Monday 26 December 2022

மதுரகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தொட்டியம் எனும் ஊரில் அமைந்துள்ளது

 #தினம்_ஒரு_ஆலயம் 


#தொட்டியம்_மதுரை_காளியம்மன்_ஆலயம்


 

மதுரை காளியம்மன் கோயில் அல்லது மதுரகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தொட்டியம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவராக மதுரகாளியம்மன் உள்ளார். 


தல வரலாறு :

மதுரை மாநகரில் வீற்றிருந்த மகாகாளி தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியம் சங்கம்  புதரில் வந்து அமர்ந்தாள், அப்போது எசங்கராயண் பட்டியில் இருந்த மாடுகள் மேய்ந்து விட்டு பால்  கொடுக்கும் நேரத்தில் சங்கம் புதருக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தது.  இதனை  அறியாத ஊர் மக்கள் மாட்டில் பால் கறந்தால் பால் வருவதில்லை.  எனவே சங்கம் புதரில்  கள்வர்கள் யாரோ  பாலை கறந்து விடுகிறார்கள் என்று  இசங்கராய அரசனிடம் முறையிட்டனர்.


அரசன் தன் படை வீரர்களுடன் சங்கம் புதர் சென்று கள்வனை தேடினார். அரசன் புதருக்குள் வாளை சொருகினான்.  சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீரிட்டது.  உடனே மன்னன் அதிர்ந்து  போனான்.  அவன் முன் ஸ்ரீ மதுரைகாளியம்மன் தோன்றினாள் (இன்றும் கருவறையில் உள்ள மதுரைகாளியம்மன் மேனியில் இக்காயத்தின் வடு உள்ளது).  மனம் உருகி மன்னிக்கும்படி வேண்டி,  தாயே உனக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி அமர்ந்து இருக்கிறாய்? என்று மன்னன் கேட்டான். 


மதுரைகாளியம்மன் அரசனுடைய பட்டியிலிருந்து ஒரு மாட்டை காட்டி இந்த மாடு எங்கெல்லாம் சென்று சுற்றி வருகிறதோ?  அதெல்லாம் எனக்கு சொந்தம், அதுவே எனது எல்லை  என்று மதுரைகாளியம்மன் கூறினாள்.  மாடு பதினெட்டு பட்டி கிராமம் சுற்றி வந்து புதரில் நின்றது.  18  பட்டி மக்களும் என் பிள்ளைகள் என் அருள்பெற ஒரு அழகான கோவிலை அமைத்து என்னை வழிபட வகை செய்வாயாக என்று கூறி ஸ்ரீ மதுரைகாளியம்மன் மறைந்தாள். அம்மனின் வாக்கை  கனிவுடன் ஏற்ற அரசன் உடனே “தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் திருக்கோவிலை” கட்டினார்.


 

கோவிலின் மூன்று நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், விநாயகர், அழகு நாச்சியம்மன், மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, காத்தவராயன் சன்னிதிகள் உள்ளன. 


கருவறையில் அன்னை தொட்டியம் மதுரகாளியம்மன் ஒய்யாரமாக வலது காலை குத்துக்காலிட்டு, இடதுகாலை தொங்க விட்ட நிலையில் வலது கரத்தில் திரிசூலம் ஏந்தி அழகிய எழிற்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.


குதிரை மீது அமர்ந்த நிலையில் மன்னன் இசங்கராயன் சிலை, மதுரை செல்லான், தொட்டியம் சின்னான் சிலை சூழ கருவறை அமைந்துள்ளது.

 


தலச்சிறப்பு : 


மதுரை காளியம்மன் கோவில் பங்குனித் “தேர்த் திருவிழா” காப்புகட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கும்.  ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும்.  அப்படி  அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு  வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்படும்.  இதை தொடர்ந்து  அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, மதுரை காளியம்மன் கோயில்  முன்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும். முக்கிய நிகழ்ச்சியான சுமார் முப்பதடி உயரம் உள்ள  ஓலை பிடாரி அம்மன், சுமார் இருபத்து ஒன்பது அடி உயரமுள்ள சின்ன தேர் மதுரைகாளியம்மன்,  திருத்தேர் தலை அலங்காரமும், அதன் பின் இரண்டு தேர்த்தூக்கும் நிகழ்ச்சி மூலம் அம்மன்  திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.


தமிழகத்திலேயே தோளால் தூக்கிச் செல்லப்படும் மிக உயரமான தேர் இதுவாகத் தான் இருக்கும். இரண்டு தேரும் ஒரே நேரத்தில் வீதிவலம் வருவதால், சுமார் 300பேர் ஒவ்வொரு தேரையும் சுமந்து செல்கின்றனர். இவ்விரு தேர்களையும் பக்தர்கள் தங்கள் தலையிலும், தோளிலும் சுமந்து திருவீதி உலா வருவார்கள். 


இந்த இரு தேர்களையும் தூக்குவதற்காகவே கவுத்தரசநல்லூர், சித்தூர், அரங்கூர், கிளிஞ்சநத்தம், அயினாப்பட்டி, ஏரிகுளம், பாலசமுத்திரம், தொட்டியம் கோட்டமேடு, சந்தப்பேட்டை, கொசவம்பட்டி, காமலாபுரம்புதர், தோளூர்பட்டி, ஏலூர்பட்டி, குண்டுமனிப்பட்டி, மாராச்சிப்பட்டி, உடையாளம்புத்தூர், நத்தம், புத்தூர், கார்த்திகைப்பட்டி என 18 பட்டி கிராம மக்கள் திருவிழாவில் ஒன்று கூடுகின்றனர். சிறிய தேரில் மதுர காளி அம்மனும், பெரிய தேரில் ஓலைப்பிடாரிகளும் எழுந்தருளி வீதிகளில் வலம் வருவர்.


இத்தலத்தில் ஆண்டு தோறும் "ஆனித் திருமஞ்சனவிழா" வெகு விமரிசையாக நடைபெறும். திருமஞ்சனவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி  ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னி சட்டி எடுத்து அலகு குத்தி  மதுரைகாளியம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.


தேர்த் திருவிழா:


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி செவ்வாய் அன்று திருவிழா தொடங்கி, சித்திரை மாதம் முதல் செவ்வாய் வரை விழா நடைபெறும். இதில் பங்குனி முதல் செவ்வாய் அன்று பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 2–ம் செவ்வாய் அன்று காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று, அன்று இரவு முதல் அடுத்த செவ்வாய் காலை வரை தொடர்ந்து 8 நாட்கள் ஆலய நடை அடைக்கப்படும். காப்பு கட்டி நடை சாத்தப்பட்ட மறுநாள் ஆயிரம் பானையில் பொங்கல் வைத்து பூஜை நடைபெறும். 


பங்குனி 3–ம் செவ்வாய் அன்று நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 8 நாட்கள் இரவு, பகலாக நடை திறந்திருக்கும். திருத்தேர் தலையலங்காரம் இரவு முழுவதும் நடைபெற்று, 30 அடி தேரில் ஓலை பிடாரி அம்மனும், 29 அடி தேரில் மதுரைக் காளியம்மனும் எழுந்தருள்வார்கள். இவ்விரு தேர்களையும் பக்தர்கள் தங்கள் தலையிலும், தோளிலும் சுமந்து திருவீதி உலா வருவார்கள்


                  


 பிரார்த்தனை: 


அம்மனுக்கு தொடர்ந்து 9 அமாவாசை நாட்களில் சந்தனாதி தைலம் அபிஷேகித்து, எலுமிச்சை பழ தீபமேற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை சமர்ப்பித்து வழிபட்டு வந்தால் வியாபாரத்தில் மிகுந்த லாபம், திருமண யோகம், கல்வியில் சிறப்பு உள்ளிட்ட சகல நற்பேறுகளும் கிட்டும்.   


தல மரமான வன்னி மரத்தில் அமாவாசை நாளில் தொட்டில் கட்டி, தொடர்ந்து 11 அமாவாசை நாட்களில் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். காளியம்மனுக்கு காவேரி நீரால் அபிஷேகம் செய்வது விசேஷம். 


நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல்  முதல் இரவு 9.00  வரை.


திருவிழாக்கள் : பங்குனித் தேர்த்திருவிழா, ஆனித் திருமஞ்சன விழா,

No comments:

Post a Comment