Friday 28 August 2020

போகர் சொன்ன ராமாயண ரகசியம்

சித்தர்களின் குரல் என்ற முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது

போகர் சொன்ன  ராமாயண ரகசியம்
----------------------------------------------------------------

போகர் தன் அவதாரத் தடத்தை ஜெனன சாகரம் என்ற நூலில் விளக்கியுள்ளார். இந்த இடங்களை அற்புதமாக போகரின் சிஷ்யர் சந்திரசேகர் அவர்கள் அவர் எழுதிய நூலில் கூறியுள்ளார். அந்த மாபெரும் ரகசியத்தை இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்...

போகரே பல அவதாரங்களை எடுத்தவிதம் அதில் அறியமுடிகிறது. இப்படி எல்லாம் சாத்தியமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆம்! அஷ்டசித்தியால், ஒருவரே பல ரூபங்கள் எடுக்கலாம்.

ராமாயணத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன செய்ய வேண்டும் என்பது ராமாவதாரம் சிருஷ்டியாகும் முன்பே முடிவானது. ராவண சம்காரம் நடைபெற வேண்டும் என்பது குறிக்கோள். ஈசன் பணித்தபடி, முதலில் இந்திரன், இக்ஷ்வாகு சூரியவம்சம் ரகு குலத்தில் அயோத்தி நாட்டின் மன்னன் தசரதனாக வந்து உதிக்கிறார். அவர் வாரிசாக, கௌசல்யைக்கு மகனாக "ராமசந்திரா" என்ற பெயரோடு, சித்திரை மாதத்தில், விஷ்ணு ஏழாவது அவதாரமாக ஜெனனம் எடுக்கிறார்.

"நீ பிறந்துவிட்டாய் இனி எனக்கு வேலையில்லை; நான் இந்திர லோகத்துக்குப் போகட்டுமா?" என்று தசரதன் கேட்க, அதற்கு ராமன், "உன் பதிக்குப் போவது நல்ல விஷயம்தான். ஆனால், நான் வனவாசம் போகும்போது நீ போ" என்கிறார். அதேபோல், ராமன் காட்டுக்குப் போகும்போது, புத்திரசோகம் தாங்காமல் தசரதனும் உயிர்விடுகிறார். பிறந்தபோதே, ஆரண்ய காண்டம் கதையை போகர் இங்கே கோடிட்டுக் காட்டிவிடுகிறார். தன்னுடைய ஜெனன சாகரம் நூலில், இதை அவர் சொல்லாதவரை, ராமனாக வந்தது போகர்தான் என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

என்றதொரு வுத்தரவுங் கேட்டுகொண்டு
வியல்பாக யான்பிறந்தேன் ராமனாக
கன்றதொரு தெசரதனு மென்னைப் பார்த்துக்
காரணங்கள் முடிக்கவும் வந்தாயோ வென்றான்
வென்றதொரு வேலையெல்லாம் பார்த்துக் கொள்வாய்
வேலையில்லை யென்பதிக்குப் போறே னென்றான்
நன்றதொரு காரியந்தா னென்று சொல்லி
நான் வனத்திற் போம்போது போவென்றேனே

தசரதர் அறுபதாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தெரிகிறது. வால்மீகி ராமாயணத்தில், பாலகாண்டம், சர்கம் 20, பாடல் 10-11-களில், "விஸ்வாமித்திர மகரிஷியே, இப்போதே எனக்கு வயது அறுபதாயிரம் ஆகிவிட்டது. ராஜவாரிசு பிரச்னையும் எழுவதால், ராமனை இச்சமயம் நீங்கள் அழைத்துப்போவது சரியில்லை" என்று சொல்வதாக ஒரு வர்ணனை வருகிறது.

நந்தியம்பெருமான், ஒவ்வொரு அவதாரத்திலும் தீயவராகவே வேடமேற்று வதைபடுகிறார். இதில், ராவணன் கதாபத்திரம் அவரே.
ராமாயணம் உண்மையில் நடந்ததா? கைகேயியின் பேச்சைக் கேட்டு தசரதன் ஏன் ராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டும்? சீதையை ராமன் சந்தேகித்தது சரியா? சதுர்வேதம் கற்ற சிவபக்தனான ராவணன் நடந்துகொண்ட விதம் தகுமா? வாலியை மறைந்திருந்து ராமன் அம்பெய்திக் கொன்றது ஷத்ரியனுக்கு அழகா? கர்ப்பிணி சீதையை கானகத்துக்குத் துரத்திவிட்டது நியாயமா? ராமன் மட்டும் யோக்கியமா? என்று இப்படியெல்லாம் பட்டிமன்றங்களில் முழங்குவதில் அர்த்தம் இல்லை.

பேசுபவரின் பேச்சாற்றல், இலக்கிய ஆய்வுத்திறன், கதாபத்திர குணங்களின் ஒப்பீடு, வாதம்-பிரதிவாதம், தர்மம்-அதர்மம், ராமகாவியம் இயற்றியவரின் வர்ணனைகள், உவமையின் உயர்வுகள், இதுபோன்ற பலவற்றை வேண்டுமானால் பட்டிமன்றத்தில் வெளிப்படுத்தலாம்.

 ஆனால், மற்றதைக் கூறுபோட்டு, இப்படி நடந்திருக்கக் கூடாது, அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்றவிதமாக நாம் பேசுவது பொருந்தாது என்பது, மேற்படி பாடல்கள் மூலம் புலனாகிறது.

 ஏனென்றால், திரைக்கதை, வசனம், இயக்கம், கதாபத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு எல்லாமே திட்டமிட்டபடி நடந்துள்ளது. நாம் அதைப்பற்றி தணிக்கை செய்யவோ, விவாதிக்கவோ ஒன்றுமில்லை. ஆக, அவதாரங்களின் கதாபாத்திரமும், நடக்கவுள்ள கதையும், ஈசனால் முன்பே தீர்மானிக்கபட்டது என்று தெரிகிறதா?

ராமன் வாழ்ந்தது, கிருஷ்ணனுக்கு சில நூறு ஆண்டுங்களுக்கு முன்புதான் என்று சில ஆய்வாளர்கள் சொல்வதுண்டு. அதுவும் தவறு. ராவணனும் ராமனும் வாழ்ந்தது திரேதா யுகத்தில் என்று போகர் சொல்கிறார். அது, நடப்பு 7-ம் மனுவில் 24-வது சதுர்யுகத்தின் திரேதாயுகம் என்று வாயு புராணம் சொல்கிறது. அப்படி பார்த்தால், இன்றைக்குச் சுமார் 1.75 கோடி ஆண்டுகள் போயுள்ளதே! பட்டாபிஷேகம் நடந்தபின், ராமன் துவாபர தொடக்கம் வரை இருந்திருக்கலாம்.

திருந்தவே திரேதாதாயினுகத்திலப்பா
தீர்க்கமுடன் பிரளயங்கள் வந்தபோது
அருந்தவசி யாயிருந்த ராமர்தன்னை
அங்ஙனவே ககண்டுமல்லோ மதித்திட்டாரே
விதிப்படியே பட்டபிஷேகமென்று
விருப்பமுடன் தன்மனதில் உவந்து கொண்டு
நதிக்கரையத் தான்தேடி தீர்த்தங்கொண்டு
நமஸ்கார துதிகள் மிகசெய்திட்டாரே (போ.ஏ. 6895)

மண்டோதரியின் தந்தைதான் விஸ்வகர்மாவின் மகன் மயன். மாந்தை என்னும் இலங்கையின் ஒரு பகுதியை ஆண்டவன். வாஸ்து சில்பி மற்றும் அசுரத்தச்சன் என்று பெயர் பெற்றவன். வால்மீகி ராமாயணம்படி, லங்காபுரி ஏறக்குறைய 100 யோஜனை (4400 சதுர கி.மீ.) பரப்பளவோடு, அன்றைய குமரிக்கண்டம் வரை,  பெரும் நிலப்பரப்புடன் இருந்தது என்று தெரிகிறது. பிரளயங்களில் மூழ்கியபின் எஞ்சிய பெரும்பகுதி, இந்துமகா சமுத்திரத்தின் மேற்கே மடகாஸ்கர்வரை இருந்திருக்கும் என நம்பப்படுகிறது.

 லங்காபுரி முழுதும் தங்கத்தால் ஆனது என வால்மீகியும், போகரும் தத்தம் நூலில் சொல்லியுள்ளார்கள். ராவணின் பராக்கிரம கோட்டை அமைந்த விதம், காவல் கெடுபிடிகள், சொர்ண கிடாரங்கள், திரேதா யுகத்தில் சப்தசாகரங்கள் பொங்கி கடல்கோள் வந்தபோது, அரண்மனை என்னவானது என்று பல விஷயங்களை போகர் நேரடி வர்ணனைகளாக, மூன்றாம் காண்டம் பாடல்களில் தந்துள்ளார்.

இக்ஷ்வாகு வம்சத்தை அழிக்க சபதமிட்ட ராவணன், நான்கு லட்சம் ஆண்டுகள்வரை வாழ்ந்துவிட்டு, ரணகளத்தில் மாண்டான். ராமனைவிட 43 தலைமுறைகள் ராவணன் மூத்தவன் என்கிறார் வால்மீகியார்.

 அகத்தியர்தான், "ததோ யுத்த பரிஸ்ரான்தம் ஸமரே சிம்தயா ஸ்திதம்" என்று தொடங்கும் "ஆதித்ய ஹ்ருதயம்" ஸ்தோத்திரத்தை ராமனுக்கு உபதேசம் செய்து, ராவணனுடன் போரில் வெற்றியடையச் செய்தார்.

பாதி பிராமணன், பாதி ராட்சதனான ராவணன், பிரம்ம கவசத்தையும், சந்திரஹாச வாளையும், ஈஸ்வர பட்டமும் வரமாகப் பெற்றதால், அவனுக்கு ஆணவம், பேராசை அதிகமாக இருந்தது. ஈசனையே அசைத்துப்பார்க்க முயன்று, கீழே தள்ளப்பட்டுத் தோற்றான். அதன் அறிகுறியாக, கயிலாயத்தின் தெற்கு முகத்தில் நீண்ட ஆழமான வடுவாக ஒரு கோடு இருப்பதைக் காணலாம். முன்னொரு சமயம், கயிலாயத்தில் "உன் இலங்கை சாம்ராஜ்ஜியம் ஒரு வானரத்தால் அழிவது உறுதி" என்ற சாபத்தை ராவணன் பெற்றான்.

மனிதனாக அவதாரம் எடுத்த ராமன், வைகுண்டத்துக்குப் போகும் சமயம் வந்துவிட்டதை உணர்ந்த ரிஷியார், யமதர்மனை செயல்படத் தூண்டுகிறார். ஆனால் யமனோ, ராமனை அழைத்துப்போகத் தயங்குகிறார். "ஏன் தயக்கம்?" என்று ராமன் கேட்க, "அனுமனை நினைத்தால் அச்சமாக உள்ளது. என்னை உங்களிடம் நெருங்க விடமாட்டார்" என்கிறார். அனுமனை திசைத்திருப்ப, ராமன் ஓர் உபாயம் செய்கிறார். தன்னுடைய மோதிரத்தை கீழே வேண்டுமென்றே தவறவிடுகிறார். அது பூமிப் பிளவில் போய் விழுந்துவிட, அதை மீட்க அனுமனைப் பணிக்கிறார். அந்த அங்குல்யம் (மோதிரம்), நேராகப் பாதாள நாகலோகத்தில் போய் விழுகிறது. அங்கே வாசுகி காவல் காக்கிறாள். தன்னைச்சுற்றி ஆயிரக்கணக்கான மோதிரங்கள் குவியலாக இருப்பதைக்கண்டு அனுமன் குழம்பி நிற்கிறார்.

"ஸ்ரீராமனின் மோதிரத்தை நீயே கண்டெடு" என்று வாசுகி சொல்லும்போதுதான், அதன் விபரீதம் உணர்ந்தார். இத்தனை மோதிரங்கள் யாருடையது என்று சந்தேகக்கேள்வி கேட்க, அதற்கு வாசுகி, "பல யுகங்களில் வந்துபோன ராமன்களின் மோதிரங்களே இவை" என்கிறாள். "இதற்கு என்ன அர்த்தம்?" என்று அனுமன் கேட்க, அதற்கு வாசுகி, "ஒவ்வொரு திரேதா யுகத்திலும் ராமன் பிறப்பார். இறுதியில் எப்போது அந்த மோதிரத்தைத் தேடி ஒரு குரங்கு வருமோ, அப்போது ராமன் பூவுலகைவிட்டு வைகுண்டம் போவார் என்பது விதி" என்றாள்.

இறுதியில், ராமனுக்கு என்னவானது என்பதை, போகர் ஏழாயிரம் நூலின் நான்காம் காண்டத்தில் உரைக்கிறார். அது கீழ்வருமாறு..

வசனித்தார் மிருகமென்ற அனுமார்தானும் வன்மையுள்ள வானரமாங்கூட்டந்தன்னில்
புஜவீரபராக்கிரம வீரனான புனிதமுள்ள ஆஞ்சநேய ஜாதிகண்டீர்
சதகோடி வானரமாய் ஆஞ்சநேயன் தாரணியில் தேவனாயிருப்பாரானால்
குசமுடைய ஸ்ரீராமர் பக்கல்நின்று குவலயத்தில் மிகயுத்தம் செய்தார்தானே
தானான ஸ்ரீராமர்க் குதவியாக தாரிணியில் வெகுயுத்தம் செய்துமென்ன
கோனான ஸ்ரீராமர் மாண்டுபோனார் குவலயத்தில் வானரங்களெல்லாம் மாண்டார்
பானான பாருலகில் ஆஞ்சநேயர் படைக்கூட்டம் தன்னுடனே மண்ணாய்ப்போனார்

பூலோகத்தில் ராம அவதாரம் எடுத்த விஷ்ணு, சரயு நதியில் மூழ்கி, அப்பிறவியை முடித்து, யமனுடன் வைகுண்டம் புறப்பட்டுப் போகிறார். பூதேவி அம்சமான சீதா பிராட்டி, முன்னரே வைகுண்டம் போய்விடுகிறாள். யுகந்தோறும், ஆஞ்சநேயர் நித்திய சமாதியில் இருக்கிறார்.

சப்த சிரஞ்ஜீவிகள் (கிருபாச்சாரியார், மஹாபலி, அஸ்வத்தாமர், பரசுராமர், விபீஷணர், வியாசர், ஹனுமார்) பட்டியலில் இடம்பெற்றார்.

சிவபெருமான், மனிதனாக அவதரித்திருந்தால், ராமனுக்கு முக்கியத்துவம் இல்லாது போகும். ஆகவே, ராமனுக்குத் தாசனாக வந்தார். இரண்டு அவதாரமும், பெரிய சக்திகளாகப் பார்க்கப்பட்டன.

 குமரிக்கண்டம் பகுதியில், மனிதர்களைவிட பெரிய உருவமும், கட்டமைப்பும் கொண்ட ஹனுமார், சுக்ரீவன், வாலி போன்ற ஆதிகால மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம், ராமாயணத்தில் தெரிகிறது. ஆகவே, போகருடைய ஜெனன அவதாரங்கள்படி, ராம காவியம் உண்மையே!

No comments:

Post a Comment