Saturday 29 August 2020

என் ஆத்மனுடன் ஒரு உரையாடல்



என் ஆத்மனுடன் ஒரு உரையாடல் 


அய்யனே  குரு என்பவர் எதற்காக , அவரால் நமக்கு என்ன கொடுக்க முடியும்

 

மகனே ஒன்றை நன்றாக தெரிந்து கொள் குரு என்பவன் நான் மட்டுமே. நான் தான் உன்னை இயக்குபவன்

அப்போது நீ கேட்கலாம், நீங்கள் என்னை இயக்குபவன் என்றால் , நான் யார் என்று நீ கேட்கலாம்.

இப்போது உள்ள நிலையில் உரைக்க வேண்டுமானால்,  இந்த உடல் தான் நீ என்ற உணர்வில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். உன்னுடைய உணர்வில் எது புரிகிறதோ அது தான் நீ என்று எண்ணம் கொண்டு வாழ்ந்து வருகிறாய்.

உன் உடலுக்கு மேலே ஏதாவது ஒன்றை உணர்ந்தால் தான், நீ உடல் இல்லை, நீ வேறு ஒரு வஸ்து என்ற உணர்வு ஏற்படும்.

அதற்கு தான் யோக பயிற்சிகள், நிலைகள், எல்லாமே.

ஆகவே உனது உயிர் தான் உண்மை. அது தான் உன் குரு.

அதை உடல் வசம் ஒப்படைக்காமல் உயிரை எவன் ஒருவன் என் வசம் ஒப்படைப்பானோ அவனை நான் இயக்குவேன்,

அவனுள்ளே அமர்ந்து அவனுக்கு வழிகாட்டுவேன்.

ஒரு கட்டத்தில் நான் தான் அவன் ; அவன் தான் நான் என்று ஒன்றர கலக்கும் நிலையில் அவன் உடல் அடையாளம் இழந்து பெரும் பேறு பெற்று என்னுள் கலப்பான், அதற்கு தான் சமாதி என்று கூறுவார்கள்.

எனவே, இவ்வாறு இருக்கும் நிலையில், ஒரு குரு என்பவர் உண்மையான குருவான என்னை உணரும் வகையில் அவனுக்கு சுட்டி காட்டி, அவன் ஆத்ம விசாரங்களை போக்கி, ஞானம் பெருக்கி, அவனை உள் முகமாக பயணம் செய்ய தூண்டு கோலாய் இருந்து அவனே அவன் உண்மை நிலையை அடையதுவாக இருப்பார்.

அவ்வண்ணம் ஒரு குருவால் வழி காட்ட முடியுமானால், அவரை இயக்குவதும் நானாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்.

தன் ஆத்மாவுடன் ஐக்கியமான ஒருவன் இறை நிலையில் - "தான்" செல்லும் வழியில் உடன் வருமாறு மற்றவர்களையும் அழைப்பதுவே சத்சங்கம் மற்றும் குருவின் செயலாகும்.

உண்மையில் பார்க்க போனால் எல்லோரும் குருநாதர்களே, அனைவருக்குள்ளேயும் இயக்கமாக இருப்பது நானே ஆகும். மனம் புற விஷயங்களில் சிக்கி கொண்டு என் இயக்கத்தை உணராமல் அழிவான பொருளற்ற மாய ஆசாபாசங்களில் ஒருவன் சிக்கி கொண்டு என்னை மறந்து விடும் போது அவனுக்கு என்னை நினைவூட்டவே மரணம் என்னும் நிலையை முதலில் தந்து பின்னர் மீண்டும் அவனுக்கு புதிய பிறவி வாழ்வு அளித்து இந்த முறையாவது இறை வழியில் சென்று என்னை மீண்டும் வந்து அடை என்று எண்ணி தான் நாங்களும் அவர்களுக்கு பிறவி அளிக்கிறோம்.

ஒரு முறை இறை தேடலில் ஈடுபட்டுவிட்டால் அவன் மீண்டும் மீண்டும் எத்தனை பிறவி எடுத்தாலும் பழைய ஞாபகத்தில் மீண்டும் இறைவனை தேடி நிச்சயம் செயலாற்றுவான். அவனுக்கு நாங்களும் பல வகைகளில் துணையாக இருப்போம்.

அவனுக்கும் எங்களுக்கும் ஒரு நினைவூட்டுதல் நிகழ்வாக ஆலயங்கள், வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் செய்து அவன் மீண்டும் மீண்டும் இறைவனை நாடி அவன் மனம் சென்று மாய விஷயங்களில் சிக்கி கொள்ளாமல் இருக்கும் வழிகள்.

தெய்வ வழிபாடு குறைய குறைய மக்களுக்கு மறதி அதிகமாகி பித்தம் தலைக்கேறி என்ன செய்வதறியாது செயல்கள் செய்து, தன்னை முன்னிலைப்படுத்தி, அஹங்காரம் கொண்டு இருக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் எங்களை நூறு சதவிகிதம் மறந்த நிலையில் அவனுக்கு நாங்கள் அளிக்கும் ஆற்றல் தடைபட்டு மீண்டும் இறப்பு சூழலில் வந்து விழுகிறான்.

அது எந்த வயதில் வேண்டுமானாலும் நடக்கலாம். அவனவன் விதிப்படி பாவ புண்ணிய பலன்களின் படி அந்த இறக்கும் வயது தீர்மானிக்கப்படுகிறது.

இதை விடுத்து ஒருவன் தற்கொலை செய்வதும் கொலையை செய்வதுவும் எந்த ஒரு முழுமையான பலன்களையும் தராமல், அவன் ஆயுள் முடியும் வரை உருவமற்ற ரூபத்தில் வேதனையுடன் அலைந்து திரிந்து அவன் காலம் வரும் வரை அடுத்த பிறவிக்காக காத்து இருக்க வேண்டும். இதனை நன்றாக புரிந்து கொள் , மகனே.

உனக்கு நீ யார் என்றும் நான் யார் என்றும் நமக்குள் என்ன உறவு என்றும், இப்போது அந்த உறவு நிலையில் எந்த அளவுக்கு உறுதி உள்ளது, மேலும் உறுதியடைய என்ன செய்ய வேண்டும், எவ்வளவு காலம் ஆகும், எல்லாமே உனக்கு புரியும். ஏனென்றால் இதை உன் மூலம் எழுதுவதே, நான் தானே மகனே.

காலம் வரும் வரை காத்திரு. உன் செயலாவது யாதொன்றும் இல்லை. செய்பவனும் செயலும் பொருளும் விளைவும் புண்ணியமும் பாபமும் கர்மமும் முக்தியும் மோட்சமும் தெய்வமும் ஆத்மனும் உள்ளும் புறமும் அனைத்துமே நான் தான் என்பதை அறிவாய் . ஆசிகள்.

 
________________________________________________________________

மேலே உள்ள அனைத்துமே என் மனதினுள் நடந்த உரையாடல்கள். இவை ஒருமுறை நடந்து விட்டால், பின்னர் நாம் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பும் போது சில மணி நேரங்களில் என்ன கேட்டோம், என்ன விளக்கம் கிடைத்தது என்பது நினைவில் இருந்து அகன்று விடுகிறது. எனவே இதனை ஒரு பதிவாக எழுதி வைத்தால் நமக்கே நாளை பார்த்து படித்து கொள்ள எளிதாக இருக்கும்.

நமது நிலையை ஒத்த சக ஆன்மீக சிந்தனையாளர்களும் சக ஆன்மீக பயணிகளுக்கும் கூட உற்சாகமூட்டும் நோக்கத்தில் இந்த பதிவு இங்கே பதிந்து வைக்கப்பட்டது.

வேறு எந்த நோக்கமும் இல்லை. இதில் எந்த கருத்தையும் யார் மீதும் திணிக்கவில்லை. நான் உணர்ந்த உண்மையை என் மொழியில் உரைத்தோம். அவ்வளவே.  தன்  உள்ளே அகத்தியம் வைத்து உணர்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

 

நன்றி

 

தி . இரா . சந்தானம்

கோவை 9176012104

பொகளூர் அகத்தியர் ஜீவா அருள் நாடி பீடத்தின்  சீடன்

என் குருஜி - இறைசித்தர்
29/08/2020, 13:37

3 comments:

  1. நன்றி இறைவா

    ReplyDelete
  2. sir,
    I m from chennai my brother Narendran not return home past 24 hours he was psychiatric patient under medical treatment. I kindly request you to prayer to Agasthiar GuruDev for return home immediately and safely.
    Thanks for your prayer submit to Guru Agasthiar mamuni. my mail-karthisrsh@gamil.com cell 9551457151

    ReplyDelete