Tuesday 3 November 2020

திருச்செந்தூர் முருகன்

 திருச்செந்தூர் முருகன்!

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

1.திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.


2. இரு மூலவர்களில் கருவறையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி தனியாக உள்ளர். சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார்.


3. சூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன் கை வேலினால் முருகன் நாழிக்கிணறு ஏற்படுத்தினார். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது.


4. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.


5. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.


6. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்


7. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.


8. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.


9. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.


10. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.


11. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 85-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.


12. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.


13. திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூர்யலிங்கம், சந்திர லிங்கம் உள்ளன.


14. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.


15. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்துக்கு மேலைக் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. மேற்கு திசையில் உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.


16. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.


17. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.


18. மகாமண்டபத்தில் உள்ள சண்முகர் சன்னதியில் ஆத்மலிங்கம் உள்ளது. மறக்காமல் அந்த லிங்கத்தையும் வழிபட வேண்டும்.


19. திருச்செந்தூர் கோவிலில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நாழிக்கிணறு, வதனாரம்ப தீர்த்தம் இரண்டும் முக்கியமானவை.


20. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்


 திருச்செந்தூர் முருகன்


21. வதனாரம்ப தீர்த்தம் கடலில் பாறைகள் நிறைந்த பகுதியில் உள்ளது. எனவே அங்கு நீராடுவது பாதுகாப்பற்றது.


22. கலிங்கதேசத்து மன்னன் மகள் கனக சுந்தரி பிறக்கும் போதே குதிரை முகத்துடன் பிறந்தாள். அவள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கபெற்று நல்ல முகத்தை பெற்றாள்.


23. முருகனை நினைத்து தியானம் இருக்க விரும்புபவர்கள் வள்ளிக்குகை அருகில் உள்ள தியான மண்டபத்தை பயன்படுத்தலாம்.


24. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.


25. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.


26. முருகனின் அறுபடை வீடுகளுள் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே வீடு இக்கோவிலாகும்.


27. இங்கு முருகன் சூரபத்மனோடு போரிட்டு, வென்று, வெற்றிக் கொடியான சேவல் கொடியுடனும், பார்வதி தேவி அளித்த வேலுடனும் மயில் வாகனத்தில் அருள் பாலிக்கிறார்.


28. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.


29. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.


30. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, `திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.


31. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கியபின்னர் தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.


32. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.


33. இத்திருக்கோயில் மூன்று பிராகரங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.


34. இக்கோவிலில் தினமும் ஒன்பது கால பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் தரிசனத்திற்காக, கோவில் பகல் முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.


35. கோவில் பிராகாரத்தின் மேற்குப்பகுதியில், மயில்மீது அமர்ந்த திருக்கோலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனுடன் போர் புரிவதையும், அதன் எதிரே சூரபத்மன் மார்பில் முருகனின் வேல் பாய்ந்திருப்பதையும் சித்தரிக்கும் அழகிய சிற்பங்களைக் காணலாம். இதுபோன்ற கந்த புராணக்காட்சிகளை எழில் மிகு சிற்பங்களாக பல இடங்களில் அமைத்திருக்கின்றார்கள்.


36. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.


37. திருச்செந்தூர் முருகன் கோவில் சங்க காலத்திலேயே சிறப்புப் பெற்றுத் திகழ்ந்த திருத்தலமாகும்.


38. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.


39. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ளன.


40. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.


 முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.


42. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.


43. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


44. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.


45. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை “மகா புனிதம் தங்கும் செந்தில்” என்று போற்றியுள்ளார்.


46. திருச்செந்தூர் முருகன் கோவிலை சுற்றி பல இடங்களில் கந்த சஷ்டி விரதம் இருக்க விடுதிகள் உள்ளன. இது தவிர விரதம் இருக்க சிறப்பு தங்கும் பகுதிகளும் ஆலயம் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.


47. கோவிலுக்கு செல்ல நீண்ட தூரத்துக்கு மண்டப வசதி உள்ளது. அந்த வழியில் தூண்டு கை விநாயகர் கோவில் உள்ளது. அவரை வழிபட்ட பிறகே முருகனை வழிபட செல்ல வேண்டும்.


48. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.


49. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.


50. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.


51. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.


52. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.


53. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.


54. திருச்செந்தூர் முருகனுக்குத் தங்கத் தேர் உள்ளது.


55. இத்திருத்தலத்தில் நவக்கிரகங்களுக்குச் சிலை கிடையாது.


56. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.


57. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.


58. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச்  சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.


59. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.


60. இத்திருக்கோவிலுக்கு வருபவர்கள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் சுத்தான்னம் எனப்படும் வெறும் வெள்ளைச் சோற்றுக் கட்டிகளை தானமாக வழங்குவர். மிக மலிவான விலையில் இக்கட்டிகள் பிரகாரங்களில் கிடைக்கும்.


கந்தனுக்கு அரோகரா! முருகனுக்குஅரோகரா!!

வேல் வேல் வெற்றிவேல்!!!

வேலுண்டு வினையில்லை!!!!

மயிலுண்டு பயமில்லை!!!!!

குகனுண்டு குறைவில்லை மனமே!!!!!!

கந்தனுண்டு கவலையில்லை மனமே!!!!!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

No comments:

Post a Comment