Thursday 28 May 2020

இராத் தங்கார்

இராத் தங்கார்

மதுரையில் பிறந்த பெண்களும், மதுரைப் பெண்ணைக் கட்டிக்கொண்ட மாப்பிள்ளைகளும் மதுரையிலிருந்து வேறு ஊர்களுக்குச் சென்றால், இரவில் அந்த ஊர்களில் தங்கமாட்டார்கள்.  எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, இரவு தூங்குவதற்கு மதுரைக்கு வந்து சேர்ந்துவிடுவர்.  இந்தப் பழக்கம் மதுரையில் தொண்டுதொட்டு இருந்து வருகிறது.  இதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், எங்களது அன்னை அருள்மிகு மீனாட்சியம்மனும், அப்பன் சொக்கநாதனும் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரில் இராத் தங்கமாட்டார்கள்.  இரவுவோடு இரவாகப் புறப்பட்டு மதுரை வந்து சேர்ந்துவிடுவர்.  எனவே நாங்களும் எந்த ஊருக்குப் பயணமானாலும் அந்த ஊரில் இரவு தங்காமல் மதுரைக்குத் திரும்பிவிடுவோம் என்று விளக்கம் கூறுகின்றனர். மதுரை அருள்மிகு மீனாட்சியம்மையும், அப்பன் சொக்கனாதனும் எந்த ஊருக்குச் சென்றனர்?  ஏன் இரவோடு இரவாக மதுரைக்குத் திரும்பினர்?  என்ற வரலாற்றை அறிவோம்.மதுரைக்குத் தென்கிழக்கே 18கி.மீ. தூரத்தில் மதுரை-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ‘திருப்பூவணம்‘ என்னும் ஊர்.  இவ்வூர் இப்போது ‘திருப்புவனம்‘ என்று தவறாக அழைக்கப்படுகிறது.  மதுரையை மன்னர்கள் ஆட்சிசெய்த காலத்தில் திருப்பூவணமானது மதுரைமாநகரின் கிழக்கு எல்லையாக விளங்கியது.  இந்த ஊரில் பொன்னனையாள் என்ற நடனமாது வசித்து வந்தாள்.  திருப்பூவணம் கோயிலில் நாட்டிய இலக்கணப்படி சிவனது சந்நிதியின் முன்பு தினமும் நடனமாடுவாள்.  சிவனடியார்க்கு எல்லாம் நித்தமும் அன்னதானம் செய்து வந்தாள்.  அடியார் உணவருந்தி எஞ்சியதைத் தான் உண்டு வாழ்ந்து வந்தாள்.  இவ்வாறு வாழ்ந்து வரும் அவளது தூய பக்தியை உலகத்தோருக்கு எடுத்துக் காட்டவேண்டும் என விரும்பம் கொண்டான் அருள்மிகு திருப்பூவணன்.  “தேரில் எழுந்தருளுவதற்காகத் தங்கத்தினால் ஆன திருமேனியைச் செய்திட வேண்டும்“ என்ற எண்ணத்தை பொன்னனையாளின் உள்ளத்திலே விதைத்தான்.

“திருப்பூவணம் உற்சவமூர்த்தியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும்“ என்ற எண்ணம் பொன்னனையாளின் உள்ளத்திலே ஊன்றி வளரத் துவங்கியது.  அவள், உற்சவமூர்த்தியின் வடிவத்தை மெழுகில் செய்து, அதன் வடிவத்தைத் தங்கத்தில் வார்த்து எடுக்கும் வகையில் “கரு“ செய்து வைத்திருந்தாள்.  ஆனால், நாள்தோறும் அவள் கையில் வரும் பொருள் எல்லாம் அடியார்க்கு அன்னதானம் செய்வதிலேயே செலவாகிக்கொண்டிருந்தது.  தங்கம் வாங்கும் அளவிற்கு அவளிடம் பணம் சேரவில்லை.

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரர், குலபூடண பாண்டிய மன்னனுக்கு பொற்கிழி வழங்கிய கதையைப் பொன்னனையாள் படித்திருந்தாள்.  எனவே அவள் மதுரை சென்று அன்னை மீனாட்சியையும் சோமசுந்தரேசுவரரையும் வணங்கித் தனக்குத் தேவையான தங்கத்தைத் தந்து அருளுமாறு வேண்டிக் கொண்டாள்.  “எல்லாமே எனக்கு வேண்டும்“ என்று எல்லோரும் வேண்டிக் கொள்ளும் இக்கலிகாலத்தில், இவளோ, திருப்பூவணம் உற்சவமூர்த்திக்காக வேண்டிக்கொள்கிறாளே!, இவளுக்கு அருள வேண்டும் என்று அம்மையும் அப்பனும் திருவுள்ளம் கொண்டனர்.

பங்குனிமாதம் உத்திர நட்சத்திரம் முழுமதி (பௌர்ணமி) நாளன்று, திருப்பூவணத்தில் பொன்னனையாள் நடத்தும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடியார் எல்லாம் திருவமுது செய்து கொண்டிருந்தனர்.  அங்கே சித்தர் வடிவில் சிவபெருமான் எழுந்தருளினார்.  ஓர் அடியார் வந்து அமர்ந்திருப்பதை அறிந்து கொண்ட பொன்னனையாள் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி அன்னம் உண்ண வருமாறு அழைத்தாள்.  அவளது அழைப்பினை ஏற்றுக் கொண்ட சித்தரும், “நீ ஏன் மெலிந்து உள்ளாய்?“ என்று அன்போடு கேட்டார்.  “சாமி, நாள்தோறும் வரும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவாகிவிடுகிறது.  உற்சவமூர்த்தியைத் தங்கத்தில் செய்ய வேண்டும் என்ற எனது ஆவல் ஒன்றே எனது உள்ளத்தின் உள்ளே இருந்து எனது உடலினை உருக்கிவருகிறது. வேறு எந்தவிதமான கவலையும் இல்லை, சாமி“ என்றாள். 

“தானத்துள் சிறந்த அன்னதானத்தைச் செய்து வருகிறாய்,  எனவே உன் பெயருக்கு ஏற்றபடி பொன்னால் ஆன உற்சவமூர்த்தியை நீ செய்திடுவாய்“ என ஆசி வழங்கினார்.   சித்தர் பெருமான் பொன்னனையாளை நோக்கி, “நீ உனது வீட்டில் உள்ள உலோகப் பாத்திரங்களை எல்லாம் இங்கே எடுத்துவா“ என்று கூறினார். சித்தரது  அணைப்படியே, பொன்னனையாளும் அவளது வீட்டிலிருந்து அனைத்து உலோகப் பாத்திரங்களையும் எடுத்துச் சென்று சித்தர் முன் வைத்தாள்.  சித்தரும் அப்பாத்திரங்களின் மேல் திருநீற்றைத் தூவி, “இத்தை  நீ இரா  எரியில் இட்டு எடுக்கின்  பொன்னாம்“ என்று அருளிச் செய்தார்.  அதாவது, இவற்றை நீ இன்று இரவு எரியும் உலையிலே இட்டால் பொன் கிடைக்கும் என்று கூறினார்.

சித்தரது வார்த்தைகளைக் கேட்ட பொன்னனையாளும், வந்திருப்பது மதுரையம்பதி முதல்வனே என்பதை உணராதவளாய்,  “சாமி தாங்களே இன்று இரவு இங்கே தங்கி, இவற்றையெல்லாம் உருக்கிப் பொன்னாக மாற்றித் தரவேண்டும்“ என விண்ணப்பித்தாள்.  அர்த்தசாம பூசைக்கு மதுரை சென்று விடவேண்டும் என்று விருப்பம் கொண்ட சிவபெருமான், பொன்னனையாளின் கோரிக்கைக்கு இசையவில்லை. அர்த்தசாம பூசைக்கு மதுரைக்கு சென்றுவிட வேண்டும் என்றே விருப்பம் கொண்டு, நான் சொன்னதுபடிச் செய்வாய் எனக்கூறி மறைந்துவிட்டார்.  சித்தர் வடிவில் வந்தவர் அருளிச்செய்த விதத்தைக்கொண்டு வந்தவர் மதுரையம்பதி முதல்வனே என அறிந்து கொண்டாள்.  சித்தர் சொன்னபடிய எல்லா உலோகங்களையும் தீயிலிட்டு உருக்கத் தங்கம் உருகி வந்தது.  உருகி வந்த தங்கத்தைக் கொண்டு தான் ஏற்கனவே கருக்கட்டி வைத்திருந்த வார்ப்பில் ஊற்றி எடுத்தாள்.  வார்ப்பினை உடைத்து எடுக்கும்போது உற்சவமூர்த்தியின் அழகைக்கண்டு வியந்து “அச்சோ, அழகியபிரானோ“ என்று அன்பினால் அழைத்து கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.  இதனால் உற்சவமூர்த்தியின் கன்னத்தில் வடு உண்டானது.  இதனை இன்றும்  நேரில் தரிசித்து வணங்கலாம். 

பங்குனிமாதம் உத்திரநட்சத்திர நாளன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சி 36ஆவது திருவிளையாடலாகும்.  இத் திருவிளையாடலின்போது ஒவ்வொரு வருடமும் மதுரையிலிருந்து அருள்மிகு சோமசுந்தரேசுவரரையும் அன்னை மீனாட்சியையும் திருப்பூவணத்திற்கு எழுந்தருளச் செய்து, இராத் தங்காமல் அர்த்தசாம பூசைக்கு மதுரைக்குத் திருப்பித் தூக்கி வந்து விடுவர். 

மதுரையைத் திருமலைநாயக்க மன்னன் ஆண்ட போது, இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.  ஒருவருடம், பங்குனி உத்திரநாளன்று இவ்வாறு அன்னை மீனாட்சியையும் அப்பன் சொக்கநாதனையும் திருப்பூவணத்திலிருந்து மதுரைக்குத் திரும்பித் தூக்கி வரும்போது வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருந்தது.  இதனால் சிலைமான் என்ற ஊரின் அருகே பெரும் வெள்ளம் பாதையைக் கடந்து ஓடியது.  எனவே சுவாமியையும் அம்மனையும் வெள்ளத்தைக் கடந்து தூக்கிச் செல்ல முடியவில்லை.  சிலைமானுக்கு அருகில் உள்ள கீழடி என்ற ஊரின் வழியாகத் தூக்கிச் செல்ல முயன்றனர்.  கால்வாயிலும் வைகையாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மனித முயற்சிகள் பயனளிக்க வில்லை.  நிலைமையை உணர்ந்து கொண்ட திருமலைநாயக்க மன்னன் அருகில் உள்ள ஊர்களில் எல்லாம் பறையறிவிக்கச் செய்தார்.  அர்த்த சாமத்தில் ‘மதுரையம்பதியின் முதல்வன்‘ ஆற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் இருப்பதை அறிந்து ஓடிவந்த உதவினர். தோன்றாத்துணையாய் ஈசனும் வந்து திருவருள் புரிந்தான்.  அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும் நல்லபடியாக மதுரைக்குத் திரும்பிச் சென்று அர்த்தசாம பூசையில் கலந்துகொண்டனர்.  மன்னன் திருமலை நாயக்கனும் நிம்மதியாக உறங்கி எழுந்தான்.  எழுந்தவுடன் அமைச்சரை அழைத்து, தங்களது உயிரையும் பொருட்டாக மதியாமல் அர்த்த சாமத்தில் வந்து உதவியி அனைவரையும் அழைத்து வருமாறு ஆணையிட்டான்.  உதவியோர் அவனைவருக்கும் ஒரு கிராமத்தையே தானமாக வழங்கினான்.  சாமத்தில் வந்து உதவியோருக்குச் சன்மானமாக வழங்கப்பட்டதால், அந்தக் கிராமத்திற்குப் பெயர் ‘சாம நத்தம்‘ என்ற பெயர் உண்டானது. 

இத்திருவிளையாடல் நடைபெற்ற காலந் தொட்டு, அருள்மிக மீனாட்சியம்மைக்கும் அப்பன் சொக்கநாதனுக்கும் “இராத் தங்கார்“ என்ற காரணப் பெயர் உண்டானது.  அன்றைய நாளிலிருந்து அன்னை மீனாட்சி பிறந்த மதுரையம்பதியில் பிறந்த பெண்கள் யாரும் இராத் தங்கார்.  அதுபோல், மதுரையில் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளைகள் யாரும் இராத்தங்கார்.  எப்பாடு பட்டேனும் இரவுக்குள் மதுரை வந்து சேர்ந்துவிடுவர். 

மன்னன் திருமலை நாயக்கருக்குப் பின்னர் பல்வேறு ஆட்சிமாற்றங்கள் உண்டாகி, ஆங்கிலேயேர் ஆட்சி செய்த காலத்தில் இந்த விழாவானது திருப்பூவணத்தில் நடைபெறுவது நின்றுபோய், மதுரையின் வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோயிலில் நடைபெறலானது.

No comments:

Post a Comment