Thursday 30 April 2020

புருசுண்டி முனிவர் சரித்திரம்

புருசுண்டி முனிவர்

த்ரேதா யுகத்தின் ஆரம்ப காலம் அது.

தண்டகாரண்யம் இந்தியாவின், சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது.

சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி.

தண்டகாரண்யம் எனும் வனத்தின் துத்தூரம் என்ற பகுதியில், விப்ரதன் என்று ஒரு வேடன் வாழ்ந்து வந்தான்.

மிருகங்களை வேட்டையாடி, தன்னையும் தன் கூட்டத்தினரையும் பசியின்றிப் பாதுகாத்து வந்தான்.

திடீரென மழை பொய்க்கவே, வனம் வறண்டது.

பறவைகளும் மிருகங்களும் புகலிடம் தேடி, வனத்தை விட்டு அகன்றன.

விப்ரதன் தன் கூட்டத்தாருடன் உணவும் தண்ணீருமின்றித் தவித்தான்.

வேறு வழியின்றி, வழிப்பறிக் கொள்ளையில் இறங்கினான்.

ஒருநாள் அந்த காட்டு பக்கம் வந்த முனிவரிடம் கொள்ளை அடிக்க முடிவு செய்தான்.

அவர் தன்னை மறந்த நிலையில் கணபதி நாமத்தினை உச்சரித்தபடியே சென்றுக்கொண்டிருந்தார்.

முனிவரை கண்டதும் அவரிடம் கொள்ளையடிக்கலாம் என எண்ணியவாறு அவர்முன் கத்தியுடன் போய் விப்ரதன் நின்றான்.

இவனை கண்டு முனிவர் அதிர்ச்சயடையாமல் அமைதியாய் நின்றார்.

முனிவரின் போக்கு விப்ரதனை ஆச்சர்யப்படுத்தியது.

தன்னைக்கண்டு மிருகங்களே பயப்படும், கத்தியுடன் நின்றும் இந்த மனிதர் தன்னைக்கண்டு பயப்படாததை கண்டு மலைத்து கத்தியை கீழே தவறவிட்டு நின்றான்.

அவன் மனதிலிருந்த குரூரம் மறைந்தது.

அந்த முனிவரை வணங்கி
தாங்களை கண்டதும் எனது மனதில் உள்ள தீய எண்ணங்கள்
தொலைந்து போனது
எனக்கு இனி தீய வழி வேண்டாம்
இனி நல்வழியில் நடக்க தங்கள்
ஆதிர்வாதம் வேண்டும் என்றார்.

விப்ரதன் தலையில் கை வைத்து,
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், க்லீம், க்லௌம், கம், கணபதயே நமஹ!’ என முனிவர் வாழ்த்தினார்.

தன் கையில் வைத்திருந்த ஊன்றுக்கோலை அவனிடம் தந்து, இதை நீரூற்றி, நான் சொன்ன மந்திரத்தை ஜெபித்து வளர்த்து வா! அது துளிர்க்கும்வரை முயற்சியை கைவிடாதே! உனக்கு தெய்வீக சக்திகள் கிட்டும் என சொல்லி தனது பயணத்தை தொடர்ந்தார்.

ஊன்றுக்கோலை நட சிறந்த இடம் தேடி அலைந்தபோது, ஒரு கணபதி கோயிலும், அருகில் இருந்த தெய்வீகப் பொய்கையும் விப்ரதனைப் பெரிதும் கவர்ந்தன.

அதனால், அவன் அங்கேயே தங்கி உணவின்றி உபவாசமாக இருந்து, தடாகத்தில் நீராடி, முனிவர் சொன்னபடி ஜபத்தில் ஈடுபட்டான் விப்ரதன்.

காலங்கள் ஓடின.

அன்ன ஆகாரம் இன்றி, அவன் செய்த தவத்துக்குப் பலன் கிடைத்தது. காய்ந்த அந்த மரக்கிளை, துளிர்க்கத் துவங்கியது.

நம்பிக்கையுடன் கணபதி மந்திரத்தை இடையறாது உச்சரித்த விப்ரதனுக்கு, கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது.

அவன்முன் தோன்றிய விநாயகர், ”விப்ரதா! பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து ஜபித்ததால், நீயும் என்போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால், நீ ‘புருசுண்டி’ என அழைக்கப்படுவாய்.

உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம், கற்பக விருட்சமாகிவிட்டது.

எந்தச் செல்வத்தைக் கேட்டாலும், அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு.

வேறு என்ன வரம் வேண்டும், கேள்!” என அருளினார்.

இதில் சிலிர்த்தவன், ”தங்களின் தரிசனமே கிடைத்து விட்டது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும், சுவாமி! தங்களின் திருவடியைச் சரணடைந்து தொண்டாற்றுகிற பாக்கியம் கிடைத்தால் போதும்!” என்றான்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கினைக் கடைப்பிடித்து, விரைவில் எம்மை அடைவாயாக!” என்று அருளி மறைந்தார் மகா கணபதி.

அப்படியே செய்யத் துவங்கினார்

கணேச மந்திரத்தையும், விரதத்தையும் தொடர்ந்து கடைபிடித்தார் புருசுண்டி என்ற முனிவராக ஆனார்.

புருசுண்டி முனிவர் பூலோகத்தில் எல்லாரும் சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழ சங்கடஹர சதுர்த்தியை தோற்றுவித்தார்.

நம் சங்கடங்களை களைவதற்காகவே நாம் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஐதீகம்.

தண்டகாரண்யம்  அந்த காலத்தில் குற்றங்கள் செய்தவர்களை விடும் இடமாக இருந்தது.
புருசுண்டி முனிவர் குற்றசெயலில் ஈடுபட்டதால்
நரகத்தில் தவித்த தன் முன்னோர்களுக்கு விடுதலை கிடைக்கவும் பெற்றார்.

ஓளரவ முனிவர்-சுமேதை தம்பதியின் மகள் சமி.

தெளமிய முனிவர் என்பவரின் மகன் மந்தாரன்.

இவன் செளனக முனிவரின் சீடனும்கூட.

பெற்றோர் விருப்பப் படி சமிக்கும், மந்தாரனுக்கும் திருமணம் நடந்தேறியது.

ஒருமுறை சமியும், மந்தாரனும் தங்களின் உறைவிடத்துக்குப் போகும் வழியில், விநாயகரின் அருள்பெற்ற புருசுண்டி முனிவர் எதிர்ப்பட்டார்.

இவர்கள் இருவரும் அவரை வணங்கவில்லை.

மாறாக, அவரின் உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடினர்.

புருசுண்டி முனிவர், விநாயகரைப் போன்றே யானை முகம் கொண்டவர்.

அவர், தன்னை சமி-மந்தாரன் தம்பதி ஏளனம் செய்வதைக் கண்டு கோபம் கொண்டு, மரங்களாக மாறும்படி அவர்களை சபித்தார்.

தங்கள் தவறை உணர்ந்த கணவன், மனைவி இருவரும் சாப விமோசனம் அருளும்படி முனிவரிடம் வேண்டினர். “விருட்சங்களாகத் திகழும் உங்கள் நிழலில் விநாயகர் குடிகொள்ளும்போது விமோசனம் கிடைக்கும்” என்று கூறிச் சென்றார் முனிவர்.

சாபத்தின்படி மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் மாறினர்.

இந்த நிலையில் தங்களின் பிள்ளை களைக் காணாமல் தவித்த பெற்றோரும், மந்தாரனின் குருவான செளனகரும் அவர்களை எங்கெங்கோ தேடி அலைந்தனர்.

இறுதியில் ஞான திருஷ்டியின் மூலம் நடந்ததை அறிந்து வருந்தினர்.

செளனகர் அந்த மரங்களைக் கண்டடைந்தார்.

அவற்றின் கீழ் அமர்ந்து விநாயகரை எண்ணி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்தார்.

அதன் பலனாக விநாயகப் பெருமான் காட்சி தந்தார்.

அவரிடம், தன் மாணாக்கனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் அருளும்படி வேண்டினார் செளனகர்.

உடனே விநாயகர், ‘‘முனிவரே! அடியவர்கள் இட்ட சாபத்தை எவராலும் போக்க இயலாது. எனவே, இவ்விருவரும் விருட்சங்களாக இருந்தபடியே முக்தியை பெறுவார்கள். நாம் இம்மரங்களின் நிழலில் எழுந்தருள்வோம். வன்னி மற்றும் மந்தாரை மரங்களையும் அவற்றின் கீழ் இருக்கும் என்னையும் வழிபடுபவர்களுக்கு சகல இடர்களும் நீங்கும். அவர்களது விருப்பங்கள் யாவும் ஈடேறும். வன்னி இலையாலும் மந்தார மலர்களாலும் என்னை அர்ச்சித்து வழிபடுவோரும் இன்னல்கள் நீங்கி இன்பம் அடைவர்’’ என்று அருள்பாலித்தார்.

புருசுண்டி முனிவரின் பெருமையை நாரதர் மூலம் அறிந்த தேவேந்திரன், புருசுண்டியைத் தரிசிக்க பூலோகம் வந்தான்.

தவத்தில் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக, யாசகனாக வந்து நின்றான் தேவேந்திரன்.

எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டியிடம், கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான். அதன்படி, கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் தந்தருளினார் புருசுண்டி.

விநாயகர் தந்ததையே மனமுவந்து தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில், அங்கு தோன்றிய மகா கணபதி, புருசுண்டியை தன் திருப்பாதத்தில் சேர்த்துக்கொண்டு, அவருக்குப் பிறவா நிலையை அருளினார்.

கற்பக விருட்சமும் தேவலோகம் சென்றடைந்தது.

No comments:

Post a Comment