Tuesday 19 May 2020

திருவிடையாறு

*🚩🔔274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்🌙🔱*

*227. திருவிடையாறு*



*சிவஸ்தலம் பெயர்*

*திருவிடையாறு (தற்போது டி. எடையார் என்று வழங்குகிறது)*

*இறைவன் பெயர்*

*இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர்,மருந்தீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர்*

*இறைவி பெயர்*

*சிற்றிடைநாயகி*

*தேவாரப் பாடல்கள்*

*சுந்தரர்*

*முந்தையூர் முதுகுன்றங்*

*எப்படிப் போவது*

திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் (SH68) சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. கோயில் சாலையோரத்தில் உள்ளது. மற்றொரு சிவஸ்தலமான திருவெண்ணைநல்லூர் இங்கிருந்து தென்கிழக்கே 5 கி.மி. தொலைவில் அரசூர் செல்லும் பாதையில் உள்ளது.
விழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் (NH 45) அரசூரை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை SH68ல் சென்றும் திருவெண்ணைநல்லூர் வழியாக திருவிடையாறு தலத்தை அடையலாம்.

*ஆலய முகவரி*

அருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில், மருதீஸ்வரர் தேவஸ்தானம்
டி.எடையார் அஞ்சல்
திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607203
தொடர்பு: 04146 - 216045, 9442423919
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரையிலும் திறந்திருக்கும்.

*தல வரலாறு*



சுகர் முனிவர் வழிபட்டது.

கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார்.

இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் 'என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகிதவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. இறைவன் மேற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஷண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள்,பாலாம்ருத விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்கள் "திருமணத்தடை நீக்கும் தலம்"' என்ற் சிறப்பைப் பெற்றவையாகும். அவ்வகையில் நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும்,அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

*தல வரலாறு*

 கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.

சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அநேக திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து, பதிகம் பெற்ற தலங்களையும் குறிப்பிட்டு, இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார்.

*சிறப்புகள்*



மேற்கு நோக்கிய சந்நிதி. கொடிமரமில்லை.

இக்கோயிலில் சோழர், பாண்டியர்,விஜயநகர மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

இக்கோயில் கி.பி. 1471-ல் ஒரிசா மன்னன் ஒருவனால் அழிக்கப்பட்டு, பின்பு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்மனின் பிரதிநிதியால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டின் மூலம் தெரிகிறது.

*தொடரும்*

*🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻*

No comments:

Post a Comment