Tuesday 9 October 2018

எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம்

திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது
(எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம். அவரவர் பிறந்த தினங்களிலும், திருமண ஆண்டு நிறைவு நாட்களிலும், குறிப்பாக 60, 80 ஆண்டு வயது நிறைவு நாட்களிலும் இப்பதிகத்தை ஓதி உரிய தான தர்மங்கள் அளித்து வந்தால் அகால மரணம் ஒருக்காலும் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம். நீண்ட ஆயுள் கிட்டும்).




துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.

மந்திர நான்மறையாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க் கிடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.

நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.

கொங்கலர் மன்மதன் வாளி ஐந்தகத்து
அங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கரவின் படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே.

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மைவினை அடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையிலுந் துணை அஞ்செழுத்துமே.

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறு
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.

வண்டமரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.

கார்வணன் நான்முகன் காணுதற் கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.

புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்துதேறின
வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.

நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும்அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்