Saturday 4 November 2017

அகத்தியர் வாக்கு - ஒழுக்கங்கள்

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இயம்புங்கால், ஒரு மனிதனின் நல்ல எண்ணங்கள், செயல்கள் ஒரு ஆரோக்கியமான அதிர்வலைகளை அவனைச் சுற்றி உண்டாக்கும். "கற்றாரை, கற்றாரே காமுறுவர்" என்பது போல, நல்லாரை கண்டவுடன் சந்தோஷமும், மீண்டும், மீண்டும் இவனுடன் பழக வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். நல்ல சிந்தனையற்ற ஒரு மனிதன் நல்லவரோடு பழகப் பழக, காந்தமற்ற இரும்பு, காந்தத்தோடு சேர்ந்து தானும் காந்தமாவதுபோல் அவனுக்குள் நல்ல எண்ணங்கள் இடம் மாறும். 

ஒரு தனவானிடம், எவ்வளவு நாள் பழகினாலும் அந்த தனம் இவனிடம் வந்துவிடாது. அழகான தோற்றம் உடையவனிடம் அழகற்ற ஒருவன் பல ஆண்டு பழகினாலும், அந்த அழகு இவனை வந்தடையாது. ஆனால், நல்ல குணங்கள் கொண்ட ஒரு மனிதனோடு பழக்கத்தை அதிகரிக்க, அதிகரிக்க அந்த அதிர்வலையின் தாக்கத்தால், மெல்ல, மெல்ல இவனிடமும் வந்தடையும். 

எனவே சதாசர்வகாலமும் மனதிலே சினமும், வாயிலே தகாத வார்த்தைகளும், பிறரை பற்றி குறை கூறுவதுமாக இருந்தால், பிறகு அதுவே இயல்பாகி, சமாதானமாகி பிறகு, அதுதான் சரி என்றாகி, பிறகு மனமும், புத்தியும், வாக்கும், எண்ணமும், செயலும் அமைந்துவிடும் என்பதால், சதாசர்வகாலமும் இறை சிந்தனையில் மனம் லயிக்க பயிற்சி எடுக்க வேண்டும். இகுதொப்ப நிலையை உயர்த்த, உயர்த்த, உயர்த்த, உயர்த்த மனம் பக்குவமடைந்து பிறகு "அரிவை" என்ற நிலை தாண்டி, "சித்" என்ற உன்னத நிலை, அறிவு, அவனுள் மலரிடத் துவங்கும். "சித்" எனப்படும் அந்த சித்தம் தெளிந்தால்தான் உண்மையான சித்தர்களின் வழி, வாக்கு, யாம் எதை, ஏன், எந்த காலகட்டம் உரைக்கிறோம்? என்பது புலப்படத்துவங்கும். எனவே, பாவத்தை நீக்குவதற்கு போராட வேண்டும். பாவம் செய்யாமல் இருப்பதற்கும் போராட வேண்டும்

No comments:

Post a Comment