Wednesday 8 April 2020

சோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்

*சோம்நாத் முதல் ராமேஸ்வரம் வரை 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள்,*

*மேஷம்*

*மேஷம் நெருப்பு வடிவமான ராசி. 12 ஜோதிர்லிங்கத்தில் முதல் ஜோதிர்லிங்கமான சோம்நாத் ஜோதிர்லிங்கத்தை மேஷம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டும். குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் மாவட்டத்தில் பிரபாசபட்டினம் என்னும் ஊரில் அரபிக்கடற்கரையில் அமைந்துள்ளது. நீண்ட தொலைவில் இருப்பவர்கள் சோமநாத் ஜோதிர்லிங்கத்தை நேரடியாக சென்று வணங்க முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று சோமநாதரை தியானித்து பாலபிஷேகம் செய்யலாம்*

*ரிஷபம்*

*ரிஷபம் ராசிக்காரர்கள் ஆந்திரா மாநிலம் ஸ்ரீசைலத்தில் மலைமீது உள்ள மல்லிகார்ஜூனரை வணங்கலாம். இந்த ஆலயம் மகாசக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது. நந்தியம்பெருமானே மலை வடிவாக எழுந்தருளியிருப்பதாக போற்றப்படுகிறது. மகாசிவாத்திரி நாளில் இந்த மல்லிகார்ஜூனரை நினைத்து கங்கை நீரில் அபிஷேகம் செய்து வணங்கலாம். வில்வ இலை அர்ச்சனைக்கு வாங்கி கொடுக்கலாம்*

*மிதுனம்*

*மிதுனம் ராசிக்காரர்கள் உஜ்ஜையினியில் உள்ள மகாகாலேஸ்வரரை வணங்க வேண்டும். மகாகாலேஸ்வரரை மகா சிவராத்திரி நாளில் வணங்குபவர்களுக்கு மரணபயம் விலகும். மிதுனம் ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு பால், தேன் அபிஷேகம் செய்யலாம்*
*நாகபஞ்சமி அன்று மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். 12 ஜோதிர் லிங்கங்களில் மகாகாலேஸ்வரர் மட்டுமே சுயம்பு மூர்த்தி. இவருக்கு சாம்பல் அபிஷேகம் செய்யப்படுகிறது*

*கடகம்*

*கடகம் ராசிக்காரர்கள் ஓங்காரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவனை தரிசிக்கலாம். மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் நர்மதை ஆற்றின் கரையில் சிவபுரியில் அமைந்துள்ளது. கார்த்திகை, பௌர்ணமி, மகாசிவராத்திரி போன்ற பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவலிங்கத்திற்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யலாம். ஓம் நமச்சிவாய என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். மாணவர்கள் கல்வியில் சாதிக்கலாம். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். மனப்பிரச்சினைகள் தீரும். மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும்*

*சிம்மம்*

*சிம்மம் ராசிக்காரர்கள் வைத்தியநாதரை வணங்க வேண்டும். வைத்திய நாதர் ஆலயம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேவ்கர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனை வணங்கியே ராவணன் வரங்கள் பல பெற்றான் என்று கூறப்படுகிறது. வைத்தியநாத ஜோதிர்லிங்கத்தை வணங்கினால் ஆண்டு முழுவதும் ஆரோக்கியம் அதிகரிக்கும். சிவராத்திரி நாளில் சிவபுராணத்தை படித்து வைத்தியநாதரை வணங்கலாம். திருமண தடைகள் அகலும்*

*கன்னி*

*கன்னி ராசிக்காரர்கள் பீமசங்கரரை வணங்க வேண்டும். பீமசங்கர் ஆலயம் மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் போர்கிரி என்னும் ஊரில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. இக்கோயில் நாகரா என்னும் கட்டிடக்கலை அமைப்பைச் சார்ந்தது. கிருஷ்ணாவின் துணை நதியான பீமா நதி இங்கிருந்துதான் உற்பத்தியாகிறது. கன்னி ராசிக்காரர்கள் பாலும், நெய்யும் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். நண்பர்கள், சகோதரர்களுடன் உறவு நீடிக்கும். ஆண்டு முழுவதும் பணவரவு அதிகரிக்கும்*

*துலாம்*

*துலாம் ராசிக்காரர்கள் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியை வணங்க வேண்டும். ராமபிரான் வழிபட்ட இந்த ஆலயத்தை துலாம் ராசிக்காரர்கள் வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ராமேஸ்வரத்திற்கு செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று ராமநாதசுவாமியை வணங்கி ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க தடைகள் நீங்கும்*

*விருச்சிகம்*

*விருச்சிகம் ராசிக்காரர்கள் குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தில் உள்ள நாகேஸ்வரர் ஜோதிர்லிங்க தலத்திற்கு சென்று அபிஷேகம் செய்து வணங்கலாம். நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும். பாம்புகளை கழுத்தில் அணிந்த நாகேஸ்வரர் தன்னை நாடி வருபவர்களுக்கு நன்மை செய்பவர். மகாசிவராத்திரி நாளில் நாகேஸ்வரரை நினைத்து வணங்கினால் விபத்து பயம் நீங்கும். சாமந்தி மலரினால் அர்ச்சனை செய்து வணங்கலாம். செல்வ வளம் பெருகும்*

*தனுசு*

*தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய ஜோதிர்லிங்கம் காசி விஸ்வநாதர். வாரணாசியில் கங்கை ஆற்றங்கரையில் எழுந்தருளும் விஸ்வநாதரை குங்குமப்பூ கலந்த பாலினால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்ய வேண்டும். சந்திரபலம் அதிகமாகும். மன கவலை நீங்கும் ஆரோக்கியம் அதிகமாகும் ஆயுள் கூடும்*

*மகரம்*

*மகரம் ராசிக்காரர்கள் திரியம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கத்தை தரிசனம் செய்யலாம். இது மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பிரம்மகிரி என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு அருகில் இருந்து தான் தென்னிந்திய நதிகளில் நீளமான கோதாவரி ஆறு உற்பத்தியாகிறது. மகாசிவராத்திரி நாளில் கங்கை நீரில் வெல்லம் கலந்து அபிஷேகம் செய்யலாம். நீல நிற பூக்களால் அர்ச்சனை செய்யலாம். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் முக அமைப்போடு இத்தல மூலவர் திகழ்கிறார். இவரை ஓம் நமசிவயா என்னும் மந்திரம் சொல்லி வணங்கினால் தடைகள் நீங்கும் அருமையான வாழ்க்கைத்துணை அமைவார்கள். மன அழுத்தம் நீங்கும் தொழிலில் லாபம் அதிகமாகும்*

*கும்பம்*

*கும்பம் ராசிக்காரர்கள் கேதார்நாத் சிவனை வணங்க வேண்டும். கேதார்நாத் தரிசனம் மகாசிவராத்திரி நாளில் காண முடியாது. காரணம் இந்த கால கட்டத்தில் அங்கு பனியால் சூழப்பட்டிருக்கும். மகாசிவராத்திரி நாளில் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று கேதார்நாதரை நினைத்து தியானம் செய்து*
*பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் கும்ப ராசியின் அதிபதி சனி பகவானின் அருளும் கிடைக்கும் ஆரோக்கியம் ஆயுள் கூடும்*

*மீனம்*

*மீனம் ராசிக்காரர்கள் வணக்க வேண்டிய ஜோதிர்லிங்க தலம் குஸ்மேஸ்வரர் ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்காபாத் அருகில் உள்ளது. எல்லோராவில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது மீனம் அடையாளத்துடன் தொடர்புடையது. மகாசிவராத்திரி நாளில் பாலில் குங்குமப்பூ போட்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மஞ்சள் நிற பூக்கள், வில்வ இலையால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment