Tuesday 23 June 2020

நாம மகிமை

நாம மகிமை
...!

நாம மகிமையை விளக்கும் பொருட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது  நம் ஸத்குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்கள் சொன்ன ஒரு அருமையான கதை தான் என் ஞாபகத்திற்கு வருகிறது. இதை விட சிறப்பாக நாம மகிமையை எடுத்துச் சொல்ல எதனாலும் முடியாது என்பதால் இதனையே இங்கே எழுதுகிறேன்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாவம் புண்ணியம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர். அதாவது இது செய்தால் பாவம், இது செய்தால் புண்ணியம் என்றெல்லாம் சொல்லி, இந்த பாவத்தில் இருந்து விடு பட இந்த பரிஹாரம் செய்ய வேண்டும், இந்த ஹோமம், இந்த யாகம், இந்த பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறி மக்களை இந்த யாகம், இந்த பூஜை, இந்த தானம் என்று மக்களை செய்யவைத்து அதற்காக அந்த மக்களிடம் இருந்து தானமாகவும், தக்ஷனையாகவும் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர். இதை கண்டு சற்றும் சகியாத ஸந்த் ராமதாசர் ஒரு வேலை செய்தார்.

ஒரு நாள் ஒரு உண்டிகோலை எடுத்துக் கொண்டு அந்த ஊரில், அந்த ஆசாமிகள் இருக்கும் தெரு வழியாக நடந்து போய் கொண்டிருந்தார்...அப்போது அவர் கண்ணில் பட்ட கிளிகளை எல்லாம்  பார்த்து உண்டிகோலால் குறிபார்த்து அடித்து ஒவ்வொன்றாக சாகடித்து சாகடித்து தன் தோளில் இருந்த பையில் போட்டுக்கொண்டே சென்றார். இதை பார்த்த அந்த ஆசாமிகள் குய்யோ, முறையோ என்று கத்திக்கொண்டு வந்துவிட்டனர். நீங்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள், இது எவ்வளவு பெரிய பாவம், இதை போய் நீங்கள் செய்து விட்டீர்களே என்று கூறினார். அதற்கு சற்றும் அசராத ஸந்த் ராமதாசர், சரி செய்துவிட்டேன் இப்போது என்ன செய்யமுடியும் என்றார். இதற்கு பரிஹாரம் செய்தாக வேண்டும் இல்லையேல் இந்த பாவம் உங்களை விடாது என்றனர். சரி செய்கிறேன் ஆனால் அந்த பாவம் என்னை விட்டு அகலவேண்டும் என்றார். கண்டிப்பாக அகலும் என்று உறுதி கொடுத்தனர் அந்த ஆசாமிகள்.

அவர்கள் சொன்ன அனைத்தையும் மகான் ராமதாசர் செய்து முடித்தார். நிறைய பணமும், பொற்காசுகளும் அவர்களுக்கு பரிகாரமாக அள்ளிக் கொடுத்தார். பிறகு எனது பாவம் என்னை விட்டு போய்விட்டதா என்றார். அவர்களும் நிச்சயாமாக உங்கள் பாவம் கழிந்துவிட்டது என்றனர். ஆனால் நான் கொன்ற ஒரு கிளி கூட எழுந்து பறக்கவில்லையே என்றார் சந்து ராமதாசர். அதெப்படி இறந்த கிளிகள் எப்படி உயிர் பெரும் என்றனர். பாவம் கழிந்தது என்றால் உயிர் பெறவேண்டும் அல்லவா? கிளிகளுக்கு உயிர் வந்தால் தானே என் பாவம் என்னை விட்டு அகன்றுவிட்டது என்று அர்த்தம் என்றார் சந்து ராமதாசர்.

அது நடக்காத காரியம். அது எப்படி சாத்தியம் என்றனர் அவர்கள். இப்படி தான் என்று தன் பையில் இறந்துகிடந்த ஒவ்வொரு கிளியாக கையில் எடுத்து ராம் ராம் என்று கூறி வானத்தில் விட்டெறிந்தார் அந்த கிளிகள் உயிர் பெற்று பறந்து சென்றது. இதை கண்டு வியப்படைந்த அந்த ஆசாமிகள் சந்து ராமதாசரின் திருவடிகளில் விழுந்து தங்கள் தவறை மன்னிக்குமாறு வேண்டினர். 

இறைவனின் நாமம் மிக பெரிய நன்மைகளை செய்யவல்லது. மகிமை பொருந்தியது. எனக்கு தெரிந்து எத்தனையோ பேர் இறைவனின் நாமத்தின் மகிமையாலேயே பெருந்துன்பத்தில் இருந்து விடுபட்டிருக்கின்றார்கள். அதனாலேயே நான் பக்தியை மட்டுமே அதிகம் நம்புவேன் அதிலும் மந்திர தந்திரங்களை விட நாம மகிமையை மட்டுமே அதிகம் நம்புவேன். அதை மட்டுமே பிரச்சனை என்று என்னை அணுகுவோருக்கு பரிந்துரைப்பேன். ஆனால் 100ல் இருவர் மட்டுமே அதனை செவி மடுப்பார் மற்றவர்கள் அவரவர் வினைவழியே சென்று துயருவர்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
'ராம' என்றிரண்டெழுத்தினால்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே!


No comments:

Post a Comment