Friday 5 April 2019

உருவ வழிபாடு, இறை நிந்தனை

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவரின் கேள்வி/*:-
இறை தமிழ் மொழியாக உள்ளதா?

*சித்தன் பதில்*:-   இறைவனே தமிழ் உருக்கொண்டிருக்கும் இந்த நாட்டில், அந்த தமிழை வைத்தே, இறை நிந்தனை நிறையவே நடக்கிறது. *இறை நிந்தனை செய்பவனை விட்டு விலகி விடவேண்டும்.* நம் கண்கள் அதை பார்க்கும்படியோ, நம் செவிகள் அதை கேட்க்கும்படியோ வைத்திருக்கக்கூடாது. கொடுத்தால், வாங்கும் கரங்கள் இருந்தால்தான் கொடுத்தது போய் சேரும். அதுபோல், *இறை நிந்தனையை கேட்டு உள்வாங்க ஒருவரும் அங்கிருக்க கூடாது. உன்னை நீயே விலக்கிவிடு, அந்த சூழ்நிலையை, மனதை விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க வேண்டும்?*

*அடியவர்*:- உருவ வழிபாடு விளக்கம் வேண்டுகின்றேன்?

*சித்தன் பதில்*:- இல்லை என்ற வார்த்தை எங்கள் அகராதியில், இல்லை என்பதே உண்மை. அத்தனை வாரி வழங்கித்தான், இவ்வுலகை, சித்தர்கள் கட்டி காத்து வருகிறார்கள். உன்னிடம் கொடுக்கப்பட்டதெல்லாம், உனக்காக மட்டும் என்று நினையாதே. அங்கு ஒரு சோதனையை இறைவன் உன் முன் வைக்கிறான் என்பதை கவனி. உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் சித்தர்கள். அதே சித்தர்கள் நிறைய கோவில்களை கட்டி, இறைவனை உருவத்தில் பிரதிஷ்டை செய்ததும் உண்மை. ஒன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைக்கு தேவையான பாட புத்தகங்கள், அது வளர்ந்து மேல் படிப்பு படிக்கும் பொழுது காணாமல் போய்விடும். ஒன்றாம் வகுப்பு பாடம் கோவில்களில் தொடங்கும். பின்னர் படித்தது வளர்ந்து, முதிரும் பொழுது, *கோவில்கள், அடுத்த தலைமுறைக்கு தேவைப்படும், வளர்ந்த உனக்கு  தேவை இல்லை என்பதே உண்மை.* உள்ளவனிடம் இருப்பதெல்லாம், இறையே அவன் பாவ புண்ணியத்தை நோக்கி கொடுத்ததாகினும், அங்கும் ஒரு சோதனைதான் நடக்கிறது. உள்ளவன், *இல்லாதவனை கைதூக்கி விடுகிறானா என, இறைவன் பார்க்கிறான்.* தெரியாதவன் செய்த தவறை இறைவன் மன்னிக்கலாம், *எல்லாம் அறிந்தவன் செய்தால், மன்னிப்பே கிடையாது, தண்டனை உடனேயே.*

*அடியவர்*:- இன்னும்
 சில கேள்விகள்?

*சித்தன் பதில்*:-
உன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உண்டு. தேடு, அவை கிடைக்கும், தொலைந்து போகமாட்டீர்கள்.


*அடியவர்* அந்த சித்த பெரியவர், வேகமாக அறிவுரைகளை அடுக்கி கொண்டு போகவே, ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். சுருக்கமாக சொல்வதில் எல்லாம், மிக உயர்ந்த, விரிவான சித்த மார்க அறிவுரைகள் இருந்ததுதான், என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

சித்தன் பதில் தொடரும்...

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*