Saturday 26 May 2018

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-

1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்
2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்
3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்
4.யாழ் இசைக்க வேண்டும்
5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்
6.மணி அடிக்கவேண்டும்
7.காஞ்சி பாட வேண்டும்
8.அகில் புகை போட வேண்டும்

கடுகுச் செடி

இதோ பாடல்கள்:---

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)

தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)

பொருள்:

போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.

இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து... (நற்.370)

பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்.................

நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்................

திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.

வேப்ப மரம்

அதர்வண வேத மந்திரங்கள்

அதர்வண வேதத்தில் கருச் சிதைவு நிகழாமல் இருக்கவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க வும், கண்வ (2-25-3) எனப்படும் தீய சக்திகளை
விரட்டவும் வெண் கடுகு, ப்ரிஸ்னிபரணி மூலிகை கூறப்பட்டுள்ளது:--
கர்ப்பிணிகள் வெண் கடுகு தாயத்து உடலில் அணிய வேண்டும். தீய சக்திகள் உண்டாக்கும் கருச் சிதைவை இது அகற்றும் (அ.வே. 8-6-9)
தீய சக்திகள் இடுப்பு வலியை உண்டாக்கும் அல்லது கருவை விழுங்கிவிடும்.(8-6-23) குழந்தையை கருவிலோ பிறந்த பின்னரோ இறக்கச் செய்யும் தீய சக்திகள் (8-6-18);மலடித் தன்மை, குழந்தை இழப்பு ஆகியவற்றை வெண் கடுகு தடுக்கும் (8-6-26)

மேலும் ஆராய வேண்டும்!

கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக வடவிமயம் முதல் தென்குமரி ஈறாக ---16 லட்சம் சதுர மைல் பரப்பில் ---- கர்ப்பிணிப் பெண்களும் காயமடைந்தோரும் வெண் கடுகைப் பயன்படுத்தியதால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞான முறையில் ஆராய்வது பலன்  தரும். இதில் பாக்டீரியா தடுப்பு, வைரஸ் தடுப்பு சக்திகள் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

வாழ்க அதர்வண வேதம்! வளர்க சங்க இலக்கியம்!!

தீய சக்திகளை அழிக்கும் வழி முறை?


 
 
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன?

ஒரு மண்டலம் (45 நாட்கள்) பைரவப் பெருமானுக்கு

வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகம்புல் என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்த பின் சாம்பிராணி தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில்சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான

ஓம் க்லீம் க்ருஷ்ணாய........ “, என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். .......

அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்வார்கள் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும்.

ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது .

வெள்ளைக் கடுகுச் செடிகள் இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்.