Tuesday 28 April 2020

கேது தோஷ பரிகாரத் தலம் கீழப்பெரும்பள்ளம்

*கேது தோஷ பரிகாரத் தலம் கீழப்பெரும்பள்ளம்!!*

*★▬★▬★▬J,k▬★▬★▬★*

*தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகத் தலங்களில் கேதுவுக்கு உரிய தலமாக கீழப்பெரும்பள்ளம் போற்றப்படுகிறது.*

இறைவன் பெயர்:

*நாகநாதஸ்வாமி.*

இறைவி பெயர்:

*சௌந்தர்யநாயகி.*

எப்படிப் போவது:

*சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் தர்மகுளம் என்ற பேருந்து நிறுத்தம் வரும்.*

 *அங்கிருந்து பிரியும் கீழப்பெரும்பள்ளம் சாலையில் சுமார் 2 கி.மீ.. பயணித்தால் கோவிலை அடையலாம்.*

*தர்மகுளம் நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் நிறைய உள்ளன.*

ஆலய முகவரி:

*அருள்மிகு நாகநாதர் திருக்கோவில்,*
*கீழப்பெரும்பள்ளம்,*
*தரங்கம்பாடி வட்டம்,*
*நாகப்பட்டினம் மாவட்டம் – 609 105.*

*கேதுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. கேது, பிறப்பில் ஒரு அசுரன்.*

 *விப்ரசித்து மற்றும் சிம்கிகைக்கு மகனாகப் பிறந்து வளர்ந்துவந்தான்.*

*தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அமிர்தம் வெளிப்பட்டது. அதை மகாவிஷ்ணு மோகினியாக மாறி தேவர்களுக்குப் பரிமாறிக்கொண்டு இருந்தவேளையில்,*

*தானும் அமிர்தம் பருக வேண்டும் என்று நினைத்த அசுரனாகிய கேது, உருவத்தை மாற்றிக்கொண்டு தேவர்கள் வரிசையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து,*

*மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டுவிட்டான். உண்மை அறிந்த சூரியனும் சந்திரனும் மகாவிஷ்ணுவிடம் சொல்ல,*

*மஹாவிஷ்ணு தன் கையில் இருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க, தலை வேறு உடல் வேறாகி விழுந்தான்.*

*ஆனாலும், அமிர்தம் உண்ட மகிமையால் அவன் உடல் பகுதியில் உயிர் இருந்தது. கேதுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க,*

 *இறைவன் அவனை உடல் மற்றும் ஐந்து நாகத்தலையுடன் செந்நிறமாக கேதுவாக மாற்றி அருள் செய்தார்.*

*அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். ஆக, நவக்கிரகங்களில் ஒன்றான கேது வழிபட்ட தலங்களில் கீழப்பெரும்பள்ளமும் ஒன்று.*

தல வரலாறு:

*அமிர்தம் பெறவேண்டி தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி எனும் நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர்.*

 *வலி பொறுக்காத வாசுகி நஞ்சைக் கக்கியது. அந்த நஞ்சை உண்டு, இறைவன் நீலகண்டர் என்று பெயர்பெற்றார்.*

*அமுதம் கிடைக்காத கோபத்தில், வாசுகி நாகத்தை அசுரர்கள் தாக்கி வீசி எறிந்தார்கள்.*

*பூம்புகார் அருகில் இருந்த மூங்கில் காட்டில் வந்து விழுந்த வாசுகி நாகம்,*

*சிவபெருமான் நஞ்சு உண்ண தான் காரணமாகிவிட்டோமே என்று வருந்தியது. சிவனை நோக்கி தவம் செய்தது. சிவபெருமான் காட்சி தந்தார்.*

 *தான் செய்த பாவத்தை மன்னித்து அருளும்படியும், தான் தவம் செய்த இந்த மூங்கில் காட்டிலேயே கோவில்கொண்டு பக்தர்களுக்கு அருள வேண்டும் என்றும் வாசுகி நாகம் கேட்டுக்கொண்டது.*

*அதன்படி, மூங்கில் காடான இத்தலத்தில் கோவில் கொண்டு, நாகநாதர் என்ற பெயருடன் இறைவன் காட்சி தருகிறார்.*

கோவில் அமைப்பு:

*ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது.*

 *முகப்பு வாயில் மேற்புறத்தில், ரிஷபாரூடராக சிவபெருமான் சுதை வடிவில் காட்சி தருகிறார்.*

*முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் ஒரு பெரிய நந்தியைக் காணலாம்.*

 *இறைவன் நாகநாதஸ்வாமி கிழக்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.*

*கேது பகவான் தனி சந்நிதியில் மேற்கு நோக்கி, பாம்பு தலையுடனும் மனித உடலுடனும் இரு கைகளையும் கூப்பி சிவன் சந்நிதியை நோக்கி வணங்கியபடி உள்ளார்.*

*இத்தலத்தில் கேதுவே பிரதானமாதலால், இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது. பிராகாரத்தில் சனீஸ்வரரும், இரண்டு சூரியர்களும் காட்சி தருகின்றனர்.*

*ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் கீழப்பெரும்பள்ளம்.*

 *கேதுவின் நிறம் சிவப்பு என்பதால், இவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபட வேண்டும்.*

*மேலும், கொள்ளு சாதம் படைத்து வழிபட வேண்டும். படைத்த கொள்ளு சாதத்தை இங்கேயே வரும் பக்தர்களுக்கு விநியோகித்துவிட வேண்டும்.*

 *வீட்டுக்கு எடுத்துச்செல்லக் கூடாது. ஜாதகத்தின்படி கேது தசை மற்றும் கேது புத்தி நடைபெறும் காலங்களில் இத்தலம் வந்து கேதுவுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மை அடையலாம்.*

*இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ வழிபாடும், பூஜைகளும் நடைபெறும்.*

*அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள்.*

*இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம் செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து செல்கின்றனர்.*

 *ராகு - கேது பெயர்ச்சியின்போதும் விசேஷ ஹோமம் நடக்கிறது.*

*கீழப்பெரும்பள்ளம் செல்லுங்கள். கேது தோஷத்தில் இருந்து விடுபடுங்கள்.*

*ஓம் நமசிவாய*
*அவனருளால் அவன்தாள் வணங்குவோம்!*

 *பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*

 *அனைவருக்கும் பகிருங்கள்*

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

No comments:

Post a Comment