Thursday 18 June 2020

சனத் குமாரர் உபதேசம்

சனத்குமாரர் என்ற மகாயோகியை நாரதர் அணுகி, ‘ஐயனே! எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.‘‘நல்லது நாரதா! உபதேசம் செய்வதற்கு முன்னால் ஒரு வார்த்தை, உனக்கு ஏற்கெனவே என்னென்ன தெரியும் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிடு. அதன்பிறகுதான் எதை உபதேசிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்!’’ என்றார் சனத்குமாரர். நாரதர் தான் கற்ற வித்தைகளைக் கூறத் தொடங்கினார்.
‘‘குருதேவா! எனக்கு ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் தெரியும். இதிகாச, புராணங்கள் எல்லாமும் தெரியும். வேதங்களின் வேதமாகிய இலக்கணம், பிதுரு, கல்பம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், கால நிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருத்தம், பூதவித்தை, போர்முறை, வான சாஸ்திரம், சர்ப்ப வித்தை, கந்தர்வ வித்தை இவை அனைத்துமே தெரியும்’’ என்றார் நாரதர்.
அப்படிச் சொன்ன நாரதர் தன் சந்தேகம் ஒன்றையும் பணிவுடன் கேட்டார்: ‘‘தேவா! இவ்வளவு வேத மந்திரங்களை நான் கற்றுக்கொண்டேனே தவிர, துன்பங்களைக் கடந்து செல்லும் ஆத்ம யோகத்தை அறிந்தவனாக இல்லை. ‘எவனொருவன் ஆத்மாவை அறிந்துகொள்கிறானோ அவனே துன்பத்தைக் கடப்பான்’ என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தயை கூர்ந்து எனக்கு நீங்கள் துன்பத்தைக் கடக்கும் மார்க்கத்தைக்
கற்றுத் தரவேண்டும்’’ என்றார் நாரதர்.
சனத்குமாரர் சிரித்தார். ‘‘நாரதரே! நீர் கற்றுக்கொண்ட வித்தைகள் எல்லாம் பெயரளவில் வித்தைகளே. அவற்றைவிடப் பெரிய விஷயங்கள் சில உண்டு. அவற்றின் மூலமே ஆத்மாவை அறிய முடியும்’’ என்றார் அவர்.‘‘எவையெவை, பெரியவை?’’ என்று கேட்டார் நாரதர்.‘‘நீ சொன்ன பெயர்கள் எல்லாவற்றையும்விட வாக்குப் பெரியது. அந்த வாக்கைவிட மனது பெரியது. எப்படி ஒரு கைப்பிடிக்குள் இரண்டு நெல்லிக்காயோ, இலந்தைப் பழமோ அடங்கி விடுகிறதோ, அப்படியே பெயரும், வாக்கும் மனதுக்குள் அடங்கி விடும். மனத்தால் நினைத்த பின்தானே நீ சொல்லுகிறாய், செயலில் இறங்குகிறாய் அந்த மனதுதான் ஆத்மா. அந்த மனதுதான் உலகம்.
அந்த மனதுதான் பிரம்மம். ஆகையால் மனதை நேசிப்பாயாக. அதே நேரத்தில் இன்னொன்று - சங்கற்பம் செய்வது மனதைவிடப் பெரியது. எப்போது ஒருவன் சங்கற்பம் செய்யத் தொடங்குகிறானோ, அப்போது யோசிக்கத் தொடங்குகிறான் - அது மனது. உடனே பேச ஆரம்பிக்கிறான் - அது வாக்கு. அந்த வாக்கு பெயர் வடிவமாகிறது. அதில் மந்திரங்கள் ஒடுங்கி விடுகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்கி விடுகின்றன. அதேநேரத்தில் சங்கற்பத்தைக் காட்டிலும் தியானம் பெரியது. பூமி தியானம் செய்கிறது. வானம் தியானம் செய்கிறது. மலைகள் தியானம் செய்கின்றன.
ஆகையால் பெருமைக்குரிய மனிதர்கள் தியான பலத்தில் ஒரு அம்சத்தையாவது பெற்றிருக்கிறார்கள். அற்பர்களுக்கும் கலகக்காரர்களுக்கும் அது வாய்ப்பதில்லை. ‘‘தியானத்தை விடவும் பெரியது எது என்று கேட்கிறாயா? விஞ்ஞானம் பெரியது. ஆத்ம பலம், விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரியது. விஞ்ஞானம் என்பது அனுபவம், அவ்வளவுதான். ஆத்ம பலம் படைத்த யோகி, நூறு விஞ்ஞானவான்களை ஆட்டி வைக்க முடியும். ஒருவன் பலமுள்ளவனாக இருந்தால் அவன் படுக்கையில் கிடக்க மாட்டான்; எழுவான்; நடப்பான்; சேவை செய்வான்.’’நாரதருக்கும் சனத்குமாரருக்கும் நடந்த இந்த விவாதத்தில் ஆத்ம பலமே
பொதுவாகப் பேசப்படுகிறது.
ஆத்ம பலம் என்பது என்ன? தன்னை உணர்தல்.‘‘நானே பிரம்மம்! நானே ஈஸ்வரன்’’ என்ற நிலையை எய்துதல். கடமைகளை ஒழுங்காகச் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது. ஒரு கதை உண்டு. ஒரு நதியில் வெள்ளம் வந்து, பாலத்தின் இரண்டு பக்கங்களையும் அடித்துக்கொண்டு போய்விட்டது. பாலத்தின் நடுவே ஒரு குடும்பம் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பரிதாபப்பட்ட ஒரு பணக்காரர், ஒரு ஓடக்காரனைக் கூப்பிட்டு அவர்களைக் காப்பாற்றும்படியும் நூறு ரூபாய் தருவதாகவும் சொன்னார். ஓடக்காரன் அவர்களைக் காப்பாற்றினான். நூறு ரூபாய் எடுத்து அவர் கொடுத்தார்.
அவன் ‘இது என் கடமை’ என்று கூறிப் பணத்தை வாங்காமல் மறுத்துவிட்டான். இந்த பலன் கருதாத கருமமே, ‘கடமை’ என்பது. இதைக் கருமம் என்பதைவிடத் ‘தர்மம்’ என்பது பொருந்தும். இத்தகைய தர்மம் தலைமாட்டில் நின்று காப்பாற்றும்.‘‘நான் லண்டனுக்குப் போனேன்; நான் பாரிஸுக்குப் போனேன். அனுபவித்தேன்’ என்ற அகங்காரம் கடைசிக் காலத்தில் எந்த உதவியையும் செய்யாது. முதலில் இந்த ‘நான்’ தன்மையை வென்றவர்கள்தான் பெரிய யோகிகளாக மாறுகிறார்கள்.
அந்த யோகிகளிடம் இறைவனே வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், ‘பொன்னைக் கொடு, பொருளைக் கொடு’ என்று கேட்க மாட்டார்கள்; ‘என்னையே எனக்குக் கொடு’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தன்னை உணர்ந்து கொண்டுவிட்ட மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான். ‘அவன் செத்து விட்டான்’ என்று சொன்னால் ‘அவன் உடம்புதான் செத்து விட்டது. ஆத்மா சாகவில்லை’ என்பது பொருள். ‘என்னையே எனக்குக் கொடு’ எனும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.
துயரங்கள் தோன்றாமல், சிரித்துக்கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது அவன் உடம்பு அழிந்து விடுகிறது. இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள். 🙈🙉🙊 பிரியமுடன் ஜெ முனீஸ்வரன் சென்னை

No comments:

Post a Comment