Tuesday 29 August 2017

விதியையே மாற்றும் பதிகங்கள்

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

சிவபெருமானின் பெருமைகளை பாடும் திருமுறைகளின் பெருமை அளவிடற்கரியது. விதியையே மாற்ற வல்லது. திருமுறைகளை பற்றிய அறிவும் ஞானமும் உங்களுக்கு இருக்கிறது என்றாலே உங்களால் விதியையே மாற்ற முடியும் என்று தான் அர்த்தம். இதில் திருஞானசம்பந்தர் பாடிய இசைப்பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று திருமுறைகளும் திருநாவுக்கரசர் பாடியவை. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர் பாடியவற்றை திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர் பாடல்களை தேவாரம் என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல்களைத்திருப்பாட்டுஎன்றும் கூறுவர்.



மேற்கூறிய திருமுகைகளில் இல்லாத தீர்வே கிடையாது. மனிதவாழ்க்கையில் மனிதன் வினைப்பயனால் அனுபவிக்கக்கூடிய நோய், வறுமை, புத்திர பேறின்மை உள்ளிட்ட அத்தனை துன்பங்களுக்கும் இந்த திருமுறைகளில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. அதவும் சம்பந்தரின் திருக்கடைக்காப்பில் பல இடங்களில் அந்தந்த பதிகங்களின் பயன்கள் இறுதியில் விவரிக்கப்பட்டிருக்கும். மேலும் பல இடங்களில்ஆணை நமதேஎன்று இறைவனை பதிகத்தின் பலனுக்கு சாட்சியாக இழுத்துவிட்டுவிட்டு போய்விடுவார் ஆளுடையப்பிள்ளை. (என்ன கருணை நம் மீது அந்தக் குழந்தைக்கு!)

ஆகஇப்படி அருமருந்தாக திகழ்ந்து வரும் பதிகங்களை தினசரி ஓதுதல் அவசியம். குளிப்பது எப்படி தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறதோ அதே போல, சில நிமிடங்கள் செலவிட்டு இந்த பதிகங்களை ஓதுவதும் நமது அன்றாட நடவடிக்கையாக இருக்கவேண்டும்.

ஆனால், அங்கு தான் பிரச்சனையேஇத்தனை பதிகங்கள் இருக்கிறதேஇதில் எதை படிப்பது என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். ஆளுடையப்பிள்ளை அதற்கும் ஒரு அருமையான தீர்வை சொல்லியிருக்கிறார்.



திருஞானசம்பந்தர் அவர்களின் தந்தையார் சிவபாதவிருதயர் தமது பூஜை காலத்தில் நாள்தோறும் தனது மகன் எழுதிய அனைத்து பதிகங்களையும் ஓதும் நியமமுடையவராய் இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் ஆளுடையப்பிள்ளை கோவில் கோவிலாக சென்று பதிகங்கள் பாடிவந்தமையால் ஓதவேண்டிய பதிகங்கள் அதிகரித்துக்கொண்டே வந்தன. எனவே தனது மகனிடம், “அனைத்து பதிகங்களையும் ஓதுவதற்கு சிரமமாக உள்ளது சம்பந்தாஎன்று வருத்தத்துடன் கூறினார். தனது தந்தைக்காகதிருவெழுக் கூற்றிருக்கை என்ற ஒரு பதிகத்தை திருவாய் மலர்ந்தருளினார். . ”இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்என்று கூறினார். இந்த பதிகம் அனைத்து பேறுகளையும் ஒருங்கே அளிக்கும் அற்புத பதிகமாகும்.

இவ்வுண்மையை சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தில்,

செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளான்மொழி மாற்றும்
வந்தசொற் சீர்மா லைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம் தமிழிருக்குக் குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு. (276)

நாலடி மேல்வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூலஇலக்கிய மாக எல்லாப் பொருள் களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப் பாடினார் ஞானசம் பந்தர். (277)

என்று அருளிச் செய்திருப்பதில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

இப்பதிகத்தை நாள்தோறும் இடைவிடாமல் மன உறுதியுடன் (உறைப்புடன்) பாராயணம் செய்து வருபவர்களுக்கு மறுபிறப்பு ஏற்படுவதில்லை என்றும், இவ்வுலகில் பெற வேண்டிய அனைத்தையும் பெற்று சிவனுலகு எய்துவர் என்றும் இதன்பயன் கூறப்படுகிறது. இப்பதிகத்தை சிவபெருமானை முன்னிலைப்படுத்தியும், இறைவனின் எண்ணற்ற ஆற்றல்களைச் சிறப்பித்தும் பாடியுள்ளார் சம்பந்தர். சீர்காழி திருத்தலத்தின் பன்னிரு திருப்பெயர்களும் இப்பதிகத்தினுள் இடம் பெற்றிருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு.


சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதி!
எழுகூற்றிருக்கை

ஓருரு வாயினை மானாங் காரத தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை

ஓரா னீழ லொண்கழ லிரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்

நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானில மஞ்சக்

கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா மந்தக் கரணம்
முக்குண மிருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து

நான்மறை யோதி யைவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை

இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை

வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை

ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும்

மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையி னொருமையு மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணிய னறியும்

அனைய தன்மையை யாதலி னின்னை
நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.

No comments:

Post a Comment