Sunday 22 October 2017

ஜீவ நாடி அதிசயம்-உண்மைச்சம்பவம்

ஜீவ நாடி அதிசயம்-உண்மைச்சம்பவம்

முழுமையாக 100% முருகன் மீது நம்பிக்கை வைத்து ஜீவ நாடி கேட்க வருபவர்களுக்கு மிகப்பெரிய அதிசய மாற்றங்கள் நடந்து வருவதை அனுபவத்தில் பார்த்து வருகின்றோம். நாடி ஜோதிடம் என்றாலே ஏமாற்று வேலை என்பது பலரின் கசப்பான அனுபவம். ஆனால் ஜீவ நாடியை தாங்கள் பார்த்து சலித்துப் போன நாடி சோதிடத்தோடு ஒப்பிட்டு  தவறாக நினைக்காமல் முருகனே உரைக்கும் வாக்கு என்று நினைப்பவர்கள் மிக மிகக் குறைவுதான். கலியுகத்தில் இறைவன் உண்டு என்று ஏற்றுக் கொள்வதே அபூர்வமாகும் போது ஜீவ நாடியில் இறைவன் வாக்கா? நிச்சயம் இருக்கவே இருக்காது என்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். அப்படி அவ நம்பிக்கையோடு ஜீவ நாடி பார்க்க வருவது தேவையில்லாத கால விரையம். இன்னும் சிலர் அவ நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்டுவிட்டு முருகப்பெருமான் உரைத்த வாக்குகள் பலிக்கத் துவங்கியவுடன் நம்பிக்கை கைவரப்பெறுகின்றார்கள். அப்படி ஒரு சம்பவத்தையே இப்போது நாம் பார்க்கப்போகின்றோம்.
ஒரு பெண்மணி ஜீவ நாடி கேட்க வந்து அமர்ந்தார். அவருக்குப் பின்வருமறு ஜீவ நாடியில் முருகப்பெருமான் அருள்வாக்கு உரைத்தார்.

ஜீவ நாடி: கட்டிடங்கள் பல கட்டிய மங்கை
பெண்: ஆம் சுவாமி
ஜீவ நாடி: கட்டிடக் குடக்கூலியாலே ஜீவனம்
பெண்: ஆம் சுவாமி. கட்டிட வாடகைதான் எனக்கு ஜீவனம்
ஜீவ நாடி: குடியிருக்கும் வீட்டில் ஒரு அம்மன் உண்டு
பெண்: ஆம் சுவாமி சமயபுரம் மாரியம்மன்.
ஜீவ நாடி: அந்த அம்மனின் பக்தை இன்னவள்
பெண்: உண்மை
ஜீவ நாடி: மகள் ஒருவள் உண்டு ஆனால் அன்னவளே இன்று எதிரி
பெண்: சத்யமான உண்மை சுவாமி
ஜீவ நாடி: மகளோடு சண்டை சொத்து பிரிவினை உண்டே
பெண்: ஏற்கனவே பிரித்துக் கொடுத்துவிட்டேன் சுவாமி
ஜீவ நாடி: குடியிருக்கும் வீட்டில் விவசாயம் செய்யும் அளவு தண்ணீர் உண்டு
பெண்: ஆம் சுவாமி ஏராளமான தண்ணீர் இருக்கின்றது. தேவைக்கு மேல்
ஜீவ நாடி: ஆனால் குடக்கூலி கட்டிடத்தில் தண்ணீர் பஞ்சம்
பெண்: ஆம் சுவாமி
ஜீவ நாடி: புதிய கிணறு அமைக்க (போர்வெல்) சித்தமா?
பெண்: அதற்கு உத்தரவு கேட்கதான் வந்துள்ளேன் சுவாமி
ஜீவ நாடி: வாகனங்கள் நிறுத்துமிடம் சதுரம், சதுரத்தின் மையத்தில் கிழக்கும் மேற்கும் நீர் உண்டு
பெண்: 100% சரி அங்குதான் நீரோட்டம் பார்ப்பவர்கள் அச்சு அடித்துள்ளார்கள் சுவாமி அங்கு போர் போடலாமா?
ஜீவ நாடி: போடலாம்…ஆனால் நேரம் சரியில்லை…தண்ணீர் வரும்…தடையும் வரும்…
பெண்: நான் என்ன செய்வது சுவாமி
ஜீவ நாடி: வழக்கமாக நீ வழிபடும் அம்மனிடம் பூ கேட்பாயே இதற்கு கேட்கவில்லையா?
பெண்: இல்லை சுவாமி
ஜீவ நாடி: சரி அந்த அம்மன் சொல்கின்றார் உத்தரவு இல்லை என்று. எனவே அந்த அம்மனை வணங்கி பூ உத்தரவு கேட்டு கிணறு அமைத்துக் கொள்…
பெண்: சரி
ஜீவ நாடி: உத்தரவு இல்லை என்பதால் தடை வரும் காவல்துறை மூலம் வரலாம், தண்ணீர் ஆகாமல் போகலாம் அப்படியே ஆனாலும் கிணறு அமைக்க வரும் வண்டி பழுதாகலாம்…மொத்தத்தில் சிக்கல் உண்டு…கவனம்.
பெண்: சரி
ஜீவ நாடி: உடல் நிலையும் சரியில்லையே…இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பு உண்டு…
பெண்: 100% உண்மை சுவாமி
ஜீவ நாடி: மருந்து எடு ஆயுள் உண்டு பயமில்லை ஆனால் கீறல் வேண்டாம்
பெண்: ஆம் சுவாமி..மருந்து எடுத்து வருகின்றேன்…மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள் எனக்கு விருப்பம் இல்லை..
ஜீவ நாடி: மிகவும் நல்லது கீறல் செய்தால் உனக்கு ஆயுள் பங்கம் வரலாம் எனவே வேண்டாம்…
பெண்: அப்படித்தான் மருத்துவர்களும் சொல்கின்றார்கள் சுவாமி. எப்படியோ எனக்கு நீயே துணை இருக்க வேண்டும்.
ஜீவ நாடி: நிச்சயம் ஆசிர்வாதம்…

இப்படி முருகப்பெருமான் ஜீவ நாடியிலும் அந்த பெண்மணியும் உரையாடல் செய்தார்கள். அதன் பின்பு அந்தப் பெண்மணி விடைபெற்றார். சில நாட்கள் கழித்து தான் வாடகைக்கு விட்டிருக்கும் கட்டிடத்தில் தண்னீர் பஞ்சம் அதிகரிக்கவே உடன் இருப்பவர்கள் அவசரப்படுத்தவும் அம்மனிடம் உத்தரவு கேட்காமலும் முருகப்பெருமான் உரைத்ததை மறந்தும் போர் போட ஆயத்தம் ஆனார் அந்தப் பெண்மணி. ஒரு வார காலம் முயற்சி செய்தும் போர் வண்டி வரவே இல்லை. ஒரு வழியாய் பெரும் முயற்சியின் பின் வண்டி வந்து சேர்ந்தது. சரி போர் போட்டுவிடலாம் என்று முயற்சி செய்கையில் காவல்துறை மூலம் சில தடைகள் வந்தது. அந்த தடைகளையும் முறியடித்து பின் போர் போட ஆரம்பம் செய்யப்பட்டது. நல்ல தண்னீரும் வந்தது. மிகுந்த மகிழ்ச்சியில்  இன்னும் ஆழம் போடலாம் என்று வண்டிக்காரர் சொல்ல மீண்டும் ஆழமாகத் துளையிட துளையிட வந்த தண்னீர் நான்கு கட்டிடம் தள்ளி இருக்கும் பக்கத்து கட்டிடத்தின் போர்வெல்லில் நீர் சென்றுவிட்டது. அதிர்ச்சியடைந்த பெண்மணி வண்டிக்காரரிடம் சண்டையிட்டார். ஏதோ சமாளித்த வண்டிக்காரர் ஒரு லட்சம் ரொக்கம் பெற்றுக் கொண்டு மேற்கொண்டு மோட்டார் போட்டால் ஒரு இஞ்ச் தண்ணீர் நிச்சயம் வரும் என்றார். அதையும் நம்பி மேற்கொண்டு சில லட்சம் செலவு செய்து மோட்டர் போட்டு சுவிட்சைப் போட தண்ணீர் வரவில்லை வெறும் காற்றுதான் வந்தது. முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தபடி அப்படியே 100% பலித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி கண்ணீர் விட்டு அழுதார். இது போல் முதன் முதலாக ஜீவ நாடி கேட்க வருபவர்கள் பெரும்பாலும் ஒரு சாதாரண நிலையிலேயே அனுகுகின்றார்கள். முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்து அது அனைத்தும் தனது வாழ் நாளில் நடக்கும் போதுதான் உண்மையை உணர்கின்றார்கள். பின்பு நிரந்தர பக்தர்களாக மாறி ஜீவ நாடியில் உத்தரவு கேட்காமல் எதையும் செய்வதில்லை எனும் நிலைக்கு வந்து இறுதியில் முருக பக்தர்களாகவே மாறிவிடுகின்றார்கள். அந்த அளவு முருகப்பெருமானும் சித்தர்களும் கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு திருவிளையாடல்களை நடத்தி வருகின்றார்கள் என்பது 100% சத்தியமாகும்.

No comments:

Post a Comment