Wednesday 17 October 2018

தற்கொலை பற்றிய கேள்வி பதில்






அடியார்

குருதேவா, ஒருவருக்கு ஆயுள் 60 வருடங்கள் என்று அவர் ஜாதகத்தைப் பார்த்து ஆயுள் கணித்துச் சொன்னார்கள். ஆனால், அவர் 40 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதனால் ஜோதிடமே பொய் என்று சொல்கிறார்களே.

சற்குரு
ஜோதியிடம் இருந்து வந்ததால் அதை ஜோதிடம் என்று சொல்கிறார்கள். இறைவனான ஜோதியிடம் பிறந்து வந்த ஒரு கலை பொய்யாகுமா? யோசித்துப் பார். ஒரு காலமும் ஜோதிடம் பொய்ப்பது கிடையாது. ஜோதிடக் கலையைப் பயன்படுத்துவதில்தான் குழப்பங்களும், தவறுகளும் ஏற்படுகின்றன. நீ கூறியபடி 60 ஆண்டு காலம் ஆயுள் உடையவர் 40 வயதில் இறந்தால் அதை எப்படி ஜோதிடத் தவறு என்று சொல்ல முடியும். அந்த மனிதனுடைய ஆயுள் 60 ஆண்டு காலம். 40வது வயதில் தற்கொலை செய்து கொண்டு அவன் உடல் மறைய வேண்டும் என்பது அவன் ஜாதகத்øதை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். பாக்கி உள்ள 20 வருடங்களுக்கு அவன் மனித உடல் இல்லாத ஆவியாக அலைந்து விட்டு 60 வருடங்கள் முடிந்த உடன் வேறு லோகத்திற்குச் சென்று விடுவான். இதுதான் ஜோதிடத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் முறையாகும்.

நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலம் முடியும் வரை மனித ஆவி தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே சுற்றிச் சுற்றி வரும். அந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட அது நகர்ந்து செல்ல முடியாது. அது மட்டுமல்ல. அவ்வாறு அந்த ஆவி நகர முடியாத நிலையில் இருக்கிறது என்பதை மற்ற ஆவிகள் எளிதில் தெரிந்து கொள்வதால், அங்குள்ள தீய ஆவிகள் இந்தத் தற்கொலை செய்து கொண்ட ஆவியைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும். ஆவிகள் தரும் வேதனைகளை எல்லாம் வார்த்தைகளால் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட 20 ஆண்டு ஆவி வாழ்க்கைக்குப் பின்தான் அந்த ஆவி நிலையிலிருந்து விடுதலை பெற்று அடுத்த உயிர் நிலையை அடைய முடியும்.
இதை மக்கள் அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மனிதப் பிறவி என்பது கடவுள் மனிதனுக்குக் கொடுத்த ஒரு வெகுமதி. தற்கொலை செய்து கொள்வது என்பது பரிசைக் கொடுத்தவர் முகத்திலேயே திருப்பி அடிப்பது போலாகும். இந்த நன்றி கெட்டக் காரியத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்புப் பெறவே முடியாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

அடியார்
குருதேவா, பொதுவாக மக்கள் தங்களால் தாங்க முடியாத வயிற்று வலி, புற்று நோய், கடன் தொல்லை, காதல் தோல்வி போன்ற பிரச்னைகளால்தானே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்?

சற்குரு
மேலோட்டமாகப் பார்த்தால் உங்கள் கூற்றில் உண்மை இருப்பது போல் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எது உண்மை நிலை என்பது புரிய வரும். இன்னா முற்பகல் செய்யின், இன்னா பிற்பகல் விளையும் என்பதுதானே பழமொழி. நமக்கு ஒரு துன்பம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நாம் அறிந்தோ அறியாமலோ முன்பு செய்த வினைகளே காரணம். தவறு செய்தவன் தண்டனையை மனதார ஏற்றுக் கொள்வதுதானே முறை. உலகச் சட்டமும், தெய்வீகச் சட்டமும் இதில் தவறுவது கிடையாதே.
தற்கொலை செய்து கொள்வதால் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? உன்னிடத்தில் ஒருவன் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டால் அந்த கடன் பாக்கி தீர்ந்து விடுமா? நன்றாக யோசித்துப் பார். அவன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அந்த ஆயிரம் ரூபாய் கடனை உரிய வட்டியுடன் சேர்த்து உன்னிடமோ, உன் பரம்பரையில் வரும் யாரிடமோ கொடுத்தால்தானே அந்தக் கடன் பாக்கி தீரும். கடனுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டால், கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போவதோடு, தற்கொலை செய்து கொண்ட பின் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலம் வரை ஒரே இடத்தில் நகராமல் இருந்து எல்லா ஆவிகளின் தாக்குதல்களையும் அனுவித்துக் கொண்டு, மனித ஆயுள் முடிந்த பின் இறைவனை அவமதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான தண்டனையையும் அனுபவித்தாக வேண்டுமே. இவ்வளவு வேதனைகள் தேவைதானா?

எந்த மனிதனுக்கும் அவன் தாங்க முடியாத கஷ்டத்தை இறைவன் கொடுப்பதில்லை என்பதே இறை நியதி.
2007ம் ஆண்டு முதல் குடும்பம், தொழில், சமுதாயப் பிரச்னைகளால் தற்கொலைகள் நிறைய நிகழ வாய்ப்புண்டு என சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. இறை நம்பிக்கை குறைவதே தற்கொலை எண்ணத்திற்கு மூல காரணம் ஆகும்.
இந்தியாவில் 3862 கோடி சுயம்பு லிங்க மூர்த்திகள் உள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 40,000 சுயம்பு மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். சுயம்பு மூர்த்தியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை அதிகரித்து தற்கொலை எண்ணங்கள் அகலும். கோடானு கோடி சிவலிங்க மூர்த்திகளை உங்களைச் சுற்றி வைத்துக்கொண்டு, அவர்கள் அருகிலேயே 24 மணி நேரமும் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் நம்பிக்கையை இழக்கலாமா? எப்போதும் இறை நாமத்தைச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் பெயரையே நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். சுயநாம ஜபமும் தன்னம்பிக்கையையும், இறை பக்தியையும் வளர்க்கும் உன்னத மார்க்கமே.

தொடர்ந்து ஒரே நாமத்தைச் சொல்வதால் சலிப்பு ஏற்படுவது போல் தோன்றினால் தேவாரம், திருவாசம் போன்ற பக்தி கமழும் பாடல்களைப் பாடி வாருங்கள். தினமும் ஒரு பாடலைப் பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை மணமுள்ளதாகும். தினமும் சாம கானம் ஓதி வந்தால் அல்லது சாம வேத பீஜாட்சரங்கள் பரிணமிக்கும் ‘மந்திரமாவது நீறு...‘ என்னும் திருஞான சம்பந்த மூர்த்திகளின் தேவாரத் திருப்பதிகத்தை ஓதி வந்தால் சாம வேதப் பிரியனான எம் ஈசன் உங்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அபரிமிதமாக வளர்த்து எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் கொடுப்பான். திருச்சி லால்குடி அருகில் உள்ள திருமங்கலத்தில் அருள்புரியும் ஸ்ரீசாமவேதீஸ்வர ஈசனை வாழ்வில் ஒரு முறையாவது சென்று தரிசித்து வந்தால் தற்கொலை எண்ணங்கள் உங்களை அணுகாது.
தற்கொலை என்பது உங்கள் பிரச்னைகளுக்கு நீங்கள் போடும் ‘கமா‘வே தவிர அது முற்றுப் புள்ளி ஆகாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.