Thursday 11 April 2019

மனித வடிவில் குருவைத் தேடி காலத்தை விரயம் ஆக்கிட வேண்டாம்

அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனித வடிவிலே சிறந்த குரு வேண்டுமென்று பல மனிதர்கள் நாடுகிறார்கள். நன்றாக புரிந்து கொண்டிட வேண்டும். மனித வடிவிலே சிறந்த குருமார்கள் இல்லாமலில்லை. ஆனால், அதை ஒரு மனிதன் தன்னுடைய முன்ஜென்ம பாவங்களை குறைத்து, குறைத்து, குறைத்து, அதனையும் தாண்டி ஆன்மீக தாகம் எடுத்து, எடுத்து, எடுத்து அதை நோக்கிய சிந்தனையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத நிலையில், இறைவனாகப் பார்த்துதான் தக்க குருவை அனுப்பி வைப்பார். ஆனால் தன்னைப் பற்றி வெளியில் கூறிக்கொள்ளும் பெரும்பாலான குருமார்கள் அனைவருமே முழுமையான ஞானமோ, முழுமையான இறையருளைப் பெற்றவர்களோ அல்ல. வெறும் ஒரு மடத்து நிர்வாகியாகவும், ஆன்மீகத்தைத் தொழில் போலவும் செய்யக்கூடிய மனிதர்களே அதிகம். எனவே மனித வடிவில் குருவைத் தேடி காலத்தை விரயம் ஆக்கிட வேண்டாம்.  சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனிடமும் எஃதாவது ஒரு நல்ல விஷயம் இல்லாமலிருக்காது.  அதைக் கற்றுக்கொண்டு தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக அமைதியாக, முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து, அமைதியாக, மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து எஃது நடந்தாலும், சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும், சிந்தனை எங்கு அலைந்து, திரிந்து, திளைத்து சென்றாலும், எத்தனை குழப்பம் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்கப் பழக வேண்டும். ஒரு சிந்தனை தவறு என்றால் அந்த சிந்தனை இன்னொரு மனிதனிடம் அதிலும் ஆன்மீக வழியில் வரும் மனிதனிடம் இருந்தால் இவன் ஏற்றுக்கொள்வானா? என்று பார்த்து, இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால், பிறரிடம் இந்த சிந்தனையிருந்தால் அவனை மதிக்க மாட்டோம் என்றால் நம்மிடம் மட்டும் ஏன் இந்த சிந்தனை? என்று ஆய்ந்து பார்த்து, ஆய்ந்து பார்த்து இவனை இவனாகவே பகுத்துப் பார்த்து, பகுத்துப் பார்த்து இவனை இவன் சரி செய்து கொண்டால் மெல்ல, மெல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அகத்தியர் ஞானம்