Friday 26 April 2019

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு. - ஒரு ஆத்மா எப்போது? எந்த மாதத்தில்? ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தில் பிரவேசிக்கிறது என்பதை முழுக்க, முழுக்க இறைவன்தான் முடிவெடுப்பார்.

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஒரு ஆத்மா எப்போது? எந்த மாதத்தில்?  ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தில் பிரவேசிக்கிறது என்பதை முழுக்க, முழுக்க இறைவன்தான் முடிவெடுப்பார். இஃதொப்ப ஆணும், பெண்ணும் சேர்ந்து சதை பிண்டத்தை உருவாக்குகிறார்கள். அதற்குள் என்ன வகையான ஆத்மா? அது என்ன வகையான காலத்திலே, என்னென்ன வகையான நிலையிலே அந்தப் பிண்டத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை இறைவன் முடிவெடுக்கிறார். எப்படி முடிவெடுக்கிறார்? அந்தக் குடும்பம், புண்ணியம் அதிகம் செய்த குடும்பமா? புண்ணியங்களை தொடர்ந்து செய்து வரும் பாரம்பர்யம் மிக்க குடும்பமா? அப்படியானால் அந்த புண்ணியத்தின் அளவின் விழுக்காடு எந்த அளவு இருக்கிறது? புண்ணியத்தின் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது? அப்படியானால் அதற்கு ஏற்றாற் போல் ஒரு புண்ணிய ஆத்மாவை அங்கே பிறக்க வைக்க வேண்டும். அப்படியானால் அந்த புண்ணிய ஆத்மா அங்கே பிறப்பதற்கு எந்த கிரக நிலை உகந்தது? என்பதையெல்லாம் பார்க்கிறார். அதற்கு ஏற்றாற் போல்தான் அந்த ஆணும், பெண்ணும் சேரக்கூடிய நிலையை விதி உருவாக்கும். விதியை இறைவன் உருவாக்குவார். அதன் பிறகு அந்த சதை பிண்டம் உருவாகின்ற நிலையில் ஒரு ஜாதகம் இருக்கும். அதுவும் கூடுமானவரை உச்சநிலை ஜாதகமாகவே இருக்கும். இந்த கூடு உருவாகிவிட்ட பிறகு நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளானது அதற்குள் ஆத்மாவை அனுப்புகின்ற ஒரு காலத்தை நிர்ணயம் செய்து அதற்கேற்ற கிரக நிலைக்கு தகுந்தாற்போல் உள்ள கால சூழலில் அதனை முடிவெடுப்பார். இது ஆதியிலும் நடக்கலாம். இடையிலும் நடக்கலாம். இறுதியிலும் நடக்கலாம். இஃதொப்ப நிலையிலே சில மிக விசேஷமான புண்ணிய சக்தி கொண்ட ஆத்மாக்கள் ஒரு முறை உள்ளே சென்று விட்டு பிறகு மீண்டும் வெளியே வந்து இறைவனைப் பார்த்து "நான், இந்த குடும்பத்தில் பிறக்க விரும்பவில்லையே! வேறு எங்காவது என்னை அனுப்புங்கள்" என்றெல்லாம் உரைக்கின்ற நிலைமையும் உண்டு. இஃதொப்ப நிலையில், அஃதொப்ப அந்த பிண்டம் ஆண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே இருக்கின்ற ஆத்மா, பெண் தன்மை கொண்ட ஆத்மாவாக இருக்கலாம். அஃதொப்ப அந்த பிண்டம் பெண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே நுழைகின்ற ஆத்மா, ஆண்  ஆத்மாவாக இருக்கலாம் அல்லது பெண் ஆத்மாவாக இருக்கலாம். பெண் பிண்டம், பெண் ஆத்மா – அங்கு பிரச்சினை இல்லை. ஆண் பிண்டம், ஆண் ஆத்மா – அங்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இதை மாறி செய்வதற்கும் சில கர்ம வினைகள் இருக்கின்றன. இதற்குள் நுழைந்தால் அது பல்வேறு தெய்வீக சூட்சுமங்களை விளக்க வேண்டி வரும்.
அகத்தியர்ஞானம்