Saturday 2 May 2020

சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்கள்

*ஸ்ரீநரசிம்மாவதாரம்*
சென்னையில் உள்ள சிறப்பு மிக்க நரசிம்மர் கோவில்கள் :

 *திருவல்லிக்கேணி யோக நரசிம்மர் :* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்பார்கள்.

 *செங்காடு* - யோக ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் : யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் இருவரையும் ஒரே இடத்தில் சோளிங்கர் மாதிரி மலை ஏறாமல் தரையிலேயே பார்க்க வேண்டுமானால் திருப்போரூர் அருகே உள்ள செங்காடுக்கு செல்ல வேண்டும்.

 *பொன்னிமேடு நரசிம்மர் :* சென்னை மூலக்கடை ரெட்ஹில்ஸ் சாலையில் மூலக்கடையிலிருந்து வெகு அருகில் உள்ளது இத்தலம். இங்கு நரசிம்மரின் மிக உயரமாக நிற்கும் சிலை உள்ளது. கூடவே லட்சுமி தேவியும் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உயரமான இரண்டு நிற்கும் சிலைகளில் இதுவும் ஒன்று.

 *ஸ்ரீவேங்கட நரசிம்மர் கோவில், மேற்கு மாம்பலம்* : 900 ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி தெள்ளிய நரசிம்ம சுவாமி இங்கே எழுந்தருளி அவர் முன்னிலையில் இங்குள்ளவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்ற பெயர் பெற்றார்.

 *நங்கநல்லூர் நரசிம்மர் :* மகாலட்சுமி (நங்கை) இப்பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கோவில் கொண்டிருக்கிறாள். நங்கை நல்லூர் என்பதே மருவி நங்கநல்லூர் ஆகிஇருக்கிறது. அந்தக் கோவில்தான் நரசிம்மர் கோவில். லட்சுமி நரசிம்மர் கோவில் புதையுண்டு போயிற்று, தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்.

இத்தலம் ஆதிகாலத்தில் தட்ஷண திபாலயா என்று அழைக்கப்பட்டதாகவும், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் கேட்டுக் கொண்டபடி நரசிம்மர் இங்கேயே தங்கி அருள் பாலிக்க ஒப்புக் கொண்டதாகவும் வரலாறு இருக்கிறது. உள்ளே சக்கரத்தாழ்வார் தனது பதினாறு கைகளில் விதவிதமான ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். கச்கரத்தாழ்வாரின் பதினாறு ஆயுதங்களும் பதினாறு வகையான செல்வங்களைக் குறிக்கின்றன.

இவரின் பின்னால் ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா விக்ரகம் உள்ளது. அடுத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி உள்ளது. 5 அடி உயர முள்ள சிலா விக்ரகம். திருமுடியில் கிரீடம். கழுத்தில் பெரிய நீலக்கல் பதித்த மாலை, நான்கு கரங்களின் மேலே உள்ள கரங்களில் சங்கும். சக்கரமும் உள்ளன. இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்காரம் செய்ததால் இங்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. சோளிங்கரில் உள்ளது போல் இங்கும் சடாரியில் நாகம் காணப்படுகிறது.

 *மறைமலைநகர் நரசிம்மர் :* சென்னையை அடுத்த மறைமலை நகர் போர்ட் மோட்டார் கம்பெனி அருகில் உள்ளது இந்த அபூர்வ நரசிம்மரின் கோவில். ஆதிசேஷன் பீடத்தில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்துள்ளது அற்புதமாக உள்ளது. ஆதிசேஷன் குடை பிடித்த மாரி உள்ளது. தாயாரும் பெருமாளும் இருவரும் ஒரு கையால் ஒருவரை ஒருவர் அணைத்த மாதிரி இருக்கின்றனர்.

நரசிம்மரின் மந்திரத்தால் செய்யப்பட்ட அட்சர மாலையும் சாளக்கிராம மாலையும் நரசிம்மருக்குச் சாத்தப்பட்டுள்ளது. தாயார் சந்நிதியில் தாயாருக்கு மகாலட்சுமி மந்திரத்தால் அட்சய மாலை செய்து சாற்றப்பட்டுள்ளது. மூலவரும் தாயாரும் தாமரை மலர்கள் மேல் பாதங்களை வைத்துள்ளனர். இது ஒரு பரிகாரத்தலம்.

 *பைராகிமடம், சவுகார்பேட்டை* : இத்தலத்தில் லட்சுமி நரசிம்மர் சந்நிதி மிகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.

 *வேளச்சேரி யோகநரசிங்கப் பெருமாள் கோயில்.*

       ஸ்தலப்பெருமை:

சதுர்வேதிமங்கலம் /வேதநாராயணபுரம், அதாவது நான்கு வேதங்களும் சொல்லிக்கொடுக்கப்பட்ட இடம். வேள்விகள் நிறைய நடந்ததால் வேதஸ்ரேணி,வேள்விச்சேரி என்ற பெயர் கொண்ட இந்த இடம், பிற்காலத்தில் வேளச்சேரி என மறுவியதாம். மூலஸ்தானத்தில் பெருமாள் ஸ்ரீ யோக நரஸிம்ஹர், நான்கு திருக்கரங்களுடன், வீற்றிருந்த யோக திருக்கோலத்தில் ஸேவை சாதிக்கின்றார். மேற்கே திருமுக மண்டலம். மிக அரிய இந்தத் திருக்கோலத்தில் உள்ள பெருமாள் வரப்ரஸாதி. பெரிய திருவுருவம். பெரியவாய நேத்ரங்கள். பெருமாளின் திருமுக மண்டலத்தைப் பார்க்கும்போது நேத்ரங்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலத் தோன்றுகிறது. சாந்த ஸ்வரூபியாக பரிவுடன் நம்மைப் பார்த்து அருள் பாலிக்கின்றார். ‘கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?’ என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. அரங்கனின் கண்ணழகில் மயங்கிய உறங்காவில்லிதாசரைப் போல நாமும் “கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக் கினியன கண்டோம்” என்று காணுதற்கரிய அழகைக் கண்டு மயங்கி நிற்கிறோம்.

ஸ்தலப் பெருமாள் வேதநாராயணர், வலது கையில் பிரயோக சக்ரத்துடன் காட்சியளிக்கிறார். உற்சவர் பக்தவத்சலப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்தி ஸ்ரீ ப்ரஹ்லாதன்

ஸ்ரீ அமிர்தபலவல்லித்தாயார் தனிக்கோயில் நாச்சியாராக ஸேவை சாதிக்கின்றார். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு விசேஷ பூஜைகள்.

ஸ்ரீராமருக்கு தனி சன்னதி. உற்சவர் ஸ்ரீராமருடைய வில்லில் பூ முடிந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்று சொல்லப்படுகிறது. ஆஞ்சநேயருக்கும் தனி சந்நிதி உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.00 முதல் பகல்10.30 மணி வரை
மாலை 5.00மணி முதல் இரவு 8.30 மணி வரை
(விசேஷ காலங்களில் கோயில் திறந்திருக்கும் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.
திருவாராதனம்: காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை

 *ஆழ்வார்பேட்டை ஆனந்தபுரம்*

ஆழ்வார்பேட்டை- அபிராமபுரம் பீமண்ண முதலி 2-வது தெருவில் இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீரெங்க மன்னார் கோவிலில் தனி சன்னதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார். அவர் வீற்றிருக்கும் அளவில் மட்டுமே அந்நத சன்னதி மிக, மிக சிறியதாக அமைந்துள்ளது. ஆனால் இந்த நரசிம்மர் தரும் பலன்களோ, மிக மிக பெரியது, அளவிடை முடியாதது.

இந்த நரசிம்மரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால், உங்களுக்கு என்ன வேண்டுதல் உள்ளதோ, அதை மனதில் நினைத்துக் கொண்டு அந்த நரசிம்மர் சன்னதியில் சிறிய மணியை கட்ட வேண்டும். அந்த சிறிய மணியை ஆலய அர்ச்சகரே பூஜை செய்து தருவார். மணி கட்டிய ஒரு மண்டலத்துக்குள் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறி விடும்.

அதன் பிறகு அந்த ஆலயத்துக்கு சென்று நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடலாம். சென்னையில் உள்ள மிக சக்தி வாய்ந்த இந்த லட்சுமி நரசிம்மர் ஆலயம் நிறைய வைணவ பக்தர்களுக்கே தெரியாமல் இருப்பது ஆச்சரியமான விஷயமாகும்.

 *நாவலூர் - தாழம்பூர் நவநரசிம்மர்:*

    மூலவர் நரசிம்மர் நடுவில் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகவும், அவரைச்சுற்றி பிராகாரத்தில் எட்டு நரசிம்மர்கள் உள்ளனர். மூலவர் உள்பட ஒன்பது நரசிம்மர்கள் இவ்வாலயத்தில் அருட்பாலிப்பதால் ஸ்ரீநவநரசிம்மர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள இக்கோயில். அஹோபிலத்தில் நவ நரசிம்மரைச் சேவிக்க முடியாதவர்களுக்கு இத்தலம் ஓர் வரப்பிரசாதம். ஸ்ரீநவநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள (ஓ.எம்.ஆர்.) நாவலூர் அடுத்த தாழம்பூரில் இத்தலம் அமைந்துள்ளது.

 *ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்*

🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*

No comments:

Post a Comment