Tuesday 19 May 2020

லால்குடி வீணா தட்சிணாமூர்த்தி


சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி*
*(19 -05-2020)*
______________________________________________
நம பார்வதி பதையே!
ஹர ஹர மகாதேவா!

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

*64- சிவ மூர்த்தங்கள் தொடர்!:*
___________________________________________
*(34)- வீணா தட்சிணா மூர்த்தி!*

*☘பாட்டும் இசையும் பரதம் கலைகளும்*

*மீட்டிடும் தட்சிணா மூர்த்தி - நாட்டிடும்*

*கல்வியில் முன்னேற்றம் காட்டும் உயர்பதவி*

*வெல்வதற்கு தட்சணர் வீடு! 👏*
______________________________________________
திருக்கையிலையில் பக்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள் செய்ய தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி நத்தார் சிவபெருமானார்.

அப்போது நாரதர், சுக்ர முனிவர்களின் இசை ஞானத்தை உணரவும், சாம வேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப்பாடவும் தங்களுக்கு அருள்புரிய வேண்டினார்.

உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையையும், இசைக் கலையைப் பற்றியும் கூறத் தொடங்கினார்.

அப்போது எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும், அதனால் என்னப் பலன், என்றும் எம்மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக்குற்றம் ஏற்படுமென்னும் விளக்கிக் கொண்டு வந்தார்.

இறுதியாக, கொன்றை, கருங்காலி மரங்களால் வீணை செய்ய வேண்டும் என்றார்.

அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட நால்வகை வீணைகளையும் செய்யலாம் என்றார்.

அந்த நால்வகை வீணையாவன பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பனவாகும்.

இதில் பேரியாழுக்கு 21 நரம்பும், மகரயாழுக்கு 17 நரம்பும், சகோடயாழுக்கு 16 நரம்பும், செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்கும்படியாக அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசையெழுப்ப வேண்டும்.

முக்கியமான வீணையுடன் பாடும் போது உடல் குற்றம் இல்லாமலும், பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் ஒரு பாடல் அமைய வேண்டும் என்பது மரபு.

இவ்வாறாக வீணையைப் பற்றியும், இசையைப் பற்றியும், அதன் பாடல்களைப் பற்றியும், அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் எடுத்துரைத்து விரிவாகக் கூறி அந்த வீணையை தோளின் மீது வைத்து இசையெழுப்பி பாடிக்காட்டினார்.

இதனைக் கண்ட, கேட்ட அனைவரும் ஆனந்தப்பட்டனர்.

தங்கள் கண்களையே நம்பமுடியாமல் ஆச்சர்யப்பட்டனர்.

இவ்வாறு நாரதர், சுகர் பொருட்டு வீணையுடன் காட்சி தருவதால் அவருக்கு *வீணா தட்சிணாமூர்த்தி* என்றப் பெயர் உண்டானது.

திருச்சிக்கு அருகேயுள்ள *லால்குடியில்* அமைந்துள்ள சிவன் கோயிலில் வீணா தட்சிணாமூர்த்தி இருக்கின்றார்.

இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார்.

வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும்.

வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும்.

மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

*லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயம் பற்றி:*

*இறைவன்:* சப்தரிஷீஸ்வரர்.
*இறைவி:* பெரிய நாயகி, மகாலட்சுமி, பைரவி (காளி).
*மூர்த்தி:* தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர்.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சப்தரிஷீஸ்வரர் அழகிய சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்த சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

திருத்தவத்துறை நாதர் மற்றும் தேஜோவிடங்கர் ஆகிய மேலும் இரு திரு நாங்களும் இவருக்கு உண்டு.

அம்பாள் மஹா சம்பத் கௌரி எனப்படும் பெரிய நாயகி கிழக்கு பார்த்து  எழுந்தருளி, தனி சந்நதி கொண்டு அருளாட்சி புரிகிறார்.

மகாலட்சுமி, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், பைரவி  எனப்படும் காளி ஆகிய மூர்த்தங்களையும் இங்கே தரிசிக்கலாம். 

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி.

இவரை *வீணா தட்சிணாமூர்த்தி* என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது.

சிவன் இசையின் தலைவன்.

இதை  உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற  திருக்கோலத்தில் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.

இத்தல தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் செய்து, குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடக்கிறது.

வினை தீர்க்கும் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வளங்கள் பலவும் பெறலாம். 

*தல அருமை:*
ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரம் செய்து குழந்தையாகத் தோன்றினார்.

சப்தரிஷிகள் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவர்கள் ஆவர்கள்.

சப்த ரிஷிகளின் ஆசிரமம் அருகே உள்ள தாமரைப் பொய்கை அருகே, தனித்து விடப்பட்ட குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது.

அந்த குழைந்தைக்கு  பாலுட்டுமாறு தனது பத்தினியான அருந்ததியிடம் வசிஷ்டர் கூறினார்.

பூஜைக்கு மலர் பறிக்க  சென்று கொண்டு இருந்ததால், அருந்ததி குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை.

கோபம் கொண்ட  வசிஷ்டர் தனது மனைவியை தனிமைப்படுத்தி தண்டித்தார்.

மற்ற ரிஷி பத்தினிகள் அனைவரும்  அருந்ததியை சார்ந்தும், ரிஷிகள் வசிஷ்டரை சார்ந்தும் வாதிட்டார்கள்.

ரிஷி பத்தினிகளுள் ஒருவரான அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகை பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர்.

இச்செய்தியை ஏழு முனிவர்கள் கேட்டு மனைவிமார்களைச்  சபித்து விட்டார்கள். 

குழந்தை ஆறுமுகனாக மாறி முனிவர்களைச் சபித்தார்.

இதனால் முனிவர்கள் தன் சாபம் நீங்கும் பொருட்டுத் இத்தலத்துக்கு வந்து தவம் செய்தனர்.

ஏழு ரிஷிகள் கடுந்தவம் புரிந்ததால், அவர்களுக்கு அருள் செய்ய தன் சிவப்பேரொளியில் அவர்களை ஐக்கியப்படுத்திக் கொண்டார் ஈசன்.

தன் லிங்கத் திருமேனியில் ஏழு ரிஷிகளும் ஐக்கியமானதால்,  இத்தலத்திலுள்ள சிவலிங்கத்  திருமேனியில் ஏழு புள்ளிகள் தோன்றின.

மேலும் ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை ஆயிற்று.

ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் என்றும்  அழைக்கப்படுகிறது.

இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மாலிக் கபூர் மன்னன், இத்திருக்கோயிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, இவ்வூருக்கு அதுவே பெயராகி அழைக்கபடுகிறது.

இத்தலத்துள் உறையும் அம்மனுக்கு பெருந்திருப் பிராட்டியார் என்னும் பெயர் வழங்கப்படுகிறது.

*வழிபட்டோர்:*
சப்த ரிஷிகள் (வசிட்டர், அத்ரி, பிருகு, புலத்தியர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி) முதலியோர்.

*நடைதிறப்பு:*
காலை 5.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு  8.30 மணி வரை திறந்திருக்கும்.

இத்திருகோவிலில் நாள்தோறும் ஆறுகால அபிஷேகம் நடைபெறும்.

பங்குனி உத்திரம் ஆகியன ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

அருகில் திருச்சி நகரம் அமைந்துள்ளது.

*கோயில் முகவரி:*
அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்,
லால்குடி, திருச்சி மாவட்டம்.
தொலைபேசி எண் : 0431-2541329.

*நாளை- காலந்தக மூர்த்தி:* (காலனைக் கொன்ற வடிவம்)

நம பார்வதி பதையே!
ஹர ஹர மகாதேவா!!

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

திருச்சிற்றம்பலம்.
_______________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்*

No comments:

Post a Comment