Wednesday 20 May 2020

அஷ்டமா சித்திகள்

Copied from Face book சித்தர்களின் குரல்

"அஷ்டமா சித்திகள்"  குறித்த என் குருநாதர் திருமூலர் பெருமான் திருமந்திரத்தில் சொல்லியுள்ள அபூர்வ யோக  ரகசியங்களை உங்களுடன் ஆழமாக இன்று சித்தர்களின் குரல் வாயிலாக விரிவாக பகிர்கிறேன்...

640 - எட்டு சித்திகளும் கிட்டும்.
------------------------------------------------------

பணிந்து எண்திசையும் பரமனை நாடித்
துணிந்து எண்திசையும்தொழுது எம் பிரானை
அணிந்து எண்திசையினும் அட்டமாசித்தி
தணிந்து எண்திசைச் சென்று தாபித்தவாறே.

எண்திசைகளிலும் சிவனே உயர்ந்தவன் என்று துணிந்து அந்தப் பரமனை நாடிப் பணிய வேண்டும். எண்திசைகளிலும் சிவனைத் தொழுதல் எட்டு சித்திகளும் தாமே வந்தடையும்.

641 - பிறவி நீங்கும்.
-----------------------------------

பரிசுஅறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசுஅற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கு இல்லை அட்டமாசித்தி
பெரிது அருள் செய்து பிறப்பு அறுத்தானே.

தேவர்களின் பக்குவத்துக்கு ஏற்ப அருளை வழங்கும் பண்புடையவன் சிவன். அவன் திருவடிகளே அடைக்கலம் என்று நான் அடைந்த போது என் குற்றங்கள் நீங்கிப் பரவெளியைக் கண்டேன். அரிய பொருள் என்று எனக்கு எதுவும் இல்லை. எட்டு சித்திகளையும் எனக்குத் தந்து என் பிறவிப் பிணியையும் நீக்கினான் சிவன்.

642 - சிவப்பேறு.
---------------------------

குரவன் அருளில் குறி வழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசை சேரப்
பெரிய சிவகதி பேறு எட்டாம் சித்தியே.

குருவின் அருளால் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை ஜீவசக்தியுடன் பொருத்த வேண்டும். அது குறிவழியே வெளியே பாய்வதைத் தடுத்து மேலே ஏற்ற வேண்டும். சாம்பவி அல்லது கேசரி என்ற இரண்டு முத்திரைகளில் ஏதோ ஒன்றைச் செய்தால் சிவகதியைப் பெறலாம் அதன் பயனாக எட்டு சித்திகளையும் பெறலாம்.

சாம்பவி :-
கண் பார்வையை மூக்கு நுனியில் நிறுத்தி அனாஹதச் சக்கரத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல்

கேசரி:-
கண் பார்வையை புருவ மத்தியில் நிறுத்தி ஆக்ஞா சக்கரத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல்.

643 - பரகாயம் பெறலாம்.
--------------------------------------------

காயதி பூதம், கலை, காலம், மாயையில்
ஆயாது அகல அறிவு ஒன்று அனாதியே
ஓயாப் பத்தி அதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலும் ஆமே.

வான் முதலிய பஞ்ச பூதங்கள், கலை, காலம், மாயை என்ற தத்துவங்கள் இவற்றில் தோயாமல் அகன்று செல்லவேண்டும். ஆன்ம அறிவுடன் நீங்காத சக்தியைக் கூட்டினால் அழியாத மேலான உடலைப் பெறலாம்.

644 - கர்மயோகம்.
-------------------------------

இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்மமாம் அந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
அரும் இரு நான்காய் அட்ட மாசித்திக்கே.

கர்ம யோகம் இருபதாயிரத்து எண்ணூறு பேதங்களை உடையது. இவைகள் அனைத்துமே உடல் உழைப்புக்கள் ஆகும். அஷ்டாங்க யோகத்தில் இவைகள் அடங்குவதால் அட்டமா சித்திகளை அளிக்கும் வல்லமை கொண்டது கர்ம யோகம்.

645 - கேவல கும்பகம் சித்திக்கும்.
-----------------------------------------------------------

மதிதனில் ஈராறாய் மன்னும் கலையில்
உதயம்அது நால் ஒழியர் ஓர் எட்டுப்
பதியும்; ஈராறு ஆண்டு பற்று அறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திகள் ஆமே.

சந்திர நாடியாகிய இட கலையில் இழுக்கப் படும் மூச்சு பன்னிரெண்டு அங்குலம் உள்ளே செல்லும். பிங்கள நாடி வழியாக வெளிப்படும் மூச்சு நான்கு அங்குலம் மட்டுமே. மீதி எட்டு அங்குலம் மூச்சு உள்ளே தங்கும். உலகப் பற்றை விட்டு விட்டு இதை உறுதியாகக் கவனித்து வந்தால் பெரும் சித்திகள் கைக் கூடும்.

646 - சித்திகள் வந்து சேரா!
-----------------------------------------------

நாடும் பிணியாகும் நம் சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலை, கல்வி, நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றினால் வாயாச் சித்தி பேதத்தின்
நீடும் துரம் கேட்டால் நீள் முடிவு ஈராறே.

நம் உறவினர்கள் நம்மைச் சூழ்ந்து இருந்தால் அதனால் பந்தம் உண்டாகும். கலையறிவு, கல்வி, கூர்மையான அறிவு, நிறைந்த அறிவு இவை நமக்குச் சித்திக்கா! பேதமாக இருந்து கொண்டு பெருகும் ஒலியினைப் பன்னிரண்டு ஆண்டுகள் விடாமல் கேட்டால் நமக்குச் சித்திகள் சித்திக்கும்.

647 - பெறும் பயன்கள் இவை.
-----------------------------------------------------

ஏழா னதில் சண்டவாயுவின் வேகியாம்;
தாழா நடை பல யோசனை சார்ந்திடும்;
சூழான ஓர் எட்டில் தோன்றா நரை திரை ;
தாழான ஒன்பதில் தான் பரகாயமே.

நாதத்தை அறிந்து கொண்டவர் ஏழு ஆண்டுகளில் சண்ட மாருதம் போலச் செல்லும் வேகத்தைப் பெறுவார். நடை தளராமல் வெகு தொலை செல்ல வல்லவர் ஆவார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் நரை திரை இவை தோன்றா. ஒன்பது ஆண்டுகளில் அழியாத, மேலான, ஓர் உடல் கிடைக்கும்.

648 - பெறும் பிற பயன்கள் இவை.
------------------------------------------------------------

ஈரைந்தில் பூரித்துத் தியான ருத்திரன்
ஏர்வு ஒன்று பன்னொன்றில் ; ஈராறாம் எண்சித்தி
சீர் ஒன்று மேல்ஏழ் கீழ்ஏழ் புவிச் சென்று
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே.

பத்து ஆண்டுகள் தொடர்ந்த தியானப் பயிற்சியால் கீழே போகும் சக்திகளை மேலே நிரப்பிக் கொண்டு ஒரு ருத்திரன் போல விளங்கலாம். பதினோரு ஆண்டுகளில் எட்டு சித்திகள் சித்திக்கும், பன்னிரண்டு ஆண்டு தியானப் பயிற்சியால் கீழ் உலகங்கள் ஏழு, மேல் உலகங்கள் ஏழு இவற்றில் எதற்கும் சென்று வரும் ஆற்றல் கிடைக்கும்.

649 - யோகியரின் சித்திகள்.
--------------------------------------------------

தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும், பரகாயத் தேகமும்,
தான் ஆவது பரகாயம் சேர் தன்மையும் ,
ஆனாத உண்மையும், வியாபியும் ஆம் எட்டே.

தானே மிகச் சிறிய அணிமாவாகவும்; உலகத்தைப் போன்ற பெரிய மகிமாவாகவும்; அளக்க முடியாத கனத்தை உடைய கரிமாவாகவும், வானத்தைப் போன்று லேசான லகிமாவாகவும், அழிவில்லாத உடலைப் பெறும் பிராப்தியாகவும், அயலான் உடலை அடைய வல்ல பிரகாமியமாகவும்; உண்மையான ஈசத்துவமாகவும்; உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தும் வசித்துவமாகவும் பெருமையுடன் கூறப்படும் யோகியர் அடையும் எட்டு சித்திகள்.

விளக்கம்:
************
1. அணிமா: மிகவும் நுட்பமான உடலை எடுத்தல்
2. மகிமா : மிகவும் பருமனான உடலை எடுத்தல்
3. கரிமா : மிகவும் கனமான உடலை எடுத்தல்
4. லகிமா : மிகவும் லேசான உடலை எடுத்தல்
5. பிராப்தி : அழியாத உடலை எடுத்தல்
6. பிராகாம்யம் : விரும்பிய பிற உடலில் புகுதல்
7. ஈசத்வம் : எல்லோருக்கும் மேம்பட்டு இருத்தல்
8. வசித்வம்: எல்லோரையும் தன்வசப்படுத்துதல்

650 - முக்தி சித்திக்கும்.
----------------------------------------

தாங்கிய தன்மையும் தான் அணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்று ஓர் குறை இல்லை,
ஆங்கே எழுந்த ஓம் அவற்றுள் எழுந்தும் மிக்கு
ஓங்கிவர முத்தி முந்தியவாறே.

சிவயோகி அணுவின் தன்மையை அடைந்த போதும், பல வேறு உடல்களைத் தாங்கிய போதும், அவற்றை மீண்டும் வாங்கி ஒடுக்கிய போதும் ஒரு மாற்றமும் நிகழாது. "ஓம்" என்னும் பிரணவ நாதம் மேலே எழுந்து சென்று சஹஸ்ரதளத்தை அடையும் பொழுது யோகிக்கு முக்தி உண்டாகும்.

651 - பிரணவ யோகம் செய்யும் காலம்.
--------------------------------------------------------------------

முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாயிடச்
சிந்தை செய் மண் முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்து எழுமாறே.

கதிரவன் தோற்றம் முதல் உள்ள முப்பது நாழிகைகள் வான், காற்று, தீ, நீர், பூமி என்ற பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு நாழிகையாகக் கொள்ளப்படும். இரவும் முப்பது நாழிகைகள். இதுவும் நிலம், நீர், தீ, காற்று, வானம் என்ற வரிசையில் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு நாழிகைகளாகக் கொள்ளப் படும். இதை அறிந்து கொண்டு கதிரவனின் உதயத்துக்கு முன்னும் பின்னும் உள்ள வானத்துக்குரிய ஆறும் ஆறும் ஆகிய பன்னிரண்டு நாழிகைகளை பிரணவ யோகத்துக்குப் பயன் படுத்தினால் கொப்பூழில் உள்ள கதிரவனை மேலேற்றித் தலைக்குக் கொண்டு போக இயலும். இதனால் நாதமும், விந்துவும் வந்து அமையும்.

652 - உடலைக் கடந்த இன்பம் கிடைக்கும்.
-------------------------------------------------------------------------

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்தும் உற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத்தோரே.

வெளியில் செல்லாமல் அடக்கப்பட்ட மனம் மாறிச் சிவமயம் ஆகிவிடும். முக்தியை ஆராய்ந்து, அதை அறிந்து கண்டு கொண்ட சிவயோகியர் மோனத்தில் இருப்பர். அவர்கள் ஐம்பொறிகளுடன் தொடர்பு அற்றவர்கள். அதனால் மனத் தூய்மை பெற்றவர். அறிவு என்ற வானத்தில் தத்துவங்களைக் கடந்து சிவத்துடன் பொருந்தி இருப்பர். அதனால் அவர்கள் உடலைக் கடந்த ஒரு தெய்வீக இன்பம் அடைவர்.

653 - ஒன்பது வாயுக்கள்.
-------------------------------------------

ஒத்த இவ்ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்ஒன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்து இவ் ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.

உடலில் இயங்குகின்ற ஒன்பது வாயுக்களும் சமமாக இருக்க வேண்டும். ஏதொன்றும் மிகுதியாகவும் கூடாது. குறையவும் கூடாது. இவ்வொன்பதைத் தவிர தனஞ்சயன் என்ற பத்தாவது வாயுவும் உடலில் உள்ளது. ஒத்து இயங்கும் இவ்வொன்பது வாயுக்களுடன் தனஞ்சயனும் கூடி இயங்கினால் உடலும் உயிரும் நீங்காமால் கூடி இருக்கும்.

உடலில் உள்ள பத்து வாயுக்கள்:-
**************************************
பிராணன்,
அபானன்,
வியானன்,
சமானன்,
உதானன்,
நாகன்,
கூர்மன்,
கிருகரன்,
தேவதத்தன்,
தனஞ்சயன்.

654 -  தனஞ்சயனின் அவசியம்.
----------------------------------------------------

இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்;
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்;
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்,
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

தனஞ்சயன் என்ற வாயு மற்ற வாயுக்கள் உள்ள நாடிகளில் பொருந்தி இருக்கும் . அது இருநூற்று இருபது மூன்றாவது மண்டலம் ஆகிய அகந்தை மண்டலத்தில் பொருந்தி இருக்கும். தனஞ்சயன் உடலில் இல்லாவிட்டால் அந்த உடல் வீங்கி வெடித்துவிடும். அதனால் எல்லா வாயுக்களும் உடலில் இருந்து நீங்கிய பிறகே தனஞ்சயன் என்னும் வாயு நீங்கும்.

முக்கியமான பத்து நாடிகள்:-
*********************************
இடை,
பிங்களை,
சுழிமுனை,
சிங்குவை,
புருடன்,
காந்தாரி,
அஸ்தி,
அலம்புடை,
சங்கினி,
குரு.

655 - தனஞ்சயன் திரிபால் உண்டாகும் நோய்கள்.
----------------------------------------------------------------------------------

வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனு முடமாதாய்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே.

கழலை, சிரங்கு, குட்டம், சோகை, வாதம், கூன், முடம், கண்ணில் தோன்றும் வியாதிகள் இவை
தனஞ்சயன் மாற்றத்தால் உண்டாகும்.

656 - கூர்மன் திரிபால் உண்டாகும் நோய்கள்.
------------------------------------------------------------------------------

கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன்
கண்ணில் இவ்ஆணிகள் காசம் அவன் அல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணனில் சோதி கலந்ததும் இல்லையே.

தனஞ்சயன் என்ற வாயுவின் திரிபினால் நோய்கள் உண்டாகும். கண்களில் உண்டாகும் பூக்களும் காச நோயும் தனஞ்சயனால் தோன்றுவதில்லை. கண்ணில் கூர்மன் என்ற வாயு பொருந்தா விட்டால் கண் நோயுண்டாகும். கண்ணில் ஒளியும் இராது.

657 - சிறிய ஆசைகளை உணர்தல்.
-------------------------------------------------------------

நாடியி னோசை நயன மிருதயம்
தூடி யளவுஞ் சுடர் விடு சோதியைத்
தேவருளீசன் றிருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந்தாரே.

கண்கள் இதயம் இவற்றில் நாடியின் ஓசை விளங்கும். சிறிய ஒலியை உண்டாக்கும் அந்தச் சுடரை மும்மூர்த்திகளும் இடைவிடாது அங்கே பொருந்தி உணர்ந்திருந்தனர்.

658 -  ஒன்பது வாயில்கள்.
---------------------------------------------

ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் ஓர் இடம்;
ஒன்பது நாடி ஒடுங்க வல்லர்கட்கு
ஒன்பது வாசல் உலை; நல ஆமே.

உடலில் உள்ள ஒன்பது வாயில்களையும் அடைத்துவிட்டால், மற்ற ஒன்பது நாடிகளும் பத்தாவது நாடியாகிய சுழுமுனையில் சென்று ஒடுங்கும். அங்கனம் அவற்றைப் பொருத்தித் தவம் செய்பவர்கள் அழியாத உடலைப் பெறுவார்கள்.

659 - குருவின் உபதேசம்.
---------------------------------------------

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
வாங்கி இரவி, மதி வழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட,
ஆங்குஅது சொன்னோம் அருவழி யோர்க்கே.

குண்டலினி சக்தியான தீயின் கீழே சுழுமுனை செல்லும்படிச் செய்ய வேண்டும். கதிரவன் கலையில் இயங்கும் பிராணனைத் திங்கள் கலையில் செல்லும்படிச் செய்ய வேண்டும். இதை ஏழு உலகங்களையும் தாங்க யோக நெறியில் நிற்பவருக்கு உரைத்தோம்.

660 - சுழுமுனைத் தியானம்.
-------------------------------------------------

தலைப்பட்ட வாறு அண்ணல்தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்கு உண்ணா வைத்தோர் வித்துஅது ஆமே.

பிரமரந்திரத்தில் விளங்குகின்ற சிவசக்தியரை நாட வேண்டும். வலையில் அகப்பட்ட மான் எங்கும் போகாமல் இருப்பது போல, மூச்சுக் காற்றைச் சுழுமுனையிலேயே செலுத்த வேண்டும். இத்தகைய சுழுமுனைத் தியானம் இதைச் செய்பவருக்கு மட்டுமன்றிப் பிறருக்கும் பயன் தரும்.

661 - பிரணவ உபாசனை.
----------------------------------------------

ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்;
தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் காட்டுமே.

மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியே மேலே சென்றால் சஹஸ்ர தளத்தை அடைந்து அங்கே இருக்கும் சிவ சக்தியரை வணங்கலாம். இவ்வாறு வணங்குபவர் அங்குள்ள நாடியின் உள்ளே இருக்கும் நாதத்தை வெளிப்படுத்துவார். அங்கு உண்டாகும் அமுதத்தை அருந்துவார். உடல் என்னும் பாசறையில் குடியிருக்கும் காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம் என்ற ஆறு பகைவர்களைச் சிறைப்படுத்துவார்.

662 - ஒன்பது கன்னியர்.
------------------------------------------

கட்டிட்ட தாமரை ஞானத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களங்கனி ஊடு போய்ப்
பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே.

சஹஸ்ரதளத்துடன் கட்டப்பட்ட சுழுமுனை நாடியில் ஒன்பது சக்தியர் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து ஜீவர்களை உலகமுகப்படுத்திக் கொண்டு உள்ளனர். ஜீவர்கள் பக்குவம் அடைந்த பிறகு அவ்வொன்பது சக்தியரும் செயல் அற்றுச் சக்தியுடன் பொருந்தி நின்றனர். அப்போது மூலாதாரத்தில் இருந்த குண்டலினி தொண்டைச் சக்கரமாகிய விசுத்தியின் வழியே சென்று புருவ மத்தியில் உள்ள ஆக்ஞை சக்கரத்தை அடைந்து அங்கே முழுச் சக்தியானது.

663 - பராசக்தியே செய்விப்பவள்!
-----------------------------------------------------------

பூரணச் சத்தி ஏழு மூன்று அறை ஆக
ஏர்அணி கன்னியர் எழு நூற்றஞ்சு ஆயினர்
நாரணன், நான்முகன் ஆகிய ஐவர்க்கும்
காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே.

பராசக்தியே ஏழு கன்னியர்களாக ஆவாள். இச்சை, ஞானம், கிரியை இவற்றின் வேறுபாடுகளால் அந்த ஏழு கன்னியர் இருபத்தொரு அழகிய கன்னியர் ஆவார்கள். ருத்திரன், நான்முகன், திருமால், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐவருக்கும் காரணமாகி அந்த இருபத்தொரு கன்னியர்களே நூற்று ஐந்து கன்னியர்களாக ஆவார்கள். இவ்வாறு ஐந்து மூர்த்திகளின் அனைத்துத் தொழில்களையும் செய்விப்பவள் பராசக்தி தேவியே ஆவாள்.

664 - நாதத்தில் விளங்குவாய்!
------------------------------------------------------

விரிந்து குவிந்து விளைந்த இம்மங்கை
கரந்து உள்எழுந்து, கரந்து அங்கு இருக்கின்
பரந்து குவிந்தது பார்முதல் பூதம்
இரைந்து எழுவாயு இடத்தில் ஓங்கே.

இவ்வாறு விரிந்து நிற்கும் சக்தியே பிறகு மீண்டும் ஒடுங்கி விடுவாள். பலவகையான போகங்களையும் விளைவிப்பாள். சிவத்துடன் நின்று அதன் பின்னர் மறைந்து ஒடுங்கி விடுவாள். மேலே எழுகின்ற நாதத்தில் நீ ஓங்கி விளங்குவாய்.

665 -  விந்துத் தானம்.
-------------------------------------

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடும் வாயுவும் மாறியே நிற்கும்.
தடைஅவை ஆறு எழும் தண்சுடர் உள்ளே
மிடை வளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

நாதத்தில் ஒடுங்கி விட்டவர்களுக்கு இடைகலை பிங்கலை என்னும் இரண்டும் அடைபட்டுவிடும்.
சுழுமுனை திறந்து கொள்ளும். அவர்களின் சுவாசம் மெல்ல இயங்கும். ஆறு ஆதாரங்களும், ஏழு சக்திகளும் நீங்கிச் சந்திர மண்டலத்தில் புருவ மத்தியில் விந்துத் தானத்தில் அடங்கும்.

666 - சிவன் தன்னை அறியச் செய்தல்.
--------------------------------------------------------------------
ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மடங்கிடும் மன் உயிருள்ளே
நடங் கொண்ட கூத்தனும் நாடுகின்றானே.

உள்ளம் ஒருமைப்பட்டு புருவ மத்தியில் இருந்தால், மூச்சுக் காற்றும் கட்டுப்பட்டு நின்று விடும். சீவன் வெளி உலக நோக்கம் இல்லாமல் அகத்தின் மீது நோக்கம் கொண்டு விடும். அப்போது உயிரில் கலந்து விளங்கும் ஈசன், சீவனுக்குத் தன்னை வெளிப்படுத்துவான்.

667 - தூண்டா விளக்கு.
----------------------------------------

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிடும்
மாடில் ஒருகை மணிவிளக்கு ஆனதே.

பாயும் இடத்தில் நாத ஒலியுடன் சென்று, அங்கு நிலை பெற்று விளங்கும் சிவ சக்தியரைப் பொருந்தும் சுழுமுனை ஒரு தூண்டா விளக்கு ஆகும். அது பாசறையில் தங்கி இருக்கும் இருள் என்னும் கொடிய பகைவனை அடையாளம் காட்டுகின்றது.

668 - எண் சித்திகள்.
------------------------------------

அணிமாதி சித்திக ளானவை கூறில்
அணுவி லணுவின் பெருமையி னேர்மை
இனுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குத் தானாதல் என்றெட்டே.

அணிமா முதலிய எட்டு சக்திகள் இவை:
1. அணுவில் அணுவாதல்.
2. பெரியதில் பெரியது ஆதல்.
3. அசைக்க முடியாத கனம் அடைதல்.
4. இறகு போல லேசாதல்.
5. மேலே உள்ள வானத்தைத் தொடுதல் 6. எல்லா பூதங்களிலும் கலந்து எழுதல். 7. உயிர்களுக்கு எல்லாம் கருத்தாக ஆதல்.
8. எங்கும் தானாக இருத்தல்.

669 -  அமுதம் உண்பர்.
---------------------------------------

எட்டாகிய சித்தி யோரெட்டி யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.

அட்டாங்க யோகத்தால் அடக்கி ஆள இயலாத மூச்சுக் காற்றை ஒருவர் அடக்கி ஆளலாம். அவர் எட்டுப் பெரிய சித்திகளையும் அடையலாம். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி, சுழுமுனை நாடி வழியே மேலே செல்லலாம் . அக்கினி மண்டலம், கதிரவன் மண்டலம் இவற்றைக் கடந்து செல்லலாம். சந்திர மண்டலத்தில் உள்ள அமுதத்தையும் உண்ணலாம்.

670 - திரிபுரை சக்தி.
-----------------------------------

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தால்
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திக லெண் சித்தி தானந் திரிபுரைச்
சக்தி அருள்தரத் தானுள வாகுமே.

பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் அடைவிக்கும் அட்டாங்க யோகம். அதைப் பயின்று மேலே செல்லச் செல்ல பலன்கள் பலப்பல கிடைக்கும். எட்டு சித்திகள் கிடைக்கும்; ஞானம் தானே வெளிப்படும்; எண் சித்திகளும் திரிபுரை சக்தியே ஆனதால் அவள் அருளால் சித்தியும், புத்தியும் தாமே கிடைக்கும்.

671 - அணிமா சக்தி.
------------------------------------

எட்டுஇவை தன்னோடு எழிற்பரம் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
இட்டமது உள்ள இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடம்தான் நின்று எட்டுமே.

எட்டு பெரிய சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானமும் பெற்ற ஒருவர் சித்தர் ஆகி விடுவார். இவர் சிவலோகத்தை அடைந்து, தனக்கு மிகவும் விருப்பமான சிவபெருமானுடன் பொருந்தி இருப்பார்.

672 - விரும்பும் உலகம் சேரலாம்!
----------------------------------------------------------

மந்தர மேறு மதிபானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியில் கசடுஅற வல்லோர்க்குத்
தந்துஇன்றி நற்கமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே.

மலையாகிய தலையில் சந்திர, சூரிய கலைகளை மாற்ற வேண்டும். சுழுமுனையை அடிக்கப் பட்ட ஒரு முளையைப் போல ஆக்கி விட வேண்டும். விந்துவின் நீக்கம் என்பதே இருக்கக் கூடாது. இப்படிப்பட்டவருக்கு நரம்புகள் இல்லாத ஒரு பிரணவ உடல் கிடைக்கும். அவர் அதன் மூலம் நல்ல உலகத்தை அடைய முடியும். அந்த உலகம் தன்னை அடைந்தவருக்கு எட்டு சித்திகளையும் அளிக்க வல்லது.

673 - வெல்ல இயலாது.
-----------------------------------------

முடிந்திட்டு வைத்து முயங்கில் ஓராண்டில்
அணிந்த அணிமா கைதானாம் இவனும்
தணிந்த அப்பஞ்சினும் தான் நொய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.

விந்து நீக்கம் இல்லாமல் சேமித்து வைத்துக் கொண்டு ஓராண்டு யோக முயற்சியில் ஈடுபட வேண்டும். அப்போது அணிமா சக்தி கிடைக்கும். அது கிடைத்தால் அந்த சித்தன் மெலிந்த நுட்பமான பஞ்சை விட மிகவும் மெலிந்து இருப்பான், அவனை வெல்ல முடியாது..

674 - இலகிமா.
--------------------------

ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற ஐயாண்டில் மா லகு ஆகுமே.

பராசக்தி ஆக்கத்தைத் தருபவள். மூலாதரத்தில் இருந்து மேலே செல்லும் எல்லா தத்துவங்களிலும் அந்த சக்தி தேவையான் காலத்துக்குத் தன்மயமாகி நின்றால் இலகிமா என்னும் சித்தி ஐந்து ஆண்டுகளில் கைவரும்.

675 - சிவ தரிசனம்.
---------------------------------

மாலகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான்ஒளி ஆகித் தழைத்து அங்குஇருந்திடும்
பால்ஒளி ஆகிப் பரந்து எங்கும் நின்றது
மேல்ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே.

இலகிமா என்னும் சித்தியைப் பெற்ற ஆன்மா தானே ஒளியாக விளங்குவான். அந்தப் பேரொளியில் திளைத்து இருப்பான். பால் போன்ற ஒளியுடன் பரவி நிற்கும் ஆன்மாவுக்கு அப்போது மேலான சிவ தரிசனம் கிடைக்கும்.

தொடரும்........

குறிப்பு:-
*********
மேலும் திருமூலர் பெருமானால்   உலகுக்கு அருளப்பட்ட அபூர்வ  யோக முறையை  முழுமையாக தனிப்பட்ட என்னுடைய திருமந்திர whatsaap  வகுப்பில் online இல் நேரடியாக அனுபவமாக  கற்பிக்கிறேன். கற்க விரும்புபவர்கள் கற்று கொள்ளுங்கள். உலகில் எங்கிருந்தாலும் நேரடியாக whatsaap மூலம் கற்று கொள்ளும் அறிய வாய்ப்பு. கற்க விரும்புபவர்கள் சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம் குமார் அவர்களை (+918903834667) தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வகுப்பில் இணையவும்.

         - சித்தர்களின் குரல் shiva shangar

2 comments: