Thursday 31 August 2017

மர்ம யோகத்தில் கனல் வாழ்வு

 மர்ம யோகத்தில்  கனல் வாழ்வு



கனல் வாழ்வு பகுதி ஒன்று *****************************
எத்தனையோ வாழ்க்கை முறைகளிலே கனல் வாழ்வும் ஒன்று என அனைவரும் நினைப்பர்.. ஆனால் அது முற்றிலும் தவறு.. எல்லா வாழ்க்கை முறைகளிலும் சத்தாக சாரமாக ஜீவ நாடியாக மையமாக மறைமுகமாக செயல் படும் இந்த கனல் ஒரு ஜீவ புள்ளி,மையப்புள்ளி... ஒரு புள்ளி தோற்றம் அற்றது.. ஆனால் அந்த மையப்புள்ளியை ஆதாரமாக வைத்து ஏற்படுத்தப் பட்ட வட்டங்கள், தோற்றத்தை உடையது.. தோற்றம் உடைய எதுவும் வெளிச்சத்தை தன்பால் ஈர்க்கவே முயலும்.. ஆனால் அந்த வெளிச்சமோ கனலிலிருந்து வெளிப்பட்டது.. கனல் சக்தியை வெளிச்ச சக்தியாக மாற்றி இந்த தோற்றங்கள் தன் பால் ஈர்த்துக் கொள்ளும்.. இந்த மாற்றமே கவர்ச்சி என பெயர்.. இந்த கவர்ச்சியின் வேகம் தோற்றத்தின் ஈர்ப்பு சக்தியால் நடை பெறுகிறது.. இந்த கவர்ச்சியை இழந்த தோற்றங்கள் ஈர்ப்பு சக்தியையும் இழந்து, தோற்றங்கள், காணாமல் போய் விடுகின்றன.. ஆனால் அந்த மையப் புள்ளியான கனல் காணாமல் போவதில்லை.. அது நிரந்தரமாக என்றும் இருக்கும்.. இதிலிருந்து முக்கியமாக அறிந்து கொள்வது என்னவென்றால், கனல் என்ற மையப்புள்ளி நிரந்தரம்,நித்தியம் நீங்காநிலை கொண்டது... ஆனால் அதை வைத்து தோன்றிய வட்டங்கள் தான், அநித்தியமானது, நீங்கும் நிலை உடையது... இதை அடைப்படையாக வைத்தே கனல் வாழ்வு தொடங்குகிறது...
மையப்புள்ளி, வெளிச்சம், கவர்ச்சி, தோற்றமான வட்டம், ஈர்ப்பு ஆகிய முக்கிய சொற்களை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே, கனல் வாழ்வைப் பற்றிய இரகசியங்கள் நன்கு விளங்கும்...
பிரச்சனை எல்லாம் அநித்தியத்தை உடைய வட்டமான தோற்றத்தில் தான் உள்ளது... தோற்றமே இல்லாத மையப்புள்ளியில் நித்தியமும்; எதுவும் நீங்காநிலையும் இருப்பதால், தொல்லைகள் துயரங்கள் என்பது அதற்கு இல்லை..  கனலான அந்த மையப்புள்ளியோடு தொடர்பு நீங்காமல்,வட்டமான தோற்றமான வாழ்க்கையோடு தொடர்பு கொண்டாலும், தொல்லைகள் துயரங்கள் இன்றி வாழலாம்... அப்படி புள்ளியோடும் வட்டத்தோடும் வாழும் வாழ்க்கை தான் கனல் வாழ்வு என்கிறோம்..
எத்தனை சோதனைகள் வந்தாலும், துயரங்கள் இன்றி சோகங்கள் இன்றி வாழும் வாழ்க்கை தான் ஞான வாழ்க்கை, தெளிவு வாழ்வு என்கிறோம்..
 மூன்று வகையான வாழ்க்கை உள்ளது..
 1) புள்ளியை மட்டுமே சேர்ந்த வாழ்க்கை
 2) புள்ளியை அறியாது வட்டத்தில் வாழும் வாழ்க்கை..
 3) புள்ளியும் வட்டமும் சேர்ந்த வாழ்க்கை
1) மனிதனுக்கு புள்ளியை மட்டுமே சேர்ந்த வாழ்க்கை என்பது, மரணதிற்கு பின் தோற்றமாகிய உடலை இழந்து சுத்த கனலான தோன்றா நிலையில் வாழ்வது.. இது மண்ணில் புதைந்துள்ள புதையல் போன்றது.. யாருக்கும் பயன்படாதது.. அன்பு என்ற மாசக்தி துளியும் இல்லாதது..
2) இரண்டாவது ஆன புள்ளியை அறியாது வட்டத்தில் வாழும் வாழ்க்கை தான் இன்றைய சராசரி மனிதன் வாழ்க்கை... கனலை தானே உள் வாங்கும் வழி அறியாது, வட்டத்தில் வாழுகின்ற போது கனல் போதுமானதாக இல்லாமல் தவிப்பு பலவகையிலும் ஏற்பட்டு பெரும் பாலும் வாழும் வாழ்க்கை.. இதில் வாழ்வு கலைந்து, தேய்ந்து முடிவில் மரணத்தில் காணாமல் போகும்...
3) புள்ளியும் வட்டமும் சேர்ந்த வாழ்க்கையில் கனல் என்ற புள்ளியான தோன்றா நிலையோடு வட்டம் என்ற தோற்றத்திற்கு வந்த வாழ்வினை இணைத்து நித்திய வாழ்வும் அன்புடன் சேர்ந்த அர்த்தமுள்ள வாழ்வாக வாழ்வது...
கனல் என்பது என்ன ?
 அண்ட ஆற்றல், தேகத்தில் செயல் படும் பொழுது அதை கனல் என்று சொல்லுகிறோம்..
புள்ளி என்பது அந்த ஆற்றலுடன் உள்ளிருந்து பயிலுதல் என்பதாகும்..
 வட்டம் என்பது பெற்ற ஆற்றலை தேகத்தில் பயன் படுத்துவதால் தோன்றிய தோற்றம் ஆகும்...

No comments:

Post a Comment