Sunday 5 May 2019

கொன்றார் பாவம் தின்றாரோடு - விளக்கம்

‘கொன்றார் பாவம் தின்றாரோடு’ என்று கசாப்பு கடைக்காரர் சொல்லுகின்றார். ‘தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று புலால் உண்பவர் கூறுகின்றார். இதில் எது சரி? இதன் மூலம் இரு சாரார்களுமே பாவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா?

‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்’ என்ற பழமொழிக்கு மற்றவர்கள் சொல்கின்ற பொருள் பிழையானது. கொல்லுகின்றவன், விலை கொடுத்து வாங்கித் தின்பவனுக்காகவே செய்கின்றான். ஆகவே அப்பாவம் முழுதும் அவனையே சேராது.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்
– திருவள்ளுவர் (அதிகாரம்: புலால் மறுத்தல்).

ஆகவே, உயிர்களைக் கொன்ற பாவம், தின்பதனால் போகும் என்பது ஒரு சிறிதும் பொருந்தாது. ஒரு சிலர், ‘நான் கொல்வதில்லை, கடையில் இருந்து வாங்கித் தின்கின்றேன்” என்பார்கள்’ இதுவும் பிழையான கருத்தாகும். வாங்குவார் பொருட்டே விற்பவன் கொல்கின்றான். திருவள்ளுவர் ‘கொல்லாமை’ என்று ஒரு அதிகாரமும் ‘புலால் மறுத்தல்’ என்று ஒரு அதிகாரமும் தனித்தனியே கூறியிருக்கின்றார்.

கொல்லாமல் கொன்றதை தின்னாமல் சூத்திரம் கோள்களவு
கல்லாமல் கைதவரோடு இனங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் …………………தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே
— பட்டினத்தார்.

இவ்வாறு எத்தனை பிரகாரங்களாகப் பார்த்தாலும் ஊன் உண்பது பெரிய பாவமாகும்.

கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் அன்றே!!!
–இராமலிங்க வள்ளலாளர்

இனி, கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதற்கு சரியான உரை கீழ்வருமாறு.

புலால் உண்டவர்களை இறந்த பின் இருள் உலகத்தில் (நரகத்தில்) நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர், ‘புவனத்தொரு’ என்று தொடங்குகின்ற திருசிராப்பள்ளி திருப்புகழில், ‘இறைச்சி அறுத்து அயில்வித்து’ என்று குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே, கொன்ற பாவமும் தின்ற பாவமும் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

(திருமுருக கிருபானந்த வாரியாரின் “அது போல” தொகுப்பில் இருந்து)