Thursday 6 February 2020

எனது அனுபவம் மின்மினி பூச்சிகளுடன்

தற்போது எதேச்சையாக மாடி ஏறி பார்த்தபோது. எங்கள் வீட்டின் அருகில்  உள்ள கோவிலில் உள்ள கோவிலில் உள்ள அரச மரமும் வேப்ப மரமும் பின்னிப்பினைந்த ஸ்தல விருக்ஷ மரத்தில் அலங்கார விளக்கு போட்டது போல பல நூறு விளக்குகள் மின்னிக்கொண்டு இருந்தன. முதலில் நான், அது ஏதோ அலங்கார விளக்கு என்று நினைத்தேன். ஆனால் பின்னர் உற்று நோக்கிய போது அது அலங்கார விளக்கை போல தெரியவில்லை. ஒரே வெள்ளை நிற ஒளியுடன் மின்னிக்கொண்டு இருந்தன. அப்போது தான் புரிந்தது அவை மின்மினி பூச்சிகள் என்று. நமது ஊர் கோவிலில் இப்படி ஒரு அதிசயம், யாருமே பார்க்கவில்லை, யாருக்கும் பார்க்க கிடைக்கவில்லை. எனக்கு மட்டுமே அந்த பாக்கியம்.

சரி , அப்படி அந்த மின்மினி பூச்சிகளின் காட்சியில் என்ன உள்ளது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். யாரவது பார்த்து இருந்தாலும் அவர்களால் புரிந்து கொண்டு இருக்க முடியாது.

இணையத்தில் உள்ள வெங்கடராம ஸ்வாமிகள் அருளுரையை உங்களுக்கு தெரிந்து கொள்வதற்காக கீழே தொகுத்து கொடுத்து உள்ளேன்.

இன்று இரவு 11 மணியை எட்டியதால், அருகில் சென்று புவைப்படம் எடுக்க முடியவில்லை. நாளை பார்க்கிறேன். மீண்டும் வந்தால் அருகில் சென்று புகைப்படம் எடுத்து காண்பிக்கிறேன். இப்போதைக்கு zoom செய்து எடுத்த படம் உங்கள் பார்வைக்கு. இன்று பிரதோஷம், கோவில் நிர்வாகிகள், கோவில் பூசாரி, பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்காத ஒரு காட்சி இன்றி அகத்தியர் அருளால் நாம் காணப்பெற்றோம்.

குரு வாழ்க குருவே துணை

தி. இரா. சந்தானம்
கோவை.
06.02.2020
9176012104
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தெய்வீக மின்மினி
உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனின் படைப்பிற்குப் பின்னும் ஆழ்ந்த தெய்வீக காரணங்கள் உண்டு. இவ்வகையில் மின்மினிப் பூச்சிகளின் படைப்பிற்குப் பின்னும் சுவையான ஆன்மீக அர்த்தங்கள் உண்டு.

மனிதனை மிகவும் கவர்ந்த பல உயிரினங்களில் மின்மினிப் பூச்சியும் ஒன்று. எந்த உயிரினத்தின் படைப்பு இரகசியமும் விஞ்ஞானத்தின் கருவிகளுக்குப் புலப்படாது என்பது உண்மையாயினும் மின்மினிப் பூச்சிகளின் ஒரு சிறு அணுக் கூற்றைக் கூட இன்றைய விஞ்ஞானக் கோட்பாடுகளால் விளக்க முடியாது என்பதே சித்தர்கள் நமக்கு அறிவுறுத்தும் பாடமாகும்.

விளக்கு என்று இருந்தால் அதில் ஒளியும் வெப்பமும் இருப்பதே இயற்கை. ஆனால், ஒரு சிறிது வெப்ப சக்தியும் இன்றி ஒளியை மின்மினிப் பூச்சிகள் அளிக்கின்றன என்றால் அதன் தெய்வீகத் தன்மை எத்தகைய சிறப்பு வாய்ந்தாக இருக்கும்?

பொதுவாக, மின்மினிப் பூச்சிகள் நமது பூமிக்கு உரிய சிவப்பு (மண்) வண்ணத்தையும், புவர் லோகத்திற்கு உரித்தான பச்சை வண்ணத்தையும், சுவர் லோகத்திற்கு உரித்தான மஞ்சள் வண்ணத்தையும் தங்கள் ஒளிப் பிரகாசத்தால் அளிக்கின்றன. எனவே மின்மினிப் பூச்சிகளை ”திரிலோக சஞ்சாரிகள்” என்று காரணப் பெயரால் அழைக்கின்றனர். சித்தர்களோ அவற்றை சுடர்மணிகள் என்று அன்புடன் விளிக்கின்றனர்.

இறைவனை, ”சோதியே, சுடரே,” என்றுதானே பெரியோர்கள் அழைப்பார்கள். முழுக்க முழுக்க ஒளிப் பிரகாசம் மட்டும் நிறைந்ததே சுடர் எனப்படும். இறைவன் வெறும் ஜோதிப் பிரகாசமாகவே விளங்குவதால் அவரை அருட்பெருஞ்சோதி என்றும், சுடர் என்றும் அழைக்கின்றனர். ”தோளா முத்தச் சுடரே,” என்று துதிக்கும்போது பிரகாச ஒளி மட்டுமே முழுவதும் நிறைந்தவர் என்பதுதானே அர்த்தமாகின்றது?

இவ்வாறு தங்கள் வாழ்நாள் முழுவதும் மூன்று லோகங்களுக்கும் உகந்த வண்ண ஜோதிக் கிரணங்களை பரப்பியே வாழ்வதால்தான் சித்தர்கள் மின்மினிப் பூச்சிகளை சுடர் மணிகள் என்று பாராட்டுகின்றனர்.

தமிழ் மொழி சுப்ரமண்ய சுவாமியின் தூல சரீரமாக அமைவதால் தமிழ் வார்த்தைகளில் ஆழ்ந்த அற்புதமான அர்த்தங்கள் பொதிந்திருக்கும். மின்மினி என்னும் தமிழ் வார்த்தையும் அர்த்தம் பொதிந்த பதமாகும். ”ம, ன” என்ற மெல்லின எழுத்துக்களால் ஆன மின்மினி என்ற வார்த்தை மென்மையைக் குறிக்கும். பெயருக்கேற்ப இப்பூச்சிகளின் உடல் மிகவும் மென்மையாக, மிருதுவாக இருக்கும்.


ஸ்ரீவிநாயகர் கருப்பத்தூர்

பொதுவாக, ஒருவர் எந்த அளவு இறைவனை நோக்கி தவம் இயற்றுகிறாரோ அந்த அளவிற்கு அவருடைய உடல் உறுப்புகள் மென்மை அடையும். மகான்களின் தூல உடம்பை தொட்டுப் பார்த்து உணரும் பாக்கியம் பெற்றவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். மேலும் எந்த அளவு உடல் மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அது வலிமை உள்ளதாகவும் இருக்கும்.

பெண்கள் ஆண்களை விட ஏழு மடங்கு ஆன்மீக சக்தி உடையவர்களாக இருப்பதால் அவர்கள் மென்மையான உடல் வாகுடன் இருக்கிறார்கள். மேலும் அதிக சக்தியை வெளிப்படுத்தக் கூடிய அவர்களுடைய ஜனன உறுப்புகளும் மிகவும் மென்மையாக இருப்பதற்குக் காரணமே அந்த உறுப்புகளால் நிறைவேற்றப்பட வேண்டிய பணி மிகவும் சிறப்புடையது என்பதற்காகத்தான். இதை உணர்வதே உண்மையான தெய்வீகம்.

அப்படியானால் உலகில் உள்ள ஜீவன்களை கரையேற்றுவதற்காக அவதாரம் எடுத்து வந்துள்ள மகான்களின் உடல் மிகவும் பஞ்சு போல் மென்மையாக இருப்பதில் அதிசயம் இல்லையே.

அதே போல மிகவும் மென்மையான உடலமைப்பை மின்மினிப் பூச்சிகள் பெற்றிருப்பதால் அவைகளின் பெயரும் மென்மையான எழுத்துக்களால் அமைந்துள்ளன.

மேலும், மின்மினிப் பூச்சிகள் என்று கூறும்போது ”பூச்சி” என்ற வார்த்தையில் பொதிந்த அர்த்தத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ”பூச்சி” என்ற வார்த்தைக்கு உரிய பல அர்த்தங்களில் ”அடிப்படை உயிர்”, ”காரணம்” என்பவையும் அடங்கும்.

சித்தர்கள் கூற்றின்படி விந்து இரகசியம் அறிந்தவனே உயிர் இரகசியம் அறிந்தவன் ஆகிறான். உயிர் இரகசியம் அறிந்தவன்தான் ஆத்மாவைப் பற்றி உணர முடியும். ஆன்மாவை உணர்ந்தவன்தான் இறை தரிசனம் பெற முடியும். விந்து இரகசியத்திற்கு ஆதாரமாய் இருப்பதே சுக்ர சக்தியாகும். இந்த சுக்ர சக்தியை அளிப்பதே மின்மினிப் பூச்சிகளின் அருந் தொண்டாகும்.

ஆம், கற்பனைக்கும் எட்டாத அற்புத ஆன்மீகத் தொண்டாற்றுபவையே மின்மினிப் பூச்சிகளாகும். நவீன விஞ்ஞானக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டுச் சொன்னால் ATP enzyme கூறின் மூல சக்தியாக அமைவதே சுக்ர சக்தியாகும். இதை எந்த உபகரணங்களாலும் பார்க்கவோ உணரவோ முடியாது.

இவ்வாறு மனித சமுதாயத்திற்கு வேண்டிய சுக்ர சக்திகளை வான மண்டலத்திலிருந்து கிரகித்துத் தரும் இந்த அற்புத சேவையை மின்மினிப் பூச்சிகள் எப்படி நிறைவேற்றுகின்றன என்பதை விளக்குவோம்.

ஒவ்வொரு மார்கழி மாதப் பிறப்பிலும் திருஅண்ணாமலை உச்சியிலிருந்து வெண்பனி வடிவில் ஒரு சக்தி உற்பத்தியாகி உலகெங்கும் வியாபிக்கிறது. இதை ஆங்கிலத்தில் ஓசோன் என்று அழைக்கிறோம். இந்த ஓசோன் வாயு மிகவும் சக்தி வாய்ந்த கிருமி நாசினி. இதன் சக்தியைப் பெறுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள மக்கள் விடியற் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வீட்டு வாசலை நீர் விட்டு சுத்தம் செய்து, பசுஞ் சாணம் தெளித்து அதன் மேல் பச்சரிசி மாக்கோலம் இட்டு பசுஞ் சாணத்தை அந்தக் கோலத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு பறங்கிப் பூவை வைப்பார்கள்.

மார்கழி என்பது மார்கசீர்ஷம் என்னும் நட்சத்திரத்தின் (தமிழில் மிருக சீரிடம்) பெயரைக் கொண்டு வழங்கப்படுவது. மிருக சீர்ஷ நட்சத்திரம் செவ்வாய் பகவானின் பாத சாரத்தைப் பெற்றிருப்பதால் மார்கழி மாதத்தில் அற்புதமான பூமி சக்திகள் தோன்றுகின்றன. இந்த பூமி கிரணங்களையும் ஓசோன் வாயு கிரணங்களையும் ஒருங்கிணைப்பதே பச்சரிசி மாக்கோலம், பசுஞ் சாணம், பறங்கிப் பூ (மஞ்சள் பூசணிப் பூ).


ஸ்ரீசுகந்தகுந்தளாம்பாள் கருப்பத்தூர்

எனவே நமது முன்னோர்கள் கற்றுத் தந்த வழிபாட்டு முறைகள் அற்புதமான அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியவை. மார்கழி மாதத்தில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றி விட்டால் அந்த வருடம் முழுவதும் மக்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும் என்றால் மார்கழி மாத வழிபாட்டுப் பலனை எப்படி வார்த்தைகளால் விளக்க முடியும்.

அதே போல இந்த ஓசோன் வாயுவை கிரகித்து அதிலிருந்து மக்களுக்குத் தேவையான சுக்கிர சக்திகளைப் பெற்றுத் தருவதே மின்மினிப் பூச்சிகளின் சேவையாகும். சாதாரண மனிதர்களால் ஓசோன் வாயுவிலிருந்து சுக்ர சக்தியை கிரகிக்க முடியாது. அதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன்களால்தான் அந்தப் பணியை நிறைவேற்ற முடியும்.

சுக்கிரனுக்கு உரித்தான எண் 6. எனவே ஆறு கால்கள் உடைய வண்டினங்களும் பூச்சிகளும்தான் சுக்கிர சக்திகளை இனங் கண்டு கொள்ள முடியும். மேலும் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகத்திற்கு உடைய வண்ணங்களை அளிக்கக் கூடிய ஜீவன்கள்தான் சுக்ர சக்திகளைக் கையாள முடியும்.

மின்மினிப் பூச்சிகள் புழு பருவத்தில் இருக்கும்போது மார்கழி மாதம் முழுவதும் பூமியை விட்டு வெளிவராமல் பூமி சக்திகளைக் கிரகிக்கின்றன. அப்போது அவை எந்த உணவையும் ஏற்பதில்லை. மார்கழி மாதம் முழுவதும் உபவாசம் இருந்து உத்தராயணத்தில் கண் திறக்கின்றன. அப்போது சூரிய பகவானை வழிபடும் நத்தை போன்ற ஜீவன்களை உணவாகக் கொள்கின்றன.

இதன் பின்னால் அற்புத ஆன்மீக இரகசியங்கள் பொதிந்துள்ளன. மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் தங்கள் உடலை மற்ற ஜீவ ராசிகளுக்கு உணவாக அர்ப்பணித்து பொது நலத்தைப் பேணுகின்றன. உதாரணமாக, ”பா, பு” என்ற பீஜாட்சரங்களை ஓதி கஞ்சலங்கை என்ற தவளை ஒரு வருடம் முழுவதும் ஓதி அதன் பலனை தானே உணவாக மாறி இஷ்ட பரிமாண திவ்ய நாகம் என்னும் நாகதேவதைக்கு அளிக்கும் தியாகத்தை திருக்கழிப்பாலை திருத்தல வரலாற்றின் மூலம் நாம் அறியலாம். இதன் விளக்கங்களை கடுக்கன் மகிமையை விளக்கும் எமது நூலில் காணலாம்.

அதே போல நத்தைகள் சூரிய பகவானைத் துதிப்பதால் கிடைக்கும் அனுகிரக சக்திகளை மின்மினிப் பூச்சிகளுக்கு அளிக்கின்றன. அதனால்தான் தங்கள் ஒரு மாத உபவாசத்திற்குப் பின் நத்தைகளை உண்ட மின்மினிப் பூச்சிகள் எந்த வண்ணத்திலும் ஒளிப் பிரகாசத்தை ஏற்படுத்தும் அற்புத தெய்வீக சக்திகளுடன் விளங்குகின்றன.

அது காரணம் பற்றியே நத்தைகள் ஊர்ந்து சென்ற தாரையில் சூரிய ஒளி பட்டு அது மனிதர்கள் மேல் பிரகாசித்தால் சுப சகுனமாக கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு செவ்வாய் பகவானின் அனுகிரகத்தையும் சூரிய பகவானின் அனுகிரகத்தையும் பெற்ற மின்மினிப் பூச்சிகள் சூரிய பகவானின் ஏழு நிறங்களுடன் சத்துவம், ரஜோ தமோ குண பேதங்களையும் இணைத்து ஒன்பது வண்ணங்களுடன் மிளிர்கின்றன. ஒரு மனிதனுக்கு உள்ள ஒன்பது சூட்சும உடல்களின் வண்ணங்களைத்தான் மின்மினிப் பூச்சிகள் பிரதிபலிக்கின்றன என்பதே இதுவரை மக்கள் சமுதாயம் அறிந்திராத தெய்வீக உண்மையாகும்.


ஒன்பது வண்ண ஒளிக் கீற்றுக்களை
வெளிப்படுத்தும் மின்மினிப் பூச்சி

இந்த விந்தையை இங்கே உள்ள படத்தின் மூலம் நீங்களே கண்டு உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு ஒன்பது வண்ணங்களுடன் பிரகாசிக்கும் மின்மினிப் பூச்சிகளைக் கண்டு தம்பதிகளுக்கு ஏற்படக் கூடிய தாம்பத்ய பிரச்னைகளை அறியக் கூடிய ஜோதிடக் கலை முற்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்தது. வர்ண மாலை எனப்படும் அந்த ஜோதிடக் கலை நாட்கள் செல்லச் செல்ல மறைந்து விட்டது.

தம்பதிகளுக்கு இடையே தேவையான ஈர்ப்பு சக்தியைத் தோற்றுவிக்கும் வல்லமை உடைய சுக்ர சக்திகளை நிர்வகிக்கும் திறனை மின்மினிப் பூச்சிகள் பெற்றிருப்பதால் வர்ண மாலை ஜோதிடக் கலையால் தம்பதிகளுக்கிடையே உள்ள தாம்பத்ய உறவுப் பிரச்னைகளை எளிதில் இனங் கண்டு தேவையான, பரிகார முறைகளை அளித்து வந்தனர் அக்காலப் பெரியோர்கள்.

குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பதே மின்மினிப் பூச்சிகளின் வழிபாடாகும். தம்பதிகள் அவ்வப்போது இத்தகைய மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக சஞ்சாரம் செய்யும் மரங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வலம் வந்து வணங்கி வருவதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

மின்மினி என்பதைப் பிரித்தால் ம்+இ+ன்+ம்+இ+ன்+இ என்று வரும். இவ்வாறு ”இ” என்ற குற்றெழுத்து சுட்டெழுத்தாய்த் தொழில் செய்யும்போது அது நிலைத்த சக்திகளை உருவாக்கும். இதனால் தம்பதிகளுக்கு இடையே உள்ள உறவும், நண்பர்களுக்கு இடையே உள்ள உறவும். முதலாளி தொழிலாளிகளுக்கு இடையே உள்ள உறவும், சமுதாயத்தில் சகோதர உறவுகளும் நிலைப்படும். இவற்றை அளிக்கவல்லதே மின்மினிப் பூச்சிகளின் வழிபாடு.

மின்மினிப் பூச்சிகளுக்கு ஒளிகாட்டிகள், வழிகாட்டிகள், ஒளி கூட்டிகள் என்ற காரணப் பெயர்களும் உண்டு. தங்கள் நிற மாலை மூலம் மனிதர்களின் குணாதிசயம், வரக் கூடிய வியாதிகள், குடும்பப் பிரச்னைகள் போன்றவற்றை தங்கள் ஒளிப் பிரகாசத்தின் மூலம் காட்டுவதால் அவைகள் ஒளி காட்டிகள் என அழைக்கப்படுகின்றன.

இறந்தவர்கள் அனைவரும் திருக்கைலாயத்திற்கோ, வைகுண்டத்திற்கோ சென்று விடுவதில்லை. லட்சத்தில் ஒருவரோ கோடியில் ஒருவரோதான் அத்தகைய உயர் நிலைகளை அடைகிறார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் ஒளி உலகம், மத்திம உலகம், இருண்ட உலகம் இவற்றைத்தான் அடைகிறார்கள்.

இவற்றில் ஒளி உலகம் அடைந்தவர்களை நாம் நமது பித்ருக்கள், முன்னோர்கள் என்று அழைக்கிறோம். மனிதர்கள் அளிக்கும் தர்ப்பணங்கள், திவசம், படையல் போன்ற வழிபாடுகள் எல்லாம் இந்த ஒளி உலகத்தில் உள்ளவர்களுக்குத்தான் போய்ச் சேரும்.

தற்கொலை, விபத்து போன்ற அகால மரணம் அடைந்தவர்கள் பெரும்பாலும் இருண்ட லோகத்திற்குத்தான் செல்வார்கள். இதில் பல விளக்கங்கள் உண்டு. அவற்றைத் தக்க பெரியோர்கள் மூலம் தெரிந்து கொள்ளவும்.

அவ்வாறு இருண்ட லோகம் அடைந்தவர்களை பூமியில் உள்ள எவருமே தொடர்பு கொள்ள முடியாது. அப்படியானால் நாம் அத்தகையோருக்கு பூமியில் அளிக்கப்படும் தர்ப்பணம், திவசம் போன்றவை வீணாகி விடுமா என்று நினைக்கத் தோன்றும் அல்லவா?

உண்மையில் தெய்வீகத்தில் நாம் செய்யும் எந்தக் காரியங்களும் வீணாவதில்லை. நீங்கள் ஒரு வங்கியில் மாதம் மாதம் போட்டு வைக்கும் பணம் நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது பெருந்தொகையாக வட்டியுடன் உங்களுக்குக் கிடைக்கிறது அல்லவா? அது போல இருண்ட லோகத்தை அடைந்தவர்களை நினைத்து நீங்கள் செய்யும் வழிபாடுகள் அவர்களைப் போய்ச் சேராது எனினும் அந்த வழிபாட்டுப் பலன்கள் உங்கள் வம்சாவழியில் உள்ள ஒளி உலகத்தைச் சேர்ந்த மூதாதையர்களுக்கு போய்ச் சேரும்.

எப்போது இருண்ட லோகத்தில் உள்ள உங்கள் மூதாதையர் அங்கிருந்து வெளியே வருகிறாரோ அப்போது ஒளி உலகத்தில் உள்ள உங்கள் பித்ருக்கள் நீங்கள் இவ்வளவு நாள் அளித்த தர்ப்பண சக்திகளை உங்கள் இருண்ட லோக வாசிகளுக்கு அளித்து விடுவார்.

சினிமா, அரசியல், விளையாட்டுத் துறை, விஞ்ஞானம் போன்ற துறைகளில் திடீரென பெரும் பதவிகள், விருதுகள் போன்றவற்றைப் பெற்று உலகப் புகழுடன் விளங்குவதற்கு இவ்வாறு பல வருடங்கள் சேர்த்து வைத்த தர்ப்பணப் புண்ணிய சக்திகள் திடீரென ஒரு இருண்ட லோகத்தில் இருந்தவருக்கு சேர்ந்து அவர் ஒரே சமயத்தில் அனைத்து புண்ணிய சக்திகளையும் உங்களுக்குப் பலனாக வழங்குவதுதான்.


கருப்பத்தூர் சிவாலயம்

அதனால்தான் பெரியோர்கள் அதிர்ஷ்டம் என்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதில்லை. முன்னால் நாம் சேர்த்து வைத்த புண்ணியமே பின்னால் சுகமாக வருகிறது என்பதே உண்மை.

பூமியில் உள்ளவர்கள் இருண்ட லோகவாசிகளைத் தொடர்பு கொள்ள முடியாது என்றாலும் மூவுலகிற்கும் சஞ்சாரம் செய்ய வல்ல மின்மினிப் பூச்சிகள் இருண்ட லோகவாசிகளையும் தொடர்பு கொள்ளும் சக்தி பெற்றவை.

மின்மினிப் பூச்சிகள் கூட்டமாகத் தங்கும் பால் விருட்சங்களுக்கு கையால் அரைத்த சந்தனம், தங்கள் கையால் அரைத்த மஞ்சள் இவற்றைப் பூசி குங்குமப் பொட்டிட்டு வலம் வந்து வணங்கி அம்மரத்தடியில் தர்ப்பண பூஜைகளை மேற்கொண்டால் உங்களுடைய தர்ப்பண சக்திகள் ஒளி உலக பித்ருக்களை அடையும். அவர்கள் எந்த இருண்ட லோகவாசிகளுக்கு அந்த புண்ணிய சக்திகளை அளிக்க வேண்டும் என்ற செய்தியை நீங்கள் தர்ப்பணம் அளிக்கும் மரத்திலுள்ள மின்மினிப் பூச்சிகள் அந்த ஒளி லோக பித்ருக்களிடம் தெரிவித்து விடும்.

இவ்வாறு இருண்ட லோகத்தில் வாழும் உங்கள் மூதாதையர்களை அடையாளம் கண்டு. அவர்களிடம் மனோ ரீதியான தொடர்பை ஏற்படுத்தி அவர்களைப் பற்றிய விளக்கங்களை ஒளி லோக பித்ருக்களுக்கு அளிப்பதால் மின்மினிப் பூச்சிகள் வழிகாட்டிகள் என்று புகழப்படுகின்றன.

நாரதர் ஒரு முறை அகத்திய பெருமானை பித்ரு லோகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பல பித்ருக்கள் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதை அகத்தியர் பார்த்து திடுக்கிட்டார்.

நாரதரிடம், ”சுவாமி, ஏன் இந்த மூர்த்திகள் இவ்வாறு தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் என்ன தவறு புரிந்தனர்?” என்று வினவ நாரதர் குறுநகையுடன், ”முனிபுங்கவரே, அவர்கள் தவறேதும் செய்யவில்லை. பூமியில் அவருடைய வழித் தோன்றல்கள் செய்த மறந்த காரியத்தால் இங்கு இவர்கள் தலை கீழாகத் தொங்கும் நிலை ஏற்பட்டது,” என்றார்.

அகத்தியர், ”சுவாமி, அப்படியானால் அவர் யார் என்று சொன்னால் அவர் காலில் விழுந்து வணங்கியாவது இந்த முதியவர்களை அவலமான இந்தச் சூழ்நிலையிலிருந்து மீட்க முயற்சி செய்கிறேன்,” என்று பணிவுடன் கூறினார்.

நாரதர், ”முனிசிரேஷ்டரே, நீங்கள் யார் காலிலும் விழ வேண்டிய அவசியமில்லை. இவர்கள் அனைவரும் உங்களுடைய மூதாதையர்கள்தான். நீங்கள் இதுவரை தவம், யோகம் என்று மூழ்கி விட்டதால் திருமணம் என்ற தெய்வீக பந்தத்தைப் பற்றி நினைக்கவில்லை. நீங்கள் திருமணம் செய்து கொண்டால்தான் உங்களுடைய மனிதப் பிறவி பூர்த்தியாகும். அப்போது நீங்கள் அளிக்கும் தர்ப்பணம்தான் இவர்களை இந்த நிலையிலிருந்து விடுவிக்கும்,” என்று கூறி முடித்தார்.

அதன் பின்னரே ஸ்ரீஅகத்தியர் லோபா மாதாவை மணந்து தன்னுடைய மூதாதையர்களை பித்ரு லோகத்திலிருந்து விடுவித்து அவர்கள் கைலாயத்தை அடைய வழிவகுத்தார்.

இவ்வாறு ஒரு மனிதனுடைய பித்ருக்கள் நன்னிலை அடையும்போதுதான் அவனுடைய ஒன்பது சூட்சும சரீரங்களும் தூய்மை அடைகின்றன. அப்போதுதான் அவன் இறை மார்கத்தில் முன்னேற முடியும். இவ்வாறு ஒன்பது சரீரங்களின் வண்ணத்தை தூய்மைப்படுத்த மின்மினிப் பூச்சிகள் வழிகாட்டி மனிதனின் சூட்சும சரீரங்களின் ஒளியைக் கூட்ட, பெருக்க உதவுவதால் அவை ஒளி கூட்டிகள் என்று பாராட்டப்படுகின்றன.

மின்மினிப் பூச்சிகளின் தரிசனம் எத்தகைய மனக் கஷ்டத்தையும் போக்கி மனதிற்கு அமைதி அளிக்கக் கூடியதாகும். பல்வேறு மனக் கஷ்டங்களால் அல்லல்படுவோர் கீழ்க் கண்ட துதியை ஓதி இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குறைந்தது ஒரு நாழிகை (24 நிமிடம்) மின்மினிப் பூச்சிகளை தரிசனம் செய்து வந்தால் மனம் அமைதி பெறும். ஆழ்ந்த உறக்கம் கிட்டும்.

சுடர்மணி சோதியே சுப்பிரமே நிறைமணியே
இடர்களையும் பாங்கில் உனக்கினை யாருமுண்டோ
மனக் கவலை மாற்ற வல்ல மாமறையே மாமருந்தே
எனதிருள் நினதருளால் மறையாதோ மண்ணாளா

சுப்பிரம் என்பது 24வது யோகம். அந்த யோக ஸ்புடம் சதய நட்சத்திர ஸ்புடத்துடன் இணைந்து சதய நட்சத்திரத்தின் முதல் பாதம் குரு நவாம்சத்துடன் இணைவதும் சுடர் மணிக்கு ஒளி கூட்டுவதாகும். எனவே மின்மினிப் பூச்சிகள் திகழும் பால் விருட்சங்களின் அடியில் தர்ப்பண வழிபாடுகளை இயற்றுவதும் அதையொட்டி தேங்காய் மிட்டாய்கள், பர்பிகளைத் தானமளிப்பதும் அற்புத வழிபாடாகும்.

சூரிய பகவான் வழிபாடு செய்யும் திருநெடுங்களம் போன்ற திருத்தலங்களிலும் (பாஸ்கர பூஜை தலங்கள்), காவிரி போன்ற புனித நதிக் கரைகளில் அமைந்துள்ள திருத்தலங்களிலும், சூரிய பகவான் சிறப்புப் பெறும் திருத்தலங்களிலும் (உதாரணமாக முள் இல்லாத வில்வ மரம் திகழும் நகர்) மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஒரு குருநாதர் உண்டு. எறும்புகளுக்கு பிப்லாத மகரிஷியும், எருமைகளுக்கு சுவாலினன், காரடையான் கரட்டையும், கழுதைகளுக்கு ருத்ர பல்குனி சித்தரும் குருநாதர்களாய் அமைந்து நல்வழி காட்டுவது போல மின்மினிப் பூச்சிகளுக்கு சற்குரு அமைந்தவரே ஸ்ரீதிரிநாம கண்ட மகரிஷி ஆவார்.



திரிநாம கண்ட மகரிஷி நித்ய வாசம் செய்யும் திருத்தலங்களுள் ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலமும் ஒன்றாக இருப்பதால் இங்கு மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம். மேலும் இன்னும் ஓர் அற்புத விசேஷமும் இத்தலத்திற்கு உண்டு. மின்மினிப் பூச்சிகளின் அவதாரத் தலமே கருப்பத்தூர் திருத்தலமாகும். ஜீவ நதிகளின் நீரோட்டம் நாளுக்கு நாள் உலகெங்கும் குறைந்து வருவதைப் போல மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டமும், மகான்களின் சஞ்சாரமும் குறைந்து வருவது கலியுகத்தின் யுக தர்மமே.

என்று நீங்கள் மின்மினிப் பூச்சிகளைக் காண முடியாத நிலை வருகிறதோ அன்று தெரிந்து கொள்ளலாம் பூமியில் உள்ள ஜீவ நதிகளும் மகான்களின் சஞ்சாரமும் முற்றிலும் மறைந்து விட்டதென்று.

ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலத்தில் முற்காலத்தில் மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. தற்காலத்தில் குறித்த சில சமயங்களில் மட்டும் அவைகளைக் காண முடிகிறது. ஆனால், பாக்கியம் பெற்றோர் இன்றும் இத்தலத்தில் மின்மினிப் பூச்சிகளைக் கும்பல் கும்பலாகத் தரிசிக்க முடியும்.

ஆயிரக் கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொண்டே ஒரு பட்டுப் புடவை உருவாக்கப் படுவதால் ஆன்மீகத்தில் இருப்பவர்களாவது பட்டுத் துணிகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இறைவனுக்கு பட்டு வஸ்திரங்களை அளிப்பதும், ஏழைகளுக்கும் சுமங்கலிகளுக்கும் பட்டுப் புடவைகளைத் தானமாக அளிப்பதும் ஏற்புடையதே. அதனால் பட்டுப் பூச்சிகள் நன்னிலை அடைந்து அத்தகைய தானம் அளித்தோரை வாழ்த்தி அற்புத புண்ணிய சக்திகளை அளிக்கும்.

பட்டுப் புடவையை வாங்க வசதி அற்றவர்களும் இறைவனுக்கு பட்டு வஸ்திரங்கள் சார்த்திய புண்ணிய சக்தியைப் பெற வழி வகுப்பதே மின்மினிப் பட்டாகும். மின்மினிப் பூச்சிகளின் பட்டொளி வீசிய வஸ்திரங்கள், ஆடைகள் மின்மினிப் பட்டு என அழைக்கப்படுகின்றன. அற்புதமான தெய்வீக சக்தியை மின்மினி ஒளிக் கீற்றுகள் கொண்டுள்ளதால் மின்மினிகளின் ஒளியை ”பட்டொளி” என்று சித்தர்கள் புகழ்கின்றனர்.

63 நாயன்மார்களின் ஒருவரான நேச நாயனார் முசிறி அருகே மணமேடு என்னும் கிராமத்தில் வாழ்ந்தவர். அவர் நெசவுத் தொழிலை மேற்கொண்டு இறைவனுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு வேஷ்டியை நெய்து எடுத்து வந்து ஸ்ரீசிம்மபுரீஸ்வரருக்கு சார்த்தி வந்தார்.

சப்திமி திதி அன்றே கருப்பத்தூர் திருத்தலத்தை அடைந்து தான் பஞ்சாட்சரம் ஓதி நெய்த வேட்டியை ஒரு மூங்கில் கூடையில் வைத்து தலையில் சுமந்தவாறே திருக்கோயிலில் உள்ள அரசமரத்தைச் சுற்றி சப்தமி திதி முழுவதும் வலம் வருவார். அவர் வாழ்ந்த காலத்தில் மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

மின்மினித் தாரகை குடை பிடிக்க
தாரகைக்குத் தாரகை குடை பிடிக்க
குடை பிடிக்கும் நாகமும் குனிந்து போற்றும்
குவலயத்து ஈசனைக் கூறாமல் போவேனோ

என்று ஓதியவாறே ஆனந்தத்துடன் வலம் வருவாராம். திருஞான சம்மந்த மூர்த்தி நாயனார் மூன்று வயதுடைய பாலகனாக தன்னுடைய தந்தையில் தோளில் செல்லும்போது தான் இறைவனுடைய திருப்பாதத்தின் கீழ் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தப் பரவச நிலையில் இருப்பாராம்.

அது போல நேச நாயனார் இறைவனுக்காக நட்சத்திரங்கள் குடை பிடிக்க இறைவனுக்காக பட்டாடைகளை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற பரவச நிலையில் மூழ்கி அரச மரத்தை வலம் வந்து கொண்டிருப்பாராம். இத்தகைய மின்மினிப் பட்டு வஸ்திரத்தை இறைவனுக்கு சார்த்தி வழிபடுவதால் ஒரு பட்டுத் துணியை அளிப்பது போல நூறு மடங்கு பலனைப் பெறலாம்.

எந்த வஸ்திரத்தையும் ஆடையையும் இவ்வாறு மூங்கில் கூடையில் வைத்து அரசமரத்தை சப்தமி திதியில் வலம் வந்து, சிறப்பாக மின்மினிப் பூச்சிகள் நடமாட்டம் உள்ள பால் விருட்சங்களை வலம் வந்து, அஷ்டமி திதியில் இறைவனுக்கு சார்த்தி வழிபடுவதால் திருமண தோஷங்கள் விலகும். குடும்ப ஒற்றுமை பெருகும்.

எட்டாமிட தோஷங்கள் விலகும். குறிப்பாக திருமணத்திற்கான முகூர்த்த லக்னத்திற்கு எட்டில் சுக்ரன் இருத்தலால் ஏற்படும் தோஷங்களைக் களைவதே ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் தலத்தில் நிறைவேற்றப்படும் வழிபாடாகும். சுயம்பு மூர்த்தி தலங்களிலும் இத்தகைய வழிபாட்டை நிறைவேற்றிப் பலன் பெறலாம்.

கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்களும், ஆர்க் வெல்டிங் பணியாளர்களும், எக்ஸ்ரே போன்ற சக்தி வாய்ந்த ஒளிக் கதிர்களை கையாள்பவர்களும் நேச நாயன்மாரை வணங்கித் துதித்து மேற்கூறிய சுடர்மணித் துதி, குடைக் கவசத் துதிகளை ஓதி வெயிலில் வாடும் ஏழைகளுக்கும், சாலைப் பணியாளர்களுக்கும் குடைகளைத் தானமாக அளித்தலால் தங்கள் துறையில் பாதுகாப்புப் பெறுவார்கள்.