Wednesday 25 July 2018

வியாழ மாலை

உபாசனா குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர் அருளிய (குருபலத்தை தரும்) வியாழ மாலை

தினமும் காலை 6 மணிக்குள்ளாகவும்,வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளும் பாடுவதன் மூலமாக அவரவர் ஜாதகத்தில் குரு பலம் அதிகரிக்கும்;கல்வியில் மகத்தான தேர்ச்சி பெற விரும்புவோர் தினமும் இதைப் பாடி வரவேண்டும்;3 ஆண்டுகள் தினமும் இதைப் பாடி வருபவர்களுக்கு தகுந்த குரு கிடைப்பார்;

ஜோதிடர் எனில் அவரது சுபாவத்திற்கு ஏற்ற ஜோதிட குருவும்,
சித்த வைத்தியர் எனில் அவரைப் புரிந்து கொள்ளும் சித்த வைத்திய குருவும்;
ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு நேர்மையான குருவும் கிடைப்பார்கள்;

ரிஷப லக்னம்,துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் 3 ஆண்டுகள் தினமும் பாடினால், குருக்கிரகத்தால் வர இருக்கும் தீமைகள் 99% குறைந்துவிடும்;

சித்தர்களின் ஜீவசமாதி ஒன்றில் 3 ஆண்டுகள் பாடி வர மூன்றாம் ஆண்டின் முடிவில் அந்த சித்தரே குருவாக இருந்து வழிகாட்டுவார்;

திருச்செந்தூரில் அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று போய் இதை 6 முறை வீதம் 12 முறை(ஒரு வருடம்) ஜபித்தால்,குருவாக திருச்செந்தூரனே வருவார்;

கழுகுமலை,திருப்பரங்குன்றம்,பழனிமலை,திருத்தணி,பழமுதிர் சோலைகளில் சஷ்டி திதி நாட்களில் 12 முறை(வளர்பிறை சஷ்டி) ஜபிக்க குமரக்கடவுளின் உபதேசம் கிட்டிடும்;

காசி மாநகரத்தில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,தகுந்த சிவனடியார் குருவாக அமைவார்;

அண்ணாமலையில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,சிவ கணமே குருவாக அமைந்து சிவ வழிபாட்டில் அடுத்த நிலைக்கு வழிகாட்டும்;

இமயமலையில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,காகபுஜண்டரின் தரிசனம் கிட்டும்;அவரது யுக உபதேசம் கிட்டும்;

சிவபெருமானின் வடிவமான லிங்கத்தின் முன்பாக தினமும் ஒரு முறை வீதம் 12 ஆண்டுகள் ஜபித்தால் சிவ தரிசனமும்,சிவபெருமானே குருவாகவும் அமைவார்;

ஓம் கிலி அங் உங்
ஓம் அருணாச்சலாய நம
திருவான செல்வம் திரளான மக்கள்
   தினந்தந்து காத்த குருவே
மருவான மச்சம் மார்போடு வைத்த
   மகிழ்துளப மான குருவே
உருவான கல்வி உயர்ஞான வேள்வி
   உறைகின்ற தெய்வ குருவே
கருவான காலம் முதலாகக் காக்கும்
   கதியானாய் தேவர் குருவே!

அறியாமை பேசி அலையாதே என்று
    அறிஞானம் தந்த குருவே
செறியாமை யென்னும் செகமாயம் நீக்கி
    செழிப்பாக்கி வைத்த குருவே
முறியாமை யாலே முளைத்திட்ட பந்தம்
   முடிவாக்கி விட்ட குருவே
குறியாமை யான குணக்கேடு நீக்கி
    குளிரானாய் தேவர் குருவே!

மனவீடு மெழுகி மணத்தோடு வைத்தேன்
    மலர்ந்தனை மன்னர் குருவே
தனவீடு என்று தனிகரும் போற்ற
   தயவாகிச் செய்த குருவே
சினவீடு ஆன சிறுமனம் செயிக்க
   செப மாலை தந்த குருவே
வனவீடு மோன வளர்வீடு வாழும்
   வணிகனே வள்ளல் குருவே!

அண்ணலே என்றுனை அவிட்டமாம் நாளில்
   அழைத்திட அருளும் குருவே
மண்ணிலே தங்கமும் மயக்கிடும் வயிரமும்
   மகிழ்வோடு சேர்த்த குருவே
கண்ணிலே துயரமாம் கடு ஆறு வற்றிடக்
   கணமதில் கனிந்த குருவே
விண்ணுறைத் தேவரும் விருப்புடன் வாழ்த்திட
   விளங்கினாய் தேவ குருவே!

இருபத்தி ஏழெனும் எண்தரு யந்திரம்
  இயக்கிட இருந்த குருவே
திருபற்றி நின்றிடத் திங்களார் முழுமையில்
  திருபூசை சொன்ன குருவே
குருபத்தி கொள்ளாரின் குலம் விட்டு ஒடிடும்
  குருவான குருவின் குருவே
உருபத்தி ஞான உயர்பத்தி மோன
  உத்தமா தேவர் குருவே!

குரு போற்றி குரு போற்றி குலத்துறை குருபோற்றி
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவான தென் திசைக்
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குமரநல் குருபோற்றி
   குருபோற்றி குருபோற்றி குரு போற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவே எம் பிரகஸ்பதி
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே!!!