Sunday 9 September 2018

திருநெய்த்தானம்

34.திருநெய்த்தானம்

திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.


1407 கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புரம் மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே. 5.034.1

கொல்லிமலையில் வீற்றிருப்பவனும், குளிர்ச்சி செறியும் குற்றாலத்தில் வீற்றிருப்பவனும், பகைவர் புரங்கள் மூன்றையும் எரிசெய்தவனும், திருநெல்லிக்காவில் உள்ளவனும், நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானை வாயினாற் சொல்லி மெய்யினால் தொழுவார்கள் ஒளியோடு கூடி வாழும் உயர்நிலை பெறுவர்.


1408 இரவ னையிடு வெண்தலை யேந்தியைப்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே. 5.034.2

இரத்தலை உடையவனும், வெண்தலை ஏந்தியவனும், எல்லோராலும் பரவப்படுபவனும், படையுடையார் முப்புரங்களையும் எரியால் நிரந்தவனும், ஞானாசாரியனும் நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தான்னுமாகிய பெருமானைத் தொழுவார்கள் இவ்வுலகத்து நன்கு வாழ்வோராவர்.


1409 ஆனிடை யைந்தும் ஆடுவ ராரிருள்
கானிடை நடம் ஆடுவர் காண்மினோ
தேனிடை மலர் பாயுநெய்த் தானனை
வானி டைத்தொழு வார்வலி வாணரே. 5.034.3

பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமஞ்சனம் கொள்பவரும், நள்ளிருளில் இடுகாட்டிடை நடம் ஆடுபவரும் ஆவர்; காண்பீராக! மலரிடைத் தேன் பொழிந்து பாயும் திருநெய்த்தானனை வானிடைத் தொழுவார்கள் வலிமையோடு வாழ்பவராவர்.


1410 விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய் நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே. 5.034.4

பகைவர் புரமூன்றையும் வெள்ளிய சாம்பலாகியெழுமாறு கண்டு எரித்தவனும், கடிதாகிய ஆலகாலத்தை உண்ட வனும் ஆகிய ஒளியான ருநெய்த்தானனைத் தொண்டராகித் தொழுவார் ஒளியோடு கூடி வாழ்பவராவர்.


1411 முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
தங்கை யால்தொழு வார்தலை வாணரே. 5.034.5

தம் முன்கைகள் நோகுமாறு கடைந்த தேவர்களும் அசுரர்களும் அஞ்சிநிற்கச் சிறிதும் ஐயுறாது கடல் நஞ்சுண்டு அனைவரையும் காத்தவனும், உமாதேவியோடு விரும்பி எழுந்தருளியிருப்போனுமாகிய திருநெய்த்தானனைத் தம்கைகளால் தொழுவார் தலைமைத் தன்மையோடு கூட வாழ்பவராவர்.


1412 சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே. 5.034.6

உலகெல்லாவற்றையும் சுட்ட திருவெண்ணீற்றினைத் திருமேனியிற்பூசி, நள்ளிருளில் பேய்களோடு சுடுகாட்டில் நடம் ஆடுபவரும், உயர்ந்த முனிவர்களும் தேவர்களும் ஆராய்ந்து காணும் திருநெய்த்தானரும் ஆகிய பெருமானை விருப்பமாகத் தொழுவார் இன்பத்தோடு கூடி வாழ்பவராவர்.


1413 கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
தௌளித் தேறித் தௌந்துநெய்த் தானனை
உள்ளத் தால்தொழு வாரும்பர் வாணரே. 5.034.7

தீக்கொள்ளியினின்று எரிவீசிக் கொடிதாகிய கள்ளிக்காட்டில் ஆடும் இயல்பினர் காண்பீராக; தௌவு அடைந்து தேறிப் பின்னும் தௌந்து அத்திருநெய்த்தானரை உள்ளத்தால் தொழுவார் தேவர்களோடு ஒத்த பேரின்பம் பொருந்தி வாழ்பவராவர்.


1414 உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச்
சுற்ற மெய்தொழு வார்சுடர் வாணரே. 5.034.8

சென்னியில் உச்சியின்மேல் விளங்கும் இள வெண்பிறையும் பற்றியாட்டற்குரிய பாம்பும் சடையின்கண் வைத்தவனும், நெற்றிக்கண்ணனுமாகிய திருநெய்த்தானனைச் சுற்றி வந்து மெய்யால் தொழுவார் ஒளி பொருந்தி வாழ்பவராவர்.


1415 மாலொ டும்மறை யோதிய நான்முகன்
காலொ டும்முடி காண்பரி தாயினான்
சேலொ டுஞ்செருச் செய்யுநெய்த் தானனை
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே. 5.034.9

திருமாலோடும் வேதங்களை ஓதிய பிரமனும் திருவடியும் திருமுடியும் காண்டற்கரியனாயினானும். சேல்மீன்கள் தம்மிற்பொரும் திருநெய்த்தானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய பெருமானை அன்புமயக்கத்தால் தொழுவார்களின் வினைகள் வாடிக்கெடும்.


1416 வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே. 5.034.10

வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணிவார்களின் வினைகள் கெடும்.


திருச்சிற்றம்பலம்