Wednesday 30 August 2017

கலிநீசன் பாகம் 5 : Kaliyugam Part 5

உடனே புத்திகெட்ட நீசன் விதிகர்த்தன் வைத்த பொறியிலே சிக்கும் விsதமாக, பண்டாரங்களுக்கோ, பரதேசிகளுக்கோ, கந்தைத் துணி அணிந்து, தலைவரிகோலமாய் இருக்கும் ஆண்டிகளுக்கோ எந்தக் காரணத்தாலும் எந்தவித துன்பமும் செய்ய மாட்டேன் என்றான்.
அதைக் கேட்டு அகமகிழ்ந்த மகாவிஷ்ணு, நீ இப்போது சொன்னது போலவே சொல்லி சத்தியம் செய் என்றார். கலிநீசனோ, அவனுடைய அழிவை அவனே நிர்ணயிக்கும் வகையில் நான் யார் யார் பெயரில் சத்தியம் செய்ய வேண்டுமென மகாவிஷ்ணுவிடம் வினவினான்.

அப்போது கலிநீசன் தன் முகவுரையைத் தொடங்குவதற்கு முன்பே முடிவுரையை எழுத முற்படுகிறான் என்று பூரிந்து மகிழ்ந்த மகாவிஷ்ணு, கலிநீசனைப் பார்த்து, நீசா நீ இப்போது சிவபெருமானை வணங்கி அவரிடம் வாங்கிவந்த வலிய பல வரங்கள் பேரிலும், உன்னுடைய மனைவி பேரிலும், நான் குறிப்பிடும் வாசகங்களைச் சொல்லி சத்தியம் செய்தால் அதுபோதுமென்றார். நீசனும் அதற்கு உடன்பட்டான்.
நான் வாங்கியுள்ள வரங்களின் மீதும், என் மனைவியின் மீதும் சத்தியமாக, ஆண்டிகளுக்கோ, பரதேசிகளுக்கோ எந்தச் சூழ்நிலையிலும் எவ்வகைத் துன்பமும் செய்ய மாட்டேன். இந்தச் சத்தியத்தை நான் மீறி ஆண்டிகளுக்கோ, பரதேசிகளுக்கோ ஒரு வேளை தீங்கு செய்தேனேயானால், நான் பெற்றுள்ள அனைத்து வரங்களையும், என் மனைவியையும், மக்கள் கிளைகளையும், நான் ஆளுகின்ற நாட்டையும், படை முதலான அரசுரிமைகளையும் தோற்று நானும், என்னுடைய உறவினரும் மீளவே முடியாத நரகத்தில் போய்ச் சேர்வோம் என்று சொல்லி சத்தியம் செய் என்று ஆண்டியாக் காட்சியளிக்கும் மகாவிஷ்ணு கலிநீசனிடம் சொன்னார். மகாவிஷ்ணு செய்ய சொன்னபடியே கலிநீசன் சொல்லி சத்தியம் செய்தான்.

மாயனாகிய மகாவிஷ்ணுவின் சூட்சுமத்தை உணராமல், சத்தியம் செய்து கொடுத்த கலிநீசனின் செயல் கண்டு களிப்புற்ற மகாவிஷ்ணு, கலிநீசனைப் பார்த்துச் சொல்லுகிறார். சொல்ல வொண்ணா வரங்களைச் சிவபெருமானிடம் பெற்று வல்ல பலத்தோடு வந்து நிற்கும் மாநீசா! உனக்கு அகத்திய முனிவர் கற்றுத் தந்திருக்கும் மந்திரங்களின் மூலம் எந்தவிதமான ஆயுதங்கள் தேவையோ அவற்றையெல்லாம் புதிது புதிதாக உருவாக்கி, தந்திரமாக கையாளமுடியும். அத்தகைய மந்திரத்திற்கான அச்சரங்களையெல்லாம் துச்சமாகக் கற்றுக் கொண்டநீ, இப்படியோர் ஆயுதத்தை எதற்காகச் சுமந்து கொண்டு போகிறாய்?
நீ சிவபெருமானிடம் மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தைக் கேட்டாயே, அந்த சக்கராயுதத்தையா உனக்குத் தந்தார்? இல்லை. இப்போது நீ சுமந்து கொண்டிருப்பது எதற்கும் பயன்படாத இரும்பு. இந்த இரும்பைச் சுமந்து செல்வதால் உனக்கு எப்பயனும் இல்லை.
ஆகவே இந்த இரும்பை என்னிடம் நீ தந்தாயானால், இதை இன்னொன்றாக மாற்றித் தருகிறேன். அது, இந்த உலகத்தையே வளமாக்கி வசமாக்கும் வலிமையுள்ளதாகவும், அதைக் கண்டவர்களெல்லாம் கனக திரவியம் போல் கருதுகின்ற மகிமையுள்ளதாகவும் மாற்றல் செய்து தருகிறேன் என்று கலிநீசனின் கருத்தைக் கவரும் விதமாக மகாவிஷ்ணு வீறாப்புடன் சொன்னார்.
அதைக் கேட்ட கலிநீசன் அகமகிழ்ச்சியோடு அந்த சக்கராயுதத்தை மகாவிஷ்ணுவிடம் கொடுத்து உம்முடைய விருப்பப்படியே இதை மாற்றல் செய்து தாரும் என்றான்.
சங்கு சக்கரதாரியாகிய மகாவிஷ்ணுவோ, கலிநீசனிடமிருந்து சக்கராயுதத்தை வாங்கி, அதைப் பணமாக மாற்ற முனைந்தார்.
அப்போது அந்தச் சக்கராயுதம் மகாவிஷ்ணுவைப் பணிந்து போற்றி சுவாமி, உமக்கே சொந்தமான என்னை, உலகத்தையே ஒரு நொடியில் மாற்றுகின்ற வலிமையுள்ள என்னைப் பணமாக்கி இந்தப் பாவியாகிய நீசனிடத்திலே கொடுக்கிறீரே, இந்த சாபம் எனக்கு எப்போது மாறும் என்று பரிதாபமாக் கேட்டது.
அதற்கு மகாவிஷ்ணு சொல்லுகிறார், இந்தக் கலியுகம் இருக்கும் வரைதான் இந்த உலகம் உன்னைக் கட்டிக் காப்பாற்றும், கலி எப்போது முடிகிறதோ அப்போது பணமாகிய உனக்கு மரியாதை குறைந்து விடும். அது காலம்வரை பணமாக இருக்கும் நீ கலியுகம் முடியும்போது நீயும் முன்புபோல் சக்கராயுதமாக என்னிடம் வந்துவிடுவாய் என்றார். உடனே சக்கராயுதம் பணமாக மாற்றம் பெற்றது.

சக்கராயுதம் பணமாக மாறி பறந்து கீழே விழுந்ததுமே, அதை எட்டிப் பிடித்த கலிநீசன் அந்தப் பணத்தைத் தன்னுடைய கண்களில் ஒற்றிக்கொண்டே அவனுடனிருக்கும் கலிச்சியாகிய தன் மனைவியைப் பார்த்து, பெண்ணே ! நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு வகையான அத்தனை பலங்களும் இந்த பணத்திலே அடங்கியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே சிவபெருமானை நினைத்து வணங்கி மண்ணுலகில் செல்வதற்கான சக்தியைத் தாரும் என்று வேண்டினான்.
அப்போது மகாவிஷ்ணு தேவலோகம் சென்று அங்கிருந்த தேவர்களையெல்லாம் அழைத்து, தேவர்களே! இப்போது என்னிடம் இந்தக் கலிநீசன் செய்து தந்த சத்தியத்தையும் இந்த சத்தியத்தில் அவன் சொன்ன வாக்குறுதிகளையும் எதுவுமே விடுபட்டுப் போகாதபடி ஆகமத்தில் எழுதி வையுங்கள் என்று ஆணையிட்டார். மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தேவர்கள் அங்கே அப்போது நடைபெற்ற நிகழ்வுகளோடு சேர்த்து கலிநீசனின் வாக்குறுதிகளையும் சத்தியத்தையும் ஆகமத்திலே எழுதிப் பதிவு செய்தார்கள்.
உடனே மகாவிஷ்ணு ஸ்ரீரங்க மாபதிக்கு ஏகினார். மகாவிஷ்ணு ஸ்ரீரங்கமாபதிக்குப் புறப்பட்டதையுணர்ந்த சிவபெருமான், மண்ணுலகிற்குச் செல்ல மாவிருப்பத்தோடு தம்மை நினைத்து விடைவேண்டி நிற்கும் கலிநீசனுக்கு மண்ணுலகத்திற்குச் செல்வதற்கான மனதைக் கொடுத்தார். எனவே கலிநீசன் தன் மனைவியோடும், கையில் பணத்தோடும் மண்ணுலகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். இந்நேரம் அன்னை உமையவள் கலிநீசனைப் பற்றி சிவபெருமானிடம் விசாரிக்கிறார்.

சர்வேஸ்வரா ! இப்போது தங்களிடம் எண்ணவொண்ணா வரங்களைக் கேட்டு வாங்கிவிட்டு வையகத்திற்குச் செல்லும் இந்த மாநீசன் யார்? இவன் இத்தனை வரங்களைக் கேட்பதற்கும், அதை நீங்கள் கொடுப்பதற்கும் என்ன காரணம்? இவன் வாங்கிச் செல்லும் இத்தனை வரங்களையும் வைத்து இவன் என்ன செய்யப் போகிறான்? இதைப்பற்றி தாங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த உபாயங்களைப் பற்றி எனக்கு சற்று எடுத்துரையுங்கள் என்று சிவபெருமானிடம் அம்மை உமையவள் கேட்கிறாள்.
அதை கேட்ட சிவபெருமான் உமையவளைப் பார்த்துச் சொல்லுகிறார். வல்லமைகளுக்கெல்
லாம் வல்லமையாகிய வனிதையே ! இந்த மாநீசன் பெற்றுச் செல்லும் வரங்களையெல்லாம் உற்றுப் பார்க்கும்போது, நிகழ்ந்து நிறைவேறிய மகாயுகங்களில் நடைபெற்ற கலியுகம்போல் இருகிறது கண்ணமுதே என்று சொன்னார்.
சிவபெருமான் தன்னுடைய திருவாய் மலர்ந்து கலியுகம் என்று சொன்ன உடனே தேவர்களெல்லாம் சேர்ந்து இது கலியுகம் என்று ஆகமத்தில் எழுதிப் பதிவு செய்தார்கள்.
கலியுகம் என்று சிவபெருமான் நினைத்துரைத்ததுமே, அதை புராதன ஆகமத்தில் தேவர்கள் பதிவு செய்தார்கள்.
அக்கணத்தில்தான், தான்பெற்ற வரங்களில் பலவற்றை இழந்து விட்டோமே என்ற விரக்தியோடு கலிநீசன் மண்ணகத்தில் கால் ஊன்றினான். அதே வேளையில் மகாவிஷ்ணுவும் ஸ்ரீரங்கமாபதில் சென்றுறைந்தார்.

கலிநீசன் மகாவிஷ்ணுவுக்கு செய்து கொடுத்த சத்திய வாக்குமூலத்தையும், சிவபெருமான் இது கலியுகம் என்று சொன்னதையும் சத்தியப் பிரமாணமாகிய உலக நிகழ்வு விதி ஆகமப் பெருங்கணக்கில் தேவர்களால் எழுதப்பட்டதுமே, கலியனும், கலிச்சியும் பூமியில் கால் பதித்துவிட்டனர்.
இதனால் பூவுலகம் சற்று சிலிர்த்தது. அதனால் இவ்வுலகம் அதிர்ச்சிக்குள் அகப்பட்டது. ஆகவே, அமைதி குலைந்தது தர்ம தார்ப்பரியங்களைத் தாங்கி நின்ற பூமியின் இத்தகு தடுமாற்றத்திற்குக் கலியன் கலிச்சியின் வரவே காரணம் என்பதை, நற்குணம் வாய்ந்த பறவைகளும், மிருகங்களும், ஊர்வனங்களும் உணர்ந்தன. அதனால் உண்டான பல்வேறு மாற்றங்களையும் அன்பர்களுக்காக ஆகமம் சொல்லுகிறது கேளுங்கள்.

கலியனும், கலிச்சியும் மண்ணுலகில் கால் பதித்த உடனேயே, கபடமான கலிமாயைத் தரணி எங்கும் வியாபித்தது. இந்நிலையால் உலகில் தர்ம நெறிகள் தவறிவிடும் என்பதை நற்குணம் வாய்ந்த ஜீவ ஜெந்துக்கள் எல்லாம் உணர்ந்தன.
ஆகவே, வெள்ளை நிறங்கொண்ட யானை, வேங்கை, கடுவாய், ஐந்துதலை நாகம், அன்னம், குயில், புறா, மயில், சாரைப்பாம்பு, கருடன், குரங்கு, காண்டாமிருகம், நரி, காகம், ஆளி, சிங்கம், இறாஞ்சிப்பறவை, கலைமான், அணில் ஏனைய வெள்ளை நிறங்கொண்ட பறவைகளும், மிருகங்களும். ஊர்வனவைகளும் இனிமேல் இந்தக் கபடமான கலிசூழ்ந்த உலகில் நம்மால் வாழமுடியாது என்று வைகுண்ட லோகத்தில் அடைக்கலம் புகப் புறப்பட்டன.
கலிநீசனினன் வரவுக்கு முன்பு மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாஸ்திரங்களும், முறையான் பஞ்சாங்கங்களும், தர்ம நெறிகளும், இரத்தினம், முத்து, வைடூரியம் போன்ற நவரத்தினங்களும். நான்கு வேதங்களும் அது சார்ந்த சம்பிரதாயங்களும் வைகுண்டலோகத்தையே நாடின.
சங்கு முதலான கடலில் விளையும் அனைத்தும், கலியனின்ன வரவினால் காணாது மறைந்தன. தங்கமும், தங்கத்திற்கு நகரான ஏனைய பொருட்களும் மண்ணுக்குள்ளே மறைந்தன. தெய்வச்சிலைகள், கோயிலகள், இறைவனின் இணையில்லா இயல்புகளை எடுத்தியம்பும் ரகசிய ஏடுகள் யாவும் கடலினுள்ளும் பூமிக்குள்ளும் புகுந்துவிட எண்ணின. முறையாக மழை பொழிய மறுத்தது. மலர்களும் மலர மறந்தது. ஏரிகள் யாவும் பாழாக நினைத்து, கடலோ கோபத்தோடு கொந்தளித்தது.
எனவே, தர்மநீதம், தெய்வநீதம், மனுநீதம் ஆகியவையெல்லாம் தலைகுனிந்துவிட்டது. இனி இந்த உலகில் நாமெல்லாம் நிலைத்திருக்க நீதியில்லை என்ற நினைவோடு நீலவண்ணனாகிய மகாவிஷ்ணுவின் பாதார விந்தத்தைப் பற்றிக் கொள்ள வழிதேடி நடந்து, கலியை விட்டுக் கடந்து, காட்டிற்குள்ளே சென்றன.
அப்போதுதான் கலியுகம் பிறந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்ட பஞ்சபாண்டவர்களும் வைகுண்டலோகத்திற
்குச் செல்வதற்காக வாடிய உடலோடு அந்தக் கானகத்திலே வந்து சேர்ந்தார்கள். அங்கே தர்ம நீதத்தையும், தெய்வநீதத்தையும், மனுநீதத்தையும் பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மர் காணுகிறார்.

பூமியில் ஒருதிசையில் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவர். இறைவனைப் போற்றும் வேதக் கருத்துக்கள் மறைந்து நாத்திக வேதங்கள் உருவாகும். சாதிகளின் கட்டுப்பாடு நிலை மாறிவரும். ஆண்களுக்கு வயதில் மூத்த அல்லது பருவநிலை முடிந்த மனைவியை திருமணம் செய்து வைப்பார்கள். உலகில் மனைவிக்குக் கணவனைவிட அதிக அதிகாரம் உண்டாகும். நீசக்குலத்தினர் அதிகமாகிப் பூமியில் கழிவுப் பொருளுக்குக்கூட தண்டவரி கேட்பார்கள்.

வானத்திலிருந்து இடிகள் ஒவ்வொரு வருடமும் பூமியைத் தாக்கும். அதிக நேரம் மலையும் பூமியும் இடி சத்தத்தை எதிரொலித்து முழங்கும். அந்திப்பொழுது மிகவும் காலம் கடந்துவரும். சீமை நாட்டிலும் தென் சோழ நாட்டிலும் அழகான பயிர்கள் எல்லாம் அழிந்துவரும். இலைகள் கருகும், குரான் பைபிள் ஆகிய இரு வேதங்களும் பொய் என நிறுபிக்கப்படும். தலையில் தொப்பி வைக்கும் மதம் அழிந்துவிடும். சில நட்சத்திரம் உதிரும், நடக்கின்ற வழி குறுகி வரும். பொய்த்தன்மை உள்ள பூசாரிகள் கோயிலில் பெருகுவர். நவ்வா துலுக்கர் நாடுகளுக்கு யுத்தம் முதலியவற்றால் அலைச்சல் உருவாகும். சிவாலயங்கள் தேய்வுற்றுச் சுவர்கள் இடியும்.

கிணறுகள் பாழாகும். பூமியின் அடிப்பகுதி நீர் ஊற்றுப் பொய்த்துப் போகும். இவ்வுலகில் மக்கள் ஒருவருக்கொருவர் இணக்கம் இல்லாம் ஏங்குவர். மக்களுக்கு அதிக அலைச்சல் உண்டாகும். பகையை உண்டாக்கும் துரோகிகள் உலகில் அதிகமாக இருப்பார்கள். அதிக பொருள் வேண்டும் என்னும் ஆசையினால் பெரிய சண்டைகள் உண்டாகும். காம ஆசை வெறியால் அதிகமான பழி பாவங்கள் உண்டாகும். தாய் மகள் வைப்பாட்டியாக வைக்க நினைப்பான். தந்தையைப் புதல்வர்கள் வேலை வாங்குவர்.
ஆடு மாடுகளின் வயிற்றில் மனிதர் உருவில் கன்று தோன்றும், வஞ்சனை அதிக அளவில் பெருகிச் சிலர் பிறரைக் கொலை செய்வர். கோவில்களில் காணிக்கை வாங்குவதும், அரசு கைக்கூலி வாங்குவதும் அதிகம் ஆகும்.

மாணிக்கம், தங்கம், வைரம், ஆகியவை பயன்படுத்துவது குறைந்து வரும். இப்பரந்த உலகில் பேய்கள் இருப்பதான எண்ணம் பெருகித் துன்பம் வரும். உலகில் விவசாயம் மழையின்றி அழிவு நிலை எய்தும்.
ஏழு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்குப் பிள்ளை பிறக்கும். பெண்கள் கொங்கைகூடும் உறவு இல்லாமலே (செயற்கை முறையில்) குழந்தைகள் பெற்று வாழ்வர். தம்மோடு பிறந்தவர்களைக் கொடுமை பொருந்திய பகைவர்களாக எண்ணுவார்கள். வானத்தில் மேகம் இடித்து முழங்கும். ஆனால் மழை பொழியாது. எதிர்பாராது கொடுக்கும் தானம் நடைபெறாது. சாத்திரத்தின் நீதி வழிகள் பொய்யாகும்.
கீழான புத்தி உள்ளோருடைய வாழ்வு உயர்ந்தோங்கி வரும். வீண் வாழ்க்கை வாழ்வார் பெருகி, வீடுபேறு அடையும் வழிகளைத் தவறு என்று கெடுத்து பேசுவர்.


சிவஞானத்தை அடையக் கூறும் வேதங்கள் முழுவதையும் புறக்கணிப்பர். உண்மை வேதகருத்துக்களை விரும்பாது இகழ்ந்து பேசுவர். பொய்யான வேத கரு்த்துக்களைக் கூறும் நூல்கள் இவ்வுலகில் அதிக அளவு உண்டாகும். திருடர்கள் பெருகுவர். கறியுப்பின் விலை மலியும்.

No comments:

Post a Comment