Wednesday 27 September 2017

படவேடு ரேணுகாம்பாள் அன்னையார் பற்றி முக்கிய தகவல்கள்


அகத்தியர் வாக்கு
ஐஸ்வர்யம் அள்ளித் தருவாள் அன்னை ரேணுகாதேவி
அன்னை பற்றி அகத்தியர் வாக்கு

பொல்லாங்கு போம்
போகாத் துயர் போம்.
யேவலுஞ் சூனியமுங் கருகியே போகும்
பிரிந்த உறவைக் கூட்டித் தரும்
ஆவிதன் சேட்டை தன்னை யடக்கும்
அன்னை ரேணுகாம்பிகையை நாடி யோடுவார்க்கே.’’
 என்ற அகத்தியர், மேலும்,
‘‘சித்தரு மெண்ணற்ற ரிஷியருங்
கூடி தவசு செய்த தலமிது  எண்ணிலே
யேற்றந் தருமித் தலத்தை
தேவருமிருந்து தொழக் கண்டோமே’’
 என்றும் குறிப்பிடுகிறார்.

‘ஊரார் நம்மைப் பற்றிக் கேவலமாக பேசுவது நிற்கும். மாந்த்ரீக விஷயங்களில் விமோசனங் காணும். பிரிந்து சென்ற நட்பு மீண்டும் பலமாய் கூடும்’ என்கிறார் அகத்தியர். இந்த ரேணுகை அம்பாள் யாராலும் செதுக்கப்பட்ட சிலை அல்ல. தானே உண்டானது. சுயம்பு. பரசுராமரால் முதன் முதலில் பூஜிக்கப்பட்டது. கர்ணன் இந்த மூர்த்திக்கு முதன் முதலில் கோயில் கட்டினான். யார் எதைக் கேட்டாலும் இல்லை என்று கூறுவது இல்லை என்ற முடிவை இந்த கோயிலில் வைத்துத்தான் சத்தியம் செய்தான் கர்ணன். ராமர், கிருஷ்ணன், குபேரன், காமதேனு போன்றவர்களால் தொழுது பூஜிக்கப்பட்ட விக்ரஹம் இது. திரௌபதி துச்சாதனனை கொன்றபின்தான் கூந்தலை முடிப்பேன் என  சபதம் ஏற்றதும் இந்த கோயிலில்தான். இதனை அகத்தியர்,

துச்சாதனனை யழித்து கூந்தலை
கட்டிட சபதம் கொண்ட காரிகை
நின்ற பூமியன்றோயிக் குண்டலிபுரம்’’
என்கிறார்.

‘‘கடகத்துச் சுங்க நாளிலும், நவராத்ரி அஸ்தமன பொழுதிலும்
தனுராயன திங்கள் யதிகாலையம்பொழுதிலும்,
உத்ராயணப் புண்ணிய காலத் தோற்றத்தால்
குபேரனுங் காமதேனுவும் உள்ளிட்ட
நவநாயகருந் தொழுமிப் பானலிங்கந்தன்னொடு
அத்தி நாயகிக்கிணையேதுயிம் மண்ணிலே.”

‘ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் நவராத்திரி நாட்களின் அஸ்தமான காலத்திலும் மார்கழி மாதம் உதயப் பொழுதிலும் நவகிரக நாயகர்களும் குபேரன், காமதேனு போன்றோரும் தொழக்கூடிய அன்னை ரேணுகாதேவி ஆவாள். அத்தருணத்தில் நாமும் சென்று தொழுதால், எதை வேண்டுமானாலும் அடையலாம்’ என்கிறது, அகத்தியர் நாடி. ஆதிசங்கரர் தானாகர்ஷண சக்கரத்தை உருவாக்கி அன்னை ரேணுகாதேவி முன் பிரதிஷ்டை செய்திருப்பதை இன்றும் நாம் காணலாம். அன்னை ரேணுகா தேவியருளால் ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை இப்பூமிக்கு தந்தார். ‘‘எவன் ஒருவன் லட்சுமி கடாட்சம் பெற எண்ணுகிறானோ, அவன் அன்னை ரேணுகா தேவியை பிரார்த்தித்தபின், ஆதிசங்கரரை தியானித்து கனகதாரா ஸ்தோத்திரத்தை ஒவ்வொரு வெள்ளியன்றும் மூன்று முறை ஜபித்து வந்தால், அவன் வாழும் மனையில் ஐஸ்வர்யம் பொங்கும். எண்ணிய பெண் கிட்டும். தேடிய வரன் விரும்பி வந்து அண்டும்’’ என்கிறார், அகத்தியர்.

‘‘ஆட்சி பீடத்தமரலாம்
முடிமன்னனாய் கோலோச்சலாம்
பேரதிகாரம் பெற்று பரதமாளலாகுமே
பரசுராமனை ஈன்ற அன்னை
ரேணுகையை வேள்வியுடனே தனியாரா
தனை செய்து சுத்தித்து தொழுவார்
தமக்கே’’

பரிபூர்ண சரணாகதி அடைந்தவரை எந்நாளும் காப்பாற்றும் அன்னையை தொழுது நலமும் உய்வோமே

தொண்டை நாட்டின் மிகப் புனிதமான பூமி, உலகில் உள்ள சக்தி தலங்களில் மிகுந்த ஆற்றல் பெற்ற கோயில், அன்னை படவேடு ரேணுகாம்பிகை குடி கொண்டிருக்கும் கோயில்; இது பரசுராமர் அவதார தலம். விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பெரும் ரிஷிகளும் பற்பல சித்தர்களும் தவம் செய்த தலம். ஜமதக்கினி முனிவரின் ஆஸ்ரமம் அமைந்த இடம் இது. விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளான ரேணுகா என்ற அரசி, ஒரு பெண் தெய்வம். தனக்கு தகுதி வாய்ந்த மணாளனை தெரிந்தெடுக்க, பெரும்படை பாதுகாவலுடன் பூமியைச் சுற்றி வந்து கடைசியில் குண்டலிபுரம் என்ற இந்த ஜமதக்கினி மகரிஷியின் ஆசிரமத்தை வந்தடைந்தாள். அழகிலும் திறமையிலும் தபோ சக்தியிலும் நிகரற்றவரும் விஸ்வாமித்திர மகரிஷியின் பால்ய நண்பருமான ஜமதக்கினியை மணக்க விரும்பினாள். அவருடைய சீடர்கள் எதிர்க்கவே, போர் மூண்டது. மகிஷாசுரமர்த்தினியை மகாராணியான ரேணுகா தேவியார் வேண்ட, பெரும் தீ மூண்டு எதிரிகளை கொல்ல முற்பட்டது. கருணையே வடிவான ஜமதக்கினி மகரிஷி, தன் கமண்டலத்திலிருந்த மூன்று உலகின் புண்ணிய தீர்த்தங்களைத் தெளித்து தீயை அணைத்தார். அந்த மூவுலக புண்ணிய தீர்த்தமே இன்றைக்கு கமண்டல நதியாக ஓடுகிறது. இங்கு ஜமதக்கினி வளர்த்த ஹோம குண்ட சாம்பல் இன்றளவும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. ஜமதக்கினி, ரேணுகாதேவியின் மனம் மகிழ, மனைவியாய் ஏற்று, பரசுராமர் என்ற மகனை பெற்றார். விஷ்ணு அவதாரம். ‘தந்தை சொல்லே மந்திரம்’ என்ற கோட்பாட்டுடன் வளர்ந்தார். மனைவியிடம் ஏதோ சிறு பிசகு கண்ட ஜமதக்கினி மகரிஷி, பரசுராமரிடம் அவளைக் கொல்லுமாறு ஆணையிட, பரசுராமன் தாயின் தலையை துண்டித்து தந்தையின் பாதத்தில் சமர்ப்பித்தார். இந்த தலையே இன்று நாம் வணங்கும் அன்னை ரேணுகாம்பிகை தேவியார். எதை வேண்டினாலும் அதனைத் தருபவள் இம்மாதா. ஏவல், பில்லி, சூன்யம், ஆவித்தொல்லை, அம்மை நோய் போன்ற எண்ணற்ற பிரச்னைகளுக்கும் தீர்வு, இந்த படவேடு ரேணுகாம்பாள் தரிசனம்.
இன்று ஆடி மாச பிறப்பு
ஓம் அகத்தியர் ஆசி
இனிய காலை வணக்கம்
ஓம் அகத்தீசாய நம!
படவேடு ரேணுகபரமேஸ்வரி
தாள் பணிந்து
துவக்கவேண்டிய தினம்

No comments:

Post a Comment