Thursday 30 November 2017

சித்தர்கள் வணங்கிய பொன் வாசிநாதர் கோவில்

புதுகை மாவட்டம், விராலிமலை அருகே இலுப்பூர் உள்ளது. சங்க காலத்தில், இலுப்பை மரங்கள் அதிகம் இருந்ததால், இந்த ஊர் இலுப்பையூர் என  அழைக்கப்பட்டது. பின்னர் மருவி இலுப்பூர் ஆனது. இங்குள்ள பொன்வாசிநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் பெயர்  ஹேம விருத்தீஸ்வரர். தமிழில் பொன்வளர்ச்சி நாதர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி பொன்வாசி நாதர் என்று ஆனது. அம்பாள் சொர்ணாம்பிகை.   தமிழில் பொன்னம்மாள். சொர்ணம் என்றால் பொன் என்று பொருள். 

பொன் தொடர்பான தொழில்களில் சிறப்புற்று விளங்கியது இலுப்பூர். தங்க வியாபாரம் செய்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து அபிஷேகங்கள் செய்து வழிபட்டால்,  தொழில் மேன்மையடையும் என்பது ஐதீகம். சுவாமி, அம்பாள் ஆகியோரது பெயரில் பொன் சம்பந்தப்பட்டு வருவதால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு  அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்த பின் பலர் நகைக்கடை துவங்குகின்றனர்.  ஆண்டு தோறும் அட்சய திருதியை நாளில் நகை கடை உரிமையாளர்கள்  சார்பில் இக்கோயிலில் சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன. இதேபோல் ஆபரணத் தொழில் புரிவோருக்கும் உற்ற இறைவனாக பொன்வாசிநாதர் விளங்குகிறார். 

களவு போன தங்க நகைகள் கிடைப்பதற்காக பக்தர்கள் இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயில் வந்து வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபட்டால், நகைகள்  திரும்பக்கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. சித்திரைப் பெருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும். கந்த சஷ்டி, கார்த்திகை தீபம்,   மகா சிவராத்திரி, குருபெயர்ச்சி, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ காலங்களில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொள்வர். இலுப்பூர் வந்த பட்டினத்தார்  பொன்வாசிநாதரை போற்றி பிறவாமை வேண்டும் என்று பதிகம் பாடி அருளியுள்ளார்



அஷ்டமா சித்தி பெற்ற பட்டினத்தாரால் பாடல்பெற்ற திருத்தலமாக இக் கோயில் விளங்குகிறது. வராகமுனிவர் இக்கோயிலில் சிவபெருமானை நோக்கி தவம்  புரிந்துள்ளார் என்பதற்கான சான்றுகள், கோயில் கல்தூண்களில் சிற்பங்களாக உள்ளன. சித்தர்கள் சித்திபெற சித்தன்னவாசல், விராலிமலை, திருச்சி உள்ளிட்ட  இடங்களுக்குத் தவம் இயற்ற வந்த காலங்களில் இக்கோயிலில் உள்ள பொன்வாசிபெருமானை வணங்கி அருள் பெற்றுள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான  இடங்கழிநாயனார் இக்கோயிலுக்கு வந்து தொண்டுகள் பல செய்து இறைவனை வணங்கியுள்ளார்.

பதினெண் சித்தர்களில் ஒருவரான கொங்கணி சித்தர், விராலிமலை முருகப்பெருமானிடம் அஷ்டமா சித்தி பெற்ற அருணகிரிநாதர் இலுப்பூர் வந்து  பொன்வாசிநாதரை வணங்கி அருள் பெற்றுள்ளனர். பல ஆண்டுகள் வாழ்ந்து அருள் வழங்கிய சித்தர் சுருளிஆண்டவர் இலுப்பூர் வந்து சிவபூஜை செய்துள்ளார்.  காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரிய சுவாமிகள் இலுப்பூர் வந்து 21 நாட்கள் தங்கி பொன்வாசிநாதரையும், சொர்ணாம்பிகை அம்பாளையும் வணங்கி  வழிபட்டுள்ளார். 

கோயிலின் உப கோயிலாக அலமேலு மங்கை கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு திருமணங்கள் அதிக அளவில் நடக்கிறது.  பொன்வாசி  நாதர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது இக்கோயிலில் இருந்து சீர் கொண்டு போகும் முறை இன்று வரை வழக்கத்தில் உள்ளது. கோயிலின்  மற்றொரு உப கோயிலாக தரம்தூக்கி பிடாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை மாதம் பூச்சொரிதல் விழாவும் திருவிழாவும் சிறப்பு மிக்கது. கோயிலில்  வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சம்பழத்தில் விளக்கு போட்டு வழிபாடு நடத்துவது சிறப்பம்சம்.

பஸ் ரூட்

புதுக்கோட்டையில் இருந்து பழனி செல்லும் வழியில் 30வது கி.மீட்டரிலும், திருச்சியில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் 40வது கிலோ மீட்டரிலும்  இலுப்பூர் உள்ளது.  விராலிமலையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இக்கோயில் உள்ளது. திருச்சியில் இருந்து விராலிமலை, பொன்னமராவதி, அன்னவாசல், இலுப்பூர்  வழித்தடத்திலும், இதேபோல் புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர். பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல் பஸ்களிலும் கோயிலுக்கு செல்லலாம்.

Monday 27 November 2017

மவுன குரு சுவாமிகள்

அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கற்றங்குடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குமரவேல் என்ற வேல்சாமி ரெட்டியார், தமது 55 வயதில் இந்த உலகியல் வாழ்வைத் துறந்து ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார் .
திருப்பரங்குன்றத்திற்கு அருகிலுள்ள திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலை அவரை ஈர்த்தது . அங்கே அவருக்காக ஒரு சித்தர்களின் கூட்டமே காத்திருந்தது. அவர்களின் குரு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் வேல்சாமியை வரவேற்றுத் தமது சீடராக ஏற்றுக்கொண்டார்.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் தீட்சை பெற்ற வேல்சாமி அந்த மலையின் மீதே கடுந்தவம் மேற்கொண்டார்.
“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது”.
அவர் தேடிய ஞானம் கிடைத்தது . அட்டமா சித்திகளையும் பெற்றார்.
அதன் பிறகு, மதுரையில் லாலாத்தோப்பு லெட்சுமிநாராயணன் கோயில் புட்டுத்தோப்பு சாமியார் மடம் ஆகிய இடங்களில் தங்கி யோகப் பயிற்சிகள் செய்துவந்தார். இரவினில் இரு மரங்களுக்கிடையே ஒற்றை விரல் அளவுள்ள கயிற்றைக் கட்டி அதன் மீது படுத்து உறங்குவார் . சில சமயங்களில் நள்ளிரவில் மதுரை தத்தனேரி மயானத்திற்கு அருகிலுள்ள தோப்பில் தரையில் ஆசனமிட்டு அமர்ந்து யோக சாதனை மூலம் ஒரு பனைமர உயரத்திற்குச் சென்று அங்கு தியானம் செய்துவிட்டுக் கீழே வருவாராம் .
துண்டைக் கயிறாக்கியவர்
தினமும் பேச்சியம்மன் படித்துறை வழியாக வைகை ஆற்றுக்குச் சென்று, அங்குள்ள உறை கிணற்றில் குளித்துவிட்டு வருவார் . அந்தக் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காகக் கயிற்றுடன் கூடிய சிறு வாளி கிடைக்காததால் சுவாமிகள் தமது துண்டை எடுத்து வாளியில் கட்டிக் கிணற்றினுள் விட்டார்.
அந்தத் துண்டு கயிறு போல் நீண்டு கொண்டே சென்றது. சுவாமிகள் நீர் இரைத்துக் குளித்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல் சென்றதைக் கண்டு அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் திகைத்துப் போய்விட்டனர். அவர் செல்லும்போது அவரது தலையில் வெயில் படாமல் ஈரத்துண்டு அவரது தலையின் மீது பறந்தபடி கூடவே செல்லுமாம்.
இந்தக் காலகட்டத்தில் நெல்பேட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி அலாவுதீன் ராவுத்தருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுக் கை,கால்கள் செயலிழந்துவிட்டன . அவரது நண்பர் ஒருவர் அவரை ரெட்டி சுவாமிகளிடம் அழைத்துவந்தார். சுவாமிகள் அவருக்குத் திருநீறு மந்தரித்துக் கொடுத்து, மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று சைகையில் கூறினார் . ராவுத்தர் அந்தத் திருநீறை நீரில் கலக்கி மூன்று நாட்கள் குடித்ததும் நோய் குணமாகியது . அது முதல் ராவுத்தர் சுவாமிகளின் தீவிர பக்தராக மாறிவிட்டார். தினமும் காலை, மாலையில் சுவாமிகளைத் தரிசித்து திருநீறு பெற்றுத் தமது நெற்றியில் இட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
சுவாமிகள் பிறந்த ஊரான கற்றங்குடியிலிருந்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுவாமிகளுக்கு ஒரு மடாலயம் எழுப்பி அவரை அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்தனர். அப்போதும் ராவுத்தர் அவர்கள் மதுரையிலிருந்து தினமும் கற்றங்குடிக்கு வந்து சுவாமிகளைத் தரிசனம் செய்துவிட்டுச் செல்வார் .
சொன்ன நாளில் சமாதி
ஒரு நாள் சுவாமிகள் ராவுத்தரிடம் மூன்று விரல்களைக் காட்டி மூன்று நாளில் தாம் சமாதியாகப் போவதாகக் கூறினார். அதைக் கேட்டு ராவுத்தர் சிறு குழந்தையைப் போல் அழுதாராம் .
சுவாமிகள் கூறியபடி, அட்சய வருடம், ஆனி மாதம், ஏழாம் நாள் 21.06.1926, திங்கட்கிழமை, பூர்வபட்சம், சுவாதி நட்சத்திரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து நிர்விகற்ப சமாதியானார் .
அதனை அறிந்த சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஆற்றங்கரை சுவாமிகள், பாளையம்பட்டி ஜமீன்தார் போன்றவர்கள் வந்து சுவாமிகளுக்கு மரியாதை செய்தனர். பின்னர் சுவாமிகளை சமாதிக் குழிக்குள் இறக்கி முறைப்படி அடக்கம் செய்தனர்.
அதன் பிறகு, ராவுத்தர், சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது ஆலயம் எழுப்ப விரும்பினார். அதற்காகக் கற்குவாரிக்குத் தாமே சென்று கற்கள் பெற்றுவந்தார் . கற்றங்குடி மடாலயத்திலேயே தங்கியிருந்து சுவாமிகளின் ஜீவசமாதியைக் கற்றளியாக்கினார் .
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாகப் பூசைகளும் ஆண்டுக்கு ஒரு முறை குரு பூசையைப் பெரும் விழாவாகவும் நடத்தினார். பின்னர் தமது அந்திமக் காலத்தில், தமது சொத்தில் ஒரு பகுதியைச் சுவாமிகளின் மடத்திற்கு எழுதிவைத்து, அறக்கட்டளை ஒன்றையும் ஏற்படுத்தினார் . அவரது காலத்திற்குப் பின் அவரது துணைவியார் திருமதி ஆயிஷா பீவி அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்று அனைத்து பூசைகளையும் சிறப்பாக நடத்திவந்தார்.
“ சாதி யாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்”
“ சாதி பேத மோதுகின்ற தன்மை யென்ன தன்மையே”
என்று சிவவாக்கியர் கூறியது போல் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தினர் இந்து சமய நெறிகளின் படி நடைபெறும் பூசைகளை எவ்விதக் குறைபாடும் இன்றி நடத்தி வருவது சுவாமிகளின் திருவருள் என்றே கூறலாம்.
பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் என்றும் நிலைத்து நிற்கும் என்று திருமூலர் கூறியபடி மதுரை கா.ம. அலாவுதீன் ராவுத்தர் அவர்கள் தம் மனதில் குடிகொண்ட ‘ஸ்ரீமௌன குரு’ என்ற ஸ்ரீமத் ரெட்டி சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பிப் பூசித்துவந்ததால், ரெட்டி சுவாமிகளின் ஜீவசமாதியில் ராவுத்தரின் புகைப்படத்தை வைத்துப் பூசித்து வருகிறார்கள் . ஜீவசமாதியில் சிவமாக வீற்றிருக்கும் கற்றங்குடி ரெட்டி சுவாமிகளை நினைக்கும்போது அலாவுதீன் ராவுத்தரின் நினைவும் வருவதே இதற்கு சாட்சியாகும்.

தியானத்தின் தீவிரம் - ஒரு குட்டி கதை

குரங்குகளின் உண்ணா விரதம்!

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.

 எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.

அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று.

அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது.

 உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.

 சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது.

 நம்மில் பெரும்பாலானவர்கள் தியான முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.

 உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது. ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது. மாறாக, பரம்பொருள் நாட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவு உலக ஆசைகள் ஒவ்வொன்றாக விட்டு ஓடி விடுவதை உணரலாம்.

கோணிப்பை சாமியார்

மகான்கள் கோணிப்பை சாமியார்
 புராண காலத்தில் மட்டுமன்றி சமீபகாலத்திலும்கூட எத்தனையோ மகான்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள்.      அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் கோணிப்பை சாமியார். இடுப்பில் கிழிந்த கோணிப்பையை மட்டுமே இவர் அணிந்ததால் கோணிப்பை சாமியார் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே இவர் பெயராக நிலைத்து விட்டது. வேலூர் மாவட்டம் திருவலத்தில் உள்ளது வில்வநாதீஸ்வரர் திருத்தலம்.
  இது ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அவனது மனைவியின் தாய் வீடு, திருவலம் நகரம்தான். அரசனால் கட்டப்பட்ட அரனாலயம் அநேக ஆண்டுகள் கடந்த நிலையில் புதர் மண்டி கவனிப்பார் எவரும் இன்றிக் கிடந்தது. அந்த தருணத்தில்தான் சிவானந்தன் என்பவர் அங்கு வந்து சேர்ந்தார்
                              1960-களில் வந்த அவர், ஆலயத்தின் அவல நிலை கண்டு வருந்தினார். மண்டிக்கிடந்த புதர்களை தன்னந்தனி ஆளாய் களையத் தொடங்கினார். முதலில் அதைப் பார்த்த திருவலம் நகரவாசிகள் யாரோ பித்துப் பிடித்தவர். வீட்டில் இருந்து விரட்டப்பட்டவர் என்றெல்லாம் அவரை ஏளனம் செய்தனர்.
                          பிற்காலத்தில் அவர் பெரிய யோகியாக விளங்கப் போகிறார் என்பது, பாவம் அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்த பக்தரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோயிலைச் சீரமைப்பதில் மட்டுமே நேரத்தைச் செலவழித்தார். அதோடு, கோயிலுக்கு ஏழைகள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு வயிராற கூழ் ஊற்றவும் ஏற்பாடு செய்தார்.
                        தாமே முயன்று கோயிலைச் சீரமைத்து அவரே கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தபோது ஊரே வியந்து நின்று பார்த்தது. அவர்மேல் மதிப்பும் மரியாதையும் வைத்தது. கோயிலின் உள்ளே உள்ள வில்வ மரத்தின் கீழ் அமர்வதுதான் அவரது வாடிக்கை. அதிகம் பேசாமல் மவுனமாகவே இருந்த அவர் ஏதாவது சொன்னால், அந்த வாக்கு அப்படியே பலித்தது.
                      செய்தி ஊர் முழுவதும் பரவ, அவரை தரிசிக்க பலதரப்பட்ட மனிதர்கள் குவிந்தனர். கை நீட்டிக் காசோ பணமோ வாங்க மாட்டார் அவர். அவர் அருகில் யாராவது காசை வீசிவிட்டுச் சென்றால், தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு சின்னக் குச்சியால் அந்தக் காசுகளை தள்ளிக் கொடுப்பார். அவர் ஆசியால் வாழ்வில் வளமும் நலமும் அடைந்தோர் பலர். எல்லாம் இருந்தபோதிலும் கோயில் திருப்பணியில்தான் அதிக ஆர்வம் காட்டிய கோணிப்பை சாமியாரின் தலைமையில் எட்டு முறை கும்பாபிஷேகம் கண்டது கோயில். இக்கோயிலுக்கென நால்வர், நாயன்மார்கள், தொகையடியார்கள் சிலைகளும், செப்புத் திருமேனிகளும் செய்து வைத்துள்ளார்.
                     அதோடு கந்தகோட்டம், திருத்தணி, பொள்ளாச்சி கோயில்களுக்கு மரத்தேரும், வெள்ளித் தேரும் அளித்திருக்கிறார். திருப்பதி கோயிலுக்கும்கூட உதவிகள் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இவர் அளித்த வில்வ விபூதி மகிமையால் பல நோய்கள் குணமாகியுள்ளது என்றும்; குழந்தை வரம் கிடைத்தது என்றும் பல பக்தர்கள் சொல்கிறார்கள்.
                             பக்திப் பணியோடு சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டிருந்த இவர், தான் ஜீவ சமாதியடையும்போது என்ன செய்ய வேண்டும், அதன்பின் அமையப் போகும் அதிஷ்டானம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் முன்கூட்டியே வடிவமைத்துக் கட்டிவைத்தார்.
                         பின்னர், 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று திருவலம் கோயிலின் நுழைவாயிலுக்கு இடது புறத்தில் ஜீவ சமாதியாகிவிட்டார். கோணிப்பை சாமியார் எங்கள் ஊருக்கு வந்த பின்னர்தான் பல நன்மைகள் நடந்தது.
                          அதனால் அவரை மகானாகவும் தெய்வமாகவும் போற்றுகிறோம். இன்றும் எங்கள் மனதில் அவர் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்கிறார்கள். வேலூர் மாவட்டம் திருவலத்தில் கோணிப்பை சாமியாரின் ஜீவசமாதி உள்ளது.





பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்.

யோகம் என்ற சகமார்க்கம் இறைவனைத் தனது தோழனாக நினைத்து, பரம்பொருளோடு ஒரு பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதாகும்.
அட்டாங்கம் என்னும் எட்டு யோக நிலைகளைக் கடந்து, ராஜ ஞான யோகத்தில் பேரின்பம் அடைந்தவர்களே மகான்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர்தான் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்.
வாவியெல்லாம் தீர்த்தம் மணல் எல்லாம் வெண்ணீறு
காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்
ஈதுசிவ லோகம் என்று என்று மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றியூர்”
என்று பட்டினத்தார் போற்றும் திருவொற்றியூரில் ஜீவசமாதியில் வீற்றிருக்கிறார் மகான் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்.
பைரவ உபாசகரிடம் உபதேசம்
ஆந்திர மாநிலம் அனந்துபூர் மாவட்டத்திலுள்ள உருவிகொண்டா என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட இராமலிங்க சுவாமிகள் வீரசைவ ஜங்கமர் குலத்தைச் சேர்ந்தவர்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டதால் துறவை மேற்கொண்டு பெல்லாரியில் எரிதாதா சுவாமிகளிடம் சில காலம் சீடராக இருந்தார். நேபாள மன்னராக இருந்த பைரவ உபாசகர் ராஜாராம் சுவாமிகளிடம் உபதேசம் பெற்றார். பின்னர் கும்பகோணத்திற்கு அருகில், வலங்கைமானை அடுத்த பாடகச்சேரியைத் தமது இருப்பிடமாகக் கொண்டார் . இங்கு தமது யோக வலிமையைப் பலப்படுத்திக்கொண்டார்.
பைரவ உபாசகராக இருந்த இராமலிங்க சுவாமிகள் ஒருமுறை முன்னூறு பேருக்கு உணவு தயாரிக்குமாறு கூறினார். சமைத்து முடித்ததும், இலைகளைப் போடச் செய்துவிட்டுத் தமது கையிலிருந்த கோலால் தரையில் தட்டியதும், பல திசைகளிலிருந்து நூற்றுக்கணக்கான நாய்கள் வந்து இலையின் முன் அமர்ந்து உண்டுவிட்டுச் சுவாமிகளைச் சுற்றிவந்து விடைபெற்றுச் சென்றனவாம்.
இவர் ஓரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றியதாகவும் செய்திகள் உள்ளன. ரசவாதத்திலும் ஈடுபாடுள்ளார். பின்னர் கும்பகோணத்தில் காரைக்கால் சாலையிலுள்ள முத்துப்பிள்ளை மண்டபத்தில் சுமார் பதினைந்து ஆண்டு காலம் தங்கியிருந்து தமது பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.
ஆலய வழக்கைத் தீர்த்தவர்
கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது நாகேஸ்வரன் ஆலயத்தைச் செப்பனிட்டார். இந்த ஆலயத்தைச் செப்பனிட்டு முடித்ததும் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒருவழக்கு நடந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு நாளன்று சுவாமிகள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில், கும்பகோணத்தில் உள்ள ஆடிப்பூர அம்மன் சந்நிதியில் தம்மை வைத்துப் பூட்டச் செய்தார். தாம் அழைக்கும் வரை திறக்க வேண்டாம் என்று கூறினாராம். அடுத்த நொடி அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்தார். மாலையில் சுவாமிகள் அழைக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த பக்தர்கள், சுவாமிகள் தம் கையில் தீர்ப்பின் நகலுடன் வெளிவருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து எந்தத் தடைகளுமின்றி நாகேஸ்வரன் ஆலயக் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார்.
அதன் பின்னர் இறைவனது திருவுளப்படி திருவொற்றியூர் சென்று, சத்திய ஞான சபையினைத் துவக்கி உபதேசங்களைச் செய்தார்.
தாம் முக்தியடையும் காலம் வந்துவிட்டதைத் தமது பக்தர்களுக்கு அறிவித்து, “நான் மறைந்தாலும் என்னை நம்பி இருப்பவர்களுக்கு என்றும் துணையாக இருப்பேன்” என்று கூறினார். அவர் அறிவித்தபடி விரோதி ஆண்டு ஆடி மாதம் 14-ம் நாள் (29-7-1949) வெள்ளிக்கிழமை, பூர நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவரது ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சுவாமிகள் தங்கியிருந்த முத்துப்பிள்ளை மண்டபத்தில் இவர் உருவாக்கிய பாதாள அறையில் இவரது ஆன்மா பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியிருக்கிறது.
ஸ்தூல உடலில் இருந்த போது ஒரே நேரத்தில் இரு இடங்களில் காட்சியளித்த சுவாமிகளுக்கு, தமது ஆன்மாவை இரண்டு இடங்களில் நிலைநிறுத்தித் தமது பக்தர்களுக்கு அருள்புரிவதும் சாத்தியம்தானே.
சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசிக்க
திருவொற்றியூர் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திலிருந்து பட்டினத்தார் கோயில் தெருவில் சில அடிகள் நடந்தால் சுவாமிகளின் ஜீவசமாதியை அடையலாம்.

கருவூரார் சுவர்ண லிங்கம் செய்த கதை

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கரூரில் வாழ்ந்துவந்த மகான்களில் ஒருவர் கருவூர் சித்தர். சாதாரண குடிமக்கள் மத்தியில் ஆன்மிக விழிப்புணர்வை உருவாக்கியவர் கருவூர் சித்தர். குழந்தை பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார் கருவூரார். இவரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, கோவில்களில் விக்கிரகங்கள் செய்து வாழ்ந்துவந்தார்கள். ஒரு சமயம் போகர் திருவாடுதுறைக்கு வந்தார். அவரைச் சந்தித்த பிறகு போகரின் சீடரானார் கருவூரார். குருவின் சொல்படி நடந்து பல நற்காரியங்களை கருவூரார் செய்து வந்தார்.
ஒருமுறை தில்லை நடராஜரைக் கலப்படமில்லாத சொக்கத் தங்கத்தில் விக்கிரகமாக உருவாக்க வேண்டும் என்று மன்னர் இரணிய வர்மன் உத்தரவிட்டார். செம்போ அல்லது வேறு உலோகமோ கலக்காமல் 48 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளிடம் மன்னர் கூறினார். ஆனால் சிற்பிகள் முயன்றும் விக்கிரகத்தைச் செய்ய முடியவில்லை. மன்னர் கொடுத்த கெடுவில் 47 நாட்கள் வீணாகிவிட்டன.
தில்லையில் நடராசர் திருவுருவம் அமைக்கச் சிற்பிகள் வருத்தப்படுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், கரூவூராருக்கு விக்கிரகம் செய்ய வழிமுறைகளைச் சொல்லி வழியனுப்பினார். 48-வது நாளும் வந்ததால் சிற்பிகள் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்தனர். மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் கருவூரார் போய் நின்றார்.
“கவலை வேண்டாம். மன்னரின் விருப்பப்படி நடராஜரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று சிற்பிகளிடம் கூறினார்.
சிற்பிகளோ “தேர்ந்த சிற்பிகளான எங்களாலேயே முடியாதபோது உன்னால் எப்படி முடியும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்கள்.
“என்னால் முடியும். இன்னும் ஒரு மணி நேரத்தில் செய்கிறேன்” என்றார் கருவூரார்.
விக்கிரகம் செய்ய ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார் கருவூரார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கதவு திறந்தது. வெளியே வந்த கருவூரார்,”போய்ப் பாருங்கள், விக்கிரகம் செய்தாகிவிட்டது” என்று சொன்னார்.
உள்ளே சென்றதும், கருவூராரால் வடிவமைக்கப்பட்ட ஆடலரசனின் அழகு திருமேனி உருவம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கினர். அப்போது அங்கு வந்த மன்னரும் சிலையின் அழகில் மயங்கி சிற்பிகளை பாராட்டினார்.
ஆனால் உண்மையில் சிலை செம்பு கலந்தே செய்யப்பட்டதையும், சிற்பிகளுக்கு பதிலாக கருவூரார் சிலையை வடிவமைத்ததும் மன்னருக்குத் தெரியவந்தது. உடனே கருவூராரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மன்னர். இதன் பின்னர் போகர் அங்கு தோன்றினார்.
“செம்பு கலக்காமல் எப்படி தங்க விக்கிரகம் செய்ய முடியும்” என மன்னரிடம் கேள்வி எழுப்பினார். “நாள் ஆக சுத்தத் தங்கத்தில் இருந்து வரும் ஒளி, பார்வையைக் குருடாக்கிவிடாதா” என்ற அறிவியல் தத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
“அதனால்தான் என் மாணவன் கருவூரான் சிறிது செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து விக்கிரகமாகச் செய்திருக்கிறான். போனது போகட்டும். இந்தா நீ தந்த தங்கத்துக்கு அதே சுத்த மாற்று தங்கம்,” என்றதோடு தராசில் சிலையை வைத்து இன்னோரு தட்டில் தங்கத்தைக் கொட்ட சீடர்களிடம் கூறினார்.
“அரசே! உன் தங்கத்தை நீ எடுத்துக்கொள்” என்று கூறிவிட்டு போகர் சிலையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினார். மன்னர் போகரின் காலில் வீழ்ந்து வணங்கித் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்

அன்னமலை முருகன்கோவில்

#இமயமலைக்கு_இணையான_ஒரு_புனிதமான_இடம்_உள்ளது.

#அதுதான்_நீலகிரி_மாவட்டம்_மஞ்சூரில்_உள்ள_அன்னமலை

#தண்டாயுதபாணி_கோவில்_பசிப்பிணி_தீர்க்கும்
#அன்னமலை_முருகன்_கோவில்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ளது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

அமைதியைத் தேடி பலர் இமயமலைக்கு செல்வார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டிலேயே அதற்கு இணையான ஒரு புனிதமான இடம் உள்ளது. அதுதான் நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள அன்னமலை தண்டாயுதபாணி கோவில். மஞ்சூர் கீழ்குந்தாவை அடுத்துள்ள அன்னமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில், நம்மை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

#விநாயகர்_தரிசனம் :

கோவிலுக்குச் செல்வதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள விநாயகரை தரிசிக்க வேண்டும். விநாயகரை வணங்கி விட்டு சென்றால் வலதுபுறம் அன்னதானக் கூடம் உள்ளது. இதற்கு அடுத்து வலது புறம் சென்றால் தண்டாயுதபாணியை தரிசனம் செய்யலாம். கருவறையில் முருகப்பெருமான் கையில் தண்டம் ஏந்தி காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள சிவன் குகை, இங்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. இது தவிர நாகராஜர் சன்னிதி, நவக்கிரகங்கள் போன்றவற்றையும் தரிசிக்கலாம்.

நாகராஜர் சன்னிதி அருகில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் சிவன்குகை மற்றும் மலையை வந்து முத்தமிட்டு செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.

அன்னமலை முருகன் கோவிலின் வரலாற்றை பற்றி பார்க்கலாம்..

#சிவன்_குகை :

கடந்த 1936-ம் ஆண்டு கீழ்குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் சிறுவன் கிருஷ்ணனைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடினார்கள். அப்போது அவன் கடவுளைத் தேடி அங்குள்ள சிவன் குகைக்குள் இருந்தான். அங்கேயே 3 ஆண்டுகள் முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தான்.

ஒரு நாள் அவனுக்கு முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் இங்கே தான் இருக்கிறேன். பல ஆண்டு களுக்கு முன்னால் வேள்விகளும், அன்னதானமும் நடைபெற்ற புனிதமான இடம் இது. இங்கு மீண்டும் அன்னதானம் தொடர வேண்டும். நான் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறேன்.

அதற்கான வேலையை நீ தொடங்குவாயாக’ என்று கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஏழையான கிருஷ்ணனால் எப்படி கோவில் கட்ட முடியும். அதே நேரத்தில் முருகனின் கட்டளையை நிறைவேற்ற கிருஷ்ணன் கற்களை சேகரித்து வந்து, மலை உச்சியில் அடுக்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஊர்மக்கள் விஷயம் கேள்விப்பட்டு, அவனுடன் இணைந்தனர். இதன் பலனாக அங்கு 1975-ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

இன்று அழகாக காட்சி அளிக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் அன்னதானம் செய்தால் வேண்டுதலை முருகன் நிறைவேற்றுவதாக ஐதீகம் உள்ளது.

அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

#அமைவிடம் :

கோவையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும், ஊட்டியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அன்னமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி, குன்னூரில் இருந்து மஞ்சூர் குந்தாவுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கோவையில் இருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக அன்னமலைக்கு தினமும் காலை, மாலையில் பஸ் வசதி உண்டு....



Sunday 26 November 2017

அமாவாசையும், அகத்தியரின் தெளிவும்!!

அமாவாசையும், அகத்தியரின் தெளிவும்!!

அமாவாசை தினத்தன்று முன்னோரின் கருமம் தீர்க்கும் திதி பூசை குறித்து அகத்தியர் எழுப்பின கேள்விகளை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த பூசை முறைகளை அகத்தியர் முற்றாக நிராகரிக்கிறார். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை யோகி மட்டுமே தீர்க்க முடியும் என்கிறார். மற்ற யாராலும், எந்த பூசை வகைகளாலும் இந்த கரும வினைகளை தீர்க்கமுடியாது என உறுதியாகச் சொல்கிறார்.

அப்படியானால் அமவாசையில் என்னதான் செய்யவேண்டும். அதற்கும் அகத்தியர் வழி சொல்கிறார்..

சிக்காமல் சொல்லுகிறேன் புலத்தியனே கேளு
தேசத்தோ டொத்துணியாய் வாழாதப்பா
சொக்காதே யிருந்தல்லோ சாக்கிரத்திற்
சுருதியந்த ஆக்கினையி லகாரந்தொட்டு
மக்காத கீழ்படியில் மகாரந்தொட்டு
வாசமா மிடகலையில் வகாரந்தொட்டு
புக்காதே பின்கலையிற் சிகரந்தொட்டு
பூட்டப்பா ரிதுவல்லோ அமாவாசையெண்ணே.

அமாவாசை பூரணையிற் பிதிர்மாதா கன்மம்
ஆகாகா விந்துநா தத்துட்பாரு
நமவசி விந்துவிலே நாட்டமூணு
நாலான பூரணத்தை மேலேதாக்கு
சமராகி விந்துவோடு நாதம்ரெண்டுஞ்
சமரசமாம் அமாவாசைக் குள்ளேதாக்கி
யிமையோடு விழியூட்டு சோமசூர்யன்
யிகபரமாய் ஒளிவீசும் திதியிதாச்சே.

திதிசடங்குக் கமாவாசை குள்ளேசென்று
திருப்தியா மிப்படியே சிவயோகமப்பா
கெதிமோட்ச மிதுவல்லோ சற்புத்திரராதி
கெடியாக அமாவாசை யறிந்தோர்க்கையா
பிதிர்சூட்சம் மாதாவின் சூட்சஞ்சொன்னேன்
பிதற்றாதே யெழுகோடி பிதிர்க்குமுத்தி
மதிகெட்ட மாணாக்கள் தோற்றமெழில்
வங்கிஷமு முத்திபெறு மாதாந்தத்தே.

அமாவாசை பௌர்ணமியில் பிதிர் மாதா கடமைகள் என்று எதையும் செய்ய கூடாது என்று சொல்லும் அகத்தியர். மக்கள் எல்லோரும் செய்வதை பார்த்து நீயும் ஏமாந்து போகாமல், அமாவசை நாட்களில் ஆக்னையை லகாரமாக கொண்டு, அதற்க்கு அடுத்த படியை மகாரமாக கொண்டு மனதை நிறுத்தி, இடங்கலையை வகாரமாக கொண்டு, பிங்கலையை சிகாரமாக கொண்டு உணர்ந்து "நமவசி" என்று செபித்து சிவ யோகம் செய்யவேண்டும் என்கிறார்.

மாதாந்தம் வரும் அமாவாசை, பௌர்ணமியில் இந்த சிவ யோகமே செய்யவேண்டுமாம். அப்படி செய்தால் சந்திர சூரிய பிரகாசம் புருவ மையத்தில் தென்படுமாம். இதுதான் முக்தி யடைவதற்கான வழி என்கிறார்.

இதைத்தான் “பிதிர் சூட்சுமம்”, “மாதா சூட்சுமம்” என்பார்கள். இதை நீ உணர்ந்து மாதாமாதம் செய்து முக்தியடைவாய் என தன் சீடர் புலத்தியருக்குச் சொல்கிறார்.

சாமுத்ரிகா லக்‌ஷணம்

சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களுக்கான

சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களைத் தேடத் தேட அதன் எல்லைகள் விரிவாகிக் கொண்டே போகின்றது.


இன்றைய பதிவில் ஆண்களின் நகங்கள், மார்பகங்கள்,தொப்புள், முதுகு பற்றி சித்தர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

நகங்கள்
விகாரமாகவும் நிறமற்ற நகங்களைக் கொண்டவர்கள் எப்போதும் மற்றவர்களிடத்தில் அடிமைத்தொழில் செய்வார்களாம். கரடுமுரடான உடைந்த நகங்களையுடையவர்கள் ஏழையாக இருப்பார்களாம்.
பெருவிரல் நகத்தின் மேல் பாகத்தில் கோதுமை போன்ற அடையாளத்தை உடையவர்கள் பெரும் செல்வந்தராக இருப்பார்களாம்.அகண்ட நகங்களையுடையவர்கள் கூச்சமுடையவர்களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
நகங்களின் முனைப்பாகத்தில் வெள்ளைப் புள்ளியிருந்தால் அவர்கள் கண்ணியமுடையவர்களாகவும் நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
நகங்களின் ஆரம்பத்தில் சிவப்பு கலந்த பலவித வர்ணமான புள்ளிகள் இருந்தால் அவர்கள் அதிக கோபமுடையவர்களாகவும், சண்டை கோழிகளாய் இருப்பார்களாம்.
நகங்களில் முனையில் கருப்பு நிறமிருந்தால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்களாம்.கோணலான நகங்களையுடையவர்கள் மோசக்காரர்களாக இருப்பார்களாம்.சிறியதாகவும், உருண்டை வடிவமாகவும் உள்ள நகங்களை உடையவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம்.

மார்பு
சந்திரனுடைய பிறையை போல் எடுப்பான மார்பை உடையவர்ன் வசீகரிப்பவனாய் இருப்பானாம்.அத்தனை எடுப்பான மார்பு இல்லாது இருப்பவன் எடுத்ததெல்லாம் வெற்றி பெருமாம்.
உன்னதமாகவும் ,சதை பிடிப்போடும், சுருக்கமோ,அதிர்வோ இல்லாத மார்பை உடையவர்கள் அரசாள்வார்களாம்.மேலும் அவர்கள் நரம்பு மயமான சதைபிடிப்புள்ள பலமான மயிர்கள் கீழ்நோக்கி அமையப் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
தட்டையான சமமான மார்பினை உடையவன் தனவந்தனாக இருப்பானான். இலந்தைப் பழத்தைப் போல மார்பை உடையவன் அதிக சக்தியுடைய்வனாக இருப்பானாம். சமமில்லாத மார்பினை உடையவர்கள் தரித்திரர்களாகவும்,ஆயுதங்களால் கொல்லப் படுபவர்களாகவும் இருப்பார்களாம்.

தொப்புள்
தொப்புள் பெரியதாக இருப்பவன் தாம்பத்ய உறவில் அதிக நாட்டமுடையவனாக இருப்பானாம்.மீனை போன்ற தொப்புள் உடையவர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்களாம்.
தாழ்ந்த தொப்புள் உடையவன் அகால மரணமடைவான் .ஒரு பக்க மடிப்பு இருக்குமானால் நீண்ட ஆயுளை உடையவன். இரு மடிப்புகள் காணப்பட்டால் பெரும் செல்வந்தர்களாகவும், எப்போதும் மன நிறைவோடும் காணப்படுவார்கள்.
தொப்புளில் காணப்படும் ஒற்றை மடிப்பு நடுவில் அமையாமல் பிறிதொரு பக்கத்தில் அமைந்திருந்தால் நீண்ட காலம் நலமாக வாழ்வார்கள்.
தாமரை உள்ளிருக்கும் விதையின் மேல் தோலை போலிருந்தால் அவன் அரசனாவான்.மூன்று மடிப்புகள் இருந்தால் மற்றவர்களுக்கு வழிக்காட்டும் ஆசானாக வருவான்.
விரிவாகவும் உன்னதமாகவும் தொப்புள் ஏழைகளுக்குண்டு, உன்னதமான தொப்புளை உடையவர்கள் அற்ப ஆயுளை உடையாவர்கள்.
தொப்புளில் இருக்கும் மடிப்பு நேராயிருக்குமாயின் அவன் மகிழ்ச்சி அடைவான். மடிப்பு விலகியிருக்குமாயின் அவன் பெண்களுக்கு பிரோஜனமற்றவனாக இருப்பான். தாம்பத்திய சுகம் அனுபவிக்க லாயிக்கற்றவன்.

முதுகு
மயிர் முளைக்கப் பெற்ற முதுகையுடையவன் சிற்றின்ப பிரியனாக இருப்பான். ஆமையின் முதுகை போல் இருந்தால் அரசனாவான்.
குதிரையின் முதுகை போல் இருப்பின் பெண்ணாசை அதிகமாயிருக்கும். முடி இல்லாமல் பளிங்கு போன்ற வழுவழுப்பான முதுகையுடையவர்கள் சுகவாசியாக இருப்பார்கள்.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்!



குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பார் என்பார்கள். ஆனால், நம் பாரத தேசத்தைப் பொறுத்தவரை குமரன் மட்டுமல்ல... குறைவில்லா அருளை வழங்கக்கூடிய சித்தர்களும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இதற்கு ஆதாரமாக இந்திய தேசத்தில் உள்ள எண்ணற்ற மலைகளைச் சொல்லலாம். காலாங்கிநாதர், சட்டைமுனி, ராமதேவர், கோரக்கர் இப்படி எண்ணற்ற சித்த புருஷர்களோடு சம்பந்தப்பட்டது சதுரகிரி. பாம்பாட்டிச் சித்தர் தவம் இருந்து ஸித்துக்கள் புரிந்த இடம் மருதமலை. பின்னாக்குச் சித்தர் வசித்த பேறு பெற்றது சென்னிமலை. சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் போன்ற எண்ணற்ற தவசீலர்கள் வாழ்ந்து, இறையருள் பெருகிய பூமி திருவண்ணாமலை. ஆதிசங்கரர், மகா அவதார் பாபாஜி போன்ற எண்ணற்ற மகா புருஷர்கள் உலவிச் சிறப்பித்த பிரதேசம் இமயமலை. தவிர வெள்ளியங்கரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற எண்ணற்ற மலைகள் எல்லாம் சித்தர்கள் அருள் நிரம்பிய சிலிர்க்க வைக்கும் சாகசச் சிகரங்கள்!

இந்த வரிசையில் மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும் காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெரியரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை. இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளன. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.

இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவருடைய பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன.

மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும் காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம். இதன் செயலாளராக இருந்து வருபவர் இரா. தட்சிணாமூர்த்தி. மாயாண்டி சுவாமிகளுடன் உடன் இருந்து அவர் இட்ட திருப்பணிகளை எல்லாம் செய்து முடித்த இருளப்பக் கோனாரின் கொள்ளுப் பேரன் இவர்.

இரா. தட்சிணாமூர்த்தி நம்மிடம், எங்கள் குலத்தையே வாழ வைத்து வரும் மாயாண்டி õசுவாமிகள் தன் காலத்தில் கண்ட கனவு ஒவ்வொன்றையும் அவரது அருளாசியுடன் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறோம். அவரது திருவாக்கின்படி மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயம் கல் திருப்பணியாக அமைந்திருக்கிறது. மலை மேல் நடந்து செல்வதற்குப் படிகள் அமைத்திருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. இந்த தண்டபாணி திருக்கோயில். மலை ஏறும்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய திருச்சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் தனிச் சந்நிதியில் கோலாகலமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீதண்டபாணி. தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி-சுந்தரேஸ்வரர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு. இதை எல்லாம் செய்வது நாங்கள்தான் என்றால், அது உண்மை அல்ல. சுவாமிகள் எங்களுடன் இருந்து ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றுக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டும் என்றார் அடக்கத்தோடு.

எங்கே இருக்கிறது காகபுசுண்டர் மலை?

சோமசுந்தரப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அருளும் மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. திருப்பரங்குன்றத்துக்குள் வந்துவிட்டால், மலை மேல் இருக்கும் ஸ்ரீதண்டபாணி பெருமாள் திருக்கோயிலை எங்கிருந்து வேண்டுமானாலும் காண முடியும். தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரம். காகபுசுண்டர் மலை உச்சியில் ஸ்ரீதண்டபாணியைத் தரிசிக்கச் சென்றால், அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் பூஜைக்கான மணி ஓசை ஒலிப்பதைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. ஆனந்தமான சூழல். ரம்மியமான காட்சிகள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அனைத்துக் கோபுரங்களையும், காகபுசுண்டர் மலையின் உச்சியில் இருந்து தரிசிக்க முடியும்.

மாயாண்டி சுவாமிகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இந்த மலைக்கே அதிபதியாகத் திகழ்பவரும், பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவருமான காகபுசுண்டரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

பெறற்கரிய மிக அபூர்வமான ஆற்றல்களையும் தவ வலிமையையும் தன்னகத்தே கொண்டவர் காகபுசுண்டர். இவர் சாதாரண பிறப்பல்ல... சிவபெருமானின் அற்புத சக்தியால் தோன்றியவர் என்பதை போகரும் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

உரைத்துமே புசுண்டரது பிறப்பைக் கேளாய்
உகந்த மதுவுண்டுஅன் னங்களிக் கும்போது
பரைத்துமே பரிதிமுதல்சோ மனையும் தரித்த
பராபரமும் பார்ப்பதியும் பார்த்தா ரத்தை
நிறைத்துமே சிவகளைதான் காகம்போல
நேர்ந்தணைய அன்னமங் கேநிறைகர்ப்ப மாயிற்றே
இரைத்துமே இருபதிற் றொன்று பிள்ளை.
அதாவது போகருடைய இந்தப் பாடல் சொல்லும் பொருளும் கதையும் இதுதான்.

புசுண்டரது பிறப்பைப் பற்றிச் சொல்கிறேன். கேள... (காகபுசுண்டர் என்பது பிற்போடு வந்த பெயர். ஆதியில் இவர் பெயர் புசுண்டர்) தேவலோகத்தில் ஒரு முறை சிவனுக்கும் சக்திதேவிக்கும் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஆடலும் பாடலும் அமர்க்களப்பட்டன. வந்திருந்தோருக்கு விருந்தும் பரிமாறப்பட்டது. அப்போது அங்கிருந்த சுண்டன் என்கிற காக்கையும், தேவியின் பரிவாரங்களை ஏழு அன்னப் பறவைகளும் மது உண்ட மிகுதியால் கூடிக் களித்தன. இதனால் ஏழு அன்னங்களும் இருபத்தோரு அன்னக் குஞ்சுகளையும், ஒரு காகத்தையும் முட்டையாக இட்டுக் குஞ்சு பொரித்தன. அந்தக் காக்கைக் குஞ்சே- பின்னாளில் காகபுசுண்டர்.

காகபுசுண்டரின் முதல் அவதாரம் இதுதான். இதன் பின்னர் பாம்பு, மனிதன் என்று எண்ணற்ற அவதாரம் எடுத்தார். எத்தனையோ கல்பம் வாழ்ந்தார். எத்தனையோ பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும், எத்தனையோ பிரமாக்கள், விஷ்ணுக்கள், சிவபெருமான்கள் அழிந்து போனதையும், பிரளய காலத்துக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்படும்போது இருந்த ஒரே ஒரு ஜீவன் -காகபுசுண்டர் மட்டுமே! ஸ்ரீராமபிரானின் ஞானகுருவான வசிஷ்ட மகரிஷிக்கே பல அரிய அற்புதங்களைச் சொல்லிக் கொடுத்தார். வசிஷ்டரின் ஏழாவது பிறவி இது என்று அவருக்கே சொல்லி, திகைப்பை ஏற்படுத்தியவர் காகபுசுண்டர். நான்கு யுகங்களும் மாறி மாறி வந்ததை, தான் நான்கு முறை பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார். இதே செய்தியை,

சேதமொன்று மில்லாமல் மவுனமுற்று
சிறப்பாக எத்தனையோ யுகங்கள் கண்டு
வேதமென்ற பிரம்மத்தி லடங்கிக் கொண்டு
வெகு கோடியுகங்கள் வரை இருந்திட்டேனே
என்று இவரைப் பற்றிக் குறிப்பு சொல்கிறது காகபுசுண்டர் பெருநூல் காவியம்.

பங்குனி மாத உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தார் காகபுசுண்டர் என்பது ஒரு குறிப்பு. ஞான காவியம், காகபுசுண்டர் பெருநூல் காவியம், காகபுசுண்டர் மெய்ஞான விளக்க சூத்திர்ம, உபநிடதம்- இப்படிப் பல நூல்களை எழுதி உள்ளார் இவர். காகபுசுண்டர் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் என்பதே சித்தர் வழிபாட்டாளர்களின் நம்பிக்கை. காகபுசுண்டரின் மனைவி பெயர் பகுளாதேவி என்றும், தம்பதி சமேதராக இருவரும் கள்ளக்குறிச்சி அருகே தென் பொன்பரப்பு என்கிற கிராமத்தில் சமாதி அடைந்ததாகவும் ஒரு தகவல் (மாறுபட்ட கருத்தும் உண்டு).

ஆக, காகபுசுண்டரின் வரலாறு, மிகப் பெரிது. அதற்குள் நாம் போக வேண்டாம். மதுரை திருப்பரங்குன்றத்தில் இருக்கும் இந்தக் காகபுசுண்டர் மலைக்கு மச்சமுனி வந்து, உபதேசம் பெற்றுச் சென்றதாகவும் ஒரு குறிப்பைச் சொல்கிறார்கள் திருப்பரங்குன்றத்துக்காரர்கள். இருக்கலாம்தானே! மதுரைக்கும் மச்சமுனிக்கும் தொடர்பு இருப்பதாக நூல்கள் தெரிவிக்கின்றன. மச்சமுனி சமாதி ஆனதே திருப்பரங்குன்றம் மலைதான். மலைக்கு மேல் அவரது சமாதி இருக்கிறது என்கிறார் மதுரை அன்பர் ஒருவர். அப்படி இருக்கும்போது தனக்கு உபதேசம் செய்த காகபுசுண்டர் குடிகொண்ட மலையை எந்நேரமும் தான் பார்த்தபடி இருக்க வேண்டும் என்பதற்காக, மச்சமுனி இங்கே சமாதி ஆகி இருக்கலாமே (முரண்பட்ட கருத்துகளும் உண்டு).

வாருங்கள், கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் வருவோம்!

மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம். பல ஞானியர் இங்கே சமாதி கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில்- அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன. உணவருந்தவும் ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரிகர்களும் பயன்படுத்தி வந்தனர்.

கட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்த புருஷர். இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.

மாயாண்டி சுவாமிகளின் அவதாரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர்- கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு மாயாண்டி எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.

தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்துவிட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்துவிட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது.

குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்துகொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிடகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி. தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் பார்த்தார். வியந்தார். அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும் அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி.

இந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி, இவருக்கு மனைவியாக வாய்த்தாள். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால், மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார். மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவர் மனைவி. தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி.

மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.

அவரைச் சந்தித்து, தன்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகிவிட்டது. ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா? இல்லையே! துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும் மனைவியும். ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார். சித்தமெல்லாம் சிவ மயம்!

கன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம் ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு. இந்த மலையில் உலவும் சித்தர்களோடு கலந்து பேசினார். அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர். காகபுசுண்டர் மலையைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது.

சௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள் மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார். தரிசனம் செய்தார். அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார். ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார். மண் எடுத்தார். அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து, காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார்.

காகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது. மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின.

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்- க. இருளப்ப கோனார். மதுரை வடக்கு மாசி வீதியில் தாளமுத்துப் பிள்ளை சந்தில் வசித்து வந்தார் இவர். இருளப்ப கோனாருக்கும் மாயாண்டி சுவாமிகளுக்கும் இருந்த தொடர்பு அவரது காலத்தோடு முடிந்துவிடாமல், அவரது சந்ததியில் வந்த சேதுமாதவ கோனார், ராமலிங்க கோனார், தட்சிணாமூர்த்தி கோனார் என்று இந்தப் பரம்பரையே மாயாண்டி சுவாமிகள் திருத்தொண்டில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது. தற்போது சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தின் பரம்பரை தர்மகர்த்தாவாக (நான்காவது தலைமுறை) இருந்து வருபவர் க.இ.சே. ராமலிங்கக் கோனார்.

இருளப்ப கோனாரின் தந்தையார் கருப்பண்ண கோனாரை வளர்த்தவர் சுப்ரமண்ய கோனார். இவர் மதுரையில் அந்தக் காலத்தில் சிட் பண்ட் நடத்தி வந்தவர். சுப்ரமண்ய கோனாரின் தொடர்பு ஏற்பட்டதும், கருப்பண்ண கோனாரின் வாழ்க்கையில் ஒரு பிரகாசம் கூடியது. ஒரு கட்டத்தில் இருளப்ப கோனாரையும் தன் பங்குதாரராக ஆக்கிக்கொண்டார் சுப்ரமண்ய கோனார். மாயாண்டி சுவாமிகள் சம்பந்தப்பட்ட ஆன்மிகத் தொண்டுகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு சுப்ரமண்ய கோனாரின் தொடர்பு கருப்பண்ண கோனாருக்கு உதவியது என்றால், அது தெய்வீகச் செயலே! கருப்பண்ண கோனார் காலத்துக்குப் பின், அவரது இறைப் பணிகளைத் தொடர்ந்தார் அவரது திருமகனான இருளப்ப கோனார்.

துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர் இருளப்ப கோனார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உத்ஸவ காலத்தில் சுவாமி வீதி உலாவின் போது தீவட்டி பிடித்து, அதற்குக் கூலியாக காலணா சன்மானத்தைப் பெற்று வாழ்ந்து வந்தவர் இருளப்ப கோனார். கூலியாகக் கிடைக்கும் காசு, அன்னை மீனாட்சி இட்ட பிச்சை என்பதாக அகமகிழ்வார் இருளப்ப கோனார். அப்படி இறைப் பணி செய்து சம்பாதித்த பணத்தையும் தெய்வீகக் காரியங்களுக்கே செலவழித்தார். சன்மார்க்க நெறியைப் பின்பற்றி வாழ்ந்து தன்னால் முடிந்த தான தர்மங்களையும் நந்தவன கைங்கர்யங்களையும் செய்து வந்தார். ஆடி அமாவாசை தினத்தன்று மதுரை அழகர் கோயிலில் இருளப்ப கோனார் துவக்கி வைத்த அன்னதானச் சேவை இன்றும் நடந்து வருகிறது. சுந்தர ராமானுஜ தாசர் என்றே இருளப்ப கோனாரின் பரம்பரை இன்றளவும் போற்றப்படுகிறது. இந்தப் பட்டத்தை இருளப்ப கோனாருக்கு வழங்கியவர் ஸ்ரீரங்கம் மதுரகவி சுவாமிகள். ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளோடு இணைந்து அவரது நந்தவனக் கைங்கர்யத்துக்கு உதவினார். நந்தவனப் பணிகள் மேலும் சிறப்பதற்கும் தடை இல்லாமல் நடப்பதற்கும் நிலங்களை வாங்கிக் கொடுத்தார். இருளப்ப கோனாரின் அரும் பணிகளைப் பார்த்து வியந்த மதுரகவி சுவாமிகள் அவருக்கு சுந்தர ராமானுஜ தாசர் என்கிற பட்டத்தை அளித்து கௌரவித்தார். வைணவப் பணிகளைப் பெருமளவு செய்து கொண்டிருந்ததால் ராமானுஜ தாசர்; மதுரையில் அழகர் கோயிலுக்கு சேவை செய்து கொண்டிருந்ததால், அங்குள்ள பெருமாளின் திருநாமமான சுந்தர்ராஜ என்பதில் இருந்து சுந்தர என்பதைச் சேர்த்து, சுந்தர ராமானுஜ தாசர் என்று இருளப்ப கோனாரை அழைத்தார் மதுரகவி சுவாமிகள். ஸ்ரீரங்கத்திலேயே பல காலம் தங்கி இருந்து, மதுரகவி சுவாமிகளின் திருப்பணிகளுக்கு உதவி, அவர் திருவரசு (மகா சமாதி) ஆன பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்தார் இருளப்ப கோனார்.

மதுரைக்கு வந்த இருளப்ப கோனார், தனது ஆன்மிகப் பணிகள் இனிதாகத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தார். ஒரு நாள் கீழப்பூங்குடி மிளகாய்ச் சித்தர் என்கிற ஞானியைச் சந்தித்தார். இருளப்பா... திரிகால ஞானி ஒருவர் மதுரைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி என்பது அவர் பெயர். ஆரப்பாளையம், கோரிப்பாளையம், திருப்பரங்குன்றம், கூடல்மலை போன்ற பகுதிகள்தான் அவரது நித்திய வாசம். அவரைத் தேடிப் போய் தரிசனம் செய். உன் வாழ்க்கை சிறக்கும்? என்று சொல்லிப் போனார்.

மிளகாய்ச் சாமியார் சொன்னதன்படி மாயாண்டி சுவாமிகளைத் தரிசித்து, அவரையே தன் குருவாக ஏற்பதற்குப் பெரும் விருப்பம் கொண்டார் இருளப்ப கோனார். இதற்கு இவருக்கு உதவியவர்- மூக்கையா சுவாமிகள். இவர் இருளப்ப கோனாரின் உறவினரும்கூட. மூக்கையா சுவாமிகளுடன் போய் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளைச் சந்தித்தார். மொளகா சாமீ ஒன்னை அனுச்சானா? என்று கேட்டுவிட்டு, இருளப்ப கோனாரை ஆசிர்வதித்து, தன் அருட் பணிகளில் இணைத்துக் கொண்டார் மாயாண்டி சுவாமிகள். இருளப்ப கோனார் தன் காலத்தில் திரட்டிய செல்வத்தைக் கொண்டு திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் நிறைய இடங்களை வாங்கி, மாயாண்டி சுவாமிகளின் அறிவுரைப்படி ஆன்மிகம் மற்றும் அறப் பணிகளைப் பிற்காலத்தில் நடத்தலானார்.

மாயாண்டி சுவாமிகள் வெளி உலகுக்குத் தெரிய வந்த காலத்தில் கோரிப்பாளையத்தில் சின்னதாக ஒரு மடம் அமைத்து அங்கு தங்கி இருந்தார் அவர். இது 1904-1905-களில். வைகைப் பாலத்துக்கு அருகே (அப்போதே இந்தப் பாலம் இருந்தது) இந்த மடம் அமைந்திருந்தது. அப்போது ஒரு நாள் பாலத்தில் இருந்து இறங்கிப் பயணிக்கும்போது இந்த ஏரியாவில் (கோரிப்பாளையத்தில்) மணிச் சத்தமும் பஜனை முழக்கமும் கேட்கிறதே... என்ன நடக்கிறது? என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், குதிரையை விட்டிறங்கி, மாயாண்டி சுவாமிகளின் மடத்தை ஒரு நாள் எட்டிப் பார்த்திருக்கிறார்.

திடீரென மடத்துக்குள் நுழைந்த ஆங்கிலேய பிரபுவைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் மாயாண்டி சுவாமிகளின் பக்தர்கள். காரணம் அந்தக் காலத்தில் பல ஆங்கிலேயர்கள் இந்து மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்து வந்ததுதான். கோயில் சொத்துக்களைக் கபளீகரம் செய்தும் வந்தார்கள் சில துரைமார்கள்.

மடத்தைச் சுற்றும்முற்றும் பார்த்தவாறும் வழிபாடுகளைக் கண்டு பிரமித்தவாறும் மாயாண்டி சுவாமிகளின் முன்னால் வந்து நின்றார் பிரபு. சுவாமிகளின் பக்தர்கள் பதைபதைப்புடன், சாமீ... நம்ம எடத்தைக் காலி பண்றதுக்கு வந்திருக்காரு போலிருக்கு என்றனர். மாயாண்டி சுவாமிகள் சிரித்துக் கொண்டே, டேய் அப்பு... நீங்க நெனைக்கிற ஆளு இல்லேடா இவன்... பூர்வ ஜன்மம் அவனை இங்கே இழுத்திட்டு வந்திருக்கு என்று பலருக்குப் புரிந்தும் புரியாமலும் பேசிய சுவாமிகள், பிரபுவைத் தன் அருகே வரவழைத்துப் பேசினார். ஒரு சில கேள்விகள் கேவ்வார் பிரபு. மடத்தின் செயல்பாடுகள் பற்றிச் சொன்னார் சுவாமிகள்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த ஆங்கிலேயப் பிரவுக்கு என்ன ஆனதோ, தெரியவில்லை. பொசுக்கென்று மாயாண்டி சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்தார். சுவாமிகளின் பக்தர்கள் பெரிதும் வியந்து, அதன் பின்னர்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். வந்த ஒரு சில நிமிடங்களிலேயே மாயாண்டி சுவாமிகளின் சக்தியை உணர்ந்து கொண்டார் ஆங்கிலேய பிரபு. அதுவரை முறையான பட்டா இல்லாமல் அங்கே நடந்து வந்த மடத்துக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் தந்தார் பிரபு (இப்போதும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் முதன் முதலாக அமைத்த இந்த கோரிப்பாளையம் மடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது). இதன் பிறகு காகபுசுண்டர் மலையில் மாயாண்டி சுவாமிகள் பெரிய அளவில் ஆன்மிகப் பணிகளைத் துவக்கியபோது அந்த ஆங்கிலேய பிரபுவே பல சந்தர்ப்பங்களில் நேரில் வந்து உதவி இருக்கிறாராம்.

இந்த ஆங்கிலேய பிரபு என்றில்லை. பல ஆங்கிலேய அதிகாரிகள் சுவாமிகளின் அனுக்ரஹத்துக்கு ஆளாகி உள்ளார்கள். சுவாமிகளின் மகத்துவம் அறியாமல் அவரை அவமதிப்புக்கும் கேலிக்கும் உள்ளாக்கிய சில வெள்ளைக்கார அதிகாரிகள்கூட, இவரது ஸித்த வேலைகளைப் புரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். அருளாசியும் பெற்றிருக்கிறார்கள்.

ஒரு முறை மதுரையில் இருந்து மானாமதுரைக்கு ரயிலில் பயணித்தார் மாயாண்டி சுவாமிகள். லௌகீக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்கள்தான் டிக்கெட் எடுத்து பயணிப்பார்கள். மகான்களுக்கு ஏது டிக்கெட்? சித்தம் போக்கு சிவம் போக்கு என்பதாக சுவாமிகள் ஒரு மூலையில் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். ரயில் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்போது வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வந்து அனைவரிடமும் சோதனை செய்து கொண்டிருந்தார். அதன்படி, மாயாண்டி சுவாமிகளிடம் வந்து, டிக்கெட்... டிக்கெட்.. என்று கேட்டார். சுவாமிகளிடம் இருந்து பதில் இல்லை. தியானத்தில் இருந்த சுவாமிகளை வலுக்கட்டாயமாக எழுப்பி, டிக்கெட் எங்கே? என்று கடுமையான குரலில் கேட்டிருக்கிறார். மாயாண்டி சுவாமிகளின் முகத்தில் புன்சிரிப்பைத் தவிர, வேறு பதில் இல்லை. பிறகு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

கடுப்பான வெள்ளைக்கார பரிசோதகர், இவரை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற முடிவுடன், அடர்ந்த ஒரு காட்டுப் பிரதேசத்தில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். உடன் இருந்த பல பயணிகள் கேட்டுக்கொண்டும், அவர்களின் வேண்டுகோளை மதிக்காமல் சுவாமிகளைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார் பரிசோதகர். கொடிய மிருகங்கள் உலவும் ஆள் அரவமே இல்லாத அத்துவானக் காடு அது!

வருத்தமும் கோபமும் மகான்களுக்கு ஏது? எதைப் பற்றியும் கவலைப்படாமல், சற்றுத் தொலைவு நடந்து சென்று, அங்கிருந்த பிரமாண்ட ஆல மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார் சுவாமிகளை விட்டுச் செல்லப் போகிறோமே? என்கிற பரிதாபத்துடன் பயணிகளான அவரின் பக்தர்கள் சிலர் கண்களில் நீர் கசிய பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரயில் மீண்டும் புறப்படுவதற்காக விசில் ஊதப்பட்டது; பச்சைக் கொடி காட்டப்பட்டது. ஆனால், ரயில் புறப்படுவதாக இல்லை. எப்படிப் புறப்படும்? அகிலத்தையே இயக்கும் வல்லமை கொண்ட ஒரு மகானை இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு விட்டு எப்படி அந்த ரயில் புறப்படும்? நெடு நேரத்துக்கு ரயிலைப் பரிசோதித்துப் பார்த்தும், அது புறப்படுவதாகத் தெரியவில்லை. ரயில்வேயில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு மட்டும் இதன் காரணம் புரிந்தது. சுவாமிகளை இறக்கிவிட்டதனால்தான் இப்படி அவஸ்தைப்படுகிறோம். வாருங்கள். அவரிடம் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்டு, அவரையும் அழைத்து வந்து ரயிலைக் கிளப்புவோம் என்று சொல்ல... வண்டியின் டிரைவர் உட்பட சில பணியாளர்களும் பயணிகளும் ஆல மரத்தின் அருகே சென்றனர்.

தியானத்தில் இருந்த சுவாமிகள் திடீரெனக் கண் திறந்தார். என்ன அப்பு. கூட்டமா வந்திருக்கீங்க.. வண்டி மானாமதுரைக்குப் போகணுமா? என்று கேட்டார் புன்னகையுடன். அனைவரும் டிக்கெட் பரிசோதகரின் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஆமா சாமீ... மானாமதுரைக்குப் போகணும். இந்த இடம் பயங்கரமான காடா இருக்கு. பல பேரு குடும்பம் குட்டியோட இருக்கோம் என்று கெஞ்சி குரலில் சொல்ல... அப்படியா... இதோ வந்திட்டேன் அப்பு... என்றபடி துள்ளிக் குதித்து ஓட்டமாகக் கிளம்பிய சுவாமிகள் வண்டியில் ஏறிக் கொண்டார். ஒரு மூலையில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார். இறங்கி வந்தவர்கள் அனைவரும் ஏறிக்கொள்ள, அடுத்த விநாடியே எந்த மக்கரும் செய்யாமல் ரயில் பெரும் சத்தத்துடன் கிளம்பியது.

மானாமதுரை வந்தது. சுவாமிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்ட அந்த வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர், ஓட்டமும் நடையுமாக வந்து, சுவாமிகள் பிளாட்பாரத்தை விட்டு வெளியே போவதற்குள் அவரது திருப்பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். இப்படி சுவாமிகள் செய்த ஸித்து வேலைகளை நிறைய சொல்லலாம்.

மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.

மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் ராமசாமி என்கிற அந்தணர் தன் இல்லாளுடன் வசித்து வந்தார். இந்தத் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள். ஒரு நாள் இவர்கள் இல்லத்துக்கு எழுந்தருளினார் மாயாண்டி சுவாமிகள். தம்பதியரை ஆசிர்வதித்து, உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறப்பான். உலகம் மேன்மை அடைவதற்கு வேள்விகள் செய்வான். மாதா புவனேஸ்வரியின் அருளைப் பூரணமாகப் பெறுவான் அவன். சிறு பிராயம் வரை அவன் உங்களிடம் இருப்பான். பிறகு அவன் இந்த உலகத்துக்கே சொந்தம் ஆவான். அவனுக்கு சுப்ரமணியம் என்று பெயர் வை என்று சொல்லிப் போனார்.

அதன்படி ராமசாமி தம்பதிக்குப் பத்தாவது பிள்ளையாகப் பிறந்த சுப்ரமணியனே, ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஆனார். மாயாண்டி சுவாமிகளின் திருவாக்குப்படி மாதா புவனேஸ்வரியின் அருளுக்குப் பாத்திரமானார். சேலம், புதுக்கோட்டை, சென்னை சேலையூர் போன்ற இடங்களில் ஸ்கந்தாஸ்ரம் அமைத்து, மாபெரும் வேள்விகள் நடத்தி, ஸித்தி ஆனதை பக்தர்கள் அறிவார்கள்.

காசு கொடுத்த இவன் பேச்சை உலகமே கேட்கும் என்று மாயாண்டி சுவாமிகளே ஆசிர்வதித்த சிறுவன்தான், பிற்காலத்தில் கிருபானந்த வாரியார் ஆனார்! இந்த நன்றியை மறக்காத வாரியார் சுவாமிகள் 1987-ஆம் ஆண்டு நடந்த சுவாமிகளின் குருபூஜையில் கலந்துகொண்டு, அவரது சிறப்புகளைக் கூட்டத்தார் மத்தியில் சிலாகித்துப் பேசினார்.

இருளப்ப கோனாருக்கு ஆயுள் பலம் குறைவாக இருப்பதாகவும் அவரது வாழ்வு இருபத்தாறு வயதுக்குள் முடிந்துவிடும் என்றும் சில ஜோசியர்கள் அவரிடம் சொல்லி இருந்தார்கள். இதைக் கேட்டு மனக்கவலையில் இருந்த காலத்தில்தான் மாயாண்டி சுவாமிகளை கோரிப்பாளையத்தில் சந்தித்தார் இருளப்ப கோனார். திரளான பக்தர்கள் கூடி இருந்த அந்த மடத்தின் சூழ்நிலையைப் பார்த்ததும், மெய் மறந்தார் இருளப்ப கோனார். மாயாண்டி சுவாமிகளின் திருவடிகளில் தன்னை சமர்ப்பித்தார். மணக்கும் மலர் மாலைகள் மலைபோல் குவிந்து கிடக்க, அவற்றின் இடையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார் சுவாமிகள் (சுவாமிகள் பெரும்பாலும் இதே நிலையில்தான் அமர்ந்திருப்பார்). இருவரும் பார்வையால் பேசிக் கொண்டனர்.

மாயாண்டி சுவாமிகள் திடீரென இருளப்ப கோனாரைப் பார்த்துச் சிரித்தார். என்ன அப்பு... ஜோசியக்காரன் சொன்னதைக் கேட்டு கவலையில் இருக்கியா? உனக்கு ஆயுள் உண்டு. இன்னும் நீ நிறைய அறப் பணி செய்ய வேண்டி இருக்கே என்று சுவாமிகள் திருவாய் மலர... இருளப்ப கோனார் அதிசயித்து அவரைப் பார்த்தார் ஒருவருடைய ஆயுளையே மாற்றும் திறன் மகான்களுக்கு உண்டு என்பது, இருளப்ப கோனார் வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டது. அதற்கான நிரூபணமாக, கட்டிக்குளத்துக்கு மேற்கே கருப்பனேந்தலில் தான் உருவாக்கிய தியான மடத்துக்கு இருளப்ப கோனாரை அழைத்துச் சென்றார் மாயாண்டி சுவாமிகள். ஒரு மண்டல காலம் இருவரும் அங்கேயே தங்கினார்கள். விதிப்படி இருளப்ப கோனார் அனுபவிக்க வேண்டிய அவஸ்தைகளை சுவாமிகளே அனுபவித்தார். ஒரு நாள் முழுதும் மூடிய குழிக்குள் குத்துக்காலிட்டு அமர்ந்து கடும் நிஷ்டையில் அமர்ந்தார். எவரையும் தன் அருகில் வர அனுமதிக்கவில்லை.

மறுநாள் காலை குழிக்குள் இருந்து வெளியே வந்த மாயாண்டி சுவாமிகள், இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொன்னார். அப்பு... இனிமே ஒனக்குப் பிரச்னை இல்லை. ஆயுள் பலம் கூடிடுச்சு. தயங்காம ஆன்மிகப் பணி செய்.

தன் உடலில் ஏதோ புது ரத்தம் பாய்வது போல் உணர்ந்தார் இருளப்ப கோனார். ஆம்! இனி, அவரது புதுப் பிறவி அந்த நிமிடத்தில் இருந்து துவங்கியது. தன் வாழ்நாளையே நீட்டித்துத் தந்த மாயாண்டி சுவாமிகளுக்குத் தன்னையே என்றென்றும் அர்ப்பணிக்க வேண்டும் என்கிற நன்றிக் கடனால், சுவாமிகளின் இறுதிக் காலம் அவரை விட்டு நீங்காமல் இருந்தார் இருளப்ப கோனார். இருந்த இடத்தில் இருந்தபடியே இருளப்ப கோனாருக்கு காசி தரிசனத்தைத் தன் ஸித்து வேலையால் செய்து காண்பித்தார் சுவாமிகள்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று 1928-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 6-ம் தேதி இருளப்ப கோனார் உட்பட தன் பக்தர்களிடம் தகவல் தெரிவித்தார் மாயாண்டி சுவாமிகள். அதன்படி, 1930-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 11-ஆம் தேதி இருளப்ப கோனாரின் இடது தோளில் சாய்ந்து, அப்பு... இந்த சட்டையைக் கழற்றிவிடலாமா? என்று கேட்டுவிட்டு, சமாதி யோகத்தில் ஆழ்ந்தார். சுவாமிகளது ஆன்மா இறைவனுடன் இணைந்தது.

திருக்கூடல்மலையில் சுவாமிகள் தொடங்கிய பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார் இருளப்ப கோனார். அடிவாரத்தில் ஸ்ரீவிநாயகரும் (மாயாண்டி சுவாமிகளின் திருச்சமாதி மேல் இந்த விநாயகர் தான் பிரதிஷ்டை ஆகி இருக்கிறார்), மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணியும் (1909-ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாக தினத்தன்று) பிரதிஷ்டை ஆனார்கள்.

சித்த புருஷரான காகபுசுண்டர் தவம் இருந்த மலை என்று திருக்கூடல் மலையைக் கொண்டாடியவர் மாயாண்டி சுவாமிகள். இந்த மலை பிரபலமாக வேண்டும் என்பதில் சுவாமிகளுக்குக் கொள்ளை ஆசை இருந்தது. தன் பக்தர்களிடம் இப்படிச் சொல்வாராம்... மலைக்கு மேல் குடிகொண்ட தண்டபாணி தெய்வத்துக்குக் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், திருச்சுற்று மதில், பிராகாரம், மயில் மண்டபம், மூன்று நிலை ராஜ கோபுரம் போன்றவை அமைக்கப்பட வேண்டும். பெரும் பகுதி வேலை கருங்கல் திருப்பணியாய் அமைய வேண்டும். நான்கு கால பூஜை நடக்க வேண்டும். இயன்றவர்கள் பொருளுதவி தர வேண்டும் என்று குறிப்பிடுவாராம். மகானின் திருவாக்கு பொய்யாகுமா?

காகபுசுண்டர் மலை எனப்படும் திருக்கூடல்மலையின் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகமும் முடிந்து விட்டது. மதுரைக்கே ஒரு மாபெரும் அடையாளமாக, ஸ்ரீதண்டபாணி சுவாமி கோயில் விளங்கி வருகிறது. சுவாமிகள் தன் காலத்தில் வைத்து வணங்கிய ஸ்ரீஆறுமுகன், ஸ்ரீநடராஜர், ஸ்ரீதுவாரபாலர்கள் ஆகியோரின் மண் சிலைகளும் மலை மீது தரிசனம் தருகின்றன. தவிர இந்த மலையில் குடிகொண்ட உத்ஸவர் ஸ்ரீநவநீதப் பெருமாள் ஆடிப்பௌர்ணமியை ஒட்டி, வருடா வருடம் மானாமதுரை வரை வலம் செல்வார். சுமார் 250 கிராம மக்கள் இந்த தரிசனத்தில் திளைப்பார்கள். சுவாமிகளின் சூட்டுக்கோலும் ஜோதியுடன் இந்த யாத்திரையில் செல்லும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் தங்கி, கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்படும். இந்த வைபவம் தென்மாவட்ட மக்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம்.

தகவல் : மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்துவிடும். இங்கு தான் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது

Sunday 19 November 2017

விரோதிகளை அடங்கச் செய்யவும், எதிரிகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம் பாடியவர்:

திருச்சிற்றம்பலம்


விரோதிகளை அடங்கச் செய்யவும், எதிரிகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்
பாடியவர்: 



மாணிக்கவாசகர்  தலம்: தில்லை
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தனமுப்புரம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை றுந்தீ பற
தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற
உய்யவல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்றுந்தீ பற
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திர நாதனுக் குந்தீ பற
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று (உ)ந்தீ பற
சதுர்முகன் தாதை என்று (உ)ந்தீ பற
புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தினில் ஏறினார் (உ)ந்தீ பற
வானவர் கோன் என்றே உந்தீ பற
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீ பற
கொங்கை குலுங்கநின்று (உ)ந்தீ பற
உண்ணப் புகுந்த பகன்ஒளித்து ஓடாமே
கண்ணைப் பறித்தவாறு (உ)ந்தீ பற
கருக்கெட நாமெலாம் உந்தீ பற
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித்து (உ)ந்தீ பற
தொல்லை வினைகெட உந்தீ பற
நான்மறை யோனும் மகத்துஇய மான்படப்
போம்வழி தேடுமாறு (உ)ந்தீ பற
புரந்தரன் வேள்வியில் (உ)ந்தீ பற
சூரிய னார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவாறு (உ)ந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்று (உ)ந்தீ பற
தக்கனார் அன்றே தலைஇழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின்று (உ)ந்தீ பற
மடிந்தது வேள்வி என்று (உ)ந்தீ பற
பாலக னார்க்குஅன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன் தன் தாதைக்கே உந்தீ பற
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற
உகிரால் அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற
தேரை நிறுத்தி மலைஎடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவாறு (உ)ந்தீ பற
இருபதும் இற்றதென்று (உ)ந்தீ பற
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீ பெற
அகற் கப்பாலுங் காவல் என்றுந்தீ பற
                 திருச்சிற்றம்பலம்