Sunday 12 July 2020

விநாயகர் புராணம்

*🕉️ விநாயகர் புராணம்*

*🐘 பகுதி5*

*🐘 ஓம் கம் கணபதயே நம*

🐘🌸🌺🌹🌷🔔🙇🏻‍♂️🙏🚩

*அசுரேந்திரனின் மனதில் சற்றே நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன், குருவே! மரகதரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். அவர் எப்படிப்பட்டவர்? ஒரு பெண்ணால் அவரை மயக்கி விட முடியுமா? முனிவர்கள் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் ஆயிற்றே! மரகதர் எப்படி...? என இழுத்தவனிடம், அசுரேந்திரா! சந்தேகம், தயக்கம், காலதாமதம் இம்மூன்றும் வாழ்வின் எதிரிகள். பெரியவர்கள் ஒன்றைச் சொன்னால், அதில் நிச்சயம் அர்த்தமிருக்கும். என் பேச்சை நீ நம்புபவனாக இருந்தால், இதற்குள் ஒரு பேரழகியை, மரகதரிடம் அனுப்பியிருக்க வேண்டும். நீயோ, அரைகுறை நம்பிக்கையுடன் பேசினாய். நம்பிக்கை இல்லாதவனுக்கு கூட ஒருவேளை வெற்றி கிடைத்து விடும். ஏனெனில், அவன் அந்த நம்பிக்கையின்மையிலாவது உறுதியுடன் இருக்கிறான். அரைகுறை நம்பிக்கை ஆபத்தானது, என்றதும், சுக்ராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்ட அசுரேந்திரன், மரகத முனிவரிடம் ஒரு அழகியை அனுப்புவதாக கூறி விட்டு வெளியேறினான்.*

*அசுர குலத்திலேயே பேரழகி ஒருத்தியை தேடும் படலம் ஆரம்பித்தது. அப்போது அமைச்சர் ஒருவர், அரசே! நம் தேசத்தில் எனக்கு தெரிந்து மாபெரும் பேரழகி ஒருத்தி இருக்கிறாள். இரும்பை மட்டுமே காந்தம் ஈர்க்கும். ஆனால், அந்த காந்தத்தையே ஈர்த்து விடும் அவளது கண்கள். உதடுகளைக் கண்டால் வெட்டிய சிவந்த கொய்யாக்கனிகள் வெட்கத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்ளும். ரோஜாமலர்கள் அவளது கன்னத்தின் சிவப்பழகு காண பிடிக்காமல், முகத்தைத் திருப்பிக் கொள்ளும். இப்படி... அவளது அழகை வர்ணித்துக் கொண்டே போகலாம். விஸ்வாமித்திரரை தன் பிடிக்குள் ஈர்த்த மேனகையை விட ஐநூறு மடங்கு அழகில் உயர்ந்தவள் இவள். அவளை மட்டும் மரகத முனிவரிடம் அனுப்பி விட்டால், இவ்வுலகில் அசுரர்களின் ஆட்சி முடிவற்றதாக இருக்கும், என்றார். அசுரேந்திரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.*

*யார் அவள்? பெயர் என்ன? எங்கிருக்கிறாள்? அவளை உடனே என் முன் நிறுத்துங்கள், என்றதும், அரசே! எள் என்று நீங்கள் சொன்னால், எண்ணெயுடன் வந்து நிற்பவர்கள் உங்கள் சேவகர்களான நாங்கள். இதோ! அந்த மாணிக்கம், என்று திரைமறைவில் நின்ற ஒரு பெண்ணை அழைத்து வந்தார் அமைச்சர். அவள் வெட்கம் ததும்ப அசுரேந்திரன் முன்னால் நின்றான். அசுரேந்திரனே ஒரு கணம் திகைத்து விட்டான். தன் மனதுக்குள், ஆஹா... இவளை மட்டும் மரகதரிடம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்திருந்தால், இவள் என் பட்டத்தரசிகளில் முதன்மையானவளாக இருந்திருப்பாள், என சொல்லிக்கொண்டான்.*

*அழகு மங்கையை! உன் பெயர் என்ன? என்றதும், பேசியது குயிலா, சிட்டுக்குருவியா என்று வித்தியாசம் தெரியாதபடி, மிக மெதுவாக விபுதா என்றாள். விபு! உன்னிடம் அமைச்சர் எல்லாம் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். நம் குலம் தழைக்க வேண்டும். அதற்கு நீ இந்த தியாகத்தை செய்தே தீர வேண்டும். இதை செய்து விட்டால், அசுரலோகத்தில் எங்கும் சுற்றி வர உனக்கு அனுமதியும், பல பிறவிகள் உன்னைத் தொடர்ந்தாலும், எப்பிறவியிலும் நீ அனுபவிக்கும்படியான செல்வத்தையும் தருவேன், என்ற அசுரேந்திரன், அவளை காட்டில் கொண்டு பாதுகாப்பாக விடும்படி அமைச்சருக்கு உத்தரவிட்டான். பெரிய தேர் ஒன்றில் ஏறிய விபுதா, மரகத முனிவர் தவம் செய்யும் இடத்தருகே இறக்கி விடப்பட்டாள். ஏவலர்களை அவள் அனுப்பிவிட்டு, மரகதரின் அருகில் சென்றார். பெயருக்கு ஏற்றார்போல், அவர் மிகுந்த தேஜசுடன் இருந்தார். அவரது தவத்தின் ஆழத்தைப் பார்த்தால், அவர் அப்போதைக்கு எழுவதாக பெரியவில்லை. விபுதாவுக்கு அவர் அருகில் செல்ல பயம்.*

*மிகப்பெரிய தபஸ்வியாக இருக்கிறார். இவர் அருகில் சென்று, தவத்தைக் கலைத்தால் கோபத்தில் நம்மை எரித்து விட்டால் என்னாவது? நான் இறந்து போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட தபஸ்விகளால் மரணித்தால் முக்தியே கிடைக்கும். ஆனால், என் எஜமான் சொல்லியனுப்பிய பணி என்னாவது? ஒருவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட பணியை எப்பாடுபட்டேனும் முடித்துக் கொடுத்து விட வேண்டும். இல்லா விட்டால், அது நம்பிக்கை துரோகத்திற்குரிய பாவத்தின் பலனை நமக்குத் தந்துவிடும். சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். இவர் தபஸ்வி என்றால், நான் தபஸ்வினியாக வேடம் தரித்து விட்டு போகிறேன்! என்றவள், மறைவிடத்திற்குச் சென்று, தபஸ்வினி போல் வேடமிட்டுக் கொண்டு வந்தாள். முனிவரே! நான் கொண்ட கடமையில் தவறாதவள் என்பது உ<ண்மையானால், நிச்சயம் உம்மை அடைந்தே தீருவேன், என்றவள், முனிவரின் அருகில் அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்தாள். ஒரு கட்டத்தில், அவளது தியானம் தவமாக மாறி விட, மரகத முனிவரை அடைய வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடமே சமர்ப்பித்து, அவரையே மனதில் உறுதியாக எண்ணி தவத்தை வலுப்படுத்தினாள்.*

*பல ஆண்டுகள் உருண்டோடின. அவளது தேகம் மெலிந்து விட்டது. தவத்தின் காரணமாக, ஒருமுறை, அவளது உடலில் இருந்து எழுந்த வெப்பம் மரகதரின் தவத்தைக் கலைத்தது. அவர் தவம் கலைந்து எழுந்தார். அருகில் இருக்கும் பெண்ணை அவர் கவனிக்கவில்லை. அதற்கு பதிலாக, ஒரு ஆண் யானையும், பெண் யானையும் சற்று தூரத்தில் குதூகலமாக இருப்பதைப் பார்த்தார். இதைப் பார்த்தவுடனேயே விதிப்பயன் அவரைத் துரத்தியது. ஆண்டவன் நம் தலையில் எழுதியதை மாற்ற முடியாது. எந்த நேரத்தில் என்ன நடக்க வேண்டுமென எழுதியிருக்கிறானோ அது நடந்தே தீரும். இந்த எழுத்தெல்லாம், முன்வினைப் பயனின் காரணமாக எழுதப்படுபவை. அந்த காட்சியைப் பார்த்த அவரது உள்ளத்தில் மோக உணர்வு ஆக்கிரமித்தது. அந்த உணர்வு ஏற்பட்டதுமே, அதுவரை செய்த தவத்தின் சக்தி குறைந்தது. தன் உணர்வுகளுக்கு வடிகாலை எப்படி தேடுவது என சுற்றுமுற்றும் நோட்டமிட்ட போது, தன்னருகே ஒரு அழகுப் பெட்டகம் அமர்ந்திருப்பதைப் பார்த்தார் மரகதர். பெருமூச்சுடன் அவளை அவர் நெருங்கினார்.*

*🐘 தொடரும்.*

No comments:

Post a Comment