Thursday 24 October 2019

உண்மை சம்வவம் - மஹா பெரியவா - இயற்கையாகப் பெய்து கொண்டிருந்த மழையை, ஒரே ஒரு கை அசைவில் நிறுத்திவிட்டார், மகான்.

கடவுளின் குரல்"

17 /04 /2019  குமுதம் இதழிலிருந்து...

"மழையே வா!"

ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் புனரமைப்புப் பணி நடந்து கொண்டிருந்தது. அதற்கான எல்லா விஷயங்களையும் காஞ்சி மகானின் ஆலோசனை கேட்டுக் கேட்டே செய்து கொண்டிருந்தார்கள், அந்தத் திருப்பணியைச் செய்து கொண்டிருந்த ஸ்தபதிகள்.

அந்த சமயத்தில் ஒரு நாள், அந்தக் கோயிலின் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்யலாமா? என்று கேட்டுச் செல்வதற்காக வந்திருந்தார், தலைமை ஸ்தபதி. அவர் செய்யலாம் என்று சொன்ன மாற்றங்களை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட மகாபெரியவா, "நீ சொல்றதையெல்லாம் இப்படி வார்த்தைகளா இருக்கறதைவிட படமா இருந்தா தீர்மானம் செய்யறதுக்கு சுலபமா இருக்கும்.  நீ ஒண்ணு செய். அந்தக் கோயிலோட புராதன அமைப்பு எப்படி இருக்கு என்பதை ஒரு வரைபடமா வரைஞ்சு எடுத்துக்கோ.  அதோட, இப்போ நீ சொல்ற மாற்றங்களை எப்படிச் செய்யப் போறே? அதை செய்த பிறகு அமைப்பு எப்படி இருக்கும்? என்பதை இன்னொரு படமா வரைஞ்சுக்கோ.  ரெண்டு படத்தையும் பார்த்து மாற்றம் செய்யலாமா? வேண்டாமான்னு தீர்மானிக்கறது சுலபமா இருக்கும்!" என்று சொன்னார்.

அப்படியே வரைந்து எடுத்து வருவதாகச் சொன்ன ஸ்தபதி, நாலைந்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் வந்தார்.

அவர் வந்த நேரம், மகாபெரியவா புனரமைப்புப் பணி நடந்துகொண்டிருந்த கோயிலுக்குப் பக்கத்தில், ஒரு அரசமரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்.

வரைபடங்களை எடுத்து வந்த ஸ்தபதி, அதை மகாபெரியவாளிடம் கொடுத்தார். தமக்கு முன்னால் ஒரு வஸ்திரத்தை விரித்துப் போடச் சொல்லி, அதில் அந்தப் படங்களை விரித்து வைக்கச் சொன்னார், மகான்.

அப்படியே ஒரு தூய்மையான துணி விரிக்கப்பட்டு, அதன் மேல், வரைபடத்தைப் பிரித்து வைத்தார், ஸ்தபதி.  சரியாக அதே நேரம், பொட் என்று ஒரு நீர்த்துளி ஸ்தபதி மேல் விழுந்தது.  மேலே நிமிர்ந்து பார்த்த ஸ்தபதி, மழைத் தூறல் அது என்பதை புரிந்து கொண்டார். அதற்குள் மேலும் இரண்டு மூன்று துளிகள் மழை விழுந்தது.  சட்டென்று வரைபடத்தைச் சுருட்ட ஆரம்பித்தார், ஸ்தபதி.  அதற்குள் இன்னும் கொஞ்சம் வேகமாக மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன.

"என்ன, ஏன் வரை படத்தைச் சுருட்டறே. பிரிச்சு வை!" ஒன்றுமே தெரியாதவர்போல் சொன்னார், பெரியவா.

"இல்லை...சுவாமி...மழை வருது...படம் நனைஞ்சுட்டா, வீணாகிடும். அதான்...இதை உள்ளே கொண்டுபோய்ப் பார்க்கலாம்னு...!" இழுத்தார், ஸ்தபதி.  இப்போது மழை இன்னும் கொஞ்சம் பெரிதாகப் பெய்யத் தொடங்கியிருந்தது.

"ஓ...அப்படியா சொல்றே? இப்போ இங்கே இந்த வரைபடத்தைப் பார்க்க முடியாதபடி மழை தடுக்கறதாச் சொல்றே...ஆனா, சுவாமியோட திருப்பணிக்கான காரியங்கள் எதுவும் இயற்கையால எந்தத் தடையும் வராதுன்னுதான் எனக்குத் தோணறது!" சொன்ன மகாபெரியவா, மெதுவாகத் தலையை உயர்த்தி, வானத்தைப் பார்த்தார்.  திருக்கரத்தை உயர்த்தி ஒருமுறை அசைத்தார்.

அவ்வளவுதான் சட்டென்று நின்று போனது மழை.  "இப்போ வரைபடத்தைப் பார்க்கறதுல எதுவும் பிரச்னை இல்லையே...!" மென்மையாகப் புன்னகைத்தார், மகான்.

அடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக, அந்த வரைபடங்களைப் பார்த்து, என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம், எவையெல்லாம் வேண்டாம் என்றெல்லாம் அறிவுரைகள் தந்த மகான், ஒரு கனியைக் கொடுத்து ஸ்தபதியை ஆசிர்வதித்தார்.  பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, வரைபடங்களை பாத்திரமாகப் பையில் வைத்துக்கொண்டு ஸ்தபதி புறப்பட்டார்.  அவர் சென்ற கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, இதுவரை தடுத்து நிறுத்தியதுபோல் நின்றிருந்த மழை, சரசர என்று பெய்யத் தொடங்கியது.

வேகமாக தண்ணீர் வரும் குழாயை, அழுத்தமாகத் திருகி மூடினால்கூட இரண்டொரு துளி நீராவது வந்து பிறகுதான் நிற்கும்.  ஆனால், இங்கே இயற்கையாகப் பெய்து கொண்டிருந்த மழையை, ஒரே ஒரு கை அசைவில் நிறுத்திவிட்டார், மகான்.  அதுபோலவே ஸ்தபதி வரைபடத்தை பத்திரமாக எடுத்துக் கொண்டு நகர்ந்ததும், தடுத்து நிறுத்திய மழையை மறுபடியும் பெய்ய வைத்திருக்கிறார்.

இயற்கையைக் கட்டுப்படுத்துபவன் இறைவன் என்றால், அந்த இறைவனுக்குச் சமமாக இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்த (செய்கிற) மகாபெரியவாளை அந்த தெய்வத்தின் அம்சம் என்றே பக்தர்கள் கொண்டாடுவதில் சந்தேகத்திற்கு இடமே இல்லைதானே!     

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்! குருவே சரணம்!

🙏🙏🙏🙏🙏