Sunday 2 February 2020

100 ஆண்டுகளாக பூட்டியிருக்கும் நந்தீஸ்வரர் ஆலயத்தின் கதவை திறந்து ஒரு அற்புதத்தை காணுமாறும் கூறி மறைந்தார்..

"நீ ஒரு சிவதொண்டன் நீ போய் காளையை
அடக்கலாமா?"கேட்டார் நீலகண்டம்...

"இல்லை அம்மாவின் மருத்துவ செலவுக்கு
நூறு வராகன் தேவைப்படுகின்றது..
வேறுவழியில்லை"..பதிலளித்தான் சிவக்கொழுந்து..

"நீ எங்கே வேலை செய்கின்றாயோ,அந்த ஜமீன்தாரின் காளை என அறிவாயா..?"

"ஆம் அறிவேன்..."

"தெரிந்தும் இந்த காரியத்தில் எஜமானனுடன்
மோதப்போகின்றாயா.."
விடாமல் தொடர்ந்தார்.. நீலகண்டம்..

"மன்னிக்கவும் என் எஜமானன் சிவபெருமான் ஒருவர்தான்..அவரை தவிர என் கால்கள் யார் முன்னாலும் மண்டியிடாது..என் நாவு யாரிடமும் இறைஞ்சாது.."நெஞ்சை நிமிர்த்து கூறினான் சிவக்கொழுந்து..

"பலே..பலே..உனக்கு அந்த காளையை பற்றி
தெரியுமல்லவா..எட்டுப்பட்டிக்கும் தண்ணீர்
காட்டிய காளை...எந்த வாலிப காளையும்
அந்த வீரத் திமில் கொண்ட காளையை அடக்கியதில்லை.."

"அதையும் பார்த்துவிடுவோம்..
இருவரில் ஒருவர் யாரென்று?"

"நீ புதியவன்.."

"தமிழன் வீரத்தில் பழையவன்..

பார்ப்போம் களத்தில்.."

கிளம்பினார் நீலகண்டம்.

பந்தயக்களம் மன்னர் ராஜராஜன் கம்பீரமாக
போட்டியை காண குடும்ப சகிதமாக
அமர்ந்திருந்தார்...

முதலில் வருவது கிள்ளிவளவனூர் ஜமீன்
காளை.."துள்ளிவரும் காளையை அள்ளி அடக்குபவருக்கு 20 தங்கவராகன்" அறிவிப்பாளன் அறிவிக்க..

கனத்த உடலுடன் மலை போன்ற திமில்களுடன் காளை உள்ளே புகுந்தது.. இளைஞர்கள் உள்ளே குதிக்க.. சுற்றிலும் கரகோஷம் விண்ணை பிளந்தது..

"நீ இறங்கவில்லையா சிவக்கொழுந்து.." கேட்டார்  நீலகண்டம்..

"இல்லை, எமது காளை 100 வராகன்களுடன்
வரும்..அதற்காக காத்திருக்கின்றேன்.."

"20 வராகன்கள் உள்ள காளையை யாரும்
அடக்க முடியாமல் போக்கு காட்டுகின்றது..
உன்னை பார்த்தால் எனக்கு நகைப்புத்தான்
வருகின்றது.."சிரித்தார் நீலகண்டம்.

20  வராகன் காளை யாரும் நெருங்கமுடியாமல் நெருப்புபோல இருந்து போக்குகாட்டியபடி வெற்றியடைய..வளவனூர் ஜமீன் மீசையை முறுக்கிவிட்டார்..

அடுத்து வருவது...30 தங்கவராகன் காளை
இம்முறை இளைஞர்கள் ஒன்றுகூட,அத்தனை பேரையும் தொடமுடியாமல் தவிடு
பொடியாக்கியது காளை...

"சிவக்கொழுந்து இப்பொழுதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை போட்டியிலிருந்து
விலகிவிடு.."கூறினார் நீலகண்டம்...

"இல்லை..எம்பெருமான் எனக்கு வெற்றியை
நல்குவார்..பார்த்துவிடலாம்.."

அறிவிப்பாளன் அறிக்கையை தொடர்ந்தான்..
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீரவ நல்லூர் ஜமீனின் காளை அடுத்ததாக
களமிறங்கும்..

கைதட்டலும்..விசில் சப்தங்களும்
விண்ணைப்பிளந்தன...

மேலும் அறிவிப்பாளன் தொடர்ந்தான்..
இதுவரை இந்த ஆண்டில் நான்கு காளைகளையும் வென்று ஒருவர் கூட வெற்றி பரிசை தட்டிச்செல்லவில்லை..இறுதியாக
இறங்கும் வீரவநல்லூர் காளையை வென்று
சோழமண்ணிற்கு பெருமை சேர்ப்பவருக்கு
மன்னர் 1000ம் தங்க வராகன்களுடன், மன்னர்
படைப்பிரிவில் உயர் பதவியும் வழங்குவதாக
அறிவித்துள்ளார்...முரசு கனமாக ஒலித்தது..

"எங்கே வீரவநல்லூர் ஜமீன்"..மன்னர் கேட்க..

"போட்டிக்கு முந்தைய நாளே வரும் அவர்
இன்னும் வரவில்லை மன்னா.."

தொலைவில் ஒருவர் காளையை பிடித்தபடி
வருவது தெரிந்தது..

"யார் அவர் பார்த்து வாருங்கள்.."

பணியாட்கள் வேகமாய் சென்று..விரைவாக
மன்னரிடம் வந்தனர்...

மன்னா வருவது ஜமீன்தான்..வரும் வழியில்
பாலாற்றின் சேற்றில் மற்றவர்கள் மாட்டிக் கொள்ள ஜமீன் மட்டும் காளையை பிடித்தபடி தனித்துவருகின்றார் மன்னா..

"அப்படியா..விரைவில் அழைத்துவாருங்கள்.."
ஜமீன் அருகில் வர மன்னன் வணங்கி
வரவேற்றான்..

வீரவநல்லூர் காளை இப்பொழுது களமிறங்கும்,

விசில் ஒலி விண்ணைப்பிளக்க...கைதட்டல் ஆராவாரம் காதை பிளந்தது..

களத்தில் கொம்புகளில் கட்டப்பட்ட தங்க சங்கிலி 100 வராகன்களுடன்..திமில்களை
மலைபோல அசைத்துக்கொண்டு தைரியம்
இருப்பவன் தொட்டுப்பார் என காளை புழுதி
பறக்க நின்றது...

அனைத்து வாலிபர்களும் பின்வாங்க, களத்தில் நெஞ்சை நிமிர்த்தி குதித்தான் சிவக்கொழுந்து

மன்னர்..வைத்த கண் வாங்காமல் பார்க்க..
ஜமீன் மீசையை தடவிக்கொண்டே சிரித்தார்..
காளை..நான் தயார் என்பதை போல.. நிலத்தை காலால் பறித்து..கொம்புகளினால் மண்ணை பெயர்த்து எடுத்தது...

சிவக்கொழுந்து எதிரில் போய் நின்று.. தன்னுடைய  அகண்ட மார்பை காண்பித்து
உனக்கு எந்த விதத்திலும் சளைத்தவனல்ல
என எதிர் நின்றான்..

கரகோஷம் விண்ணை பிளக்க..
சிவக்கொழுந்து தன் தாய் மரணத்தின்
தருவாயில் இருப்பதை உணர்ந்து காளையை
நோக்கி ஆவேசமாக பாய்ந்தான்..கருப்பான அந்த காளை..சற்றே விலக...

மண்ணில் விழுந்தான் சிவக் கொழுந்து...
ஓ..என்றோரு சப்தம் கூட்டத்தில் எழுந்தது...

சுதாரித்துக்கொண்ட சிவக்கொழுந்து உடனே
சுதாரித்து சட்டென எழுந்தான்..

அதற்குள் அவனருகில் வந்த காளை
அவனை தூக்கி பந்தாடியது..

மன்னரின் மேடையருகில் போய் விழுந்த அவன் நெஞ்சில் ரத்த காயங்களுடன் எழுந்தான்..

கூட்டமே திகைத்து நிற்க...

வெறிகொண்ட வேங்கையாய் எழுந்தான்
சிவக்கொழுந்து...

ஜமீன்தார்..கை தட்டி சிரிக்க..

மன்னன் தலைகுனிந்தான்..

மேலும் வெறியேறியவனாய்..தன்னிடம்
வந்த காளையை நோக்கி பாய்ந்தான்
சிவக்கொழுந்து...

திமிலை அணைத்துக்கொள்ள..காளை பிடிகொடுக்காமல் திமிறியது..தன்னுடைய
தாயின் தோற்றம் கண்முன்னே வர, காளையின் திமிலை மேலும் இறுக்கினான்...

காளை துள்ளிக்குதிக்க..

காளையின் திமிலை சிவலிங்கமாய்
நினைத்து கண்களில் கண்ணீர் பெருக
இறுக அணைத்தான் சிவக்கொழுந்து..

காளையின் ஓட்டம் குறைய..மெல்ல காளை
தளர்வடைந்தது...அமைதியான காளை சிவக்கொழுந்துவிடம் பணிந்து நின்றது...

காளையை தழுவிய சிவக்கொழுந்து..அதன்
நெற்றியில் முத்தமிட..கூட்டத்தில் கரகோஷம்
விண்ணை பிளந்தது..

மன்னரும்..ஜமீன்தாரும்..மகிழ்ச்சியை கைதட்டல் மூலம் சிவக்கொழுந்திருக்கு தெரிவித்தனர்..

சிவக்கொழுந்து காளையின் கொம்பிலிருந்த
தங்க வராகன்களையும்..தங்க சங்கிலியையும்
எடுத்துக்கொள்ள கூட்டத்தில் ஆரவாரம் விண்ணை பிளந்தது...

மன்னர் அறிவிப்பாளனிடம் ஏதோ சொல்ல..
அறிவிப்பாளன்..மன்னரின் பரிசுத்தொகையும்
வீரனின் பதவியும் நாளை ராஜசபையில்
வழங்கப்படும்..என அறிவித்தான்...

கூட்டத்தில் அனைவரும் கரவொலியை வெளிப்படுத்தினர்..

மறுநாள்..காலை...

சூரியன் பொன்னிற கதிர்களை பூமியில்
படரவிட..பேச முடியாத தன்னுடைய தாயின்
கால்களை தொட்டுக்கும்பிட்டுவிட்டு அரசவை
நோக்கி கிளம்பினான் சிவக்கொழுந்து..

மக்கள் அங்கே கூடியிருக்க,சிவக்கொழுந்துக்கு அரசவையில் ஆசனம் அளிக்கப்பட்டது..

மன்னர் அரியணையில் அமர்ந்து சிவக்கொழுந்துவின் வீரத்தை புகழ்ந்து பேசினார்..

சிவக்கொழுந்து எதுவும் பேசாமல்
பணிந்து நின்றான்..

யார்..அங்கே..பரிசுத்தொகையை
கொண்டு வாருங்கள்..

பரிசுத்தொகை தங்கத்தட்டில் கொண்டுவரப்பட்டது..

மன்னன் பரிசுத்தொகையை எடுத்து வழங்க..
அதை பெற்றுக்கொள்ள கைகளை நீட்டினான்
சிவக்கொழுந்து...

"சற்றே..பொறுங்கள் மன்னா...."

குரல் கேட்டு திரும்பிய பக்கத்தில் வீரவநல்லூர் ஜமீன்தார் காளையுடனும்..அநத ஊர் மக்களும் நின்றிருந்தனர்..

அரசவையும்..மக்களும்..சிவக்கொழுந்தும்
அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க..

மன்னன் மட்டும் முகத்தில் எந்த ஒரு
திகைப்புமில்லாமல் பார்த்தான்...

"மன்னா..நேற்று முழுவதும் பாலாற்றின் சேற்றில் சிக்கிய எங்களது வண்டிமாடுகள்
மக்கள் இவற்றையெல்லாம் விடுவித்து கொண்டுவர சற்று காலதாமதம் ஆனது...
இப்பொழுதுதான் நாங்கள் எங்கள் காளையுடன் வருகின்றோம்.அதற்குள்
இவர் வெற்றிபெற்ற பரிசுத்தொகையை அறிவித்தால் ஏற்றுக் கொள்ளமுடியாது மன்னா..."ஜமீன் கூற...

அரசவையிலும்..மக்களிடமும்..சலசலப்பு ஏற்பட்டது..சிவக்கொழுந்து குழம்பி போய் நின்றான்..

மன்னர் ராஜராஜன் அனைவரையும்
அமைதிப்படுத்தினார்..

அனைவரும் அமைதியாக இருங்கள்...

"ஜமீன் சொல்வது சரிதான் என்றார் மன்னர்.."

மக்கள் அனைவருடன் சிவக்கொழுந்தும்
மேலும் திகைக்க..

மன்னர் புன்னகையுடன் தொடர்ந்தார்...

"இன்று அதிகாலையில் வந்த கனவில் எம்பெருமான் தந்தை ஈசன் என் கனவில்
தோன்றினார்..சிவக்கொழுந்தின் பக்தியை
உலகிற்கு உணர்த்தவும்..நேர்மையையும், வீரத்தையும் பறைசாற்றுவதற்க்காகவும்.. யாமும், நந்திதேவரும்..ஜமீனாகவும்.. காளையாகவும் வந்தோம்..அறிவித்தபடி
பரிசையும்..பதவியையும்..சிவக்கொழுந்துக்கு
வழங்கவும் ஆணையிட்டார்..மேலும், 100
ஆண்டுகளாக பூட்டியிருக்கும் நந்தீஸ்வரர் ஆலயத்தின் கதவை திறந்து ஒரு அற்புதத்தை காணுமாறும் கூறி மறைந்தார்...எப்படியும் ஜமீனும் வந்துவிடுவார் என தெரியும்...
எனவே, இதை சொல்ல காத்திருந்தேன்.."

மன்னர் சொல்ல..சொல்ல..மக்களும்,
அரசவையினரும், ஜமீன்தாரும் திகைப்பில்
நின்றனர்...

மன்னன்.. பரிசுத்தொகையை கொடுத்து..படை தளபதியாக சிவக்கொழுந்தை அறிவித்தான்...

வாருங்கள் நந்தீஸ்வரன் கோவிலுக்கு செல்வோம்..

மக்கள் அனைவரும் பின்தொடர...
நூறாண்டுகள் பூட்டப்பட்ட கோவில் கதவு
பெரும் சப்தத்தோடு திறந்தது...

🐃மன்னனின் பார்வையும்,மக்களின் பார்வையும் நாலாபுறமும் சுழல...மேடையில் அமர்ந்திருந்த நந்தியின் திமில்கள் சிவலிங்கமாக காட்சி அளித்தது..அதைக்கண்ட பரவசத்தில் மன்னனும்,மக்களும் "ஓம் நம சிவாய" என்ற பெரும்கோஷம் எழுப்ப..எதுவும் பேசமுடியாமல் நின்ற சிவக்கொழுந்துவின் கண்களில் கண்ணீர்..தாரை..தாரையாக.பெருகியது 🐃
🐃திருச்சிற்றம்பலம்.🐃

 அன்பே சிவம் .
சிவாயநம அருணாச்சலம்
🌹🕉🌹