Tuesday 29 August 2017

சிறப்பு பிராணாயாம பயிற்சி

பிராணாயாமத்தோடு
யோனி முத்திரையைச் சேர்த்து பயிற்சி
செய்யும் போது, முறையான பயிற்சியைச்
சரியாகக் கடைபிடித்தால் பதினைந்து
நாட்களில் மனம் துரிய நிலையை
அடைந்துவிடும். சமாதி கிட்டிவிடும்.

நேரடியாக பிராணாயாமம் கற்பவர்களுக்கும்
அஷ்டாங்க யோகத்தின் வரிசையில்
பிராணாயாமம் கற்பவர்களுக்கும் வித்தியாசம்
இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும். முறைப்படி வருபவர்களுக்கு
இந்தப் பயிற்சியில் ஈடுபடும் போது மனம்
தானாக ஒன்றில் குவிந்து படிப்படியாக அதில்
தன்னைக் கரைத்து இழந்து விடுவதால், இது
லய யோகம் என்ற பெயரைப் பெற்றது. சாதகர்
விரைவில் சமாதியில் லயித்து இருப்பதால்
இது லய யோகம்.

யோனி முத்திரை -
முடிந்த ஆசனத்தைப் போட்டு நிமிர்ந்து
உட்காரவும்.
உள்ளே மூச்சை இழுத்துக் கொள்ளவும்.
இரண்டு கட்டை விரல்களால் காதுகளை
அடைத்து, இரண்டு சுட்டு விரல்களால்
மூடியிருக்கும் கண் இமைகளைத்
தொட்டு,இரண்டு நடுவிரல்களால் இரண்டு
பக்க மூக்கையும் அழுத்தி அடைத்துக்
கொண்டு, மீதி விரல்களால் வாயை
மூடிக் கொண்டு கும்பகம் செய்யவும்.
கும்பகம் முடிந்த உடன் மெதுவாக மூச்சை
வெளியே விடவும்.

எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருப்பதால்
உள்ளே ஓசை கேட்கும் இதை அநாஹத ஓசை
என்பார்கள். இதை வலது காதில் உற்று
கேட்பது போல பாவித்துக் கேட்க வேண்டும்.
இது பிரும்மச்சாரியம் காக்க உதவும்.

பிரும்மச்சாரியம் இந்த முத்திரையைப் பழக
ஒத்துழைப்ப தோடு, மிக எளிதில் மனம் சமாதி
நிலையைப் பெறஉதவும். பழக
கஷ்டமானாலும் வெற்றி நிச்சயம். விழிப்பு
நிலை, கனவு நிலை, தூக்க நிலை இந்த
மூன்றையும் தாண்டியதும், இந்த மூன்றின்
மொத்த நிலையாகவும் சொல்லப்படுவது
துரியம் என்கிற நான்காவது நிலை.
அதாவது,

விழிப்பு நிலை - ''
கனவு நிலை - ''
தூக்க நிலை - 'ம்'

இந்த மூன்றின் மொத்தமான துரீய நிலை 'ஓம்'.

ஓம் என்ற பிரணவ ஒலி எல்லா
ஜீவராசிகளுக்குள்ளும் கேட்டுக் கொண்டுதான்
இருக்கிறது. மற்ற உயிர்களுக்கு அதை
அறியும் ஞானமில்லை. ஆனால் மனிதனோ
புலன் மயக்கத்தாலும் மலக் குற்றங்களாலும்
அதை அறியாதவனாக இருக்கிறான்.

அவனுக்குள் உடல் மற்றும் மன வேலைகளைச்
செய்து கொண்டிருக்கும் வாயு வாகிய சக்தி,
பத்து பிராணன்களாகச் சலித்துக்
கொண்டிருப்பதால், பத்து விதமான ஓசைகள்
அவனுக்குள் எழுந்து கொண்டே இருக்கின்றன.
அவற்றின் ஒட்டு மொத்தமான ஓசை ஓம் என்று
அவனுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

கடல் அலைகள், நீர் வீழ்ச்சி, வனங்களின்
சப்தங்களை தூர நின்று கேட்டால் எப்படி
கேட்குமோ அதே போல இரண்டு
காதுகளையும் அடைத்துக் கொண்டு உற்றுக்
கவனியுங்கள், அதே சப்தம் உங்களுக்குள்ளும்
கேட்கும். இந்த ஓம் சாதகனின் ஒவ்வொரு
ஆதாரத்தைத் தொடுகையிலும் விதவித
ஒலிகள் கேட்கும். லய யோகத்தில் கண், காது,
மூக்கு, வாய் எல்லாம் அடைக்கப் படுவதால்
வெளியுலகத்தில் இருந்து துண்டிக்கப்படுகின்றோம்.

ஆகவே எந்த விதப் புறத்தடைகளும்
ஏற்படாது. கும்பகம் மனதைக் கட்டுப்
படுத்தும். புலன்கள் புற விஷயங்களில்
இருந்து பிரிக்கப்படுவதால் பிரித்யாஹாரம்
ஏற்படுகிறது. எனவே மனம் முழுவதுமாக
உள்நோக்கி திருப்பப்படுகிறது. உள்
ஒலியையே கேட்கத் தொடங்குவதால் தாரணை
என்கிற ஒருமுகப்பட்ட தன்மையும்
ஏற்படுகிறது. இதையே தொடர்ந்து
பழகுவதால் தியானமும், புலன் வழி ஓடாத
மனமும் கும்பகத்தால் உள்ளேயே
நிறுத்தப்படுவதால் விரைவில் சமாதியும்
சித்திக்கிறது. மூச்சு இழுத்தல் மூச்சு
விடுதல் என்ற சுவாசமின்றி கும்பகம்
பழகுவதால் விரைவில் அது கேவல
கும்பகமாக சித்தி பெற்று விடுகிறது.இது
அற்புத சித்திகளைத் தரவல்லது. ஆரம்பம்
முதல் முடிவு வரை யோனி முத்திரையாக
கும்பகமே பயிற்சி செய்யப்படுவதால்
குண்டலினி விரைவில் எழும்புகிறது.

புலன்கள் கூர்மை அடைகின்றன. அதீத
புலனாற்றல் வாய்க்கிறது. இந்த முத்திரையை
நீண்ட நேரம் செய்ய முடியாது.முடிந்த வரை
இருந்து விட்டு, பின்னர் அதை அவிழ்த்து
விட்டு, நன்றாக சுவாசித்து தெம்பு வந்த
உடன் மீண்டும் செய்யலாம். மூல பந்தம்
இந்தப் பயிற்சியில் அவசியம். அப்போதுதான்
பிராணனும் அபானனும் கலந்து
மஹாவாயுவாகி வேறு வழி இல்லாமல்
சுஷும்ணா நாடியைத் திறந்து கொண்டு
உள்ளே நுழையும். உடலின் துளைகள்
எல்லாம் அடைக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக
பிராணன் சிறைப்படுத்தப் பட்டு குறிப்பிட்ட
வழியில் செலுத்தப் படுவதால், இது ஹத
யோகத்தின் முறையாகிறது. சரியாகச் செய்யா
விட்டால் கேடு தரும். இரத்த அழுத்தம், இதய
நோய் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.

வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க
வளமுடன்.

No comments:

Post a Comment