Wednesday 14 December 2022

வெஞ்சமாங்கூடலூர் அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் ஆலயம்

 ◄•───✧ உ ✧───•►


🙏இன்றைய கோபுர தரிசனம்..!!🙏


கரூர் மாவட்டம் தமிழ்நாடு வெஞ்சமாங்கூடலூர் அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் ஆலயம்..


கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.


கல்யாணவிகிர்தீஸ்வரர்


மூலவர் : கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர்


உற்சவர் : சோமாஸ்கந்தர்


அம்மன்/தாயார் : பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷினி


தல விருட்சம் : வில்வம்


தீர்த்தம் : வில்வம், குடகனாறு


ஆகமம்/பூஜை : காமிகம்


பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்


ஊர் : வெஞ்சமாங்கூடலூர்


மாவட்டம் : கரூர்


மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள் :  சுந்தரர், அருணகிரியார்


தேவாரப்பதிகம்


தொழுவார்க்கு எளியாய் துயர்தீர நின்றாய் சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ் சடையாய் உழுவார்க்கு அரிய விடையேறி ஒன்னார் புரந்தீ எழு ஓடுவித்தாய் அழகார் முழவார் ஒலிபாடலொடு ஆடலறா முதுகாடரங்கா நடமாட வல்லாய் விழவார் மறுகில் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.


சுந்தரர்


தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 5வது தலம்.


திருவிழா


மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.


தல சிறப்பு


கருவறையில் "விகிர்தீஸ்வரர்' நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

 

திறக்கும் நேரம்


காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி


அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்,வெஞ்சமாங்கூடலூர்- 639 109.கரூர் மாவட்டம்.

 

போன்


+91-4324- 262 010, 238 442, 99435 27792 


பொது தகவல்


இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர்.


பிரார்த்தனை


திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.

 

நேர்த்திக்கடன்


வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்தும், திருக்கல்யாணம் செய்து வைத்தும் வழிபடுகின்றனர்.


தலபெருமை


சிவத்தல யாத்திரை வந்த சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பொன்னும், பொருளும் தீர்ந்து விட்டது. எனவே, விகிர்தீஸ்வரரை வணங்கி பொன் வேண்டும் எனக்கேட்டார். சிவன் தன்னிடம் "பொன் இல்லை' என்றார். "உன்னிடம் இல்லாத பொருள் ஏது?' என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொன் கேட்டார் சுந்தரர். அப்போதும் சிவன், ""தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உனக்கு பொன் தரவேண்டுமானால் எந்த பொருளையாவது அடமானம் வைத்துத்தான் தரவேண்டும்,'' என்றார். சுந்தரரும் விடுவதாக இல்லை. "எதையாவது வைத்தாவது எனக்கு பொன் தாருங்கள்,' என்றார். சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய சிவன், பார்வதி தேவியை மூதாட்டியாக மாற்றி அங்கு வரச்செய்தார். அவளிடம் முருகன், விநாயகர் இருவரையும் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மாறாக பொன் தரும்படி கேட்டார். அவரும் பொன் தந்தார். அதனை சுந்தரருக்கு கொடுத்தார்.


நண்பன், உதவி என்று தன்னிடம் வந்தபோது தன் பிள்ளைகளை அடமானம் வைத்து உதவி செய்தார் இத்தலத்து சிவன். இவ்வாறு நட்புக்கு மரியாதை செய்த சிவனாக இவர் இருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் நண்பர்களுக்குள் ஒற்றுமை கூடும், நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர்.


முருகன் சிறப்பு


பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் 6 முகங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை அருணகிரியார், ""வெஞ்சக்கூடல் பெருமானே!'' என்று பதிகம் பாடியிருக்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவருக்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் மீண்டும் இணைந்து தாம்பத்யம் சிறக்கும் என நம்புகிறார்கள். கருவறையில் "விகிர்தீஸ்வரர்' நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விகிர்தீஸ்வரர் என்றால் "நன்மைகள் தருபவர்' என்று பொருள். இவரை வழிபடுபவர்கள் தங்களது பாவங்கள் அனைத்தும் விலகப்பெற்று, நன்மைகள் கிடைக்கப்பெறுவர் என்பது நம்பிக்கை. அம்பாள் பண்ணேர் மொழியம்மை சுவாமிக்கு இடப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். முன்மண்டபத்தில் நடராஜர் அருளுகிறார். பிரகாரத்தில் நால்வர், அறுபத்து மூவர் மற்றும் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. இக்கோயில் சுவாமியை வணங்கிவிட்டு வெளியேறும்போது, படிகளில் ஏறிச்செல்லும்படியாக பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள் இங்கு வணங்கிவிட்டு திரும்பும்போதே, வாழ்வில் ஏற்றம் உண்டாகிவிடும் என்பதை இந்த அமைப்பு குறிப்பதாக சொல்கிறார்கள்.


மணிமுத்தாறு, குடகனாறு ஆகிய இரு ஆறுகள் சேரும் ஊர் என்பதால் இவ்வூருக்கு ""கூடல் ஊர்'' என்று பெயர்.


தல வரலாறு


தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். அவளை அடைவதற்காக சமயம் பார்த்து காத்திருந்த அவன், ஒருநாள் விடியும் முன்பே கவுதமர் ஆசிரமத்திற்கு சென்றான். சேவல் வடிவம் எடுத்து கூவினான். அதைக்கேட்ட கவுதமர் விடிந்து விட்டது என எண்ணி ஆற்றிற்கு நீராடச் சென்றுவிட்டார். அப்போது, இந்திரன் கவுதமரின் வடிவம் எடுத்து ஆசிரமத்திற்குள் புகுந்தான். அவனை, தன் கணவர் என்றெண்ணிய அகலிகை, பணிவிடைகள் செய்தாள். இதனிடையே ஆற்றிற்கு சென்ற கவுதமர் பொழுது சரியாக விடியாமல் இருந்ததைக் கண்டார்.


ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு திரும்பினார். கவுதமரைக் கண்ட இந்திரன், பூனை வடிவம் எடுத்து தப்ப முயன்றான். நடந்த நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியில் அறிந்த கவுதமர், அவனது உடல் முழுதும் கண்ணாக மாறும்படி சபித்துவிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி தான் செய்த பாவத்திற்கு விமோசனம் தேடினான். இத்தலத்திற்கு வந்த இந்திரன், சிவனை வணங்கி தவம் செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும் என்றார். அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே, இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான். சிவனும், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.


சிறப்பம்சம்


அதிசயத்தின் அடிப்படையில்


கருவறையில் "விகிர்தீஸ்வரர்' நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.


அமைவிடம்


கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் ஆறு ரோடு பிரிவிற்கு சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கரூரில் இருந்து சிட்டிபஸ்கள் செல்கின்றன.


அருகிலுள்ள ரயில் நிலையம்


கரூர்


அருகிலுள்ள விமான நிலையம்


திருச்சி


தங்கும் வசதி


கரூர்


வாழ்க வளமுடன்


வாழ்க வையகம்


🙏 திருச்சிற்றம்பலம் 🌷

No comments:

Post a Comment