Thursday 19 October 2017

இதிகாசக்கவிதை


பாரதம், ராமாயணம் என்பது என்ன ?

படித்துதான் பாருங்களேன் !!

மண்ணால் போரெனில் பாரதம் ....
பெண்ணால் போரெனில் ராமாயணம் ....

சகுனி குழப்பினால் பாரதம்....
கூனி குழப்பினால் ராமாயணம் ....

பெண் ஐந்தை மணந்தால் பாரதம் ...
பத்தை (10) மறுத்ததால் ராமாயணம் ....

அனுமன் கொடிதனில் பறந்தால் பாரதம் ...
அனுமன் கடல்தாண்டி பறந்தால் ராமாயணம் ....

இறை இப்புவி இறங்கி சாரதியானால் பாரதம் ...
இறை இப்புவி இறங்கி சத்திரியனானால் ராமாயணம் ....

மேய்த்தது கோ எனில் பாரதம்..
மேன்மை கோ எனில் ராமாயணம் ...

பகடையால் பகையெனில் பாரதம்....
பாவையால் பகையெனில் ராமாயணம் ........

பிறன்மனைவியை அவமதித்ததால் பாரதம்...
பிறன்மனைவியை அபகரித்ததால் ராமாயணம் ....

அவதாரம் புனிதனாய் வலம்வந்தது பாரதம் ....
அவதாரம் மனிதனாய் வலம்வந்தது ராமாயணம் ...

இறைவன் கீதை தந்தால் பாரதம் ...
இறைவன் சீதை பெற்றால் ராமாயணம்....

நாயகியை தொட்டு சேலைஇழுத்தால் பாரதம்...
நாயகியை தொடாது சோலையில் வைத்தால்
ராமாயணம் .....

ஐவருக்கு ஒருத்தியெனில் பாரதம் ....
ஒருவருக்கு ஒருத்தியெனில் ராமாயணம் ....

மறைந்திருந்து அம்பெய்யகற்றால் பாரதம் ...
மறைந்திருந்து அம்பெய்துகொன்றால் ராமாயணம்...

வில்லால் அடித்த வீரனுக்கு விவாகமெனில் பாரதம் ...
வில்லை ஒடித்த வீரனுக்கு விவாகமெனில்
ராமாயணம் ....

கற்புநெறிக்காக பெண் கண்ணை கட்டினால் பாரதம்...
கற்புநெறிக்காக பெண் கனலில் இறங்கினால் ராமாயணம்....

கதையில் குருடன் அரசன் எனில் பாரதம்....
கதையை எழுதியது திருடன் எனில் ராமாயணம் ...

அரக்கினால் மதில் ஆன அரண்மனை எரிந்தால்
பாரதம் ....
அரக்கியின் மதி கோணலால் அரண்மனை எரிந்தால்
ராமாயணம் ....

அரங்கனின் செய்கையால் அபலைக்குஅபயமெனில்
பாரதம் ....
குரங்கனின் செய்தியால் அபலைக்கு அபயமெனில்
ராமாயணம்....

மண்ணின் மயக்கத்தினால் பிளவெனில் பாரதம் ...
மானின் மயக்கத்தினால் பிரிவெனில் ராமாயணம்

உறவுக்குள் சண்டையெனில் பாரதம்...
உறவுக்காக சண்டையெனில் ராமாயணம் ..

No comments:

Post a Comment