Sunday 22 October 2017

முருகர் மானிட வடிவில் வருவாரா !!!!!

கோவையில் கௌமார மடாலயம் ஸ்தாபித்தவர் தவத்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்கள். ஒரு முறை தவத்திரு. இராமானந்த சுவாமிகள் கனவில் அவர் வழிபடு கடவுள் தோன்றி திருச்செந்தூர் செல் என்று உரைக்க அடுத்த நாளே திருச்செந்தூர் சென்றுவிட்டார் சுவாமிகள். அங்கே சுவாமிகளுக்கு முன் பின் யாரையும் தெரியாது அந்த செந்தில் முருகனைத் தவிர. சுப்பையா எனும் நபர் வந்து சுவாமிகளுக்கு ஆலய தரிசனம் செய்வித்து தங்க இடம் கொடுத்து தாமும் அவருடன் தங்கினார். இரவில் உறக்கம் விழிக்க சுவாமிகள் கண் விழித்துப் பார்த்தவுடன் சுப்பையாவைக் காணவில்லை. பின் எங்கும் அவரைக் காண இயலவில்லை. என்னே அதிசயம் என்று சொல்லி சுவாமிகள் சில நாட்கள் திருச்செந்தூரிலேயே தங்கி இருந்தார்கள். ஒரு நாள் சுவாமிகள் தன்னை உலக மாயையில் இருந்து விடுபட வழி கூறுமாறு கேட்க முருகன் ஒரு சைவர் வடிவில் வந்து பதில் அளித்தார். தாங்கள் யார் என சுவாமிகள் கேட்க நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கின்றேன் என் பெயர் சுப்பையா பிள்ளை என்று கூறி மறைந்தார். மிகவும் மகிழ்ந்த சுவாமிகள் அன்று வந்ததும் இன்று வந்ததும் திருச்செந்தூர் முருகப்பெருமானே என்று மகிழ்ந்து திருச்செந்தூரை விட்டு அகலாமல் இன்னும் சில காலம் அங்கேயே இருந்தார்கள். சிலகாலம் கழித்து கோவையில் இருந்து உறவினர்கள் சுவாமிகளைத் தேடிக் கொண்டு திருச்செந்தூர் வந்து மீண்டும் சுவாமிகளை கோவைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இப்போதும் முருகப்பெருமான் இதுபோல் உண்மையான அடியார்களுக்கு பல திருவிளையாடல்களை நடத்தி வருகின்றார். அதற்கு குருவருள் தேவை. ஒரு குருவிற்கு உண்மையாகச் சேவை செய்தால் முருகன் தானாகவே நம்மை நோக்கி வந்து அதிசயங்கள் நடத்துவார். பக்தி செய்பவர்களை பாதை மாற்ற பலர் எப்போதும் முயற்சித்து வருவதாலும், ஊடகங்கள் பக்தர்களைத் தவறாக சித்தரிப்பதாலும், ஒரு சில போலிகள் செய்யும் தவறுகளாலும் பக்தர்களுக்கு சரியான பாதை புலப்படுவதில்லை. பக்குவம் வந்துவிட்டால் அந்த இறைவனே குருவாக வந்து ஆட்கொள்வார். ஆம் தவத்திரு. இராமானந்த சுவாமிகளுக்கு திருச்செந்தூரில் சுப்பையா வடிவில் முருகப்பெருமான் காட்சி கிடைத்த சில காலங்களிலேயே பழனியில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் கிடைத்தது. அன்பான வாசகர்கள் முருகா எனும் நாமத்தையே சொல்லி உத்தூளமாய் நீரில் குழைக்காமல் திரு நீறு பூசி முருகனது உண்மை அடியார்களின் வரலாறுகளை உணர்ந்து தொடர்ந்து துதித்து வந்தால் ஒரு சற்குரு நாதர் கிடைப்பார் என்பது திண்ணம். தவத்திரு. இராமானந்த சுவாமிகளின் குரு பக்தி மற்றும் முருகன் அருளால்தான் அவர் 99 வயது வாழ்ந்தும் (சற்றேறக்குறைய 100 வயது) அவர் ஸ்தபித்த கௌமார மடம் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேராடி இருப்பதும் சுவாமிகளின் தவவலிமையால்தான்

No comments:

Post a Comment