Monday 13 November 2017

பெண் சித்தர் நீலம்மையார்

அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அறிவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே”.
மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் அன்னை பராசக்தியின் திருவுருவே பேரின்பம் என்பர். ஞானத்தின் திருவுருவும் அவளே, ஞானத்தை அளிப்பவளும் அவளே என்பர் . ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஜந்தொழில்களும் அவளது விருப்பப்படியே நடக்கின்றன .
முழுமுதற் கடவுளாகிய சிவனும் அவளன்றி எதுவும் நடக்காது என அறிந்திருக்கிறான் என்று திருமூலர் கூறுகின்றார். ஆகவே, சக்தியும் சிவனும் ஒன்றே என்று அறிந்தவர்களே ஞானிகளாக இருக்கின்றனர் . அந்தச் சக்தியின் வழிவந்த பெண்களும் சிவத்தை அறிந்து சித்தராக முடியும் என்று நிரூபித்தவர் அன்னை நீலம்மையார் .
குமாரி மாவட்டம், சுசீந்திரத்தை அடுத்துள்ள போத்தியூரில் வள்ளிநாயகம் பிள்ளை, மாலையம்மாள் தம்பதியருக்குப் பிரமாதி ஆண்டு சித்திரை மாதம், 19-ம் நாள் புதன்கிழமை, ஆயில்ய நட்சத்திரத்தில் (30.04.1879),இரண்டாவது மகளாக அன்னை நீலம்மையார் அவதரித்தார் . சிறுவயது முதல் ஆன்மிக நாட்டம் கொண்ட அவர் ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட்டு வந்தார்.
அவருக்குப் பதினைந்து வயதாகும்போது, அவரது பெற்றோர் அவரை ராமசாமி பிள்ளை என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தனர் . அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன.
சாந்த சொரூபி
இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த போதும் அன்னையார் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார் . அன்பு, கருணை, சாந்தம், பொறுமை ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக விளங்கிய அவர் மிகக் குறைவாகவே பேசுவாராம், பேசும் போது தனது புடவையின் நுனியை வாயில் வைத்து மறைத்துக் கொண்டு மிகவும் தாழ்ந்த குரலில் பேசுவாராம் .
மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தபின், மகனுக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்த போது, மகன் தனக்குத் திருமணம் வேண்டாம், துறவறம் மேற்கொள்ளப் போகிறேன் என்று கூறினாராம் . அவர் தன் அன்னையையு அழைத்துக்கொண்டு கேரளாவிலுள்ள வடகரை என்னும் ஊரில் சித்த சமாஜத்தை நிறுவியிருந்த ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் அவர்களின் ஆசிரமத்திற்குச் சென்று தமது விருப்பத்தைக் கூறினார்.
மகனுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்று கூறிய ஸ்ரீசிவானந்த பரமஹம்சர் அவர்கள் அன்னையைப் பார்த்து, உன்னைத்தான் இறைவன் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று கூறினார். அதைக் கேட்ட அன்னையார் தாம் இவ்வுலகில் பிறந்ததன் நோக்கத்தை அறிந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் . அந்த நிமிடமே தாம் அணிந்திருந்த ஆபரணங்களைக் களைந்து விட்டு, வெள்ளை ஆடை அணிந்து துறவறம் பூண்டார் . ஸ்ரீசிவானந்த பரமஹம்சர் அவருக்குத் தீட்சையளித்து உபதேசமும் செய்து வைத்தார் .
தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள்
மகனைத் துறவியாக்கச் சென்ற அன்னையார் தாமே துறவியாகித் திரும்பியதைக் கண்ட அவரது கணவர், இது இறைவனின் திருவருள் என்று ஏற்றுக்கொண்டு அன்னையாரை வாழ்த்தினார் . அன்னையார் தமது இல்லத்தில் ஒரு தனியறையில் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் ஏதோ ஒன்று அவரது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அவர் பூசித்த ராஜராஜேஸ்வரி அம்மன் அதற்கும் வழிகாட்டினார்.
அம்மனின் உத்தரவின் பேரில் அன்னையார் 1957-ல் வடதிருமுல்லைவாயிலுக்கு வந்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் சக்கரவர்த்தியால் கட்டப்பெற்ற அருள்மிகு கொடியிடை நாயகி உடனுறை அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலைத் தாரிசத்தார். பல மகான்களால் பாடப்பெற்ற அந்தத் திருத்தலத்திற்கு அருகிலேயே தங்கியிருக்க விரும்பினார் . கிழக்கு மாடவீதியில் அன்பர் ஒருவர் இடம் கொடுத்தார் . அன்னையின் பக்தர்கள் அங்கு குடிசை ஒன்றை அமைத்துக் கொடுத்தனர் . அன்னையார் சில காலம் அங்கு தங்கியிருந்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்துவைத்தார்.
காற்று மட்டுமே ஆகாரம்
பின்னர், அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தை அடுத்த வடக்கு மாசி வீதியில், ஈசானிய மூலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துக்கொண்டார் . அங்கே ஒரு அறையையும், தியானம் செய்ய ஒரு குழியையும் ஏற்படுத்திக் கொண்டார். அந்தக் குழி நான்கு அடி நீளமும், நான்கு அடி அகலமும், ஐந்து அடி ஆழமும், உள்ளே இறங்கிச் செல்ல மண்ணால் ஆன படிகளும் கொண்டது . அன்னையார் அதில் இறங்கித் தியானம் செய்வதற்கு முன் தமது ஆடைகளைக் களைந்து மேட்டின் மீது வைத்துவிட்டு, ஆடையின்றி உள்ளே அமர்ந்து தியானம் செய்வார் . குழியின் மேட்டில் ஆடைகள் இருந்தால், அன்னையார் தியானம் செய்கின்றார் என்று எவரும் அங்கு செல்ல மாட்டார்கள். அன்னையார் குழிக்குள் இறங்கித் தியானம் செய்யத் துவங்கிவிட்டால் மாதக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். அப்போது அவருக்குக் காற்று மட்டுமே ஆகாரம்.
பல்வேறு சித்துக்களையும் பெற்றிருந்த அன்னையார் சில சமயங்களில் தமது அவயவங்களைத் தனித்தனியே பிரித்துவிட்டு நவகண்ட யோகத்தில் ஆழ்ந்துவிடுவாராம் .
அன்னையார் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உபதேசம் செய்வதுண்டு . “உன் மனம் உனக்கு அடங்கினால், உலகம் உனக்கு அடங்கும்” என்பது அவர் அடிக்கடி கூறும் உபதேசங்களில் ஒன்றாகும் .
இந்தப் பூவுலகில் தம்முடைய பிறவிக் காலம் முடிவுற்றதை உணர்ந்த அன்னையார், தாம் இறைவனுடன் ஐக்கியமாகும் நாளை முன்னதாகவே அறிவித்துவிட்டார் . அந்த நாளில் தம்மைத் தியானக் குழிக்குள் இறக்கி மூடிவிடும்படி பக்தர்களிடம் தெரிவித்தார் .
அதன்படி, சாதாரண வருடம் கார்த்திகை மாதம் 23-ம் தேதி(13.12.1970) பௌர்ணமிக்கு அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.45 மணிக்கு, கிருஷ்ணபட்சம், மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், ஏராளமான பக்தர்களின் முன்னிலையில் தமது ஆசனத்தில் அமர்ந்து பரிபூரணம் அடைந்தார் .
சென்னை, வடதிருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயத்தை அடுத்த, வடக்கு மாசி வீதியில் அன்னையாரின் ஜீவசமாதி ஆசிரமம் அமைந்துள்ளது.


No comments:

Post a Comment