Tuesday 21 July 2020

சிகண்டி பூரணம்

*உலகத்தின் உன்னதமான கோவில் மணி சிகண்டி* *மணி என அழைக்கப்படும் சிதம்பரம்* *நடராசர் கோவிலில் உள்ளது தான்* ‌ *இந்த ஒலியை ஒரு* *நிமிடம் கேட்டால் நமது* *ஆயுளில் 12 விநாடிகள் கூட்டப்படுகிறது*                   *ஓம் நமசிவாய*🙏🙏🙏


பெருங் கருணை கொண்டு சித்த மூர்த்திகள் சாதாரண ஜீவன்களும் வள்ளலார் பெருமான் போன்ற மூர்த்திகள் பெற்ற இறை நிலையைப் பெறும் வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றே மணி ஓசையின் மூலம் இறைவனை அடையும் உத்தம இறை மார்கமாகும்.

வள்ளலார் பெருமான் தான் நிறுவிய சத்திய ஞான சபையில், ”இதோ வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு ஒரு அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார். மீண்டும் அவர் வெளி வராததைக் கண்டு கதவைத் திறந்து பார்த்தபோது அறையினுள் அவரைக் காண முடியவில்லை. ”வருகிறேன்,” என்று சொல்லிச் சென்றவர் மீண்டும் வராமல் இருப்பாரா? சத்திய ஞானிகளின் வாக்குப் பொய்க்குமா?

உண்மையில் அறையினுள் சென்ற வள்ளலார் பெருமான் உடனே திரும்பி வந்து விட்டார். ஆனால், தன்னுடைய மனித உடலை விட்டு விட்டு சத்திய ஜோதியாகத் திரும்பி வந்ததால், ஞான ஜோதியாய்ப் பரிமாணம் கொண்டு பிரகாசித்ததால் அவரை இன்று வரை சாதாரண மனிதர்கள் யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

சித்தர்கள் அருளும் மணி ஓசை வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் இயற்றுவதன் மூலம் நீங்களே அருட் பிரகாச வள்ளலாரைப் போன்ற ஒளி உடம்பை எளிமையாகப் பெற முடியும் என்பது திண்ணம். 

சிவபெருமானின் நெற்றிக் கண் ஒளியிலிருந்து தோன்றிய முருகப் பெருமானை தன் இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்ட வள்ளலார் பெருமானின் புனித உடல் சிதம்பரேசனின் பெருங் கருணையால் ஜோதி பிழம்பாக உருக் கொண்டு மீண்டும் எம்பெருமானின் நெற்றிக் கண் சுடரில் ஒன்றி பூரணம் கொண்டது.

எம்பெருமானின் பேரருட் கடாட்சத்தால் மீண்டும் வள்ளலார் அருட் பெருஞ் சோதியாக அனைவர் உள்ளத்திலும் எழுந்தருளினார். மக்களின் இதயத் தடாகத்தில் முகிழ்க்கும் பக்தி தாமரையை மலர வைக்கும் ஆதவன் அருட்பெருஞ்சோதி வடிவான சத்திய ஞான பராபரன் வள்ளலாரே. இதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

எம்பெருமானின் இப்பேரருள் கடாட்சத்தையே வள்ளலார் பெருமான் தன் வேத மந்திரமாக,

     அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
     தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி

என்று முழங்கி வந்தார்கள். ”இதோ வருகிறேன்,” என்று வாக்களித்தபடி வள்ளலார் மீண்டும் இப்பூவுலகில் எழுந்தருளி உள்ளார்கள். இந்த சத்தியத்தை உணர்ந்து தங்கள் பக்தியை வளர்ப்பவர்கள் நிச்சயமாக வள்ளலார் பெருமானை அருட்பெருஞ்சோதியாக தங்கள் இதய மண்டபத்தில் கண்டுணர முடியும்.

இவ்வாறு வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும். உலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.

ஆன்மீக அனுபவம் என்பது ஒவ்வொரு ஜீவனைப் பொறுத்தும் மாறுபாட்டை உடையது. உலகில் பெரும்பாலான இறையடியார்கள் ஒரு சில தினங்கள் கோயில்களுக்குச் சென்று வந்து விட்டாலோ, ஒன்றிரண்டு மந்திரங்களை ஓதி விட்டாலோ தாங்கள் ஆன்மீகத்தின் எல்லைக்கே சென்று விட்டதாக நினைத்து அரை குறையான ஆன்மீக அனுபவத்துடன் நின்று விடுகிறார்கள். எனவே சித்தர்கள் ஒரு இறையடியார் தான் ஆன்மீகத்தில் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளோம் என்பதை தாங்களே உணர்ந்து கொள்ளும் சில எளிய அளவுகோல் முறைகளை அறிவித்துள்ளார்கள்.

உதாரணமாக, ஒருவர் தன்னுடைய உள்ளங்கையைப் பார்ப்பது போல் என்று தன் முதுகைப் பார்க்க ஆரம்பிக்கிறாரோ அன்று அவர் ஆன்மீகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கத் தகுதி பெறுகிறார் என்பது சித்தர்கள் வாக்கு. அதே போல் திருஅண்ணாலையைப் பார்த்தால் எப்போது அது வேறும் கல் பாறையாகக் காட்சி தராமல் ஒளி வீசும் தங்க மலையாக, மாணிக்க மலையாகத் தோன்றுகிறதோ அப்போது ஆன்மீகத்தில் முதல் வகுப்பில் சேரத் தகுதி உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

அதே போல சிதம்பரத்தில் ஓசை எழுப்பும் சிகண்டி பூர்ணம் மணி பெரும்பாலான பக்தர்களுக்கு இரண்டு மணியாகத் தோற்றமளிக்கும். என்று இந்த இரண்டு மணிகளும் ஒரே மணியாகத் தோன்றுகிறதோ அன்று ஆன்மீகத்தில் முதல் பாடம் பயில தகுதி பெற்றதாகக் கணக்கில் கொள்ளலாம்.

சிகண்டி பூர்ணம் மணியை ஒவ்வொரு கோணத்தில் நோக்கினால் ஒவ்வொரு விதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் தன்மை உடையது. உதாரணமாக, சிகண்டி பூர்ணம் எழுந்தருளி இருக்கும் திசை தென்கிழக்கு. அது அக்னி பகவானுக்கு உரியது.

வெப்பம், ஒளி என்ற இரண்டு இணை பிரியா அம்சங்களுடன் விளங்குவதே அக்னி என்பது நீங்கள் அறிந்ததே. இதை அக்னி பகவானுக்கு உரிய இரு நாக்குகளாக பெரியோர்கள் வர்ணிக்கிறார்கள். வாலாட்டி, சாலாட்டி என்ற அக்னி பகவானின் இரு நாக்குகள் இந்த ஒளி, உஷ்ண தத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

இந்த தத்துவத்தால் சாதாரண மனிதனுக்கு என்ன பயன் என்று நீங்கள் கருதலாம். குரு மங்கள கந்தர்வ லோகத்திலிருந்து பூலோக மக்களைக் கரையேற்றுவதற்காக பெருங்கருணயுடன் வந்த சத்குருமார்களை ”வாத்தியார்” என்று அழைக்கிறோம். வாக்கு+தீ+யார் என்பதே வாத்தியார் என்று அழைக்கப்படுகிறது. யாருடைய வாக்கில் அக்னி பகவானைப் போன்ற வாலாட்டி, சாலாட்டி சக்திகள் இணைந்து அது உன்னுடைய கர்ம வினைகளைக் களைந்து இறை உணர்வை ஊட்டுகிறதோ அவரே வாத்தியார் ஆவார்.  

இவ்வாறு இறை மார்கத்தில் முன்னேற நினைக்கும் அடியார்கள் தங்கள் வாக்கில் தீயையும் தெளிவையும் பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அளிப்பதே சிகண்டி பூர்ணமாகும்.

ஒளி வெப்பம் என்ற இரண்டு இணை பிரியா தத்துவத்தைப் போல வெப்பமும் குளிர்ச்சியும் ஒன்றை ஒன்று பிரிந்து நிற்பதில்லை. இந்த செய்தி உங்களுக்கு வியப்பளிக்கிறது அல்லவா? ஆனால், அதுவே உண்மை.


இத்தகைய சிறப்பு வாய்ந்த சிகண்டி பூர்ண மணியைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு முன்னால் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வீக உண்மைகளில் ஒன்றே ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாடு.

ஒலிக்கும் ஓசைக்கும் என்ன வித்தியாசம்? ஒலி என்னும் சொல் ஒரு பொருளிலிருந்து எழும் எல்லா வித சப்தத்தையும் குறிக்கும். ஓசை என்பது முறைப்படுத்தப்பட்ட, தூய்மைப்படுத்தப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட ஒலியாகும். சப்த ஸ்வரங்களில் நெறிப்படுத்தப்பட்ட ஒலியை நாம் சங்கீதம், இசை, நாதம் என்கிறோம். இறை சக்தியுடன் மிளிரும் மணி ஒலியை நாம் ஆலய மணி ஓசை என்று அழைக்கிறோம். குறிப்பிட்ட வேத சக்திகளை ஆரவார வருண கீதமாக அள்ளி வீசும்போது அதை அலை ஓசை என்று வர்ணிக்கிறோம்.

எனவே ஒரு மனிதன் நெறியுடன், ஒழுக்கமுடன் வாழ்ந்து இறை மார்கத்தில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்குத் தேவையானது மணி ஓசையே. இவ்விதத்தில் முதன்மை இடத்தைப் பெறுவதே தில்லை சிதம்பரேசனின் ஆலய மணி ஓசையாகும். இந்த மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டு அது கூறும் உண்மையை ஆத்ம விசாரம் செய்து தன்னை நெறிப்படுத்திக் கொண்டவர்கள் எளிதில் தங்களை இறை நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியும்.

முதலில் ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்து கொண்டால்தான் ஓசை கூறும் உண்மையை ஒலியிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம். ஓரிடத்தில் இலவசமாக வேஷ்டி, சட்டை, புடவை வழங்குவதாக அறிவிப்பு வந்தது. ’இலவசம்’ என்ற வார்த்தையைக் கேட்டதுதான் தாமதம் அங்கிருந்த அனைவரும் தங்கள் வேலையை அப்படியே போட்டு விட்டு வேட்டி, புடவை விநியோகிக்கும் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

திடீரென நூற்றுக் கணக்கானோர் ஒரே இடத்தில் சென்று குவிந்ததால் அந்த கும்பலைக் கட்டுப்படுத்த முடியாமல் பெருங் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தங்களுக்கு புடவை, வேட்டி எங்கே கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் ஒருரையொருவர் முந்திக் கொண்டு செல்ல முற்பட்டதால் நெரிசல் அதிகமாகி பலர் கீழே விழுந்து மற்றவர்கள் அவர்கள் மேல் ஏறி முன்னே செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒரு சிலர் தங்கள் இன்னுயிரை இழக்கவும் நேர்ந்தது.

இது ’இலவசம்’ என்ற ஒலியால் வந்த துன்பம். மற்றோர் இடத்தில் ஒரு காட்டு வழியாக இரு நண்பர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி ஒரு சாது தலை தெறிக்க ஓடி வந்தார். அவரைப் பார்த்தால் ஏதோ புலி, சிங்கம் போன்ற கொடிய மிருகம் துரத்திக் கொண்டு வருவது போல் தோன்றியது. நண்பர்கள் அவரை நிறுத்தி, ’ஐயா, உங்களை என்ன விலங்கு துரத்திக் கொண்டு வருகிறது. ஏன் இப்படி தலை தெறிக்கும் வேகத்தில் ஓடி வருகிறீர்கள்’?” என்று கேட்கவே, அவரும், ”தம்பிகளே, நீங்கள் உடனே இங்கிருந்து ஓடி விடுங்கள். அங்கே நிறைய ஆட்கொல்லி சிதறிக் கிடக்கிறது,” என்று சொல்லிக் கொண்டே அவர்களைக் கடந்து ஓடி விட்டார் அந்த சாது.

அந்த நண்பர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் ஏதோ பைத்தியக்காரன் போல் பிதற்றுகிறான். நாம் முன்னே சென்று என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்ற ஆவலில் மேற்கொண்டு முன்னேறிச் சென்றனர். சற்று தூரம் சென்றவுடன் அவர்கள் எதிரில் ஒரு ஆல மரம் தென்பட்டது, அதன் அடியில் ஒரு மூட்டை அளவு தங்கக் காசு தரையில் சிதறிக் கிடந்தது. அதைப் பார்த்தவுடன் இருவருக்கும் எல்லையற்ற ஆனந்தம்.

”சரியான முட்டாள் அந்த சாது. தங்கக் காசுகளை ஆட்கொல்லி என்று சொல்லும் இவனைப் போன்ற மடையன்கள் இருந்தால்தான் நம்மைப் போன்றவர்களுக்கு நல்லது,” என்று பேருவகையுடன் அந்தக் காசுகளை கையில் எடுத்து தடவிக் கொடுத்து குதூகலம் அடைந்தனர். அதே சமயம் இருவர் மனத்திலும் அந்தக் காசுகள் அனைத்தையும் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் எப்படிக் கவர்ந்து செல்வது என்ற அசுர எண்ணம் தீவிரமாக பெருக்கெடுத்தது.

அதில் மூத்தவன், ”இவ்வளவு காசுகளையும் எளிதில் எடுத்துச் செல்வது கடினம். நீ போய் அருகில் ஏதாவது சாக்குப் பை கிடைக்கிறதா என்று பார்த்து வா. அப்படியே சாப்பிடுவதற்கும் ஏதாவது உணவு வாங்கி வா,” என்று சொல்லி அனுப்பினான். இளையவனும் அதன்படி அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்து சாக்குப் பை, உணவை வாங்கி வரும்போது தண்ணீர் புட்டி, விஷம் இவற்றையும் சேர்த்து வாங்கினான். உணவிலும், தண்ணீரிலும் விஷத்தைக் கலந்து கொண்டு வந்து மூத்தவனிடம் கொடுத்தான்.

அவன் வருவதை தூரத்திலிருந்து  பார்த்த மூத்தவன் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து இளையவனைத் ஒரு மரத்தடியால் தாக்கிக் கொன்று விட்டான். பின்னர் அந்த தங்கப் புதையலுக்கு யாரும் பங்காளி கிடையாது என்ற சந்தோஷத்தில் காசுகளை மூட்டையில் கட்டிப் போட்டுவிட்டு விஷம் கலந்த உணவையும் நீரையும் உண்டு எமலோகம் அடைந்தான்.
நெடுநேரம் கழித்து அவ்வழியே திரும்பி வந்த சாது அவ்விரு இளைஞர்களையும் பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தார். ”ஆட்கொல்லியை நெருங்காதீர்கள் என்று எவ்வளவோ எச்சரிக்கை செய்தும் இப்படி ஆசையால் அறிவிழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்களே,” என்று கனத்த உள்ளத்துடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

இந்நிகழ்ச்சி ”ஆட்கொல்லியை நெருங்காதீர்கள்” என்ற ஓசையை அலட்சியம் செய்ததால் ஏற்பட்ட விளைவை விளக்குகிறது.
வள்ளலார் பெருமான், சத்ய சாய் பாபா போன்ற மகான்கள் தங்களிடம் வந்த பலருக்கும் இவ்வாறு தங்கக் காசுகளையும், தங்கப் பேனா, வாட்ச், செயின் போன்ற பல பரிசுகளையும் வழங்கி வந்தனர். அதன் பின்னால் உள்ள தெய்வீகச் செய்தி இதுவே.

தங்களுக்கு வேண்டியர்களுக்கு இத்தகைய அன்பளிப்புகளை அளித்தார்கள் என்று குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதை விட அந்த மகான்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஓர் அற்புத இறைச் செய்தி இருக்கும் என்று நினைத்துத் தெளிவதே அம்மகான்களைப் போற்றும் முறையாகும். ”தங்கம் என்பது ஆட்கொல்லி, அதை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் அதனால் விளையும் வேதனைகள் ஏராளம்,” என்ற உண்மையே மகான்கள் தங்களுடைய அற்புதத் செயல்கள் மூலம் சமுதாயத்திற்கு உணர்த்தும் பாடமாகும்.

இவ்வாறு ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர உதவுவதே வேத மந்திரங்களாகும். எந்த அளவுக்கு வேதம் ஓதுவதை முறையாகப் பயின்று அதை நடை முறையில் பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாட்டையும் ஓசையின் மகத்துவத்தையும் நாம் உணர முடியும். தினமும் மூன்று வேளை சந்தியாவந்தன வழிபாடும், காயத்ரீ ஜப மந்திரமும் வேத பாராயணத்தின் முக்கியமாக அங்கமாகும் என்பதும் உண்மையே.

ஆனால், வேத சம்ரட்சணை என்பது அரிதாகி முறையாக வேதம் ஓதுவோர்களும் காசுக்கு வேதத்தை விற்கும் அவலநிலை பெருகி விட்டதால் வேதம் கற்க விரும்பினாலும் முறையாக வேதம் பயில முடியாமல் போய் விடுகிறது.

இருப்பினும் தேவமொழி அல்லாமல் பிற மொழியிலும் வேதத்திற்கு இணையான தெய்வீக மந்திரங்கள் இருக்கத்தானே செய்கின்றன. நமது தமிழ் மொழியில் உள்ள தேவார திருவாசகப் பதிகங்களும், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவருட்பா போன்ற இறைப் பொக்கிஷங்களும் நான்கு வேதத்திற்கு இணையான பலன்களை நிச்சயமான அளிக்க வல்லவையே. பன்னிரு திருமுறை முழுமையும் ஓத இயலாதோரும் எளிமையாக ஓதி வழிபட ஸ்ரீஅகத்திய பெருமான் அருளிய எளிய தேவாரத்திரட்டு பதிகங்களை ஓதி வருவதாலும் நான்கு வேதங்களை ஓதிய பலன்களை பாமரர்களும் பெற முடியும்.

திருமுறைப் பாடல் பெற்ற தலங்களிலும் மங்கள சாசனம் பெற்ற திருக்கோயில்களிலும் இத்தகைய வழிபாடுகளை நிகழ்த்துதல் நலம். தனி நபர்களாக வேதம் ஓதி பலன் பெறுவதை விட பலரும் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடுகள் இயற்றுவதால் வழிபாட்டுப் பலன்கள் பன் மடங்காய்ப் பெருகும். மேலும் இத்தகைய வேதபாராயணத்திற்குப் பின் இயன்ற அளவு அன்னதானம் நிறைவேற்றுதல் சிறப்பாகும்.

எங்கு வேத மந்திரங்கள் ஓதினாலும் அங்கு பசி உருவாகும் என்பது தெய்வீக உண்மை. எனவே வேதம் ஓதிய பின்னர் சுவையான உணவு இறை அடியார்களுக்கு அளித்தலும் ஒரு சிறப்பான வேத வழிபாடாக மலர்கிறது.

ஓசையின் மகத்துவத்தை உணர உதவும் திருத்தலங்களும் உண்டு. வேதாரண்யம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற திருத்தலங்கள் ஓசையின் மகத்துவம் நிரம்பப் பெற்றவை.

தரங்கம்பாடி திருத்தலத்தில் உள்ள கடல் அலைகள் எம்பெருமானின் இறைலீலைகளை சதாசர்வ காலமும் பாடிக் கொண்டிருப்பதைப் போல இத்திருத்தலங்களில் உள்ள கடல் அலைகள்  அல்லும் பகலும் வேதத்தை ஓதிக் கொண்டே இருக்கின்றன.

நாம் அறிந்த ருக், யஜுர் முதலாகிய வேதங்கள் மட்டுமல்லாது ஆயிரக் கணக்கில் கோடிக் கணக்கில் வேதங்கள் உண்டு. இம்முறையில் இத்திருத்தல கடல் அலைகள் ஓதும் வேதம் பொதுவாக லவண வேதம் என்று அழைக்கப்படும். இவற்றில் ஒவ்வொரு திருத்தலத்தில் கடல் அலைகள் ஓதும் வேதம் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும். கன்னியாகுமரி கடல் அலைகள் ஓதும் வேதம் ப்ரார்த்த வேதம் எனப்படும். சகோதரத்துவத்தையும், நட்புணர்வையும் வளர்க்கும் தெய்வீகப் பாங்கு உடையது.

குமரி அன்னையின் மடியில் தன்னை ஒரு பாலகனாகக் கருதி தியானத்தில் மூழ்கிய விவேகானந்தர் மூன்று நாட்கள் ஊண், உறக்கம் இன்றி இந்தப் ப்ரார்த்த வேத ஓசையைக் கேட்டு அதன் வெளிப்பாடாகவே அவர் தன்னுடைய சிகாகோ சொற்பொழிவில் உலகம் அனைத்திற்குமான சகோதர உணர்வையும், ஒற்றுமையையும் வளர்த்து அழியாப் புகழ் பெற்றார்.

திருச்செந்தூரில் தவழும் கடல் அலைகள் க்ரௌஞ்சம் என்னும் வேதத்தை சதாசர்வ காலமும் ஓதிக் கொண்டிருக்கின்றன. எத்தகைய பகைமையையும் அழிக்கும் வல்லமை உடையது க்ரௌஞ்ச வேத பாராயணம். அது மட்டுமல்லாமல் இறைவன் மீதும் குரு மீதும் அசையாத நம்பிக்கையை வளர்க்க உதவுவதும் க்ரௌஞ்ச வேத சக்தியாகும்.

சிவபெருமானின் அவதாரமான ஆதிசங்கரர் ஒரு முறை காசி மணிகர்ணிகா கங்கைப் படித் துறையில் நீராடி வெளிவரும்போது மாட்டிறைச்சியையும், நான்கு நாய்களையும் கொண்டு வந்த ஒரு புலையன் அவர் மீது மோதி விட்டான். ஆதிசங்கரருக்கு பெருங் கோபம் மேலிட்டது, ”அடே, புலையனே என்ன தைரியம் இருந்தால், என் மீது நீ மோதலாம்? ” என்று கேட்டார். புலையன் அமைதியாக, ‘’சுவாமி, அடியேன் தங்களைத் தீண்டினேனா, இல்லை உங்கள் ஆன்மாவைத் தீண்டினேனா?” என்று புன்சிரிப்புடன் கேட்டான்.

அதிர்ந்து போனார் ஆதிசங்கரர். ”இறைவன் ஒருவனே. அப்பெருமானே பல உயிர்களாகத் தோற்றம் கொண்டுள்ளான். இதில் உயர்வு தாழ்வு என்பது எக்காலத்தும் எவ்விடத்திலும் கிடையாது,” என்று அத்வைத்த தத்துவத்தை எங்கும் பிரசாரம் செய்து வரும் என்னுடைய புத்தி இப்படி ஒரு விநாடி மழுங்கிப் போய் விட்டதே, என்று மனம் நொந்தவராய் அப்புலையனிடம் மன்னிப்புபக் கோரினார்.

அந்தப் புலையன் வேறு யாரும் அல்ல. வேதநாயகனான சிவபெருமானே மாயை என்னும் மாட்டு இறைச்சியைக் கையில் ஏந்திக் கொண்டு நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக நடத்திக் கொண்டு வந்தவன். எம்பெருமானின் திருச்சரணங்களில் பணிந்து எழுந்தார் ஆதிசங்கரர். பெருமான் அவரை அள்ளி அணைத்துக் கொண்டு, ”குழந்தாய், வருந்தாதே. தவறு என்று நேரும்போதுதான் அதை நிவர்த்தி செய்யும் மார்கத்திற்கு வழி பிறக்கும். என்னதான் இறை அவதாரமாக இருந்தாலும் தான் ஏற்ற தத்துவத்திலும், பக்தியிலும் அவ்வப்போது குறைபாடு ஏற்படுவது இயற்கையே. எனவே இத்தகைய தவறு மீண்டும் ஏற்படாது இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பதே புத்திசாலித்தனம்,” என்று அற்புத இறை அறிவுரையை வழங்கிச் சென்றார் சுவாமி.

எம்பெருமானின் திருவார்த்தைகளைக் குறித்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார் ஆதிசங்கரர். எல்லாப் பிரச்னைகளுக்கும் வேதத்தில் தீர்வு கூறப்பட்டது அல்லவா? எனவே தான் கைக்கொண்ட அத்வைத தத்துவக் கருத்தில் மீண்டும் தவறு ஏற்படாது இருக்க யாது செய்ய வேண்டும் என்பதை அறிய வேத வியாசரை அடைந்து தன்னுடைய குறையை நிறைவு செய்யும் மார்கத்தைப் பற்றி வினவினார்.

வேத வியாசர் நான்கு வேதங்கள் மட்டும் அன்றி அனைத்து வேதத்தையும் ஓதி கரை கண்டவர். எம்பெருமானின் பேரரருளுக்குப் பாத்திரமானவர். ஆதிசங்கர பெருமானின் பிரச்னையைக் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்த பின்னர், ”இறைவன் எல்லையற்றவர். வேதமும் எல்லையற்றது. அநாதியானது. இந்த உண்மையை உனக்கு உணர்த்தவே. இறைவன் இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்தி உள்ளான். மேலும் இந்த சம்பவத்தால் உலக மக்களுக்கும் ஒரு அற்புத வழிபாடு கிட்டும்,” என்றார்.

வியாச பகவான் தொடர்ந்து, ”இங்கிருந்து நேரே தெற்கே சென்றால் குமரன் குடிகொண்ட திருச்செந்தூர் என்ற அற்புத கடற்கரை திருத்தலம் உண்டு. அங்கு உறவாடும் கடல் அலைகள் சதாசர்வ காலமும் க்ரௌஞ்ச வேதம் என்ற அற்புத வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றன. ஒரு மண்டல காலத்திற்கு அந்த தேவ அலைகள் ஓதும் வேதத்தைக் கேட்டு வந்தால் க்ரௌஞ்ச மலையைப் போல இறை நம்பிக்கையும் குரு நம்பிக்கையும் வளரும்,” என்று ஆதி சங்கரருக்கு ஆசி கூறி அனுப்பினார்.

வியாச முனிவரின் அருளாணையின்படி ஆதிசங்கரர் திருச்செந்தூர் முருகனை வணங்கி ஒரு மண்டல காலத்திற்கு க்ரௌஞ்ச வேதத்தை ச்ரவணம் செய்து பேறு பெற்றார். அதனால் அவரை நீண்ட நாள் வருத்திய கடுமையான வயிற்று வலியும் மறைந்தது. எனவே எத்தகைய வயிற்று உபாதை உள்ளவர்களும் இன்றும் திருச்செந்தூர் கடல் அலைகள் ஓதும் க்ரௌஞ்ச வேதத்தை கேட்டு வந்தால் நற்பலன் பெறுவர்.
ஒலியும் ஒளியும் ஒன்றாய் இணைந்த
திருஅண்ணாமலை ஈசன் உறையும் அற்புத திருக்கோபுரம்
உலகிலேயே சிறந்த கடல் எது? உங்கள் மனதில் எத்தனையோ கடல், கடற்கரைகள் நினைவுக்கு வரலாம். உண்மையில் இந்தப் பிரபஞ்சம் அனைத்திலும் சிறந்த உயர்ந்த திவ்யமான புனிதமான கடலே எம்பெருமான் அனந்த சயனம் கொள்ளும் திருப்பாற்கடலாகும்.

திருப்பாற் கடல் உண்மையில் உண்டா? நிச்சயமாக உண்டு. திருப்பாற்கடலைப் பார்க்க முடியுமா? நிச்சயமாகப் பார்க்க முடியும், உங்களுக்கு மனமிருந்தால் எம்பெருமானின் கருணை இருந்தால். திருப்பாற்கடலைப் பார்த்தவர்கள் உண்டா? ஆயிரக் கணக்கில் கோடிக் கணக்கில் திருப்பாற்கடலை தரிசனம் செய்தவர்கள் அன்றும், என்றும் உண்டு.

தமிழில் ராம காவியத்தை அருளிய கம்பர் பெருமான் திருப்பாற்கடலை தரிசனம் செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த திவ்ய கடலில் எழும் வேத ஓசையையும் கேட்டு மகிழ்ந்தவர். இதைத் தான் தன்னுடைய அவையடக்கப் பாடலாக ”ஓசைபெற்றுயர் பாற்கடல்” என்று கூறியுள்ளார். பணிந்தவனே பக்தன் என்பதால் கம்ப நாடனின் பணிவால் மகிழ்ந்த நரசிம்மப் பெருமாள் ஸ்ரீரங்க திருத்தலத்தில் தன்னுடைய சிம்ம கர்ஜனையால், நரசிம்ம ஓசையால் கம்பராமாயணம் பெருமாளின் புகழ் பாடும் வேதம் என்ற ஒப்புதலை அளித்தார்.

நரசிம்மப் பெருமாளால் மங்கள சாசனம் பெற்ற தெய்வீகப் பாடல்களே கம்ப ராமாயணப் பாடல்கள் என்பது உண்மை. திருப்பாற் கடல் ஓதும் வேதத்திற்கு பஞ்சக்ஷீரம் என்ற நாமம் அளித்துள்ளனர் ஆழ்வார் பெருமக்கள். கம்பர் பெருமான் பல வருடங்கள் இந்த பஞ்சக்ஷீர வேத ஓசையைக் கேட்டுக் கேட்டு அவற்றை தன்னுடைய பாடல்களிலும் பொதித்துள்ளார். இவ்வாறு இந்த பஞ்சக்ஷீர வேத சக்திகளை உள்ளடக்கியதே, ”அஞ்சிலே ஒன்று பெற்றான் …”, என்று தொடங்கும் பாடலாகும். இதன் பின்னால் அமைந்த ஒரு அற்புத புராண நிகழ்ச்சியைக் காண்போமா?

ராம ராவண யுத்தத்திற்குப் பின் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ராமேஸ்வரக் கடற்கரையில் சிவலிங்க வழிபாடு நிகழ்த்த ராம பிரானும் சீதாப் பிராட்டியும் சிவலிங்கம் ஒன்றை இமயமலையிலிருந்து எடுத்து வருமாறு அனுமாரை அனுப்பினார்கள் அல்லவா? அனுமான் வெகுநேரம் சென்றும் வராததால் குறிப்பிட்ட முகூர்த்த நேரம் தவறி விடக் கூடாது என்று ராமர் பிரான் ராமேஸ்வர மண்ணைக் கொண்டு சிவலிங்கம் நிர்மாணித்து சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் உத்தம சிவ பூஜையை நிறைவேற்றி விட்டார்.
அவர்களின் சிவ பூஜை முடிந்த பின்னரே அனுமான் சிவ லிங்கத்துடன் கயிலையிலிருந்து வந்தார். தான் கொண்டு வந்த சிவ லிங்கத்தின் தேவையின்றியே ராமரும் சீதையும் வேறொரு சிவ லிங்கத்தைக் கொண்டு பூஜை நிறைவேற்றியதைக் கண்டு அனுமான் மிகவும் வருத்தம் அடைந்தார். சீதா பிராட்டியும் ராமச் சந்திர மூர்த்தியும் எவ்வளவோ எடுத்துக் கூறியும்  அனுமாரின் மனம் சாந்தி பெறவில்லை.

இறுதியில் ராம பிரான் தான் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை அகற்றி விடும்படி அனுமாரைக் கேட்டுக் கொண்டார். ஆனால், அனுமார் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ராம பிரான் உருவாக்கிய சிவலிங்கத்தை பூமியிலிருந்து அகற்ற முடியவில்லை. தன்னுடைய வாலால் சிவலிங்கத்தைச் சுற்றி தன் ஆத்ம பலம் முழுவதையும் பிரயோகம் செய்தபோதும் ராமநாத லிங்கம் சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை.

அப்போதுதான் ராமபிரானின் பராக்கிரமத்தையும், அவருக்கு சிவபெருமானின் மீதுள்ள ஆழம் காண முடியாத பக்தியையும், உலக உயிர்கள் மீது அவர் கொண்டிருந்த தீவிர அன்பையும் அனுமானால் உணர முடிந்தது. இதன் பின்னால் இன்னும் தெய்வீக லீலைகளும் பின்னிப் பிணைந்திருந்தன.

அதுநாள் வரை தான்தான் சிறந்த ராம பக்தன் என்ற எண்ணம் அனுமான் மனத்தில் வேருன்றி நின்றது. எப்போது தன்னுடைய வாலால் ராம லிங்கத்தைக் கட்டி இழுக்க நினைத்தாரோ அப்போது ராம பிரான் உருவாக்கிய லிங்க மூர்த்தியின் மகத்துவத்தால் ஒரு நொடியில் தன்னுடைய  அகம்பாவம் அனைத்தும் அனலில் இட்ட மெழுகாய் கரைந்தோடுவதை உணர்ந்தார்.

உலகில் எதை சாதிப்பதும் எளிது. ஆனால், ஒருவன் கொண்டிருக்கும் தான் என்ற அகம்பாவ எண்ணத்தை மற்றொருவர் களைவது என்பது மிக மிகக் கடினமான செயல். அசாத்தியம் என்றே சொல்லலாம். இந்த மிக மிகக் கடுமையான ஒரு காரியத்தையும் ராம பிரான் பிரதிஷ்டை செய்த சிவ லிங்கத்தின் ஸ்பரிசம் ஏற்படுத்தித் தருகிறது என்றால் ராம பிரானின் இறை பக்தி, அவர் உயிர்கள் மேல் கொண்டுள்ள கருணையை அளவிட்டுக் கூற முடியுமா?

மேலும் அதுநாள் வரை தான் ராம நாம ஜபத்தில் கரை கண்டவன் என்ற எண்ணம் அனுமான் மனதில் வளர்ந்து மலையாய் உயர்ந்திருந்தது. ராம நாம சுவையைப் பூரணமாக உணர்ந்தவன் என்ற எண்ணமும் வலுவாக அனுமான் உள்ளத்தில் நிறைந்திருந்தது. அன்று ராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் தான் அதுவரை அனுபவித்திராத ஒரு புதிய அள்ள அள்ளத் தெவிட்டாத ராம நாம சுவையையும் அனுபவித்தார். அதைக் கண்டு பெரிதும் வியப்பு மேலிட ராம பிரானின் விழிகளைச் சந்திக்க சக்தியற்றவராய் அன்னையை நோக்கி தன்னுடைய சந்தேகத்திற்கு விடையளிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

குறும்பு செய்த குழந்தை அப்பாவின் அடிக்குப் பயந்து அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளியும் ஒரு சிறு குழந்தையின் நிலையில் இருந்த அனுமானைப் பார்த்து ராமரும் பலமாகச் சிரித்து விட்டார். குதூகலம் பூத்துக் குலுங்கும் அந்த பொன் மாலைப் பொழுதில் அன்னை சீதா தேவி அனுமாரின் கேள்விக்கான விடையைக் கூறினாள்.

பாற்கடல் ஓதும் வேதம் பஞ்சக்ஷீரம் எனப்படும். இதை தேவ பஞ்சாட்சரம் என்றும் அழைக்கலாம். இதன் தேவமொழி பதத்தைக் கூற வேண்டும் என்றால், ”ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே,” என்று அழைக்கலாம். இந்த தேவ பஞ்சாட்சர மந்திரத்தை ஓதுபவர் யார்? அவர் வேறு யாருமல்ல, இந்த பிரபஞ்சத்தின் உண்மையான பெருமாள் பக்தரான சாட்சாத் சிவபெருமானே இந்த தேவ பஞ்சாட்சரத்தை ஓதி விஷ்ணு மூர்த்தியைத் தியானித்துக் கொண்டிருக்கிறார். இந்த தேவ பஞ்சாட்சர மந்திரத்தின் பிரதிபலிப்பே பாற்கடலில் ஒலிப்பதாகும்.

ஆனால், பாற்கடல் தரிசனம் என்பது அவ்வளவு எளிதானதா? சாதாரண பாமர மக்களும், பாற்கடலில் ஒலிக்கும் வேதத்தைக் கேட்க வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்காகவே ராமேஸ்வரத்தில் உள்ள கடல் அலைகள் எம்பெருமான் திருவருட் கருணையால் இந்த பஞ்சக்ஷீர வேதத்தை ஓதும் வல்லமையைப் பெற்றுள்ளன. எனவே இவ்வாறு பஞ்சக்ஷீர வேதத்தை சதா சர்வ காலமும் ஓதும் கடல் அலைகள் தவழும் ராமேஸ்வர திருமண்தானே அதை ஓதும் சிவபெருமான் அமரும் சிவலிங்கமாக இருக்க முடியும்?

இந்த இறை இரகசியத்தை ராம பிரான் உணர்ந்த காரணத்தால்தான் ராமேஸ்வரக் கடற்கரையில் பல யுகங்கள் பஞ்சக்ஷீர வேதத்தை ஓதிய அலைகள் தவழும் மண் துகள்களைக் கொண்டு ராம லிங்கத்தை உருவாக்கி அதை அனைத்து பிரபஞ்ச ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்தார்.

ராம பிரானின் இந்த அற்புதத் தொண்டிற்கு ஈடு இணை ஏதாவது உண்டா? எனவே ராமேஸ்வர திருத்தலத்தில் இன்று நீங்கள் காணும் ராமநாத லிங்க மூர்த்தி ஒரு சாதாரண மண் கட்டி அல்ல, அது ராம பிரானின் ஜீவன், சிவபெருமானின் உள்ளம், சீதா பிராட்டியின் கற்புக் கோயில், ராமதாசன் ஆஞ்சநேயனின் அகம்பாவம் களைந்த ஜோதிப் பிழம்பு, கோடிக் கணக்கான அலை தேவதைகள் சேர்த்த பஞ்சக்ஷீர வேதப் பொக்கிஷம், கோடி கோடி புனித அலை மூர்த்திகளை தன்னுடைய இதயத்தில் தேக்கிய பூமித் தாயின் வடிவம்.

யாரெல்லாம் ராம நாமத்தின் மகிமையைப் பூரணமாக அறிய விரும்புகிறார்களோ அவர்கள் ராமேஸ்வரக் கடல் அலைகள் ஓதும் பஞ்சக்ஷீர வேதத்தை தொடர்ந்து கேட்டு வருதலால் பெரும் பயன் பெறுவர்.

இவ்வாறு ஒலிக்கும் ஓசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொண்டவர்களே மணி ஓசையின் மகத்துவத்தைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
வீடுகளில் ஆலயங்களில் பலவிதமான மணிகளைப் பயன்படுத்துகிறோம். இவை எல்லாவற்றிலும் பொதுவாக உள்புறம் ஒரு தண்டம் இருக்கும். இதை நாக்கு என்றும் சொல்வதுண்டு. சாதாரணமாக மணி அடிக்கும்போது அதிலிருந்து எழுவது ஒலி. பூஜை நேரத்தில் மணி அடிக்கும்போது அதிலிருந்து எழுவதே ஓசை. எனவே மனிதனுக்கு நன்மை பயப்பது மணி ஓசையே என்பதில் தற்போது உங்களுக்கு ஐயம் இல்லை அல்லவா?

வீடுகளில் அல்லது ஆலயங்களில் எங்கு மணி அடித்தாலும் மணி அடிப்பவர்கள் கட்டாயம் கோவணம் அணிந்து இருக்க வேண்டும். ஆலயங்களில் அவசியம் இந்த நியதியைக் கடை பிடிக்க வேண்டும். ”மணி அடிக்கும்போது ஒரு நாக்குதான் ஆடலாம்,” என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இதன் அர்த்தத்தை அவரவர் ஆத்ம விசாரம் செய்து புரிந்து கொள்தலே நலம்.

சாதாரணமாக இறை மார்கத்தில் முன்னேற நினைப்பவர்கள் பிரம்மசர்யத்தைக் கடை பிடித்தல் அவசியம். இதற்கு உதவுவதே கோவண ஆடையாகும். ஆண்கள் புதன், சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதும் அவசியம். இதனால், கபாலச் சூடு கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற விந்து விரயத்தைக் கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்கவும் இயலும்.

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் மணி ஓசை கூறும் இரகசியங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
அவரவர் வசதியைப் பொறுத்து வெண்கலம், பித்தளை, வெள்ளி போன்ற எம்மணியை வேண்டுமானாலும் பூஜைக்காகப் பயன்படுத்தலாம்.
மணி, தங்கமணி, மணிவேல், சுப்ரமணியன் போன்று மணி என்ற சொல்லைத் தங்கள் பெயர்களில் உடையவர்களும், ஜோதி, ஜோதிராஜன், ஆனந்தஜோதி என ஜோதி என்ற சொல்லை தங்கள் பெயரில் உடையவர்களும் தங்கள் வாழ்நாளில் ஐந்து கோயில்களிலாவது பெரிய வெண்கல மணிகளைத் தானமாக அளித்தல் அவசியம்.

பொதுவாக ஆலயமணிகளின் எடை 30 கிலோ இருத்தல் நலம். இவ்வாறு மணிகளைத் தானமாக அளிக்க வசதி இல்லாதவர்கள் திருக்கோயில்களில் பூஜை காலங்களில் மணி அடிக்கும் சேவையை மேற்கொள்தலும் ஏற்புடையதே.

அவ்வாறு கோயில்களில் மணி அடிக்கும் சேவையை மேற்கொள்பவர்கள் அவசியம் மூன்று வேளை தலைக்குக் குளித்தல், மூன்று வேலை பல் துலக்குதல், மணி அடிக்கும் நேரத்திலாவது கோவணம் கட்டிக் கொள்தல் போன்ற நியதிகளைக் கடைப் பிடித்தல் நலம். இதனால் பரவெளி தூய்மை பெறும். வேத சக்திகள் பெருகும்.

செல் போன்களின் பெருக்கத்தால் வான் மண்டலம் முழுவதும் சாலைகளில் உள்ள வேகத் தடைகளைப் போல வேதத் தடைகளால் மாசு அடைந்துள்ளது. மேற்கூறிய முறையில் ஆலயமணி சேவையை நிறைவேற்றுவதால் இந்த வேதத் தடைகள் நீங்கி வேத சக்திகள் நிரவ வாய்ப்புண்டு.
இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கும்போது மட்டுமல்லாமல் வேத மந்திரங்கள் ஓதும்போதும், தேவார திருவாசகப் பாடல்கள் பாடும்போதும், இறைவனின் திருவீதி உலா காலத்திலும், ஷோடசோபசாரம் போன்ற எல்லா வித இறை உபசாரங்களிலும் மணியைப் பயன்படுத்தலாம். அவை எல்லாம் ஒலியை ஓசையாக்கி பிரபஞ்சத்தில் நற்சக்திகளை நிரவும். சங்கு, மத்தளம், இசைக் கருவிகள், சாம்பிராணி, மலர் வழிபாடு, கீர்த்தனைகள் இவற்றுடன் மணி ஓசை சேரும்போது இத்தகைய வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும்.

No comments:

Post a Comment