Tuesday 2 January 2018

காரிருள் காளி

ஞானம்
ஆச்சப்பா பூரணமாய் நின்ற காளி
அரிதரிது காணுதற்கு அருமையாகும்
பேச்சப்பா பெருகி நின்ற இருளுக்குள்ளே
பிறந்ததடா ரவிமதியும் ஒளியாய் நின்று
காச்சப்பா ஒளியறிந்து வழியைக் கண்டேன்
கண்டவழி ஒளியதுவே கலந்துசென்று
பேச்சப்பா இருளொளியில் அலைந்துகொண்டு
போன இடம் வந்தயிடம் புகுந்துபாரே

இப்பாடலில் அகத்தியர் காலத்தைப் பற்றியும் ஆதி இருளைப் பற்றியும் கூறுகிறார்.  இந்த இருளை, கருமையை அவர் காளி என்று அழைக்கிறார்.  இந்த இருளிலிருந்து ஒளிகளான சூரியனும் சந்திரனும் வெளிவந்தனர்.  இவ்வாறு வெளி வந்த ஒளியையும் இருளையும் பற்றி அறிந்துகொண்டு அந்த ஒளியுடன் பயணித்தால் அது எழுந்த ஆதி இடமான இருள் வெளியை அடையலாம்.  இந்த வெளியிலிருந்துதான் உயிர்கள் வெளிப்பட்டன, அவை இங்கேதான் முடிவுறுகின்றன.


காலம் என்பது இடம் அல்லது வெளியுடன் தொடர்புடையது.  முதலில் பரம்பொருளில் ஒரு அசைவு ஏற்பட்டது.  அந்த செயல் ஒரு வெளியில் நடைபெறுகிறது.  இவ்வாறு ஸ்பந்தம் என்னும் அசைவு வெளியை உருவாக்குகிறது.  இந்த அசைவு ஒரு ஓசையை ஏற்படுத்துகிறது.  இதேபோல் ஓசை ஒரு அசைவை ஏற்படுத்துகிறது.  இவை ஒரு வெளியில் நடக்கின்றன.  இருள் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது.  ஒரு நிறம் என்பது உள்வாங்காத ஒளிக்கதிரின் நிறத்தைக் குறிக்கிறது.  எல்லாவற்றையும் உள்ளடக்கியபோது அது இருளாகத் தோன்றுகிறது.  இந்த இருளிலிருந்து சூரியன் சநதிரன் என்ற ஒளிகள் வெளிவிடப்பட்டன.  இதிலிருந்துதான் வாக்கு என்னும் பேச்சு வெளிப்பட்டது.  சப்தத்தின் ஆதி நிலை என்பது பரா எனப்படும் சக்தி நிலை. இதிலிருந்து பஷ்யந்தி, மத்யமா, வைகரி என்று சத்தம் வெளிப்படுகிறது.  இவ்வாறு சத்தத்தின் ஆதி நிலை இருள் வெளியாகிறது.  இந்த இருள் வெளியிலிருந்தே உயிர்கள் தோன்றுகின்றன.  அங்கேதான் அவை மறைகின்றன.  இந்த இருள் வெளியை ஒருவர் ஒளியைப் பற்றிக்கொண்டு பயணித்தால் அடையலாம் என்கிறார் அகத்தியர்.  இந்த வெளியை அவர் போன இடம் வந்த இடம் என்கிறார்.

இங்கு இருள் எனப்படுவது பிராணன் சுழுமுனையில் நிற்பதைக் குறிக்கிறது.  அங்கிருந்து சூரியனும் சந்திரனும் வெளிப்படுவது என்பது பிராணன் பிங்களை இடை என்ற நாடிகளில் பயணிப்பதை குறிக்கிறது.  இவை இரண்டும் ஒன்றாக இருப்பது ஆக்னையில்.  அதனால்தான் ஆக்ஞையை சித்தர்கள் கருப்பு, இருட்டுக் குகை என்று அழைக்கின்றனர்.  இவ்வாறு வந்த இடம் போன இடம் என்பது ஆக்னையைக் குறிக்கிறது.  இங்கு காணும் கருமையே காளி, நேரம், ஆதி இருள்வெளி.




No comments:

Post a Comment