Thursday 24 October 2019

உண்மை சம்பவம் - தண்டபாணி தரிசனம் - என்ன தண்டபாணி தரிசனம் ஆச்சா?’ என்று கூறிப் புன்னகைத்தார் ரமணர்

ஒருமுறை ஆண்டவன் பிச்சை அம்மா அவர்கள் திருவண்ணாமலை சென்றிருந்தார்.
இரவு பூஜை முடிந்து கோயில் சந்நதிகள் அடைக்கப்பட்டுவிட்டிருந்தன. வருத்தத்துடன் நின்றிருந்த அவர் முன்தோன்றிய ஒரு சிறுவன் ‘வருத்தப்பட வேண்டாம். நான் தரிசனம் செய்து வைக்கிறேன்’ என்று கூறி மூலவருக்கு அர்ச்சனை செய்து பிரசாதமும் வழங்கினான். ‘என் பெயர் தண்டபாணி; இங்குதான் வழக்கமாக இருப்பேன்’ என்று கம்பத்திளையனார் சந்நதியைச் சுட்டிக் காட்டிய சிறுவன் இருட்டில் சென்று மறைந்தான்.
அடுத்த நாள் கோயில் அர்ச்சகர்களிடம் விசாரித்த போது அந்தப் பெயருடையவர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்றனர். மறுதினம் உடல்நலமில்லாமல் படுத்திருந்த ரமண மகரிஷியைத் தரிசிக்கச் சென்றார் அம்மா. அவரைக் கண்டதுமே ‘என்ன தண்டபாணி தரிசனம் ஆச்சா?’ என்று கூறிப் புன்னகைத்தார் ரமணர்.
உடனே அம்மா கதறி விட்டார். “என் தண்டபாணித் தெய்வமே! உன்னை அர்ச்சகப் பையன் என்றெண்ணி ஏமாந்து விட்டேனே! என் கையைப் பிடித்துச் சென்று கம்பத்து இளையனார் சந்நதியைக் காட்டி இங்குதான் இருப்பேன் என்று நீ கூறியதைக்கூடப் புரிந்துகொள்ளாத பாவி ஆகிவிட்டேனே’’ என்று பலவாறு புலம்பினார், ஆண்டவன் பிச்சி அம்மா!
ஆண்டவன் பிச்சி பழநி ஆண்டவன் மீது பாடிய ஒரு பாடல் இதோ:
“புழுவெனப் பிறப்பினில் உழலுறும் எனக்குறு
பழவினை தொலைத்திடும் வடிவேலா
கழுவினிலுறச் சமணரை விடு கவித்துவ
கவுணிய குலத்துவப் பெரு வாழ்வே
மழுபிடி சுரத்தவர் தருகுஹ! குறத்தியை
மகிழ்வுடன் அணைத்தருள் முருகோனே!
தொழுமடியவர்க்கருள்புரி கர விருப்பொடு
பழனியில் உதித்திடும் பெருமாளே.’’

ஹரிஹரசுப்பிரமணியன்
வெங்கடசுப்பிரமணியன்