Thursday 5 March 2020

சத்தியம் - எனது ஆக்கம்

சத்தியம் என்றால் என்ன?
சத்து இயம், சத்தை எடுத்து இயம்புவது சத்தியம்
சத்து என்றால் உயிர், இயம்புவது என்றால் உயிரை போற்றி வளர்ப்பது
இயம்பு என்றால், இய அம்பு - அம்பு தான் நாம், இயக்குபவன் அல்லது எய்பவன் பரம்பொருள்.
ஆகவே , உயிரின் இந்நிலையை எடுத்துரைப்பது தான் சத்தியம்.

சத்திய பாதை?
சத்தியத்தை சென்று அடையும் வழி.

அடைந்தால் என்ன கிடைக்கும்?
மோக்ஷம் கிடைக்கும், முக்தி கிடைக்கும்.

மோக்ஷம் முக்தி என்றால் என்ன?
மோக்ஷம் முக்தி என்றால் பிறவா நிலை.

ஏன் பிறவா நிலை வேண்டும்?
ஏனென்றால், இறந்து மீண்டும் பிறக்கும் நிலை கீழ் நிலை. தன் உயிரை உடலில் தக்க வைத்து கொள்ள முடியாத நிலை.

அப்படி என்றால் எவ்வாறு உயிரை தக்க வைத்து கொள்ள முடியும்?
அது தான் இறவா நிலை, மரணம் இல்லாத பெரு வாழ்வு

அப்போது இறவா நிலை அடைந்தால், பிறவா நிலை என்பது தேவையில்லை அல்லவா?.
ஆம்.

இறவா நிலைக்கு செல்லும் வழி எது?
அது தான் சத்திய வழி, சத்திய பாதை. ஏற்கனவே கூறி உள்ளது போல,உயிரை உய்ய வைக்கும் வழிகள் கொண்டது சத்தியம்.
அதில் ஆன்மீகம் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த உடலுடன் சூக்ஷும உடலும் சேர்ந்தே உள்ளது.
சூக்ஷும உடல் பலம் பெற வேண்டும்.
அப்போது தான் சூக்ஷும தேகம் மூலம் செயல்பட முடியும்.
தூல உடலில் இருந்து கொண்டே சூக்ஷும உடலை கொண்டு சூக்ஷ்ம உலகத்தில் செயல் ஆற்ற முடியும்.
அப்போது சூக்ஷும தேகத்தின் பலத்தால் தூல தேகமும் பலம் பெறும். சூக்ஷும தேகம் கொண்டு பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்த முடியும்
சூக்ஷும தேகத்தின் பலம் இருந்தால், உணவு உறக்கம் என்பது தேவை இல்லாமல், முதுமை இல்லாமல் இருக்கலாம்.
பல சித்துக்கள் புரியலாம். தோன்றி மறையலாம்.

சூக்ஷும தேகம் எப்படி இருக்கும், எப்படி தெரிந்து கொள்வது?
சூக்ஷும தேகத்தை உணர்ந்து கொள்ள முறையாக யோக பயிற்சிகளை குரு மூலம் உபதேசம் வாங்கி சிரத்தையாக பயின்று வந்தால் தானாக ஒரு நாள் அதை உணரும் தன்மை வரும்.

குரு யார், அவரை எப்படி கண்டு கொள்வது?
குருவானவர் உன்னுள்ளே உள்ளார்

என்னுள்ளே எங்கே உள்ளார்?
சூக்ஷுமமாக உள்ளார்.

அவரை எப்படி அழைப்பது?
மனம் அடங்கி, எந்த எண்ணமும் இல்லாமல், அமைதியாக அமர்ந்து இருந்தால் உணரலாம்.
மனம் அடங்கும் இடத்தே மூச்சு அடங்கும், மூச்சு அடங்கும் போது உயிர் இறைவனுடன் இணையும். ஆனால் மரணம் நேராது. உயிருடன் உள்ள போதே மரணத்தின் அனுபவம் கிடைக்கும், ஏனென்றால் மூச்சு தான் அடங்கி விடுகிறதே....

அனைவரும் ஞானம் பெறுவோம். ஞானம் பெற்றால் மனம் எளிதில் அடங்கும். மனம் அடக்கினால் மூச்சு நிற்கும். யோகம் சித்திக்கும்.

நாம் விளக்கி கூறும் இந்த சத்தியம் தான் அகத்தியம், அகத்தியமே சத்தியம். அகத்தியரே உத்தமர். நாம் செல்லும் பாதை சத்திய பாதை, அகத்தியர் நம் கை பிடித்து அழைத்து செல்லும் பாதை. இணைந்து செல்வோம். முக்திக்கு வித்திடுவோம். 🙏🙏🙏🙏

சத்திய பாதையில்.... TRS...