Sunday 5 November 2017

அகத்தியர் அறிவுரை - நீர் மாசு,நில மாசு ,ஒழுக்கங்கள்

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இகுதொப்ப நிலையிலே, மிகப் பெரிய ஞானிகளும், மகான்களும் தோன்றி இறைவனின் கட்டளைப்படி "மனிதன் எங்ஙகனம் வாழ வேண்டும்? எங்ஙகனம் வாழக்கூடாது?" என்றெல்லாம் வழிகாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த பரந்த பாரத மண்ணிலே, ஏராளமான ஞானிகள் தோன்றியும், இன்னமும் தோன்றவும் இருக்கிறார்கள். என்றாலும், எம் போன்ற ஞானிகளுக்கு, என்ன வருத்தம் தெரியுமா? இகுதொப்ப ஞானக் கருத்துக்களை கேட்க அதிகம் வாய்ப்புகளைப் பெறாத அல்லது பெற முடியாத மேலை தேசத்து மனிதர்கள் கூட அடிப்படை தர்மத்தை மறக்காமல் ஓரளவு வாழ்கிறார்கள். தான் வாழும் நாட்டையும், வீட்டையும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சகல தர்மங்களும், நியாயங்களும் போதிக்கப்பட்ட இந்த தேசத்தில்தான் சுத்தம் என்றால் என்ன? என்றே தெரியாத நிலைக்கு மனிதன் ஆட்பட்டுவிட்டான். எதை, எங்கே செய்யக்கூடாதோ, அதை அங்கே செய்வதும், எதை எங்கே செய்யவேண்டுமோ அதை செய்யாமல் இருக்கும் ஒரு சராசரி நிலையில், கல்வி கற்றவன், கல்வி கொள்ளாதவன் என்று அனைத்து தரப்பினரும் இருக்கிறார்கள். 

நதியை பாழ்படுத்துதல், வ்ருக்ஷங்களை வெட்டி சாய்த்தால், தான் வாழவேண்டும் என்றால் இந்த பூமி எந்த சூழலுக்கு ஆட்பட்டாலும் பாதகமில்லை, இன்றைய தினம், நானும் என் சமுதாயமும் வாழ்ந்தால் போதும், என்று வ்ருக்ஷங்கள் மீது கருணையே இல்லாமல் அடியோடு, வேரோடு வெட்டிச் சாய்த்தல், நீரை மாசுபடுத்துதல் என்று பஞ்ச பூதங்களையும் எந்த அளவுக்கு பாழ்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு பாழ் படுத்திக்கொண்டிருக்கிறான், 

இங்குள்ள மனிதன். இந்த அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு புரிதலோடு, ஒன்று தவறு என்று தெரிந்து விட்டால், அதை உற்பத்தி செய்யாமல், நாட்டிற்கும், தன் சமுதாயத்திற்கும், பின்னால் வரும் சந்ததிக்கும் நன்மையே செய்யவேண்டும் என்ற சிந்தனை இங்குள்ள மனிதர்களை விட கடல் தாண்டிய தேசத்தில் வாழும் மனிதர்களிடம் இருக்கிறது. எல்லா விதத்திலும் தன்னை பிறரோடு ஒப்பிட்டு பார்க்கும் மனிதன், அவனை பார்த்து அடிப்படை தர்மத்தை, ஒழுங்கை கற்றுக்கொண்டால், இந்த தேசமும் நன்றாக இருக்கும். இதெயெல்லாம் கூட ஒரு சித்தன் சொல்லி செய்ய வேண்டிய அவசியமேயில்லை. இவையெல்லாம் மிக மிக அடிப்படை விஷயமாகும். எனவே, இந்தக் கருத்தையும் இங்குள்ள அனைவரும் மனதிலே வைத்து தம்மை நாடும் நட்புக்கும், உறவுக்கும் இது போன்ற கருத்துக்களை எடுத்துக் கூறினால், சஹஸ்ரம் எனப்படும் ஆயிரம் மனிதரிடம் உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறினால், அதில் கட்டாயம் ஒரு மனிதன் பின்பற்றுவான் என்ற அளவிலே அனைத்தும் நலம், நலம் என்று நலமாய் மாறும் 

No comments:

Post a Comment