்.