Monday 23 October 2017

ஸ்ரீனிவாச பெருமான் நம் முன் தோன்றுவாரோ !!!!!!

ஒரு முறை கேரளாவில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு இரவு உணவு இல்லை. ஆனால் அன்று எனப்பார்த்து அளவிலாப் பசி எடுக்க என்ன செய்வது என்று எண்ணி “யான் இவ்வாறு வருந்துவதாலுண்டாகும் பழி எல்லா உயிர்களுக்கும் படியளந்து காக்கின்ற ஸ்ரீ நாராயணரைச் சேரட்டும்” எனக்கூறி படுத்துக் கொண்டார். இப்படி ஒரு பக்தர் பசியில் வாடுவதைக் கண்டும் தனக்கே பழி அனைத்தும் என்று உரைத்தது கண்டும் ஸ்ரீ நாராயணப் பெருமாள் ஒரு அதிசயம் நடத்தினார். ஸ்ரீ நாராயணர் ஒரு வைணவ அந்தணராக வந்து இங்கு பசியால் பட்டிணியாகப் படுத்திருக்கும் பக்தன் யார் என்று பலமுறை உரக்கக்  கூற சுவாமிகள் வெளியே வந்து அடியேன் தான் என்றார்கள். அவர் அன்னமளிக்க சுவாமிகள் அதை உண்டு பசி தீர்த்தார்கள். தன்னுடன் இருந்த ஒருவருக்கும் உணவு கொடுத்தார்கள். பசி ஆறிய பின் ஆமாம் உங்கள் பெயர் என்ன என்று உணவு கொடுத்த அந்தணரைக் கேட்க எமது பெயர் சீனிவாசன் என்று பதில் உரைத்தார். நீ சொன்ன ஒரு வார்த்தை எனது மனதை உறுத்தியதால் இந்த உணவு கொண்டு வந்தேன். சரி வருகின்றேன் என்று சொல்லி மறைந்தார். வந்தது அந்த ஸ்ரீஹரி நாராயணே என்று உணர்ந்த சுவாமிகள் ஒரு வெண்பா எழுதினார்கள்.
                                            
 ”குருவனப்புக் கண்டறியார் கொச்சிவள நாட்டின்
பெருவனத்தி லென்னை யன்பிற்பேணி – யருமையுட
நன்னங் கொடுக்கவந்த வந்தணனே யந்தவண்ணஞ்
சொன்னங் கொடுக்க வொண்ணா தோ”

பக்தர்களுக்கு சோதனை வரும் போது இறைவன் உடனே ஓடோடி வந்து காப்பான் எனும் வாக்கு இதன் மூலம் மெய்யாகின்றது. நாராயணா சோறு கொடு என்று சுவாமிகள் கேட்கவில்லை. இப்படி ஒரு உயிர் பட்டிணியால் வாடினால் அதைக் காக்கும் பொறுப்பு ஸ்ரீஹரி நாராயணனுடையதாகும். படைத்தல் காத்தல் அழித்தலில் விஷ்னுவுக்கு காக்கும் தொழில். ஒரு உயிர் நடுக்காட்டில் உணவில்லாமல் தவிக்கும் போது அந்த உயிரைக் காக்கும் கடமை ஸ்ரீஹரியையே சார்வதால் நம் சுவாமிகள் நீ காக்காமல் விட்டாய் எனும் பழி உனக்குதான் சேரும் என்று கூற பெருமாள் உடனே வந்து உணவிட்டார். அந்த அளவு சுவாமிகளின் பக்திக்கும் வைராக்கியத்திற்கும் வலிமை உண்டு. இல்லாத பாவங்களைச் செய்துவிட்டு ஒரு ரூபாய்க்கு கற்பூரம் வாங்கி கொழுத்தி கடவுளே என்னைக் காப்பது உன் கடமை உடனே வா என்றால் கடவுள் வருவாரா? எனவே குரு நாதர்களின் வழியில் சென்று நாமும் உண்மை பக்தியில் இருந்தால் நாம் ஒரு அடி எடுத்து வைக்க கடவுள் நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார். நன்றி!

கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம், அந்தியூர்.

No comments:

Post a Comment