Wednesday 8 August 2018

ஜீவ சமாதி, ஒரு நீளமான அலசல்

நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே...!

(Thanks for A akhilanantham ji)

சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கும் கூறுவதற்கும் எனக்கு தயக்கம் உண்டு. அதில் அதி முக்கியமானது சமாதி என்ற ஒரு விஷயம். சமாதி என்ற கருத்தை வெளிப்படுத்தும் பொழுது பலருக்கு இந்த கருத்து புரிவதில்லை. சமாதி பற்றி பேசவோ எழுதவோ என்றும் நான் விரும்பியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் விளக்குவதால் பலர் விளங்காமல் போகலாம். விளக்காமல் போனால் சிலர் வீணாகப் போகலாம். விவரித்தாலும் விவரிக்கவில்லை என்றாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றே என்பது சமாதி என்ற கருத்தில் மட்டுமே இருக்கும் என நினைக்கிறேன்.

நம்மில் இருப்பவர்களில் இக்கருத்தை பற்றி அறிந்தவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஒரு சிலருக்கு சமாதி என்றால் இறந்த பின் வைக்கும் கல்லறை என நினைக்கிறார்கள். சென்னைக்கு செல்லும் நம் ஆட்கள் கூட அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி பார்க்கும் திட்டத்துடன் செல்லுவதுண்டு. இவர்களுக்கு கல்லறை என்பதை அந்தஸ்தாக கூறும் வார்த்தையே சமாதி. சமாதி என்பதை தெரிந்து கொள்ள முயலாமல் தங்களுக்கு தெரிந்த சமாதி என்பதே சரி என்பவர்கள் இவ்வகை.

இன்னும் சிலருக்கு சமாதி என்பது பல்வேறு ஆன்மீக நூலில் படித்த வாசகம் என்றோ அல்லது பெரிய ஆன்மீக உயர் நிலை என்றோ கருதுவார்கள். என்னிடம் யோகம் பயில வரும் சிலர் புத்தக குப்பைகளை அவர்களுக்குள் சுமந்து வருவார்கள். சமாதிகளையும் சமாதியின் வகைகளையும் இவர்கள் விலாவாரியாக பேசுவார்கள். ஆனால் அந்த நிலை அடைய ஒரு துளி கூட முயற்சி செய்ய மாட்டார்கள்.

மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் இந்த இரண்டு தன்மையையும் கடந்து இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாமல் உடுத்தி, உண்டு, உறங்கி இறந்துவிடுவார்கள்.

எங்காவது சமாதி என்ற வார்த்தையை கேள்விப்பட்டு விளக்கமாக தெரிந்து கொள்ளும் நோக்கில் இவர்களிடம் கேட்டால் எப்படி பதில் சொல்லுவார்கள் தெரியுமா?

முதல் வகை : தம்பி பார்த்து யோகா செய்யுப்பா. யோகா பண்ணி மூளை வெடிச்சு செத்துப்போகிறதைத்தான் சமாதினு சொல்லுவாங்க.
(இவ்வாறு தனக்கு தெரிந்ததை சரி என நினைத்து கொஞ்ச நஞ்ச ஆட்களையும் நஞ்சாக்கிவிடுவார்)

இரண்டாம் வகை : தம்பி சமாதினா சாதாரண விஷயமா? ஹிமாலயாவில ஒரு குருஜி இருக்காராம் அவர் முன்னூறு வருஷமா சமாதியில இருக்காராம். அதுக்கு குண்டலாமிக ஜிர்விஸ்தி சமாதினு பேராம். அதை பத்தி நேத்து தான் படிச்சேன்.
(இதை கேட்டதும் நம் ஆட்கள், ஓ இது பெரிய விஷயம் போல என ஒதுங்கிவிடுவார்கள்)

மூன்றாம் வகை : என்ன தம்பி யோகா அப்படி இப்படினு ஏதோ சொல்லிக்கிட்டு. சமாதினு சொன்னவுடன தான் எனக்கு நியாபகம் வருது, நம்ம வளர்மதிக்கு வர இருபதாம் தேதி கல்யாணம். உனக்கு பத்திரிகை வச்சாங்களா?
(இவர்களுக்கு சமாதி என்பது ஏதோ ஒரு அன்னிய மொழி)

மேற்கண்ட மூன்று நிலையில் கடைசி நிலையில் இருப்பவர்கள் மேம்பட்டவர்கள் என்பேன். முதல் இரண்டு நிலையில் இருப்பவர்கள் மிகவும் கொடூரமானவர்கள், இவர்களால் பலருக்கு தீங்க விளையும் என்பது உண்மை.

சமாதி என்ற விஷயத்தை பற்றி விளக்குவதற்கான விவரிப்பு அல்ல இது. விவரிப்பதால் யாதொரு பயனும் இல்லை. மொழியால் விளக்க முடியாத ஒரு விஷயம் தான் என்றாலும் சமாதியை பற்றி விளக்குவதை விட சமாதியில் இருப்பவர்களை பற்றி விளக்குவது இங்கே அவசியமாகிறது.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் சமாதி யோகம் என்ற விஷயம் ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனம் மற்றும் ஐந்து வகையான உணர்வு உறுப்புகளை குவித்து தாரணை என்ற நிலையில் ஒருவர் இருந்தால் அதிலிருந்து த்யாணா என்ற நிலைக்கு செல்லலாம். அந்த த்யாணா (தியானம்) என்ற நிலை விரைவில் அவர்களை சமாதிக்கு இட்டுச்செல்லும். சமாதி நிலையில் இருக்கும் ஒருவருக்கு உடல் உணர்வு இல்லாமல் முழுமையாக அசைவற்று இருப்பார்கள். அவர்களின் சுவாசம் இல்லாமல் நாடி துடிப்பு இல்லாமல் ஒரு மரம் போல இருப்பார்கள். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இவர்கள் வாழும் பிணம்...!

இதைத்தான் திருமூலர் பின்வருமாறு கூறுகிறார்.

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.

இவ்வாறு ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் அடுத்த நிலை சமாதிக்குமாற்றம் அடைந்துவிடுவார்கள். இவர்கள் பார்க்க சாதாரணமான நம்மை போல வேலைகளில் ஈடுபடுவார்கள் ஆனால் உள்ளே ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு கால தேச வித்தியாசம் இருக்காது. மேலும் சுவாசிக்கும் தன்மையிலும் உள் நிலையிலும் வித்தியாசமாக இருப்பார்கள்.

பூமியின் வட துருவத்திற்கு சென்று வந்த ஒருவர் அங்கே வீசும் பனிப்புயலை பற்றி எவ்வளவு தான் விளக்கினாலும் நமக்கு புரியாது. நாம் பனிப்புயலில் இருந்தால் தானே அது உணர முடியும். அது போன்றதே சமாதி பற்றிய விளக்கமும் என்பேன்.

இறைவனுடன் முழுமையாக கலக்கும் இந்த உயர் ஆன்மீக நிலையை பலர் தவறாக புரிந்துகொள்வதும், தவறாக பயன்படுத்துவதும் உண்டு. சில நாட்களுக்கு முன் ஒரு தவறான நபரின் விடியோ உலகை வட்டமிட்டது. அவர் தன்னை காப்பற்றிக்கொள்ள நான் சமாதியில் இருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்றார் என கேள்விபட்டேன். உலகில் சமாதியை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. இப்படியே போனால் நாளை திருமணம் முடிந்து ‘சமாதி’ முகூர்த்தத்திற்கு நாள் பார்க்க சொல்லுவார்கள்.

தான் சமாதி அடைந்தேன் என அதை விவரிப்பவர்கள் உண்மையில் சமாதி அடைந்திருக்க மாட்டார்கள் என்பது அறிக. இவர்களை போன்றவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். முன்காலத்தில் ஆன்மீக வாதிகளின் போர்வையில் இருந்த பலர் தான் பெரிய யோகி என காட்டுவதற்கு, இந்த நாளில் இந்த நேரத்தில் ஜீவசமாதி அடையப் போகிறேன் என அறிவிப்பார்கள். அந்த நாளில் அவர்கள் இருக்கும் இடமும், ஊரும் திருவிழாக் கோலம் கொண்டு திகழும். மக்கள் இவர் சமாதி ஆவதை காண நேரில் வருவார்கள்.

சமாதி கட்டும் குழிக்குள் இந்த யோகி அமர்ந்திருப்பார் நேரம் செல்லும் ஆனால் உடலை விட்டு உயிர் பிரியாது. உண்மையான யோகிக்குதானே அதெல்லாம் முடியும்? இவரோ டம்மி பீஸ்...! நேரம் கடக்க கடக்க மக்கள் கொந்தளிக்க துவங்குவார்கள். இன்னும் தாமதித்தால் விபரீதம் என உணரும் சிஷ்ய கோடிகள் குருவுக்கு தீபாராதனை காட்டி அவரின் உச்சந்தலையில் நன்றாக முற்றிய தேங்காயால் ஒரே போடு...!

குருஜி கபால மோக்ஷம் அடைந்துவிடுவார். சொன்ன தேதியில் ஜீவ சமாதியான (ஆக்கப்பட்ட) யோகியின் புகழ் பரவும். இல்லையேல் மக்கள் குருவை நையப்புடைப்பார்கள் அவர் வேறு ஊரில் ஆசிரமும் தேடுவார். இது போன்று நடந்த சம்பவங்கள் ஏராளம். இவற்றை புரிந்துகொள்ளாத மக்கள் இன்னும் கூட ஆன்மீக உயர் நிலை அடைய தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளுவதுண்டு. இப்படிபட்ட (போலி)யோகிகளின் வழிகாட்டினால் இப்படி பட்டவர்களே தானே உருவாகும் சாத்தியம் உண்டு ?

ஏதோ திருமந்திரத்திலும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் மட்டும் இதை பற்றி கூறி இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். அனைத்து மத நூல்களிலும் இக்கருத்து மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

ஏன் மறைமுகமாக கூறவேண்டும்? உழுத நிலத்தில் தானே விதைக்க முடியும்? இல்லை என்றால் பயிரும் களை என கூறுவார்கள் அல்லவா? அதனால் முழுமையான தெளிவு பிறக்கும் பொழுது மத நூல்களில் இருக்கும் மறை பொருட்கள் விளங்க துவங்கும்.

அப்படிபட்ட வாசகம் தான் பைபிளில் உள்ள “நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே” என்ற வாசகம்.

Isa 2:22
Cease ye from man, whose breath [is] in his nostrils: for wherein is he to be accounted of? (நன்றி bible.cc)

இதற்கு நேரடியான விளக்கம், சமாதியில் இருக்கும் தன்மை கொண்டவர்களை நம்பு உன்னை ஆன்மீக உயர் நிலை அடைய செய்வார்கள் என்பதே ஆகும். சமாதி நிலை கண்டு நாசியில் சுவாசமில்லா மனிதர்கள் முழுமையான ஞான நிலையை அடைந்தவர்கள். அதைவிடுத்து சாதாரணமாக உன்னை போன்று சுவாசிக்கும் மனிதனை வழிகாட்டியாக நம்பி விடாதே என எச்சரிக்கிறது. திருமூலர் கூறிய “செத்திட் டிருப்பார் ” என்ற பதத்தை இங்கே நினைவு கூறுங்கள்.

"i am that I am" போன்ற வசனங்கள் பழைய ஏற்பாட்டில் முழுமையான யோக நிலையை உணர்வதற்காக அமைந்திருக்கிறது. பைபிளில் மட்டுமல்ல இது போல குரானிலும், குரு கிரந்த சாகிப் என்ற சீக்கிய புனித நூலிலும், பெளத்த மற்றும் சமண நூலிலும் காணக்கிடைக்கிறது.

“நாசியில் சுவாசம் இருக்கும் மனிதனை நம்பாதே” என்ற வாசகத்தை ஒரு கற்று தெளிந்த ஆட்சியாளர் - யாரையும் நம்பாதே என்பதற்கு உதாரணமாக பத்திரிகை பேட்டியில் பேசியது கவலை அளித்தது. இது போன்ற அறிய கருத்துக்களை ஆராயாமல் இருக்கலாம் தப்பில்லை. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தக் கூடாது.

நான் அனைத்து மத நூல்களையும் ஆழ்ந்து படித்தவன் அல்ல. எனக்கு தெரிந்தவற்றை அவ்வாசகத்துடன் தொடர்பு கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறேன். இவ்வாசகங்களை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தோன்றியதை இங்கே விவரித்தேன். அவ்வளவே..!

சரி... சமாதி என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? நான் கேட்டதற்கு பின்வருமாறு திருமூலர் கூறினார்.

காரிய மான உபாதியைத் தாங்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே

.............. என்ன புரிஞ்சுச்சா?

ஆன்மீகவாதிகள் ஓர் விளக்கம்
*********************************

ஆன்மீகவாதிகளை நாம் வரையறுக்க முடியாது என முன்பு கூறினேன். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். காட்டாறுகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது இயலாது. பின்பு எப்படித்தான் தெரிந்துகொள்ளுவது?

உங்களுக்கு முன் இருக்கும் விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு உணர்த்துவது உங்கள் புலன்களே. கண்ணாடி உங்களை பிரதிபலிக்கும் என்பது உங்கள் கண்கள் சரியாக வேலைசெய்தால் மட்டுமே கூற முடியும். உங்கள் கண்களில் குறை இருப்பின் நாம் கண்ணாடியே சரி இல்லை என கூறிவிடுவோம். அதனால் ஆன்மீகவாதிகளுக்கு அருகில் நீங்கள் இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கூறுகிறேன். உங்களுக்குள் நான் சொல்லுவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அவர் உயர் ஆன்மீக நிலையில் இருக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்மீகவாதிகளை உணர்வு உறுப்புக்களில் தெரிந்து கொள்ளுவது சாத்தியமா என கேட்கலாம். ஆரம்ப நிலை சாதகர்களுக்கு இது அவசியம். பிறகு அவர் உங்களை உணர்வுக்கு அப்பால் அழைத்துச்செல்வார்கள்.

ஒரு ஆன்மீகவாதியின் அருகில் இருக்கும் பொழுது உங்களுக்குள் எப்படி இருக்கும் என இந்த கட்டுரையின் இறுதியில் கூறுகிறேன்.

அதற்கு முன் ஆன்மீகவாதியில் லட்சணங்கள் என நான் பட்டியலிட்ட விஷயங்கள் ஏற்படுத்திய விபரீதங்களை பார்ப்போம்

1) கண்களில் ஒரு ஒளியுடன், சாந்தமான முகமும் , கண்களில் கருணை வழிந்தோடிக் கொண்டிருக்கும். கைகளில் ஒருவிதமான ஆசி கொடுக்கும் பாவனையில் வைத்திருப்பார்கள். ஆனந்ததின் அடையாளமாக ஒரு புன்சிரிப்பு நிலையாக முகத்தில் இருக்கும்.

இவ்வாறு எதிர்பார்ப்பதால் தங்கள் முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சிலர் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது சொல்லிதெரியவேண்டியது இல்லை. புன்னகையை எதிர்பார்த்த காரணத்தால் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தும் வண்டியில் ஏறும்பொழுது புன்னகைக்கிறார்கள். பலவருடங்களாக புன்னகையை போலியாக சுமந்தவர்கள் எப்படி ஒரு நாளில் அதை விடுவிக்க முடியும்?

மேலே நான் குறிப்பிட்ட விஷயங்களில் ஆசிகொடுக்கும் தன்மையை விடுத்து பிற விஷயங்களை நீங்கள் விமான பணிப்பெண்ணிடம் காணலாம். வரும் வாடிக்கையாளர்களை செயற்கையாக அவர்கள் அனுகும் முறை இது. போலி ஆன்மீகவாதிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை இப்படித்தான் வலைவீசுகிறார்கள்.

2) தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். பசும்பால் மற்றும் பழங்கள் இவர்களின் தின உணவு.

இக்கருத்தை எழுதும் பொழுது நான் மிகவும் வேதனை அடைந்தேன். காரணம் எனக்கு தெரிந்த ஒரு ஆன்மீகவாதி நன்றாக உணவு சாப்பிடுபவர். ஒரு ஊருக்கு செல்லும் பொழுது அந்த மக்கள் உணவு வழங்காமல் பழங்களை கொடுத்து அவரை படுத்தபடுக்கையாக்கி விட்டார்கள். தற்காலத்தில் பால் மற்றும் பழங்களில் அளவுக்கு அதிகமான ரசாயனம் கலக்கப்படுகிறது. நிங்கள் ஒரு வேளை மட்டும் பால், பழம் சாப்பிட்டு பாருங்கள் ஒரு மணி நேரத்தில் உங்கள் ஜீரண உறுப்பு தன் வேலையைக்காட்டும். வயிற்றுப்போக்கால் அவர் பல நாள் எழுந்து நடக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.

3) எப்பொழுதும் கைகளில் ஒரு ஜப மாலையோ அல்லது மதம் சார்ந்த பொருளை வைத்து கடவுள் நாமத்தை ஜபம் செய்வார்கள். நமக்கும் ஜபம் செய்ய வேண்டும் என மந்திரத்தை கேட்டால், தீட்ஷை வழங்குவார்கள். நாம் கேட்கும் மந்திரத்தை எந்த தயக்கமும் இன்றி வழங்குவார்கள்.

எல்லா ஆன்மீகவாதிகளும் மதப்பொருட்களை கைகளில் வைத்திருக்கமாட்டார்கள். மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் இருப்பவர்கள் மக்கள் எந்த விஷயத்தை பயன்படுத்த வேண்டுமோ அதை அவர்களுக்காக கைகளில் வைத்திருப்பார்கள். காரணம் இவர்கள் பயன்படுத்துவதை பார்த்து அவர்கள் பின்பற்றவேண்டும் என்பதற்காக.
மேலும் நமக்கு எந்த மந்திரம் வேண்டும், நாம் ஜபம் செய்ய வேண்டுமா என்று முடிவு செய்பவர் நம் குரு மட்டுமே. ஆன்மீகவாதிகள் அல்ல. குறித்துக்கொள்ளுங்கள் அனைத்து ஆன்மீகவாதிகளும் உங்கள் குரு அல்ல..!

அனைவருக்கும் தீட்சை தருபவர் உங்களுக்கு குருவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலர் மார்கழி மாத பிரசாதம் போல நான் இவரிடத்தில் தீட்சை வாங்கினேன், பிறகு இவரிடத்தில் வாங்கினேன் என பெருமை பேசுவார்கள். தீட்சை என்பது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே ஏற்பட வேண்டிய நிகழ்வு. தீட்சை பலரிடத்தில் வாங்குவது பெருமையல்ல. குறைந்த பட்சம் ஒருவரிடமாவது வாங்கியதை பயன்படுத்தவேண்டும் என்பதே அவசியம்.

ஒருவரிடம் தீட்சை பெற்று பின்பற்ற முடியாத சூழலில் இன்னொருவரிடம் தீட்சை பெறலாம். அதைவிடுத்து பார்ப்பவரிடம் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்ள தீட்சை என்பது தேர்தலில் வழங்கும் வாக்காளருக்கான பணம் அல்ல..!

4) அவர்கள் அதிகமாக தூங்கமாட்டார்கள். 24 மணி நேரமும் கடவுளை நினைப்பதால் தூங்குவது அவர்களின் இயல்பல்ல. அவர்களிடம் எப்பொழுது கேள்வி கேட்டாலும் தெய்வீக ரீதியான விளக்கத்தை கொடுப்பார்கள். அவர்களுக்கு காலம் நேரம் முக்கியமல்ல.

ஆன்மீகவாதிகளை நாம் எப்பொழுதும் எடுப்பார் கைப்பிள்ளையாக வைத்திருக்கிறோம். அவர்களின் உள்ளே தெய்வீக நிலை இருப்பதால் அதற்கு நாம் தக்க மரியாதை செலுத்தவேண்டும். ஒரு கேள்வி கேட்கும் பொழுதோ அல்லது உதவி பெறும் முன்போ அவரிடம் அனுமதி வாங்க வேண்டும். அவரின் உள் நிலையில் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கலாம். அது அவருக்கு பெரும் உபாதையாக அமையும்.

உதாரணம் நானும் ஒரு ஆன்மீகவாதியும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அவர் கொஞ்சம் பிரபலமானவர் கூட. ஆன்மீக விஷயங்கள் இல்லாமல் சில நடைமுறை சங்கடங்களை எனக்கு அவர் விளக்கிக் கொண்டிருந்தார். திடீரென எங்கள் முன் வந்த ஒரு இளைஞர், “ பகவத் கீதையில் மூன்றாம் அத்தியாயத்தில் முதல் ஸ்லோகத்தில் கூறப்படும் விஷயம் இப்படி இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என பெரிய பிரசங்கத்தை நடத்திவிட்டு கேட்டார்.

ஆன்மீகவாதி என்னை பார்த்துவிட்ட ஒன்றும் சொல்லாமல் நடக்கத் துவங்கினார். ஆனால் அந்த இளைஞர் தான் கேட்ட கேள்வியால் அந்த ஆன்மீகவாதி நிலைகுலைந்து சென்றார் என நினைத்து பெருமிதமாக எங்களை பார்த்துக்கொண்டிருந்தார். நான் அந்த ஆன்மீகவாதியிடம் கூறினேன் மக்கள் உங்களை ATM என நினைத்துவிடுகிறார்கள். அதாவது ஆன்மீகம் டெல்லிங் மஷின்...! அவர் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள் விஷயம் புரியும்.

இதனாலேயே அவர்கள் அனேகமாக தொலைபேசியோ அல்லது இணையத்தையோ நேரடியாக உபயோகப்படுத்துவதில்லை. 13ஆவது விஷயத்தில் ( நவீன கருவிகளை பயன்படுத்தமாட்டார்கள். செல் போன், கணிபொறி இவை இவர்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும்.) நான் கூறியது உண்மைதான். பல ஆன்மீகவாதிகள் இதனாலேயே தொலைபேசியை பார்த்தால் ஓடுவார்கள். நம் பக்திமான்கள் பொது தொலைபேசியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு பிரம்மசூத்திரத்தை விளக்குங்கள் என கேட்டால் என்ன செய்ய? நம் சுயநலத்தால் அவர்களை எல்லா நேரத்திலும் பயன்படுத்துவோம். இது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய கடினமான உண்மை.

5) உடை விஷயத்தில் பரம எளிமை அவர்களின் அடையாளம். நவீன உடை அணியாமல், வேஷ்டி அல்லது கெளபீணம் அணிந்திருப்பார்கள். அதிக உடை வைத்திருக்க மாட்டார்கள். சேர்த்து வைத்தால் பற்று வரும் என்பதால் இரு உடையுடன் இருப்பார்கள். ஒன்று துவைத்து காயும் பொழுது ஒன்று உடுத்தி இருப்பார்கள். காவி அல்லது வெண்மை என்பது அதன் நிறமாக இருக்கும்.

இவர்கள் உண்மையில் ஆடைகளை விரும்புவதில்லை. நிர்வாணமாக இருப்பதையே விரும்புவார்கள். மஹாவீரர் மற்றும் அனேக அவதூதர்கள் இத்தகைய நிலையை முழுமையாக பின்பற்றுவார்கள். சமூக சூழலுக்காகத்தான் அணிகிறார்கள். சில குறிப்பிட்ட நிறம் அணிவதும் நமக்காகத்தான். உடையின் வேறுபாடு தெரியாத சூழலில் நாம் அவர்களுக்கு பாதகங்களை செய்யலாம். உடையின் காரணத்தால் நாம் அதை தவிர்க்க முடியும். உதாரணம் அவர்கள் முன் காமம் சார்ந்த விஷயங்களை பேசமாட்டோம். ஆன்மீகவாதிக்கு உடல் மேல் ஆடை அணிவது முயல் மேல் பாறையை வைப்பது போல சங்கடமானது. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இதற்கு சரியான உதாரணம்.

பதிவின் நீளம் கருதி ஐந்து விஷயங்களுடன் நிறுத்திக்கொள்கிறேன். சென்ற பதிவு பதினைந்து எண்ணிக்கை வரவேண்டும் என மேலோட்டமாக எழுதபட்டதல்ல. அனைத்தும் விளக்கபட வேண்டிய விஷயங்களே அவை. எண்ணிக்கையில் பதினைந்தையும் கடந்து நிறைய இருக்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்...

ஆன்மீகவாதிகளின் அருகில் இருக்கும் பொழுது நமக்கு எப்படி இருக்கும்?

உங்களுக்கு உள்ளே ஒருவித பேரமைதி காணப்படும்.
அந்த கணத்தை தவிர பிற சிந்தனைகள் எழாது
அவரிடம் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என தோன்றினாலும் செயலாற்ற முடியாது.
அவரின் கண்களை பார்த்து அதிக நேரம் பேச முடியாது.
முதல் முதலாக பார்த்தாலும் பலநாள் பழகிய ஓர் இணக்கம் மனதில் இருக்கும். இருந்தாலும் எல்லை தாண்ட முடியாது
பலருடன் நாம் இருக்கும் பொழுது உள்ளுணர்வில் நம்மை மட்டும் அவர் கவனிப்பதை போன்று தோன்றும்.
அவரை சந்தித்துவிட்டு வந்த பிறகும் இன்னும் போதவில்லை என தோன்றும்.
உங்கள் மனதில் இருக்கும் சந்தேகத்தை கேட்ட தோன்றினாலும் செயலற்று நீங்கள் இருக்கும் பொழுது அவர் பிறருடன் உரையாடும் பொழுது உங்களுக்கான விடை அதில் இருக்கும்.
உங்களுடன் அவர் மிக நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் மிகவும் அதிக விலகியவாராகவும் உணர்வீர்கள்.

இது மட்டுமல்ல நிறைய உண்டு. நீங்கள் அத்தகையவரை கண்டால் இதை தவிர வேறு என்ன ஏற்பட்டது என கூறுங்கள். முக்கியமாக ஒன்று நிகழும் அதை நான் வேண்டுமென்றே இங்கே குறிப்பிடவில்லை. காரணம் இதை படித்துவிட்டு இது எல்லாம் உங்களுக்கு நடப்பதாக கூட உங்கள் மனம் உங்களை ஏமாற்றக்கூடும். அதனால் அப்படிப்பட்டவரை நீங்கள் சந்தித்தால்/சந்தித்து இருந்தால் அதையும் உணர்ந்து எனக்கு தனிமடலாக கூறுங்கள்.

ஆன்மீகவாதியை நீங்கள் சந்தித்தபோது உங்களுக்குள் நடப்பதும் உங்கள் அன்மீக குருவை சந்தித்தால் உங்களுக்குள் நடப்பதும் ஒன்றல்ல.

அவன் அருளால் அவன் தாள் வணங்கி என கூறுவது போல ஒரு நாள் ஆன்மீக ஆற்றலே உங்களுக்கு அனைத்தையும் உணர்த்தும்.

- *சித்தர்களின் குரல் shiva shangar*